ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-37

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-37

இந்தக் காலகட்டத்தில் தமது தூய மனமே குருவாகி தம்மை வழி நடத்தியதாக குருதேவர் கூறினார். எதைச்செய்வது, எதைச்செய்யக்கூடாது என்று கற்பித்ததுடன் அவரது மனம் சிலவேளைகளில் ஒரு மனித வடிவம் தாங்கி அவர்முன் தோன்றி சாதனைகளில் தீவிரமாக ஈடுபட்டு முன்னேறுமாறு உற்சாகப்படுத்தும்.
ஒரு குறிப்பிட்ட சாதனைகளில் ஆழ்ந்து ஈடுபடாவிட்டால் அந்த உருவம் தோன்றி அந்த சாதனையில் எவ்வாறு ஆழ்ந்து ஈடுபடவேண்டும் என்றும் அதில் ஈடுபட்டால் கிடைக்கின்ற பலனைப் பற்றியும் எடுத்துக்கூறும். தியானத்தில் ஆழ்ந்து மூழ்காவிட்டால் தண்டனை தருவதாகப் பயமுறுத்தவும் செய்யும்.
அவர் தியானம் செய்ய அமரும் போது, ஒரு துறவி கையில் கூரிய திரிசூலத்துடன் வெளிவந்து, வேறு நினைவுகள் அனைத்தையும் விட்டு, இஷ்டதெய்வத்தை மட்டும்  நினைத்து தியானம் செய், இல்லையெனில் இந்த திரிசூலத்தால் உன் நெஞ்சைப் பிளந்து விடுவேன். என்று பயமுறுத்துவதும் உண்டாம்.
வேறொரு சமயம் தம் உடலிலிருந்து ஆசை, போகமயமான பாவபுருஷன் வெளிப்பட்ட போது இந்த இளம் துறவியும் உடனே வெளிப்பட்டு, அந்தப் பாவ புருஷனைக் கொன்றதை குருதேவர் கண்டார்.
தொலைதூரத்திலுள்ள கோவில்களுக்குச் செல்லவோ, எங்காவது நடைபெறும் பஜனை மற்றும் கீர்த்தனைகளில் கலந்து கொள்ளவோ  வேண்டுமென்ற ஆவல் குருதேவரிடம் தோன்றினால் அவருள், இருந்து அந்த இளம் துறவி வெளிப்பட்டு, ஒளிப் பாதையொன்றில் அந்த இடங்களுக்குச் சென்று சிறிது நேரம் ஆனந்தம் அனுபவித்து விட்டு, மீண்டும் அதே ஒளிப்பாதையில் திரும்பிவந்து குருதேவரின் உடலில் புகுந்து விடுவார்.
இது போன்ற பல தெய்வீகக் காட்சிகளைக் கண்டதுபற்றி குருதேவர் எங்களிடம் சொல்லி இருக்கிறார்.
சாதனையின் தொடக்கக் காலத்திலிருந்தே குருதேவர் இந்த இளம் துறவியின் தோற்றத்தைக் கண்ணாடியில் தெரிகின்ற பிம்பம் போலத் தம்முள் பார்த்திருக்கிறார்.
படிப்படியாக அந்தத் துறவியின் அறிவுரைக்கு ஏற்ப, எது செய்ய வேண்டும் , எது செய்யக்கூடாது என்பவற்றை எல்லாம் அவர் பின்பற்றியும் இருக்கிறார்.
ஒரு நாள் குருதேவர் எங்களிடம் கூறினார், என்னைப்போலவே தோற்றம் கொண்ட இளம் துறவி ஒருவர் என்னுள்ளிலிருந்து அடிக்கடி வெளிப்பட்டு எல்லா விஷயங்களிலும் எனக்கு அறிவுரை சொல்வதுண்டு.
அவர் வெளிப்படும்போது எனக்குச் சிலவேளைகளில் புறவுலக நினைவு  சிறிது இருக்கும். ஒரு சில நேரங்களில் முழுவதுமாக நினைவிழந்து ஜடம்போல் விழுந்து கிடப்பேன். அந்தத்துறவியின் செயல்களையும் சொற்களையும் மட்டுமே அப்போது என்னால் அறிய முடிந்தது. அவர் அப்போது எனக்கு போதித்ததையே பின்னர் வந்த பைரவி பிராம்மணி,தோதாபுரி ஆகியோரும் கற்பித்தனர்.
சாஸ்திர நியதிகளின் உண்மையை நிரூபிப்பதற்காகவே அவர்கள் குருவாக என் வாழ்வில் வந்து அமைந்தனர்.என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இல்லையெனில் தோதாபுரி முதலியவர்களை குருவாக எற்றுக் கொண்டதற்கு வேறு எந்தக் காரணத்தையும் கண்டுபிடிக்கமுடியாது.
