அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-114

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-114

தொடர்ந்த மாதங்களில் பயங்கரக் காய்ச்சலால் அன்னை மிகுந்த வேதனைப்பட்டார். அவர் கல்கத்தா வந்த அன்றே அன்னையின் வைத்தியத்திற்குச் சிறப்பான ஏற்பாடுகளைத் துவக்கினார் சாரதானந்தர். முதலில் ஹோமியோபதி சிகிச்சை செய்யப்பட்டது. டாக்டர் கஞ்சிலால்  என்பவர் வந்து சிகிச்சை செய்தார்.இரு வாரங்கள் கழிந்தும் எந்தப் பயனும் இல்லை. அதன் பின்னர் பிரபல ஆயுர்வேத மருத்துவரான சியாமாதாஸ் அழைக்கப்பட்டார். அவரது சிகிச்சை அன்னையின் காய்ச்சலைக் கொஞ்சம் தணித்தது. ஆனால் அவர் கொடுத்த மருந்து மிகவும் கசப்பாக இருந்தது. அந்தக் கசப்பின் காரணமாக நாள் முழுவதும் அன்னையால் வேறு எதையும் சாப்பிட முடியவில்லை. ஆனால் அன்னையின் நோய்க்கு அந்த மருந்தைத் தவிர வேறு எதுவும் அவரிடம் இல்லை. இதனால் ஆங்கில மருத்துவத்தை நாடினர். பிரபல டாக்டர் பிபின் பிஹாரி கோஷ் வரவழைக்கப்பட்டார். அவர் ஒரு மாதம் சிகிச்சை செய்தார். பின்னர் அவரது ஆலோசனைப்படி, மற்றொரு சிறந்த டாக்டரான பிரதான்போஸ் மற்றும் ஓரிரு டாக்டர்களையும் அழைத்துச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பலன் ஏதும் கிடைக்கவில்லை. அன்னையின் ஜீரம் தங்கள் சிகிச்சையின் எல்லையைத் தாண்டுவதைக் கண்ட அவர்கள் ஆராய்ந்து அது வெயில் மிகுந்த இடங்களில் வருகின்ற  மலேரியா போன்ற ஒரு கொடிய காய்ச்சல் என்பதைக் கண்டறிந்தனர். அந்த நாட்களில் இந்த நோய்க்குச் சிகிச்சை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆங்கில மருத்துவர்கள் கையை விரித்துவிட்டனர். எனவே  பழைய ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகள் தொடரப்பட்டன. இந்த மூவகை சிகிச்சைகளுடன் சாந்தி, ஸ்வஸ்த்யயனம் போன்ற சடங்குகளுக்கும் ஏற்பாடு செய்தார் சாரதானந்தர்.ஆனால் அன்னையின் ஜீரம் அனைத்திற்கும் போக்குக் காட்டுவதாக இருந்தது.
நோயின் ஆரம்பக் காலத்தில் மாலைநேரத்தில் மட்டுமே காய்ச்சல் வரும். இரவில் குறைந்து விடும். அதன் பிறகு காய்ச்சல் காலையிலும் மாலையிலும் வரலாயிற்று. சிலவேளைகளில் 103 டிகிரியையும் எட்டியது. இதையும் தாண்டும் போது அன்னை நினைவிழந்து விடுவார். இதோடு  உடம்பு முழுவதும் பொறுக்க முடியாத எரிச்சல்வேறு, இந்த எரிச்சல் அளவு கடந்து போகும் போது, ஏதாவது குளத்தில் சென்று மூழ்கிக் கிடக்க வேண்டும்போல் தோன்றுகிறது என்பார் அன்னை. அவரது இந்த எரிச்சல் தணிவதற்காக எப்போதும் ஒருவர் பக்கத்தில் நின்றபடியே விசிறிக்கொண்டோ அல்லது ஐஸைத் தங்கள் கைகளில் தேய்த்துக்கொண்டு பின்னர் அன்னையின் திருவுடல் மீது தடவியவாறோ இருப்பார்கள். ஐஸ் இல்லாமல் போனால் சூடு குறைவான தேகம் கொண்டவர்களின்  வெற்றுடம்பில் தமது கையை வைத்துக்கொள்வார் அன்னை!
