Thursday 9 February 2017

விவேகானந்தரை ஏன் சுவாமி என்கின்றார்கள் ?இறைவனும் மனிதரும் ஒன்றா?



விவேகானந்தரை ஏன் சுவாமி என்கின்றார்கள் ?இறைவனும் மனிதரும் ஒன்றா?
-

சுவாமி என்றால் இறைவன் என்று அர்த்தம். நமது சொந்த இயல்பு இறைவன்தான். ஆனால் நாம் அதை அறியவில்லை. நான் இறைவன் என்ற நிலையை அடைந்தவர்களை சுவாமி என்கிறோம். கணவனை மனைவி சுவாமி என்று அழைப்பதுண்டு. சபரிமலைக்கு செல்பவர்களும் சுவாமி தான்,கோவிலில் குடியிருப்பவரும் சுவாமி தான். நான் இறைவன் என்ற அந்த நிலையை அடையாதவர்கள் கூட சுவாமி தான். அந்த வகையில் பார்த்தால் இந்த உலகத்தில் உள்ள அனைவரும் சுவாமி தான். அதனால் தான் சுவாமி விவேகானந்தர் அனைவரையும் பார்த்து, நீங்கள் அனைவரும் தெய்வங்கள் என்று கூறுகிறார். நாம் சுவாமி என்று கூறும்போது உடலை குறிப்பதாக நினைத்துவிடக்கூடாது.நமது சொந்த இயல்பு உடல் இல்லை. உடல் என்பது நமது சட்டை போன்றது. நமது சொந்த இயல்பு உருவமற்றது. வேதங்களில் இறைவனுக்கு உருவம் இல்லை என்று மீண்டும்,மீண்டும் சொல்லப்படுகிறது. நமக்கும் உருவம் இல்லை. அப்படியானால் இந்த உடல் எங்கிருந்து வந்தது? இதை தெரிந்துகொள்ள வேண்டுமானால் வேதாந்த தத்துவத்தை உரிய குருவிடம் , சிஷ்யனாக சேர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். 

இந்துமதம் ஜாதிகளை ஆதரிக்கிறதே! பகவத்கீதையில் கூட ஜாதிகளை ஆதரித்து கிருஷ்ணர் பேசியிருக்கிறாரே