இந்த நான்காண்டு சாதனையின் நிறைவுப்பகுதியில் குருதேவர் காமார்புகூரில் இருந்தபோது மேற்கூரிய விஷயத்தைத் தெளிவாக்குவது போன்ற அசாதாரணமான காட்சி ஒன்று அவருக்கு கிடைத்தது.
அப்போது அவர் காமார்புகூரிலிருந்து ஹிருதயரின் ஊரான சிகோருக்குப்  பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். வழியெங்கும் இயற்கை தனது அற்புதங்களை எல்லாம் திரட்டி வைத்திருந்தது போல் தோன்றியது. நிர்மலமான நீலவானம் அதன் கீழே பச்சைப்பட்டு விரித்தாற்போன்ற நெல் வயல்கள், சாலையின் இருமருங்கிலும் உயர்ந்து வளர்ந்து நிழல் பரப்பி நின்ற ஆல அரச மரங்கள், அவற்றின் கிளைகளில் அமர்ந்து புள்ளினங்கள்  இசைத்தகானம். தேன் சிந்தும் வண்ண மலர்களைத் தாங்கி நின்ற செடிகள், மலர்கள் பரப்பிய நறுமணம் இவை அனைத்தையும் மெய்மறந்து அனுபவித்துக்கொண்டே பல்லக்கில் ஆனந்தமாகச் சென்று கொண்டிருந்தார் குருதேவர்.
அப்போது திடீரென்று அவரது உடலிலிருந்து அழகான இருசிறுவர்கள் வெளிவந்தனர். அவர்கள் சிறிது நேரம் சிற்றடி எடுத்து நடந்தனர். பின் இங்குமங்கும் ஓடி விளையாடினர். வயல் வெளிகளில் வெகுதொலைவு  சென்று காட்டுப் பூக்களைத்தேடினர். அதன் பின் பல்லக்கின் அருகில்  நடந்து வந்து சிரித்து மகிழ்ந்து வேடிக்கை பேசி, மகிழ்ந்து களித்தனர். இவ்வாறு  நெடுநேரம் சென்ற பின் குருதேவரின் உடலுள் புகுந்துவிட்டனர்.
இந்தக் காட்சி பெற்ற சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் பைரவி பிரம்மாமணி தட்சிணேசுவரக்கோயிலுக்கு வந்தார். பேச்சுவாக்கில் ஒரு நாள் குருதேவர் இந்தக்காட்சியை ப் பற்றி அவரிடம் கூறினார். அதற்கு பிரம்மாமணி . குழந்தாய், நீ சரியாகத்தான் கண்டுள்ளாய். இப்போது நித்யானந்தரின் உடலில் சைதன்யர் தோன்றியுள்ளார். அதாவது நித்யானந்தரும் சைதன்யரும் ஒன்றாக வந்து உன்னுள் உள்ளனர், அதனால் தான் உனக்கு இத்தகைய காட்சி கிட்டியது. என்று சொன்னார். இவ்வாறு கூறிய பிராம்மணி சைதன்ய பாகவதத்திலிருந்து பின்வரும் இரண்டு பகுதிகளை மேற்கோள் காட்டியதாக ஹிருதயர் கூறினார்.
அவர் கூறியதாவது-
அத்வைத ஆசாரியரின் கழுத்தைக்
கைகளால் கட்டிக்கொண்டு
சைதன்யர் மீண்டும் மீண்டும்
சொல்வார்
நான் மீண்டும் ஒரு முறை திருவிளையாடல் புரிவேன்
அப்போது நான் இறைவன் நாமத்தைப்
பாடும்போது என் உருவம்
பரமானந்த வடிவாய் இருக்கும்.
இன்றைக்கும் சைதன்யர் தன் விளையாட்டை நடத்துகிறார்
மிகப்பெரும் பேறு பெற்றவர்களெ
அதனைக்காண முடியும்
ஒரு நாள் நாங்கள் குருதேவரிடம் அந்தக் காட்சியைப் பற்றிக்கேட்ட போது அவர், நான் அந்தக்காட்சியை க் கண்டது உண்மை. பிராம்மணி அதைக்கேட்டு இவ்வாறு சொன்னதும் உண்மை. அதன்  உண்மைப்பொருள் என்னவென்று நான் எப்படிச்சொல்ல முடியும்? என்று  கூறிவிட்டார். ஆதிகாலத்திலிருந்தே உலகத்துடன் தொடர்புள்ள ஓர் உன்னத
ஆத்மா ஒரு பெரிய நோக்கத்துடன்  தமது உடலில் உறைகின்றன என்பதை இந்தச் சமயத்திலிருந்து குருதேவர் அறிந்து கொண்டார் என்பதை நாம் ஊகிக்க முடியும்.