அன்னைக்கு இரு பிரிவினர் சேவை செய்தனர்.  துறவியரும் பிரம்மசாரியரும் டாக்டர்களை அழைத்துவரல் உணவு மற்றும் மருந்து முதலியவை வாங்குதல், சில திரவ உணவுகளைத் தயாரித்தல், விசிறுதல் போன்ற வேலைகளைச் செய்தனர். உணவு சமைத்தல், துணி துவைத்தல்,படுக்கையைச் சுத்தம் செய்தல், உணவளித்தல் போன்றவற்றை பக்தைகள் செய்தனர். படுத்த படுக்கையாய்க் கிடந்தும் இத்தனை வேதனைகளுக்கிடையிலும் அனைவரையும் அன்பாகப் பேணினார் அன்னை. அதோடு தம்மைக் காண வருகின்ற பக்தர்கள் மற்றும் சீடர்களின் நலனைப்பற்றி அன்போடு விசாரிக்கவும், அவர்களுக்கு உணவு தரவும் அவர் தவறவே இல்லை. தம்மைக் கவனிப்பதற்காக வருகின்ற டாக்டர்களுக்கும் குருதேவரின் பிரசாதமான பழமும் இனிப்புகளும் தருவதிலும் மிகுந்த கவனமாக இருப்பார். உடல் எரிச்சலின் காரணமாக அன்னை வேதனைப்பட்டதால், பக்தர்கள் அருகிலிருந்து விசிறுவார்கள். எரிச்சலுக்கு அது கொஞ்சம் இதமாக இருக்கும். ஆனால் யாரையும் நீண்ட நேரம் விசிற அனுமதிக்கமாட்டார். தமது நோயையும் பொறுத்துக்கொண்டு குழந்தாய், உன் கை வலிக்கும், விசிறியது போதும், என்பார். தொடர்ந்து விசிறினால் மகனே, உன் கை வலிக்கும் என்ற எண்ணத்தால் என்னால் தூங்க முடியவில்லை. நிறுத்தி விடு” என்பார். வேறு வழியின்றி விசிறுவதை நிறுத்த வேண்டியிருக்கும்.
ஒரு நாள் சீடர் ஒருவர் ரமணி என்னும் பெண்மூலம்  அன்னைக்குப் பனம்பழம் கொடுத்தனுப்பினர். அவள் உத்போதன் வந்தபோது அன்னை காய்ச்சலால் நினைவிழந்த நிலையில் படுத்திருந்தார். நினைவு வந்ததும் அவள் வந்து போனதை அறிந்த அன்னை மிகவும் வேதனைப்பட்டு, ஆ! எவ்வளவு தூரம் கடந்து ஜெயராம்பாடியிலிருந்து அவள் கல்கத்தாவிற்கு வந்தாள்! அவளைப்பார்த்து ஒரு வார்த்தை பேச முடியாமல் போய்விட்டதே, நான் மிகவும் வருத்தப்பட்டதாக அவளிடம் சொல்லுங்கள் என்று கூறினார்.
ஒரு நாள் ராம்லாலும் லட்சுமிதேவியும் அன்னையைக்காண வந்தனர். அவர்கள் திரும்பிப் போகும் போது எதுவும் கொடுக்க மறந்துவிட்டார் அன்னை.பின்னர் அதற்காக மிகவும் வருந்தினார். ஒருவர் மூலம் துணியும் ரூபாயும் அவர்களுக்குக்  கொடுத்தனுப்பிய பிறகு தான் அவரால் நிம்மதியாக  இருக்க முடிந்தது.
இந்தக்கடுமையான காய்ச்சலின் போது கஞ்சியும் பாலும் பத்திய உணவும் சில வகைப் பழங்களும் அன்னைக்குத் தரப்பட்டன. பொதுவாக அப்போது அவரது உடலில் சோகை படியத் துவங்கியிருந்தது. எனவே ரத்தம் அதிகரிப்பதற்காக, எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு வகைகளை நிறையத்தரும்படி ஆயுர்வேத மருத்துவர் கூறினார். அன்னைக்கு உணவளித்து வந்தது சரளா என்ற சிஷ்யை. ஒர நாள் அன்னைக்கு உணவு கொண்டு சென்றபோது  ஹோமியோபதி மருத்துவரான கஞ்சிலால் வந்தார். உணவின் அளவைப்பார்த்ததும் அவரது முகம் கடுமையாக மாறியது. அன்னை அதிக உணவு சாப்பிடுவது நல்லதல்ல என்று அவர் நினைத்தார். எனவே அளவுக்கு  அதிகமாக உணவு தருவதற்காக சரளாவைக் கடுமையாகத் திட்டினார். இனிமேல் அவள் அன்னையைக் கவனிக்க வேண்டாமென்றும், இர நர்சுகளை அனுப்பி வைப்பதாகவும் கூறினார். அறையை விட்டு டாக்டர் வெளியே சென்றதும், அன்னை ஆறுதலான குரலில் சரளாவிடம், கஞ்சிலால் அர்த்தமில்லாமல் கோபித்துக்கொள்கிறார். நான் சாப்பிடுவதால் தானே நீ கொண்டு வருகிறாய்? அவர் நர்சுகளை அனுப்புவதாகச் சொல்லியதைப்பற்றிக் கவலைப்படாதே.அந்த ”பூட்ஸ்” போட்ட பெண்களை நான் அருகிலேயே சேர்க்கப்போவதில்லை என்று கூறிச் சமாதானப்படுத்தினார்.

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?