கேள்வி...இந்துமதம் ஜாதிகளை ஆதரிக்கிறதே! பகவத்கீதையில் கூட ஜாதிகளை ஆதரித்து கிருஷ்ணர் பேசியிருக்கிறாரே, மற்றும் சூத்திரர்களை தாழ்வானவர்கள் என்ற கருத்தும் இந்துமதத்தில் உள்ளதே, இதை மறுத்து கூறமுடியுமா?
-
சுவாமி வித்யானந்தர்....
-
இந்துமதத்திற்கும் ஜாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை முதலில் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
ஜாதிகள் என்பது என்ன? ஜாதிகள் என்பது பிரிவு. ஒவ்வொரு தொழிலை செய்பவர்கள் தங்களை ஒரு பிரிவாக கருதிக்கொண்டார்கள்.
உதாரணமாக மீன்பிடி தொழில் செய்பவர்கள் ஒரு பிரிவாகவும், நெசவு வேலை செய்பவர்கள் ஒரு பிரிவாகவும், சிற்பவேலை செய்பவர்கள் ஒரு பிரிவு.இவ்வாறு ,அவர்கள் செய்யும் வேலையை வைத்து தனித்தனி பிரிவுகளாக பிரிந்துகொண்டார்கள். இது யாரும் உருவாக்கவில்லை. தானாக ஏற்பட்ட ஒன்று.
இந்த பிரிவுகளில் யார் உயர்ந்தவர்கள் யார் தாழ்ந்தவர்கள் என்று வேறுபாடு எழுவது இயல்பானது . அறிவு அதிகம் உள்ளவன், சிறந்த குணம் கொண்டவன் யாரோ அவன் உயர்ந்த பிரிவாக கருத்ப்பட்டான்.
அந்த காலத்தில் ஆட்சிசெய்பவர்கள் மக்களிடமிருந்து வரிபணத்தை பெற்றுவந்தார்கள். அனைவரிடமும் ஒரு போல் வரியை பெறமுடியாது.ஆகவே இந்த பிரிவுகளை முறையாக வகைப்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. இதை அவர்கள் நான்காக பிரித்தார்கள். அதை அவர்கள் ஸ்மிருதி அல்லது நாட்டின் சட்டங்கள் என்று அழைத்தார்கள்.மக்களை ஆளும் மன்னர்களே சட்டங்களை இயற்றினார்கள். ஒவ்வொரு ஆட்சியாளரும் தங்களுக்கு ஏற்றார்போல் சட்டங்களை மாற்றி அமைத்துக்கொண்டார்கள்.எல்லா காலத்திலும் ஒரே சட்டம் பின்பற்றப்படவில்லை.
-
ஸ்மிருதிகளில் கூறப்படும் ஜாதிமுறைகள் எவ்வாறு மனிதர்களை பிரித்தது?
ஒரு மனிதனின் உடலை எடுத்துக்கொள்ளுங்கள்.
மேல்பாகம் தலையில் மூளை உள்ளது. மூளையில் வேலை சிந்திப்பது. சிந்திப்பவர்கள்,அதிகம் வேலை செய்வதில்லை,ஆனால் அவர்களிடம் மிகப்பெரிய அளவில் அறிவாற்றல் உள்ளது.அவர்கள் மருந்துகளை கண்டுத்து ஆயுர்வேதத்தை உருவாக்குவார்கள் விண்வெளியை ஆராய்ந்து ஜோதிட சாஸ்திரத்தையும், விண்வெளிகுறித்த கண்டுபிடிப்புகளையும் வெளிப்படுத்துவார்கள், அல்லது மனிதனின் உடலை ஆராய்வார்கள், மனிதனின் மனத்தை ஆராய்வார்கள், பூமியை ஆராய்வார்கள், இன்னும் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு தேவையான புதியவற்றை கண்டுபிடித்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் கண்டுபிடித்ததை மன்னரிடம் கொடுத்து,மக்களுக்கு பயன்படும் படி செய்வார்கள். அவர்களிடமிருந்து அரசாங்கள் வரி வாங்க முடியாது,பதிலுக்கு அரசாங்கம் தான் அவர்களுக்கு தேவையான உதவிளை செய்து,அவர்களின் அறிவை பெற்றுக்கொள்ளவேண்டும்.இவ்வாறு அறிவை உபயோகித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். பிராமணர்கள் என்றால் பிரம்மம் அதாவது இறைவனை குறித்து சிந்திப்பவர்கள். அவ்வாறு இறைவனை குறித்து சிந்திக்கும் போது இயற்கையின் ரகசியங்கள் அனைத்தையும் அறிகிறார்கள். அதையே பல்வேறு சாஸ்திரங்களாக உருவாக்கி மக்களுக்கு பயன்படும் படி செய்கிறார்கள். இவர்கள் ரிஷி என்றும் சித்தர்கள் என்றும் அழைக்கப்பட்டவர்கள். அவர்கள் சுயமாக சம்பாதிக்கக்கூடாது,அந்த நாட்டின் அரசர்கள் தரும் உணவை பெற்றுக்கொண்டு, பதிலுக்கு தங்கள் அறிவை அரசர்களுக்கு கொடுத்து வாழவேண்டும்.
-
அடுத்தது நமது உடலில் தலைக்கு கீழ் உள்ள பாகம் இங்கே இதயம் உள்ளது. இதயம் என்பது மற்றவர்களுக்காக இரங்குவது,உதவுவது,நல்லவர்களை காப்பது.தர்மத்தை நிலை நாட்டுவது. இவர்கள் நல்லோரை காக்கவும் தீயோரை அளிக்கவும் தங்கள் வாழ்நாளை செலவு செய்கிறார்கள். பொதுவாக அரசர்கள், மந்திரிகள் போன்ற ஆட்சியாளர்கள் இவர்கள். இப்படிப்பட்டவர்களை சத்திரியர்கள் என்று அழைத்தார்கள். இவர்கள், பல தொழில்களை செய்வோர்,விவசாயிகள், வியாபாரிகளிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு, தர்மத்தை நிலைநாட்டும் பணியை செய்வார்கள்.
அடுத்து நமது உடலில் இருக்கும் முக்கிய பாகம் வயிறு. இந்த உலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் உணவு அளித்தல். சமுதாயத்தில் உணவு உற்பத்தி, இதனுடன் தொடர்புள்ள தொழிற்சாலைகள், கலைக்கூடங்கள் உட்பட அனைத்து தொழில் செய்பவர்களும் ஒருவரோடு ஒருவர் வாழ்வின் பின்னிப்பிணைந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் வைசியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். யாருக்கும் அடிபணியாமல் சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கும் அனைவருமே வைசியர்கள் என்று அழைக்கப்படார்கள்.இவர்களுக்கு வரி விதிக்கப்பட்டது. சமுதாயத்தில் வருமானம் பெறும் பிரிவு இவர்கள் மட்டுமே.
-
அடுத்து நமது உடலில் முக்கியமான உறுப்பு கால்கள். கால்கள் நடந்து செல்ல உதவுகிறது. மேலே உள்ளவர்கள் என்ன கட்டளையிடுகிறார்களோ அதை ஏற்று நடப்பது தான் கால்களின் வேலை. வைசியர்கள் மற்றும் சத்திரியர்களின் கீழ் வேலை செய்யும் அனைவரும் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சூத்திரர் என்றால் முக்கியமானவர் என்று பொருள்.கிருஷ்ணரை மகாபாரதத்தின் சூத்திரதாரி என்று சொல்வார்கள்.
உடலின் எல்லா பாகங்கள் நன்றாக இருந்தாலுலும் கால்கள் இல்லாவிட்டால் ,அவன் முழுமனிதனாக முடியாது. ஆகவே சூத்திரர்கள் ஒரு நாட்டிற்கு முக்கியமானவர்கள். சூத்திரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொடுத்து. அவர்களை சுதந்திரமாகவும் அன்பாகவும் நடத்த வேண்டியது,சத்திரியர்கள் மற்றும் வைசியர்களின் கடமை.
-
பிராமணர்கள் தங்கள் அதிகாரத்தை சத்திரியர்கள்மீது மட்டுமே செலுத்த வேண்டும். ஏனென்றால் அவர்கள் இறைவனை மட்டுமே நாடி வாழ்கிறார்கள். சத்திரியர்களுக்கு கூட அவர்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல, இறைவனைத்தவிர இந்த உலகத்தில் அவர்கள் யாருக்கும் கடட்டுப்பட்டவர்கள் அல்ல.அவர்களுக்கு தேவைகள் குறைவு, சத்திரியர்கள் அவர்களது தேவைகளை தீர்த்துவிடுவதால்,மற்ற பிரிவினர்களுடன் அவர்களுக்கு எந்த தொடர்பும் இருக்கக்கூடாது.வியாபாரிகளிடமிருந்து பணமோ பொருளோ வேறு எதையுமே வாங்கக்கூடாது, அது மட்டுமல்ல சூத்திரர்களை தங்களின் வேலைகளை செய்வதற்காக அமர்த்தக்கூடாது.அவர்கள் சுயமாக சம்பாதிக்ககூடாது. சொந்தமாக நிலமோ, ,உடமைகளோ எதுமே இருக்ககூடாது. இறைவனை மட்டுமே சார்ந்து வாழ்பவர்களாக அவர்கள் இருப்பார்கள்.
சத்திரியர்கள், பிராமணர்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள், பிராமணர்களிடம் அறிவை பெற்றுக்கொண்டு, நல்லாட்சி நடத்துவார்கள். தங்கள் படைகளில் உள்ள சூத்திர்கள்(போர்வீரர்கள்) மற்றும் தங்களின் கீழ் உள்ள வைசியர்களிடம் அன்பாகவும் நடந்துகொண்டு, அவர்களை பாதுகாக்கும் பொறுப்பும் இவர்களுக்கு உண்டு.
-
இந்த ஜாதிமுறைகள் பிறப்பை அடிப்படையாக கொண்டதா?
கண்டிப்பாக இல்லை. ஒருவன் பிறக்கும் போது ஒரு குறிப்பிட்ட ஜாதியின் கீழ்தான் பிறந்து அவர்களின் கட்டுப்பாட்டுடன் தான் வளர்கிறான்.ஆனால் வளர்ந்த பிறகு அவனிடம் உயர்ஜாதிக்கான திறமைகள் இருந்தால்,அதை நிரூபிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவன் மேல் ஜாதியாக கருதப்படுவான். உதாரணமாக ஒரு போர்வீரன் சிறந்த திறமைகளை உடையவனாக இருந்தால், சத்திரியனாக மாறி, ஒரு நாட்டையே ஆட்சி செய்ய முடியும்.அதேபோல் சூத்திரன் சுயமாக தொழில்புரிந்து வைசியனாகவும் மாற முடியும். அதேபோல் உயர் ஜாதியில் உள்ள ஒருவன் தாழ்ந்த சாதிக்கும் செல்ல வாய்ப்புள்ளது. ஒரு சத்திரியன் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்யாவிட்டால், மக்கள் கலகத்தில் ஈடுபட்டு அவனை சிறைபிடித்து, வேலைக்காரன் (சூத்திர)நிலைக்கு இறக்கிவிடுவார்கள். ஒரு பிராமணன் தன் கடமையை சரியாக செய்யாவிட்டால், பிராமண ஜாதியிலிருந்து விலகி, சத்திரிய ஜாதியை அடைய வாய்ப்புள்ளது.
