ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-40

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-40

பைரவி பிரம்மணியின் வருகை.
குருதேவர் காமார்புகூரிலிருந்து தட்சிணேசுவரத்திற்கு 1861-ஆம் ஆண்டு திரும்பிவந்த பின் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவை குருதேவரின் வாழ்க்கையில் முக்கியத் திருப்பங்களை விளைவித்தவை. எனவே இவற்றைப்பற்றி அறிந்து கொள்வது அவசியம்.1861-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ராணிராசமணிக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஒரு நாள் ராணி திடீரென்று கிழே விழுந்து விட்டதாகவும், அதனால் காய்ச்சலும் உடல் வலியும் அஜீரணமும் வேறு  சிக்கல்களும் உண்டாகி படிப்படியாக அது வயிற்றுப்போக்கு  நோயாக மாறியதாகவும் சில நாட்களுக்குள் அது மிகவும் தீவிரமாகி விட்டதாகவும் குருதேவர் கூறினார்.
குருதேவர் கூறினார், ராணி ராசமணி உயிர் துறப்பதற்கு முன் காளிகட்டத்தில் ஆதிகங்கா பகுதியில் இருந்த தம் வீட்டில் சென்று வாழ்ந்தார். உயிர் பிரிவதற்குச் சற்று முன் அவரை கங்கை கரைக்குக்கொண்டு வந்தனர்.அங்கே பல விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதைக் கண்ட ராணி திடீரென, இவற்றை அணைத்துவிடுங்கள்.அப்புறப்படுத்துங்கள்.இவை எனக்குப் பிடிக்கவில்லை.என் அன்னை வந்துவிட்டாள்.அவளது திருமேனியிலிருந்து வீசிப்பொலிகின்ற அருளொளிதான் இந்த இடம் முழுவதையும் பிரகாசமாக அடித்துவிட்டதே! என்று தன்னை மறந்து கூவினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் , அம்மா, வந்துவிட்டாயா?, அம்மா? என்று மெல்லிய குரலில் கூறியபடியே அன்னையின் திருவடிகளில் மீளாத்துயிலில் ஆழ்ந்து விட்டார். நரிகள் ஊளையிடும் மங்கலச்சத்தம் நாலாதிசைகளிலும் கேட்டது.
மதுர்பாபு நிர்வாகப்பொறுப்புக்களில் ராணியின் வலது கரமாகச் செயலாற்றி வந்தார். தட்சிணேசுவரக்கோயிலின் சொத்து மற்றம் அதன் நிதிநிலைமை பற்றி நன்கு அறிந்திருந்த அவர் கும்பாபிஷேகத்திற்குப் பின்னர் மிகவும் திட்டமிட்டு, ராணியின் விருப்பத்திற்கு ஏற்ப ஆலயப் பணிகள் எல்லாவற்றையும் நடத்திவந்தார்.ராணியின் மறைவிற்குப் பின்னரும் நிர்வாகப் பொறுப்பை அவரே கவனித்தார். குருதேவரின் பேரருளால்அவர் தூய பக்தி கொண்டவராக இருந்ததால் ராணியின் மறைவுக்குப்பின்னரும் கோயில் பூஜைப் பணிகள் எந்த வகையிலும் குறைவின்றி நடைபெற்றன.
மதுர்பாபுவுக்கும் குருதேவருக்கும் இடையே இருந்த அற்புதமான உறவைப் பற்றி வாசகர்களுக்கு முன்னரே சொல்லியிருக்கிறோம்.
எனவே மீண்டும் குறிப்பிட வேண்டியதில்லை. ஒன்றுமட்டும் இங்குக்கூறலாம். குருதேவர் தாந்திரிக சாதனையில் ஈடுபடுவதற்கு முன்னரே ராணி மறைந்தார். காளிகோயில் நிர்வாகம் அப்போது மதுர்பாபுவின் பொறுப்பில் இருந்தது. சாதனைகளைப் பொறுத்தவரையில் மதுர் குருதேவருக்கு உதவும் பெருவாய்ப்பைப் பெற்றிருந்தார். குருதேவருக்கு உதவி செய்யவே அவருக்கு இந்த நிர்வாகப்பொறுப்பு கிடைத்ததோ என்று எண்ணத்தோன்றுகிறது.ஏனெனில் குருதேவரை ஒரு தெய்வீக புருஷராக எண்ணி அவருக்குச்சேவை செய்வதையே தமது  தலையாய கடமையாகக்கொண்டு செயல்பட்டார் மதுர்.
