அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-61

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-61

இந்தக் காலக்கட்டத்திலும் அன்னையின் வாழ்க்கை ஆன்மீகப்பேருணர்வு நிலைகளில் திளைப்பதாகவே இருந்தது.ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ உன்னத ஆன்மீக நிலைகளும் அனுபவங்களும் அவருக்கு வாய்த்தன. காமார்புகூரிலிருந்துகல்கத்தா வந்த அன்னை முதலில் பலராம்போஸின் வீட்டில் தங்கினார். அப்போது ஒருநாள்  மாடியில் தியானத்தில் அமர்ந்திருந்த போது, புறவுலகை மறந்து சமாதியில் மூழ்கினார்.அந்த நிலையைப்பற்றி அன்னை யோகின்மாவிடம் பின்னாளில் கூறினார். நான் அந்த ஆழ்ந்த சமாதி நிலையில் மிகமிகத் தொலைவிலுள்ள ஒரு நாட்டிற்குச் சென்றேன்.அங்குள்ள ஒவ்வொருவரும் என்னிடம் அளவற்ற அன்பு காட்டினார். அப்போது என் அழகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு அற்புதமாக இருந்தது. குருதேவரும் அங்கு இருந்தார்.மிகுந்த அன்போடும் பாசத்தோடும் அந்த மக்கள் என்னை குருதேவரின் பக்கத்தில் அமரச் செய்தனர். அந்த வேளையில்நான் அனுபவித்த பேரானந்தத்தின் இயல்பை விவரிக்கவே முடியாது.பிறகு என் மனம்  அந்த உயர்நிலையிலிருந்து கீழிறங்கியது.அப்போது எனது இந்தஉடம்பு இங்கே விழுந்து கிடப்பதைக் கண்டேன்.இத்கைய விகாரமான உடம்பிற்குள் நான் நுழையத்தான் வேண்டுமா? என்று  எண்ணினேன். நுழையும் படி மனத்திற்கு  எவ்வளவோ சொல்லிப்பார்த்தும்  பயனில்லை. நெடுநேரப்போராட்டத்திற்குப் பிறகு மனம் இந்த உடம்பிற்குள் நுழைந்தது. அதன்பிறகு இந்த உடம்பு உணர்வு பெற்று எழுந்தது.
 மற்றொருநாள் அன்னை நீலாம்பர் முகர்ஜியின்     வீட்டில் யோகின்மா மற்றும்  கோலாப்மாவுடன் தியானம் செய்து கொண்டிருந்தார். யோகின்மா தியானம்  முடிந்ததும் அன்னையைப் பார்த்தார். அவர் ஆடாமல் அசையாமல் ஆழ்ந்த தியானத்தில்  மூழ்கியிருந்தார். நீண்ட நேரம் கழித்து சிறிது புறவுணர்வு பெற்றதும், ஓ! யோகின் என் கைகள் எங்கே? கால்கள்  எங்கே? என்று கேட்க  ஆரம்பித்தார். யோகின்மா அவரது அவரது கைகளையும் கால்களையும்  பிடித்து அழுத்தியவாறே, அம்மா! இதோ உங்கள் கைகள்! இதோ உங்கள் கால்கள்! என்று கூறினார். இருப்பினும் நெடுநேரம் கழித்தே அன்னையின் உடலுணர்வு முற்றிலுமாக த்திரும்பியது.   இது ஆன்மீகத்தின்    மிகவுயர்ந்த அனுபவமாக நிர்விகல்ப சமாதிநிலை என்று கூறப்படுகிறது.
 தமது இந்தக் கால ஆன்மீக நிலைகளைப்பற்றி அன்னை பின்னாளில் பக்தர் ஒருவரிடம் கூறினார். அந்த நாட்களில் என்மனம் சிவப்பு, நீலம்,மற்றும் இதுபோன்ற ஒளித்திரளில் எப்போதும் ஆழ்ந்திருக்கும்.இந்த அனுபவங்கள் தொடர்ந்து நீண்ட காலம் இருந்திருக்குமானால் என் உடம்பு நிலைத்திருக்காது.
1888 நவம்பரில் அன்னை புரி ஜகன்னாத யாத்திரை மேற்கொண்டார். அவருடைன் ராக்கால், யோகின்,சரத், யோகின்மா அவரது தாய் கோலாப்மா, லட்சுமி முதலானோர் சென்றனர். அன்னை குருதேவரின் ஒரு படத்தையும் தம்முடன் எடுத்துச்சென்றிருந்தார்.நபரும் படமும் வேறல்ல. என்பார் அன்னை. எனவே கோயிலுக்குச் சென்று வழிபட்டபோது, குருதேவரின் படத்தை வெளியில் எடுத்து அவருக்கு சுவாமி தரிசனம் செய்து வைத்தார்.தாம் அங்கே பெற்ற காட்சியைப்பற்றி அன்னை கூறினார். வைர வைடூரியங்களால் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தில் புருஷசிம்மம் போல் எம்பெருமான்  வீற்றிருந்தார்.நான் ஒரு பணிப்பெண்ணாக அவருக்குச்சேவை செய்து கொண்டிருந்தேன்.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து ஜகன்னாதரைத் தொழுகின்ற காட்சி அன்னையை மெய்சிலிர்க்கச் செய்தது.ஆகா! என்ன அற்புதம். இத்தனை பேரும் முக்தி பெறுவார்களே! என்று பக்திக் கண்ணீர் பெருகக்கூறினார். ஆனால் மறுகணமே,” எங்கு சென்று வழிபட்டாலும் வாசனை அற்றவர்கள் மட்டுமே முக்தி பெற முடியும் என்பது அவருக்கு உணர்த்தப்பட்டது.
தமது ஒரு காட்சியில் அன்னை ஜகன்னாதரை சிவபெருமானின் வடிவில் கண்டார். அவர் கூறினார்-ஒரு லட்சம் சாளக்கிராம கற்களால் உருவாக்கப்பட்ட பீடத்தில் சிவபெருமான் லிங்க வடிவாக வீற்றிருப்பதைக் கண்டேன்.
புரியில் அன்னை கோயிலுக்குப்போய்வரபல்லக்கு ஏற்பாடு செய்யுமாறு போயில் பூஜாரி கூறினார். அதற்கு அன்னை , வேண்டாம் . நீங்கள் வழிகாட்டியபடி  முன்னால் போங்கள். நான் ஒரு பாமரப்பெண்ணாக உங்களைத் தொடர்ந்து வருகிறேன் என்று பணிவுடன் கூறிவிட்டார். புரி ஜகன்னாதத்திலுள்ள பல்வேறு ஆலயங்களிலும்  சென்று வழிபட்டார். மகாலட்சுமியின் சன்னிதியில் நீண்ட நேரம் தியானத்திலும் ஈடுபட்டார். புரி ஜகன்னாத யாத்திரை அன்னையின் மனத்திற்கு மிகுந்த இதத்தை அளித்தது.
-
-
தொடரும்...
-

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6