இதை கீழ்கண்ட உதாரணங்கள் மூலம் பார்ப்போம். துரோணாச்சாரியர் பிறவியில் பிராமணர்,ஆனால் பழிவாங்கும் எண்ணம் கொண்டதால்,அவர் சத்திரியராக மாறவேண்டியிருந்தது.விதுரர் பிறவியில் சூத்திரர், ஆனால் சத்திரியனுக்குரிய வீரம் இருந்ததால் சத்திரியனாகவும், பிறகு அதை துறந்து பிராமணலட்சியத்தை ஏற்றுக்கொண்டு பிராமணனாகவும் உயர்ந்தார். கர்ணன் வளர்ப்பில் சூத்திரராக இருந்த போதும்,அவரது வீரம் காரணமாக சத்திரியராக மாறினார்.இவ்வாறு மகாபாரதத்தில் பல உதாரணங்களை காணலாம்.
-
ஸ்ரீகிருஷ்ணர் ஏன் ஜாதிகளை ஆதரித்து பேசினார்?
-
அந்த காலத்தில் ஜாதி முறைகள் சிறப்பாக இயங்கி வந்திருக்கின்றன. அந்தந்த ஜாதியினர் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வந்ததால்,சமுதாயம் சிக்கல் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. அதனால் தான் கிருஷ்ணர் இந்த பிரபஞ்சத்தில் சிறப்பான அனைத்தையும் தானே உருவாக்கினேன் என்று ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே வரும்போது ஜாதியையும் சேர்த்து சொன்னார்.
-
அவர் தனது நாட்டை ஆளும்போது சிறந்த சத்திரியராகவும், அர்ஜுனனுக்கு வேதாந்த போதனை செய்யும்போது பிராமணனாகவும், அர்ஜுனனுக்கு தேரோட்டும்போது சூத்திரனாகவும் வாழ்ந்தார் என்று சொல்லலாம்.
-
அப்படியானால் இந்த ஜாதிமுறைகள் எப்படி சீர்கெட்டன?
-
ஒரு ஜாதியில் பிறக்கும் ஒருவன் ,அந்த ஜாதிக்குரிய பண்புகள் இல்லாதவனாக இருந்தால், எந்த ஜாதிக்குரிய பண்புகள் அவனிடம் இருக்கின்றனவோ, அந்த ஜாதியில் சேர்த்துவிடும் பழக்கம் பின்பற்றப்படவில்லை. உதாரணமாக பிராமண ஜாதியில் பிறக்கும் ஒருவன், பிறந்த உடனேயே பிராமணனுக்குரிய பண்புகளை பெற்றுவிடுவதில்லை. பல ஆண்டுகள் கடின தவம் புரிந்த பிறகு தான் இறைவனை மட்டுமே சார்ந்து வாழும் பண்புகளை பெற்று பிராமணனாக மாறுகிறான். ஆனால் வளர்ந்த பிறகும் இந்த பண்புகளை பெறாமல் ஒருவன் தன்னை பிராமணன் என்று கூறிக்கொண்டு, அரசர்கள் தரும் சலுகைகளை பெற்றுக்கொண்டு வாழ்ந்ததும், அவனை அந்த பிராமண சமுதாயம் ஆதரித்ததும் முதல் தவறு. தங்களை பிராமணர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், அதற்கான தகுதிகள் இருப்பதை முதலில் நிரூபித்துக்காட்ட வேண்டும். இல்லாவிட்டால் தங்களுக்கு என்ன திறமை இருக்கிறதோ அந்த ஜாதியின் சேர்ந்துகொள்ள வேண்டும். ஒருவன் தன்னை பிராமணன் என்று அழைத்துக்கொள்ள விரும்பினால், அதை முதலில் நிரூப்பித்துக்காட்ட வேண்டும். ஆகவே பிறப்பை அடிப்படையாக வைத்து ஜாதிகள் உருவாக்கப்படவில்லை. அது குணத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.
-
அறிவு எதுவரை சுயநலம் அற்றதாக இருக்குமோ அது வரை நமக்கும் பிறருக்கும் நல்லது. எப்போது அறிவு தன்நலத்தில் கவனம் செலுத்துமோ, அப்போது அனைத்தும் கெட்டுவிடும். சத்திரியர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பில் இருந்த பிராமணர்கள் தங்கள் சுயநலத்தை நாடியது தான் இந்த ஜாதிமுறைகள் கெட்டுப்போனதற்கான முதல் காரணம்.
முற்காலத்தில் ஒரு ஜாதியை சேர்ந்தவர்கள் இன்னொரு ஜாதிக்கு எளிதாக செல்ல முடிந்தது என்பதை பார்த்தோம். சிலரின் சுயநலத்தால் இந்த நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டு, ஜாதிகள் கடக்கமுடியாத சுவர்களாக மாற்றப்பட்டன. ஒவ்வொரு ஜாதிக்கும் பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அவைகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கபட்டார்கள். இது சில ஜாதியினர் முன்னேறுவதற்கும்,சலுகைகளை பெறுவதற்கும் வசதியாக இருந்தது. சில ஜாதியிர் தொடர்நது பின்னோக்கி சென்று, கடைசியில் மிருகங்களைவிட கேவலமாக நடத்தப்படார்கள். சூத்திரர்கள் தினமும் மாடுகளைவிட அதிகமாக வேலை வாங்கப்பட்டார்கள். அவர்களின் சுதந்திரம் பறிக்கபட்டது. முற்காலத்தில் மகாபாரதத்தில் கர்ணன் ஒரு சூத்திரனாக இருந்தபோதும் அரசர்கள் கூடிய சபையில் பேச அனுமதிக்கபட்டன். அந்த காலத்தில் இருந்த நிலையை பிற்காலத்துடன் ஒப்பிட்டு பாருங்கள். சூத்திரர்கள் சில ஜாதியினர் வாழும் தெருவில் கூட நடந்துசெல்ல அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு அந்த காலத்தில் நிலவிய அற்புதமான ஜாதி என்ற அமைப்பு பிற்காலத்தில் தீமைநிறைந்ததாக மாறிவிட்டது.
-
ஸ்மிருதிக்கும் இந்து மத்திற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
-
ஸ்மிருதிகள் என்பவை சட்டபுத்தங்கள். இவைகள் தொடர்ந்து மாறுபவை. ஸ்ருதிகள் அல்லது வேதம் ஒருபோதும் மாறாதது. இந்த வேதத்தின் சாரம் வேதாந்தம்(இந்துமதம்). வேதாந்தம் என்ன போதிக்கிறது? இந்த இயற்கையில் சிறைபட்டு இருக்கும் மனிதர்களை விடுவித்து, இயற்கையை கடந்து செல்வது எப்படி? என்று போதிக்கிறது. ஒரே வரியில் சொன்னால் வேதாந்தத்தின் லட்சியம் முக்தி. ஆகவே இந்த ஸ்மிருதிகளுக்கும் இந்துமதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஸ்மிருதிகள் இந்த உலகில் வாழ்வதற்கான சட்டங்களை பற்றி சோல்கிறது, இந்துமதம் இந்த உலகை கடந்து செல்வது எப்படி என்று போதிக்கிறது.
இன்றைய அரசியல் அமைப்பு சட்டங்களே இன்றைய ஸ்மிருதிகள்.
ஜாதியை நீக்க முடியுமா?
-
ஜாதி என்றால் என்ன என்பதை ஏற்கனவே விளக்கியிருக்கிறேன்.ஜாதி என்பது தொழில் காரணமாகவும், குணத்தில் காரணமாகவும் ஏற்படுகின்ற ஒன்று.
தற்காலத்தில் இந்த ஜாதிமுறைகள் உருவம் மாறியிருக்கின்றன.
-
1.அந்த காலத்து பிராமணர்கள்,அறிவை பயன்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கும் தற்கால விஞ்ஞானிகள் மாறியிருக்கிறார்கள். பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கிறார்கள்.அரசாங்கம் அவர்களை பாதுகாத்துவருகிறது. அவர்களது அறிவு
அரசாங்கத்திற்கு பயன்பட்டுவருகிறது.
2. நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் பிரதமர், முதல்வர்,அமைச்சர்கள் போன்ற ஆட்சியாளர்கள் தான் சத்திரியர்கள்.இவர்கள் தான் ஸ்மிருதிகளை(சட்டங்களை)உருவாக்குகிறார்கள்.
3.சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் அனைவரும் வைசியர்கள்.இவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை வரியாக செலுத்துகிறார்கள்.
4. போர்வீரர்கள் மற்றம் தொழிற்சாலை உட்பட அனைத்து இடங்களிலும் சம்பளத்திற்காக வேலை செய்யும் அனைவரும் சூத்திரர்கள்.இவர்களுக்கு சுயமாக சிந்திக்க உரிமை இல்லை. மேலே உள்ள முதலாளிகள் இட்ட பணியை சிறப்பாக செய்ய வேண்டும். தொழிற்சாலை நிர்வாகிகள் இவர்களையும் காப்பாற்றுகிறார்கள்.
-
இப்போது முற்காலத்தை போலவே ஒருவர் ஒரு ஜாதியிலிருந்து இன்னொரு ஜாதிக்கு எளிதாக மாறமுடியும். ஒரு தொழிலாளி ,திறமையுள்ளவனாக இருந்தால் வைசியனாக,அதாவது முதலாளியாக மாற முடியும். ஒரு வைசியன் திறமையானவனாக இருந்தால் நாட்டை ஆளும் சத்திரியனாக முடியும். அறிவுள்ள யாரும் பிராமணனாக அதாவது விஞ்ஞானியாக முடியும்.
-
நிறைவுரை
-
ஜாதி அல்லது பிரிவு என்பது எக்காலத்திலும் இருக்கக்கூடியது. எல்லா நாட்டிலும் இருக்கக்கூடியது. ஆனால் அவர்களுக்குள்ளே சுதந்திரமும், முன்னேறுவதற்கான வாய்ப்பும் இருக்கவேண்டும்.
இந்த ஜாதி அமைப்புகளை சமுதாயம் தான் ஏற்படுத்துகிறதே தவிர மதம் ஏற்படுத்தவில்லை. அந்த காலத்திலம் சரி எந்த காலத்திலும் சரி இந்துமதம் ஜாதிகளை உருவாக்கவில்லை. ஜாதிகளின் விசயத்தில் தலையிடவும் இல்லை. இனிமேலும் அது தலையிடாது. ஆகவே யாராவது ஜாதிக்கும் மதத்திற்கும் தொடர்பு இருப்பதாக நினைத்தால் அவர்கள் உண்மை அறியாதவர்கள்,வரலாறு தெரியாதவர்கள், இந்துமதத்தின் மீது வேண்டும் என்றே அவதூறு பரப்ப நினைப்பவர்கள் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
-