உயர்ந்த ஒரு லட்சியத்தில் மாறாத மனத்துடன் நெடுங்காலம் நம்பிக்கை கொள்வது இறையருளால் மட்டுமே நிகழக்கூடியது.
ராணியின் பெரும் சொத்தைப்பெற்றும், தவறான பாதையில்  செல்லாமல் மனத்தை குருதேவரிடம் மதுர்பாபு செலுத்தியது, இறையருளால் அன்றி வேறெதனால் இருக்க முடியும்? நாளுக்குநாள் வளர்ந்த நம்பிக்கையுடன் நீண்ட பதினாரு வருடங்கள் அவர் குருதேவருக்குச் சேவை செய்தார். அவர் பெற்ற பெரும்பேற்றினை இதிலிருந்து நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
ஆன்மீக சாதகர்களைத் தவிர மற்ற யாராலும் குருதேவரின் உயர்ந்த நிலைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சாதாரணமக்கள்அவரைப் பைத்தியம் என்றே உறுதியாகக் கருதினர். எல்லா வகையான சுகபோகங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு மற்றவர் புரிந்து கொள்ள முடியாத ஏதோவொரு மனோநிலையில் ஆழ்ந்தவராய், சிலவேளைகளில் ஹரிநாமம், சிலநேரங்களில் ராமநாமம், மற்றும் சிலவேளைகளில் காளி, காளி என்று இவற்றிலேயே நாட்களைக் கழித்து வந்தார். குருதேவர். ராணி , மதுர்பாபு ஆகியோரின் அன்புக்குப் பாத்திரமான பலர் பணக்காரர்களாகி விட்டிருந்தனர். இவரோ அவர்களின்  பேரன்பிற்கு உரியவராகியும் தமது வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இத்தகைய அவர் நல்லது கெட்டது அறிய முடியாத பைத்தியக்காரரைத் தவிர வேறு  என்னவாக இருக்க முடியும்? சாதாரண மக்கள் இவ்வாறுஎண்ணினாலும் ஒன்று மட்டும் அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது- உலகியல் விஷயங்களில்  ஒன்றும் தெரியாதவராக இருந்தாலும் இந்தப் பைத்தியக்காரரின் ஒளிபடைத்த கண்களில் நடையுடை பாவனையில் உள்ளம் கவரும் உயர் பண்பில் இனிமையான குரலில், அன்பு கனியும் பேச்சில், அற்புதமான சமயோசித அறிவில் ஒரு கவர்ச்சிகரமான சக்தி இருந்தது.
அதன் காரணமாக பிறர் அணுகுவதற்கும்  தயங்குகின்ற செல்வந்தர், உயர்ந்தவர், பண்டிதர் போன்றவர்களின் முன் எவ்விதத் தயக்கமும் இன்றி இவர் சென்று வெகு விரைவிலேயே அவர்களின் அன்பைப் பெற்றுவிடுவார்.
பொதுமக்களும் காளிகோயில் அதிகாரிகளும்குருதேவரைப் பற்றி இத்தகைய கருத்து கொண்டிருந்த போதும் மதுர்பாபு மட்டும் காளியின் அருளைப் பெற்றதாலேயே இவர் பைத்தியம் போல் தெரிகிறார்  என்று நினைத்தார்.
 ராணி காலமான சில நாட்கள் கழித்து குருதேவரின் வாழ்க்கையில் மேலும் ஒருகுறிப்பிடத்தக்க நிகழ்ச்சி நடைபெற்றது. காளிகோயிலுக்கு மேற்கே கங்கை கரையில் ஓர் அழகான நந்தவனம் இருந்தது.