இவ்வாறு தம்மைப் பற்றிய தெய்வத் தன்மையின் அறிகுறிகளைக் கண்டது, காலப்.போக்கில் தாம் யார் என்பதை அவருக்குத் தெளிவுபடுத்தியது.
சென்ற யுகங்களில் தர்மத்தை நிலைநாட்ட அயோத்தியிலும் பிருந்தாவனத்திலும் ஜானகி மணாளரான ஸ்ரீராமராகவும் ராதாவல்லபரான ஸ்ரீகிருஷ்ணராகவும் யார் அவதரித்தாரோ அவரே இப்போது மறுபடியும் பாரதத்திற்கும் உலகிற்கும் புதிய ஆன்மீக லட்சியத்தை எடுத்துக்காட்ட புதிய உடல் தாங்கி ஸ்ரீராமகிருஷ்ணராக அவதரித்துள்ளார்.
யார் ராமராக அவதரித்தாரோ யார் கிருஷ்ணராக அவதரித்தாரோ அவரே இப்போது (தம் உடலைச் சுட்டிக்காட்டி) இந்த உறையில் வந்துள்ளார். சிலவேளைகளில் அரசர் மாறுவேடத்தில் நகர சோதனைக்குச் செல்வது போல அவரும் இம்முறை ரகசியமாக இவ்வுலகத்தில் அவதரித்துள்ளார். என்று குருதேவர் அடிக்கடி கூறுவதுண்டு.
குருதேவரின் இந்தக்காட்சி பற்றிய உண்மையை அறிவதற்கு அவர் தமது நெருங்கிய பக்தர்களிடம் கூறியுள்ளதை நம்புவதைத்தவிர வேறு வழி இல்லை. இந்தக் காட்சி ஒன்றை மட்டும் தவிர இந்தக் காலகட்டத்தில் அவருக்குக் கிடைத்திருந்த பிற காட்சிகள் உண்மை என்பதில் உறுதியான ஒரு முடிவுக்கு வர முடியும்.
 ஏனெனில் இத்தகைய காட்சிகள் நாங்கள் குருதேவரிடம் சென்ற காலத்தில் கூடத் தினமும் நிகழ்ந்ததை நாங்கள் அறிவோம். ஆங்கிலப் படிப்பின் காரணமாக சந்தேக இயல்பு கொண்ட சீடர்கள் அந்தக் காட்சிகளின் உண்மையைப் பரிசோதிக்கச் சென்றுதோற்றுப்போய், திகைத்து நிற்பது நாள்தோறும் நடைபெறும் ஒன்று.
இதனை உறுதிப்படுத்த ஏற்கனவே பல எடுத்துக்காட்டுகளை் வேறொரு பகுதியில் கொடுத்துள்ளோம்.ஒன்றை மட்டும் இங்குக் குறிப்பிடுகிறோம்.

பிரம்மசரியத்தை உறுதியாகக் கடைப்பிடித்ததால் தான் குருதேவருக்கு மூளைகுழம்பி இறை ஏக்கம் என்ற உருவத்தில் அது வெளிப்பட்டுள்ளது என்று ராணி ராசமணியும் மதுர்பாபுவும் குருதேவரின் முதல் நான்காண்டு சாதனைக்காலத்தில் ஒரு சமயம் கருத நேர்ந்தது.
குருதேவரின் பிரம்மசரியத்தைக் குலைத்து விட்டால் மறுபடியும் அவர் உடல் நலம் பெறக்கூடும் என்ற கற்பனையில் அவர்கள் லட்சுமிபாய், முதலான சில விலை மாதர்களை முதலில் தட்சிணேசுவரத்திலும் பின்னர் கல்கத்தாவிலும் மேசுவா பஜார் என்ற இடத்திலும் குருதேவரிடம் அனுப்பி வைத்து அவரது மனத்தைக் கலைக்க முயன்றனர். அந்த விலைமாதர்களிடம் அருள் மிக்க அன்னையையே கண்ட குருதேவர், அம்மா அம்மா என்று கூறிக்கொண்டே வெளியுலக நினைவை இழந்தார். அவரது உறுப்புக் கூடச்சுருங்கி, ஆமை தனது ஓட்டுக்குள் செல்வது போல உடலினுள் சென்றுவிட்டது.
அவரது சமாதி நிலையைக்கண்டும் குழந்தை போன்ற இயல்பான மனம் கவரப்பட்டும் அந்தப் பெண்களிடம் தாய்மையுணர்வு மேலெழுந்தது.குருதேவரின் பிரம்மசாரியத்திற்கு ஊறு விளைவிக்கமுயன்றது பெரும் பாவச்செயல் என்று எண்ணி கண்களில் நீர் ததும்ப அவர்கள் அவரிடம் மன்னிப்புக்கோரினர். மீண்டும் மீண்டும் அவரை வணங்கி கலங்கிய மனத்துடன் விடைபெற்றுச்சென்றனர்.
தொடரும்..

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6