இந்த உலகில் உள்ள அனைவரையும் இந்துக்களாக மாற்றுவதே நமது லட்சியம்


இந்த உலகில் உள்ள அனைவரையும் இந்துக்களாக மாற்றுவதே நமது லட்சியம் 
-
நான் ஏற்கனவே வெளியிட்டிருந்த ஒரு பதிவில் இந்த உலகில் உள்ள அனைவரையும் இந்துக்களாக மாற்றுவதே நமது லட்சியம் என்று குறிப்பிட்டிருந்தேன். இதை படித்த பின் சிலர், இது மதவெறியர்கள் பேசும் கருத்து போல் அல்லவா இருக்கிறது என்று தங்கள் கருத்தை வெளிப்படுத்தினார்கள்.
-
நான் குறிப்பிட்ட வார்த்தைகளை படிக்கும் போது எனக்கும் அவ்வாறு தான் தோன்றுகிறது. எனவே இங்கே அதற்கான விளக்கம் தேவைப்படுகிறது...
-
ஒரு காலத்தில் இன்றைய விஞ்ஞானத்தை பெரும்பாலான மதவாதிகளும், மதத்தை நம்பும் பாமர மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
விஞ்ஞானிகளை இறைவனுக்கு எதிரான துரோகிகள் என்று கூறி எரித்துகொன்றார்கள்.
-
படிப்படியாக விஞ்ஞானம் ,மதத்தின் கருத்துக்களை சுக்கல்சுக்கலாக்கி, தூக்கி எறிந்துவிட்டு, மக்களின் மனத்தில் நீங்காத இடத்தை பெற்றுவிட்டது.
இன்று மதங்களை ஏற்றுக்கொள்ளாத மனிதர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனால் எல்லோரும் விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.
அப்படியானால் எல்லோரையும் விஞ்ஞான ஆதரவாளர்கள் என்று கூறலாமா. கண்டிப்பாக கூறலாம்.
-
இன்று நம்முன் உள்ள சவால் என்னவென்றால், விஞ்ஞானத்தினால் மனிதன் பல நல்ல பலனை பெற்றாலும், அதே அளவு தீய பலனையும் பெற்றுள்ளான். நல்லதை எந்த அளவு பட்டியலிடமுடியுமோ அதே அளவு தீயதையும் பட்டியலிடலாம்.
ஒரே ஒரு உதாரணம் மட்டும் தருகிறேன். மனிதன் சுகமாக வாழ விஞ்ஞானம் பல தொழிற்சாலைகள் மூலம் பல பொருட்களை உருவாக்கியது. அதே தொழிற்சாலைகளே இன்று மனிதன் வாழமுடியாத சூழ்நிலையை உருவாக்கிவருகின்றன. ஆகவே நல்லவைகளும் கெட்டவைகளும் இந்த விஞ்ஞானத்தில் விளைவுகள்.
-
உடனே நான் விஞ்ஞானத்தை உதறி தள்ள வேண்டும் என்று கூறுவதாக நினைக்காதீர்கள். விஞ்ஞானத்தால் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினை ஒன்று உள்ளது. அது சமீபகாலமாக மேலும் தீவிரமாகியுள்ளது.
அது தான் மனஅமைதி.
விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் மனிதனுக்கு மனஅமைதியை தரவில்லை. முற்காலத்தை விட மனிதர்கள் மனஅமைதியை இழந்துவருகிறார்கள். அதன்விளைவாக எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும், கொலை செய்பவர்களாகவும்,தற்கொலை செய்பவர்களாகவும், பைத்தியமாகவும் மாறிவருகிறார்கள்.
ஏற்கனவே அவர்களிடம் இருக்கும் மதத்தை விஞ்ஞானம் விழுங்கிவிட்டது. அவர்களுக்கு இப்போது விஞ்ஞானத்தால் கொடுக்க முடியாத மனஅமைதி வேண்டும். விஞ்ஞானத்தால் தீர்க்க முடியாத தங்கள் கேள்விகளுக்கு விடை வேண்டும்.
-
இந்து மதம் மட்டுமே இன்றைய நவீன விஞ்ஞானத்திற்கு சவாலாகவும், மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வதாகவும், அவர்களின் மனத்திற்கு அமைதியை கொடுப்பதாகவும் உள்ளது.
-
இப்போது முக்கிய கருத்திற்கு வருகிறேன். விஞ்ஞானத்தை அனைவரும் ஆதரித்தது போல, இந்து மதத்தின் கருத்துக்களை அனைவரும் ஆதாரித்தால், அவர்களை இந்துக்கள் என்று சொல்லலாமா? கண்டிப்பாக சொல்லலாம்.
இந்த கண்ணோட்டத்தில் தான், இந்துமதத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி செய்வோம் என்று கூறினேன்.
-
தற்காலத்தில் மதமாற்று கும்பல் செய்வது போன்ற கருத்தில் அதை கூறவில்லை.
-
ஒரு மதத்தை விஞ்ஞானம் அழித்தது. இன்னொன்றை தீவிரவாதம் அழித்துக்கொண்டிருக்கிறது. இனி நமது வேலை மட்டுமே பாக்கியுள்ளது. பல நாடுகளில், அது ஏற்கனவே மக்களின் மனத்தை வென்றுவிட்டது. தீவிரமாக இறங்கி வேலை செய்தால் கூடிய விரைவில் அதன் பலனை காணலாம்.
-
--சுவாமி வித்யானந்தர்

மற்ற மதங்களைவிட இந்துமதம் சிறந்தது என்று ஏன் சொல்கிறார்கள்?