அது நன்கு பராமரிக்கப்பட்டு வந்ததால் அங்கிருந்த மரங்கள் , செடிகொடிகள் யாவும் செழிப்பாக வளர்ந்திருந்தன. நந்தவனம்  அந்தப் பகுதியில் அழகுக்கு அழகு சேர்த்ததோடு அப்பகுதி முழுவதிலும் நறுமணத்தையும் பரப்பியது.அந்த நாட்களில் குருதேவர் தேவிக்கு பூஜை செய்யாதிருந்தாலும், அந்தத்தோட்டத்திலுள்ள மலர்களைக் கொய்து, அழகான மாலைகள் தொடுத்து அன்னைக்கு அணிவித்து மகிழ்வதுண்டு.
கங்கையிலிருந்து கோயிலுக்கு இந்த நந்தவனத்தின் வழியாக பாதை செல்கிறது. வடபகுதியில் கங்கையில் பெண்கள் நீராட செங்கற்களால் கட்டப்பட்ட படித்துறையும் நகபத்தும் அமைந்துள்ளன. படித்துறைக்கு மேற்கு பகுதியில் ஒரு பெரிய வகுளமரம் இருப்பதன் காரணமாக மக்கள் இதனை வகுளத்துறை(பகுல்காட்) என்று அழைக்கின்றனர்.
ஒரு நாள் காலையில் அந்தத்தோட்டத்தில் குருதேவர் மலர்கள் கொய்து கொண்டிருந்தபோது வகுளத்துறைக்கு படகு ஒன்று வந்து நின்றது.
காவி உடை உடுத்தி அவிழ்ந்த நீண்ட கூந்தலைத் தழையவிட்டிருந்த அழகிய தோற்றம் கொண்ட பைரவி ஒருத்தி அந்தப் படகிலிருந்து இறங்கி,அந்தத் துறைக்குத் தெற்கே இருந்த கோயில் முற்றத்தை நோக்கி நடந்து வந்தார்.
 நடுத்தர வயதைக் கடந்து விட்டிருந்த போதிலும் அவரது அழகும் இளமையும் தோற்றமும், யாரும் அவரை நடுத்தர வயதினர் என்று சொல்ல முடியாதபடி,ச் செய்திருந்தன.
அப்போது பைரவியின் வயது சுமார் நாற்பது இருக்கும் என்று குருதேவர் சொன்னார். நெருங்கிய உறவினரைக்கண்டதும் ஒருவர் எவ்வாறு கவரப்படுவாரோ, அவ்வாறே குருதேவர் அந்த பைரவியால் கவரப்பட்டார். உடனே அறைக்கு வந்து ஹிருதயரை அழைத்து, கோயில் முற்றத்திலிருந்த பைரவியை அழைத்து வரும் படிக்கூறினார். ஹிருதயருக்குக் குழப்பமாகி விட்டது. அவர் குருதேவரிடம் அந்தப் பெண்மணி முன்பின் தெரியாதவள்நான் அழைத்தால் அவள் ஏன் வர வேண்டும்? என்று தயங்கிய வாறே கேட்டார்.
அதற்கு குருதேவர் என் பெயரைச்சொன்னால் போதும் வந்து விடுவார் என்றார். முன்பின் தெரியாத ஒரு சன்னியாசியுடன் பேச குருதேவர் கொண்ட ஆர்வம் தன்னை மிகவும் வயப்பில் ஆழ்த்தியதாக ஹிருதயர் கூறினார். இதற்கு முன் ஒரு போதும் குருதேவர் இவ்வாறு நடந்து கொண்டதை ஹிருதயர் கண்டதில்லை.
எப்படியும் பைத்தியமாமாவின் கட்டளைக்கு கீழ்ப் படியாமல் இருக்க முடியாது என்பதை அறிந்திருந்த ஹிருதயர் தயங்கியபடியே மண்டபத்திற்குச்சென்றார்.
பைரவி அங்கே அமர்ந்திருந்தார். நேராக அவரது அருகில் சென்று, பக்தரான என் மாமா தங்களை தரிசிக்க விரும்புகிறார், என்று கூறினார்.
அதைக்கேட்டதும் பைரவி நடந்து கொண்ட விதம் ஹிருதயரை வியப்பில் ஆழ்த்தியது.ஏனெனில் எந்தக்கேள்வியும் எழுப்பாமல், எவ்விதத் தயக்கமும் இன்றி உடனே எழுந்து அவருடன் செல்லத் தொடங்கினார் பைரவி.
-
தொடரும்..

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6