கேள்வி....மற்ற மதங்களைவிட இந்துமதம் சிறந்தது என்று ஏன் சொல்கிறார்கள்?
-
சுவாமி வித்யானந்தர்.....
-
1.நமது மதம் தத்துவங்களை ஆதாரமாக கொண்டது. எந்த மகானையோ மனிதர்களையோ ஆதாரமாக கொள்ளவில்லை .பிற மதங்கள் அந்த மதத்தை தோற்றுவித்த மனிதர்களை ஆதாரமாக கொண்டது
-
2.நமது மதத்தின் முடிவுகள் இன்றைய விஞ்ஞானிகளின் இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு ஒத்து இருக்கிறது. 
-
உதாரணமாக 1.சூன்யத்திலிருந்து எந்தபொருளையும் படைக்க முடியாது, சூன்யத்திலிருந்து பிரபஞ்சத்தை படைக்க முடியாது.2. அனைத்தும் வட்டம்போல உள்ளது. முட்டையிலிருந்து குஞ்சு, குஞ்சுவிலிருந்து முட்டை இதே போல் சுழற்சி. பிரபஞ்சமும் தோற்றம்,ஒடுக்கம், தோற்றம் ஒடுக்கம் என்று தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது 3. ஒரு சக்தி தான் இன்னொரு சக்தியாக மாறுகிறதே தவிர சூன்யத்திலிருந்து புதிதாக சக்தியை உருவாக்க முடியாது. 4. ஒரு உயிர்தான் இன்னொரு உயிராக பரிணமிக்கிறது. ஓர் அறிவு,ஈர் அறிவு என்று அறிவு படிப்படியாக விரிந்து உயர்நிலையாக மனிதனாக பரிணமிக்கிறது. 5. இந்த உலகில் எப்போதும் இரண்டு சக்திகள் உள்ளன கவர்தல்சக்தி மற்றும் விலக்கும் சக்தி 6. இந்த உலகிற்கு எது தேவையோ அதை இந்த உலகமே உருவாக்கிக்கொள்ளும் படைப்பாற்றல். 7. தொடர்மாற்றம் பற்றிய கருத்து ,இன்று நமது உடலில் உள்ள அணுக்கள் நாளை இன்னொருவரின் உடலுக்குள் செல்கிறது, இவ்வாறு உடல் தொடர்ந்து மாறுகிறது. அதே போல் மனமும் மாறிக்கொண்டே இருக்கிறது.ஆனால் நாம் மாறுவதில்லை 8. உடலும்,மனமும் ஜடப்பொருள் ,உணர்வு இல்லாதது. ஆனால் இந்த இரண்டையும் இயக்குவது உணர்வுப்பொருள். 9. அனைவரின் மனமும் பிரபஞ்ச மனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன .
-
இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். விஞ்ஞானம் நம்மிடமிருந்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளன.
-
3. நமது மதம் வேதங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. வேதங்கள் மனிதர்களால் எழுதப்படவில்லை. அவைகளின் மொழி சமஸ்கிருதம் இல்லை. அவை வேதமொழி. வேதங்கள் இதுவரை எழுதப்படவில்லை. இறைவனின் வார்த்தைகளே வேதம். ...இது பற்றி தனியாக விவாதிக்கலாம்...இந்த கருத்து நமது மதத்திற்கு மட்டுமே உரியது.
-
4. நமது மதம் , இதுவரை உலகில் தோற்றிய அனைத்து மதங்களையும், இனி தோற்றப்போகின்ற அனைத்து மதங்களையும் உள்வாங்கிக்கொள்ளும் மகாசமுத்திரம் போல உள்ளது. அதாவது இதில் இல்லாத எந்த புதிய கருத்துக்களையும் வேறு மதத்தில் நீங்கள் காணமுடியாது. 
-
5. நமது மதத்தில் மட்டுமே மனிதன் இறைவனாக மாற முடியும் என்ற கருத்து உள்ளது. அவ்வாறு இறைவனுடன் ஒன்று கலக்கும் முக்தி நிலை பற்றி கருத்து இங்கு மட்டுமே உள்ளது.
-
6.உலகின் இதுவரை கண்டுபிடிக்கப்ட்ட மிக உயர்ந்த தத்துவமான அத்வைத தத்துவம் வேறு மதங்களில் இல்லை.
-
7.நமது மதம், கடவுள் நன்மை,தீமை இரண்டையும் கடந்தவர் என்கிறது. மற்ற மதங்களில் கடவுள் நல்லவர் என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. தீமையை அவரால் தடுக்க முடியாது. அவர்களை பொறுத்தவரை சாத்தான் என்பது கடவுளுக்கு கட்டுப்படாத தன்னிச்சை பெற்ற வேறு ஒரு சக்தி
-
8.நமது மதத்தில், மறுபிறப்பு பற்றிய கருத்து உள்ளது. ஒரு உயிர் பரிணாமம் அடைந்து வேறு உயிர்களாக மாறுவதை ஏற்றுக்கொள்கிறது.இது விஞ்ஞானிகளின் கருத்துக்கு ஒத்துவருகிறது. ஒரு உயிர் இன்னொரு உயிராக பரிமணமிப்பதை அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.ஆனால் அதை மறுபிறப்பு என்று சொன்னால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை...இதை பற்றிய தனியாக விவாதிக்கலாம்.....
-
9. நமது மதத்தின் கடவுள், அனைத்து இனங்களின், அனைத்து உயிர்களின் கடவுள். மனிதர்களுக்கு மட்டுமல்ல விலக்குகளுக்கும் அவரே கடவுள்.அவர் மனிதர்களை மட்டும் நேசிப்பவரல்ல, இந்த உலகில் உள்ள அனைவரையும் நேசிப்பவர். அவர் நல்லவர்களை நேசிக்கிறார்,தீயவர்களை வெறுக்கிறார் என்று கருத்து நமது மதத்தில் இல்லை. அவர் அனைவரையும் சமமாக நேசிக்கிறார்.
-
10.நமது மதத்தில் கர்மா தியரி இருக்கிறது. அதாவது ஒரு செயல், அதற்கு சமமான எதிர் செயலை உருவாக்கும். ஒருவர் துன்படுவதற்கு காரணம், அவர் அதற்கு முன்பு செய்த தீய செயல். இனி ஒருவர் இன்பமாக இருக்க என்ன செய்ய வேண்டும்? இனிமேல் நல்ல செயல்கள் செய்ய வேண்டும். இவ்வாறு மனிதனின் இன்பத்திற்கும்,துன்பத்திற்கும் மனிதனே காரணமாகிறான்.
-
11. பிறமதங்களில் மனிதன் சூன்யத்திலிருந்து தோன்றினான் என்று சொல்கிறது. நமது மதம் மனிதன் இறைவனிலிருந்து தோன்றினான்,இறைவனில் வாழ்கிறான்,இறைவனில் ஒடுங்கி முடிவில் இறைவனாகிறான் என்கிறது.
-
12. எல்லையற்ற காலம் பற்றிய கருத்து நமது மதத்தில் மட்டுமே உள்ளது. அதாவது இந்த பிரபஞ்சம் எல்லையற்ற காலம் வரை தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். ஒருநாள் திடீரென தோன்றியது .ஒரு நாள் திடீரென அழிந்துவிடும் என்ற கருத்து இல்லை., நாம் காலத்தை கடந்து வாழ்ந்துகொண்டே இருப்போம். 
-
13.ஆன்மாவுக்கு உருவம் இல்லை ,அதே போல் இறைவனுக்கும் உருவம் இல்லை என்ற கருத்து நமது மதத்தில் மட்டுமே உள்ளது. மற்ற மதங்களின் கடவுள் ஏதோ ஒரு உருவத்தை உடையவராகவே இருக்கிறார். உருவங்களுக்கு அழிவு உண்டு என்று நமது மதமும்,விஞ்ஞானமும் கூறுகிறது.அதன் படி பார்த்தால் மற்ற மதங்களின் இறைவன் ஒரு நாள் அழிந்துவிடுவார்.
-
14. நமது மதத்தில் மனிதன் இந்த வாழ்க்கையிலேயே முக்தியடைய முடியும் என்று சொல்கிறது. மற்ற மதங்களில் மனிதன் இறந்த பிறகு கல்லறையில்,கடைசி நாள்வரும் வரை காத்திருக்க வேண்டும்.
-
நேரமின்மை காரணமாக இத்துடன் முடிக்கிறேன்... நமது மதத்தின் சிறப்புகளை இன்னும் பக்கம்பக்கமாக அடுக்கிக்கொண்டே போகலாம்... 
-
..சுவாமி வித்யானந்தர்

வீட்டில் வளர்க்கும் பசுவையும். காளையையும் ஏன் கொல்லக்கூடாது?



கேள்வி...வீட்டில் வளர்க்கும் பசுவையும். காளையையும் ஏன் கொல்லக்கூடாது? இதற்கும் இந்து மதத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
-
சுவாமி வித்யானந்தர்...
--
ஒரு கற்பனை கதை மூலம் இதை விளக்க முயல்கிறேன்.
-
மூன்று பேர் காட்டில் சென்று, காட்டிலே இயற்கையாக வாழ்ந்துவரும் பசுவையும்,காளைகளையும் பிடிக்க சென்றார்கள். அவர்கள் நினைத்த படி அவைகளை பிடித்தார்கள். 
-
அதில் ஒரு பசு கேட்டது. என்னை என் பிடித்தாய்? காட்டிலே சுதந்திரமாக உலவிவந்தேன். சிங்கம், புலி இவைகளால் உயிர் போய்விடுமோ என்று மட்டுமே அவ்வப்போது பயப்படுவேன் என்றது. அதற்கு பசுவை பிடித்தவன் சொன்னான், உனது உயிரை நான் காப்பாற்றுகிறேன்.உன் வாழ்நாள் முழுவதும் உனக்கு உயிர் பயம் ஏற்படாதவாறு பாதுகாப்பேன், உனக்கு தேவையான உணவளிப்பேன்.அதற்கு பதிலாக நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். எனக்கும் எனது குடும்பத்திற்கும் தேவையான பால் தரவேண்டும் என்றால். 
-
அந்த பசுவும் நல்லது, நீ எனக்கு ஒரு உதவி செய்கிறாய்,அதே போல் நானும் உனக்கு உதவி செய்கிறேன். ஆனால் இந்த விதியை மீறி, நான் பால் கொடுக்க முடியாத நிலை வரும்போது என்னை இறைச்சிக்காக கொன்றாலோ, வேறு யாருக்காவது விற்றாலோ, உனது குடும்பத்தில் உள்ள ஒருவரை, நீயே கொன்றதாக அர்த்தம். அதற்கான பாவத்தை நீயும், உனது குடும்பமும் அடையும். அந்த பசுவை பிடித்தவனும் உன்னை எனது குடும்பத்தில் உள்ள ஒருவரைபோல பாதுகாப்பேன் என வாக்களித்தான்.
-
இன்னொருவன் ஒரு காளையை பிடித்தான். காளை இதேபோல என்னை ஏன் பிடித்தாய் என்று கேட்டது. அவன், உன்னை எனது உழவு தொழிலுக்கு பயன்படுத்துவேன், விவசாயத்திற்கு பயன்படுத்துவேன். அதன் மூலம் எனது வருமானத்தை பெருக்கிக்கொள்வேன் .அதற்கு பதிலாக உனக்கு பாதுகாப்பு தருவேன், உணவளிப்பேன் என வாக்குறுதியளித்தான். அந்த காளையும், என்னால் வேலை செய்ய முடியாத நிலைவரும்போது, என்னை இறைச்சிக்காக கொன்றாலோ, வேறு யாருக்காவது விற்றாலோ, உனது குடும்பத்தில் உள்ள ஒருவரை நீயே கொன்றதற்கான பாவத்தை அடைவாய் என்றது. அவனும் ஒத்துக்கொண்டான்.
-
மூன்றாவது உள்ளவன் ஒரு காளையை பிடித்தான் அந்த காளை ஏன் பிடித்தாய் என்று கேட்டது. உனக்கு உணவளித்து, நீ கொழுகொழுவென்று வளர்ந்தபின், இறைச்சிக்காக உன்னை கொன்றுவிடுவேன் என்றான். காளை அவனிடம் ஒரு காளையை கொல்வதால் வரும் பாவத்தை நீ அடைவாய் என்றது.
-
இந்த கதையில், முதல் இரண்டு பேரும் அவர்கள் வளர்க்கும் பிராணியை கொல்வதால் வரும் பாவம் கொடூரமானது. 
-
மாமிச உணவு சாப்பிடுவது நல்லதா? இந்துமதம் அதை அனுமதிக்கிறதா? என்று ஒருவர் கேட்டிருந்தார்
-
பல நூற்றாண்டுகளுக்கு முன் வெளிநாட்டிலிருந்து சில காட்டுமிராண்டிகள் இந்தியாவிற்குள் பலமுறை படையெடுத்து வந்தார்கள். இங்குள்ளவர்கள் மாமிசம் சாப்பிடாத உணவு பழக்கமுள்ளவர்கள். காட்டுமிராண்டிகளோ மாமிச உணவு உண்பவர்கள். குறைந்த எண்ணிக்யை உள்ள இவர்கள் லட்சக்கணக்கான இந்தியர்களை கொன்று, அவர்களின் வீட்டுபெண்களை அடிமைகளாக பிடித்து வெளிநாட்டிக்கு கொண்டு சென்று அங்கு வீதியில் வைத்து ஏலம்விட்டார்கள்.
-
மாமிசம் உண்பதால் வரும் பாவத்தைவிட, தனது வீட்டில் உள்ளவர்களை இந்த காட்டுமிராண்டிகளிடமிருந்து காப்பாற்ற திராணியில்லாமல் இருப்பதால் வரும் பாவம் அதிகமானது.
-
ஆகவே இங்கே நாம் சொல்வது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காட்டுமிராண்டிகளிடமிருந்தும், கொள்ளையர்களிடமிருந்தும் காப்பாற்றிக்கொள்ள, உடல்வலிமைக்காக மாமிச உணவு உண்பதால் வரும் பாவம் குறைவு. காய்கறிகளை உண்டு பலமில்லாமல் வாழ்ந்து, காட்டுமிராண்டிகளின் கால்களில் மதிபட்டு வாழ்வதும்,சாவதும் மிகப்பெரிய பாவம். 
-
நீங்கள் உண்ணும் உணவு, உங்கள் சுவைக்காகவா? அல்லது மற்றவர்களின் நலனுக்காகவா? என்பதை பொறுத்தே அது பாவமா?பாவம் இல்லையா என்பதை முடிவுசெய்ய வேண்டும்.
-
ஆகவே இந்துமதம் உங்கள் உணவு விசயத்தில் தலையிடுவதில்லை. ஒவ்வொரு உணவும் அதற்குரிய பாவத்தை கொண்டுவருகிறது. காய்கறிகளை உண்பதாலும் பாவம் வருகிறது.பாவமே வராமல் இருக்க வேண்டுமானால் எந்த உணவும் உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். உணவினால் உங்களிடம் வரும் பாவத்தை ஏற்றுக்கொண்டு, அதை விட அதிக புண்ணிய செயல்களை செய்பவன் சிறந்தவன்.அவனை பாவம் பற்றுவதில்லை.
-
இறைவனை மட்டுமே நம்பி வாழ்பவன், படிப்படியாக உணவை குறைத்துக்கொண்டு, கடைசியில் எந்த உணவும் உண்ணாமல் வாழும் நிலையை அடைகிறான் . எப்போது முற்றிலும் உணவை உட்கொள்வதை நிறுத்துகிறானோ, அப்போது முக்தி கிடைக்கிறது.
-

நமக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை நீக்குவதற்காக உடலை வருத்தி நேர்த்திக்கடன் செலுத்துவது சரியா?


கேள்வி.....நமக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை நீக்குவதற்காக உடலை வருத்தி நேர்த்திக்கடன் செலுத்துவது சரியா?
-
சுவாமி வித்யானந்தர்...
-
நமக்கு ஏற்பட்டுள்ள தீராத துன்பத்திற்கு நாம் தான் காரணம். கடவுள் காரணமல்ல. ஏற்கனவே நாம் செய்ய செயல்களின் பலனை தான் இப்போது அனுபவிக்கிறோம். இதை நிவர்த்தி செய்வது பரிகாரம். 
-
பிறருக்கு தெரிந்தோ, தெரியாமலோ செய்த தீமைகள் தான் , இப்போது நமது துன்பத்திற்கு காரணம் .அது இந்த பிறவியில் செய்யாவிட்டாலும், முற்பிறவிகளில் செய்திருக்கலாம். அதேபோல் நாம் சார்ந்துள்ள குடும்பத்தில் யாராவது முன்பு பிறருக்கு துன்பம் விளைவித்திருந்தால், அதனாலும் தற்போது துன்பம் ஏற்படுகிறது.
-
இதை நிவர்த்தி செய்வதற்கு, நமது உடலை வருத்துவது எதிர்மறையான வழி, இதைவிட நேர்மறையான வழி ஒன்று உள்ளது. இந்த உடலை பயன்படுத்தி, ஏழைகளுக்கு உணவு கொடுக்கலாம், கல்வி கற்றுகொடுக்கலாம், அல்லது ஆன்மீக ஞானத்தை கொடுக்கலாம். இவ்வாறு இந்த உடல் பிறரது சேவைக்கு பயன்படுமானால் அதுவே சிறந்த பரிகாரம்.
-
இறைவனுக்கு சேவை செய்ய விரும்புபவன் இறைவனது பிள்ளைகளான மக்களுக்கு முதலில் சேவை செய்ய வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.

சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? இந்துமதத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது?



கேள்வி... சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? இந்துமதத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
-
சுவாமி வித்யானந்தர்...
-
இந்துமதம் என்பது இந்தியாவில் தோன்றிய பல மதங்களை உள்ளடக்கிய ஒரு பொது பெயர். 
-
சைவம் என்பது தனிமதம்.ஒரு மனிதன் முக்தியடைய தேவையான அத்தனை கருத்துக்களும் அதில் இருக்கின்றன. அதே போல வைணவம் என்பதும் தனி மதம்.அதிலும் ஒருவன் முக்தியடைய தேவையான அனைத்து கருத்துக்களும் உள்ளன. அதேபோல் சாக்தம் எனப்படும் தேவி வழிபாடு பற்றிய மதமும் தனிமதமாகும். அதிலும் முக்தியடைவதற்கு தேவையான அனைத்து கருத்துக்களும் உள்ளன.
-
சைவமதத்தை பொறுத்தவரை சிவன் தான் முழுமுதற் கடவுள். வைணவத்தை பொறுத்தவரை விஷ்ணுவும். சாக்தத்தை பொறுத்தவரை காளியும் முழுமுதற் கடவுள்.
-
ஒவ்வொரு மதத்திலும் பிற மதங்களை இகழ்ந்து பேசி மட்டம் தட்டும் கருத்துக்கள் உள்ளன. சைவமதத்தினர்,திருமாலை ,சிவனின் கீழ் உள்ளவராக கருதுகிறார்கள். அதே போல் வைணவத்தில் விஷ்ணுவுக்கு கீழ் சிவன் இருப்பதாக கருதுகிறார்கள். சாக்த மதத்தில் சிவனும்,விஷ்ணுவும் , தேவிக்கு கீழ் உள்ளவர்கள்.
-
தற்காலத்தில், பாமர மக்கள் இந்த மூன்று வழிபாட்டுமுறைகளையும்,தனித்தனியாக ஏற்றுக்கொள்ளாமல் மொத்தமாக பார்க்கிறார்கள்.அதனால் தான் குழப்பம் ஏற்படுகிறது.
-
நீங்கள் சைவ சித்தாந்தம் தெரிந்த சைவராகவோ, வைணவ சாஸ்திரம் கற்ற வைணவராகவோ, தந்திரசாஸ்திரம் கற்ற சாக்தராகவோ இருந்தால் உங்களுக்கு எந்த குழப்பமும் வராது. எதையுமே முறையாக கற்றுக்கொள்ளாததால் தான் சந்தேகம் வருகிறது.
-
அப்படியானால் இந்து மதம் என்பது என்ன?
-
இந்துமதம் என்பது இந்த தனித்தனி மதங்களின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதில் பிற மதங்களை இகழ்ந்து பேசும் கருத்துக்களை மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை.
-
இந்துமதம் மேலே கூறப்பட்ட மூன்று முக்கிய மதங்களையும் துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் என்ற மூன்று கோட்பாடுகளின் கீழ் கொண்டுவருகிறது. இந்த கோட்பாடுகளை வேதாந்தம் என்கிறோம். இந்த வேதாந்த கோட்பாடுகளை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டால், மதங்களிடையே உள்ள சச்சரவுகள் நீங்கி அமைதி பெறமுடியும்.
-

குல தெய்வம் என்பது என்ன? இந்துமதத்திற்கும் குல தெய்வத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?


கேள்வி...குல தெய்வம் என்பது என்ன? இந்துமதத்திற்கும் குல தெய்வத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?
-
சுவாமி வித்யானந்தர்....
-
இந்துமதத்தின் நோக்கம் என்ன? முக்தி. இயற்கையின் பிடியிலிருந்து விடுதலை பெறுவது.
-
ஒரு மனிதனை முக்தியை நோக்கி இட்டு செல்லும் கருத்துக்களை இந்துமதம் ஆதரிக்கிறது. மனிதனை மீண்டும் மீண்டும் கட்டுண்டவனாக மாற்றும் கருத்துக்களை ஆதரிப்பதில்லை. இது அடிப்படை.
-
ஒருவீட்டில் திருமணம் ஆகாத யாரவது இறந்தால் அவர்கள் குல தெய்வமாக பூஜிக்கப்படுகிறார்கள்.
உதாரணமாக வீட்டில் ஒரு பெண் இறந்துவிட்டால், அந்த பெண்ணிற்கு வீட்டிற்குள்ளோ அல்லது வீட்டை ஒட்டியோ ஒரு அறையை ஒதுக்குவார்கள். அங்கே அந்த பெண்ணின் உடைமைகளை வைத்து பாதுகாப்பார்கள். வருடம் ஒருமுறையோ அல்லது பலமுறையோ, அந்த பெண்ணிற்கு விருப்பமானவற்றை படைப்பார்கள்.
-
ஒரு மனிதன் இறந்த பிறகு முக்தியடையாவிட்டால்,மறுபிறவி எடுக்கிறான் என்பது இந்துமதத்தின் அடிப்படை கருத்து.
-
இறந்த பிறகு உயிர் உடலைவிட்டு பிரிந்து சில நாட்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும். வீட்டில் உள்ளவர்கள் தன்னை குறித்து அழுவதை அது கவனிக்கும். அங்கிருந்து அடுத்து எங்கே செல்வது என்று அதற்கு தெரியாது. ஒரு வேளை வீட்டில் உள்ளவர்கள் இறந்தவர்களை பற்றிய நினைவுகளையும், இறந்தவர்களின் பொருட்களையும் தூக்கி எறிந்துவிட்டால், தன்னை இந்தவீட்டில் உள்ளவர்கள் மறந்துவிட்டார்களே! இனி இங்கு இருக்க வேண்டாம் என்று வேறு இடத்தை தேடி செல்லும். ஒருவேளை அந்தவீட்டில் உள்ளவர்கள் இறந்தவரை பற்றிய நினைத்துக்கொண்டிருந்தால் அந்த ஆவி அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும். இறந்தவரை மறந்துவிட்டால்,
அது வீட்டைவிட்டு வெளியேறி தன்னைபோன்ற இறந்தவர்கள் வாழும் இடத்தை அடைகிறது. இந்த வாழ்க்கை நரக வாழ்க்கை என்று சொல்லப்படுகிறது. அதாவது துன்பத்தை மட்டுமே அனுபவிக்கும் வாழ்க்கை. இவர்கள் மனதில் அன்பு இல்லை.வேதனை மட்டுமே மிஞ்சி நிற்கிறது. மற்றவர்கள் போல் வாழ முடியவில்லையே என்ற ஏக்கமும்,நிறைவேற முடியாத பல ஆசைகளும் நிறைந்திருக்கும். இவர்களால் நாம் காண்பது போல் இந்த உலகை காணமுடியாது. எது நல்லது? எது கெட்டது என்று பகுத்துணரும் மனம் இல்லை. இயல்புணர்ச்சியே மேலோங்கி இருக்கும்.
-
இரவு நேரங்களில் மனித மனம் பலவீனமடைகிறது. இறந்த உயிர்களின் மனம் பகலில் பலவீனமடைகிறது,இரவில் பலமடைகிறது.இரவு நேரங்களில் சில மனிதர்களை துன்புறுத்தவும், அவர்கள் உடலுக்குள் செல்லவும்,அவர்களை கொலை செய்யவும் இந்த உயிர்களால் முடியும்.
-
இப்போது நாம் குல தெய்வம் பற்றிய கருத்திற்கு வருவோம்.
-
திருமணம் ஆகாத ஒருவர் இறந்தால்,அந்த ஆவியை வீட்டில் வைத்து வழிபடும் வழக்கம் குலதெய்வ வழிபாடு, அது வீட்டிற்குள்ளே வாழ்கிறது. அந்த வீட்டில் உள்ள நபர் யாராவது வெளியூர் செல்லும் போது விரும்பினால், அவருடன் செல்லும். தான் வசிக்கும் வீட்டில் உள்ளவர்கள் நலனை மட்டுமே கவனிக்கும். அதுவும் அதன் சக்திக்கு உட்பட்ட படிதான் அதனால் இயங்க முடியும். உதாரணமாக அந்த குல தெய்வங்கள், பிற துஷ்ட பிசாசுகளை வீட்டிற்குள் வர அனுமதிக்காது. கிராமங்களில் பழைய காலத்தில் துஷ்ட ஆவிகளின் தொந்தரவு அதிகமாக இருக்கும். அதை நிவர்த்தி செய்ய வீட்டிற்கு ஒரு குல தெய்வம் வைத்திருப்பார்கள்.
-
குல தெய்வம் ஆணாக இருந்தால் வீட்டிற்கு வெளியேயும், பெண்ணாக இருந்தால் வீட்டிற்கு உள்ளேயும் தனி அறை ஒதுக்குவார்கள்.
-
ஆனால் சில வேளைகளில் மந்திரவாதிகள் வீட்ற்கு வெளியே உள்ள குலதெய்வத்தை தன்கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவார்கள். அதை தவறான செயல்களை செய்யும் படி தூண்டுவார்கள். இது தனி சப்ஜெக்ட்...
-
குல தெய்வம் இருப்பது போல, ஊர்காவல் தெய்வமும் இருக்கிறது. ஊர்காவல் தெய்வம் பல வகைப்படும். எல்லைகாவல் தெய்வம், கோவில் காவல் தெய்வம், அணைகள்,குளங்கள் காவல் தெய்வம் என்று காவல் தெய்வங்கள் பல இருக்கின்றன.
-
ஊர் காவல் தெய்வம் என்பது ஏற்கனவே அந்த ஊரில் இறந்த ஒருவர்தான். சுடலை என்றால் சுடுகாடு,மாடன் என்றால் தலைவன் என்று பொருள். பழைய காலத்தில் கிராமங்களில்,அற்ப ஆயுளில் இறப்பவர்கள், இரவு நேரங்களில் வீட்டில் வசிப்பவர்களை துன்புறுத்துவதுண்டு. மக்கள் இரவு நேரங்கள் வெளியே வரவே பயப்படுவாவர்கள். இதை சரி செய்ய சுடுகாட்டில் மாடன்கோவில் இருக்கும். இந்த மாடனின் வேலை, சுடுகாட்டிலிருந்து மற்ற ஆவிகளை ஊருக்குள் செல்வதை தடுக்கிறது.தனது கட்டுப்பாட்டில் இறந்த ஆவிகளை வைத்துக்கொள்ளும். இந்த மாடனும் ஏற்கனவே இந்த ஒருவரின் ஆவி தான். ஆனால் இவர் மக்களை மற்ற ஆவிகளிடமிருந்து காப்பாற்றுகிறார். வருடத்தில் ஒருமுறையோ,பல முறையோ இந்த மாடனுக்கு பூஜை செய்வார்கள். இந்த மாடன் குலதெய்வத்தைவிட சக்தி வாய்ந்தது. இருந்தாலும் மந்திரவாதிகள் இவர்களையும் கட்டுப்படுத்திவிடுவார்கள்.
-
மக்களின் நன்மைக்காக அணைகட்டுவார்கள், ஆனால் எதிரி நாட்டை சேர்ந்தவன் அணையை உடைத்துவிடுவான் மறைமுகமாக மக்களை துன்புறுத்துவான்.இதிலிருந்து மக்களை காக்க அணை காவல் தெய்வம்,மற்றும் குளம் காவல் தெய்வம் உள்ளது.
-
பழைய காலத்தில் அணைகட்டி முடிந்தவுடன் திருமணமாகாத சில இளைஞர்களை கொன்று அவர்களை சாமியாக்கி,அவர்களுக்கு அங்கேயே கோவில் கட்டுவார்கள் .இறந்தவர்கள் அந்த அணையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு. அவர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறையோ, பல முறையோ பூஜை வைப்பார்கள். இதே போல் கோவில் நகைகளை திருடாமல் இருப்பதற்காக கோவில் காவல் தெய்வம் உள்ளது.
-
பழைய காலத்தில் பெரிய நிலகிழார்கள், அனாதை சிறுவனை எடுத்து வளர்ப்பார்கள், தன்னுடைய மகளை போலவே அவனுக்கு உணவளித்து வளர்ப்பார்கள். தன்னுடைய பல ஏக்கர் பரந்துவிரிந்த நிலத்திற்கு அவ்வப்போது கூட்டிசென்று, இவைகளை நீ தான் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வார். கடைசியில் ஒரு நாள் அந்த நிலத்தில் வைத்து அவனை கொன்று, அங்கே அவனுக்கு கோவில் கட்டி அவனை காவல் தெய்வமாக்கிவிடுவார். அந்த நிலக்கிழாரிடம் பல ஏக்கர் விளைநிலம் இருக்கும்.அதை எதிரிகளிடமிருந்தும் திருடர்களிடமிருந்தும் காப்பதற்கு இவ்வாறு செய்கிறார்.
-
இவ்வாறு பல வழிபாட்டு முறைகளை பற்றி பார்த்தோம். இது தவிர இன்னும் உயர்நிலை வழிபாடுகள் உள்ளன. அது பற்றி அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
-
ஒரு மனிதன் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருந்தால், அது நல்லது. அதை வரவேற்கலாம். பின்னோக்கி சென்றால்?. மனிதர்களை மேன்மேலும் முன்னேற்றமடையாமல் தடுக்கும் எந்த வழிபாடுகளாக இருந்தாலும், அவைகள் நல்லதல்ல.குல தெய்வங்களாக வழிபடப்படுபவர்கள், அடுத்த பிறவி எடுத்து முக்தியை நோக்கி சென்றிருக்க வேண்டியவர்கள்.ஆனால் மனிதனின் சுயநலத்தின் காரணமாக அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து,அவர்களை மிருகங்களை போல வேலைவாங்குகிறான். இவ்வாறு வீட்டில் குலதெய்வம் வைத்து வழிபடுபவர்கள் ஒரு விதத்தில் அந்த தெய்வங்களுக்கு துன்பமே செய்கிறார்கள். அவைகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, உங்களுக்கு தவறாக தெரியவில்லையா? அவர்களுக்கும் ஒரு மனம் இருக்கிறது.அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அவர்களை கட்டிப்போடுபவன் அதற்குரிய பாவத்தை அடைகிறான்.
-
இவ்வாறு வழிபடப்படும் குல தெய்வங்கள் பல ஆண்டுகள், இவ்வாறே வாழ்கின்றன. சில நேரங்களில் நூறு ஆண்டுகளுக்கு மேல் சிறைவாழ்க்கை வாழ்கிறது.
-
சில தெய்வங்கள் மனிதர்களை துன்புறுத்தி அவர்களை கொலை செய்கிறது. அவைகளுக்கு பாவபுண்ணியம் பற்றிய ஆராய்சி அறிவு இல்லை. இந்த கொடூர குலதெய்வங்களை யார் வழிபட்டுவருகிறார்களோ,அவர்கள் இந்த பாவத்தை அனுபவிக்கிறார்கள்.இதனால் அந்த குடும்பமே ஏழ்மை நிலை அடைந்து துன்பப்படுகிறது. இவர்களால் இதிலிருந்து விடுபடவே முடிவதில்லை.அதேபோல் மனிதர்களுக்கு நன்மை செய்யும் தெய்வமும் உள்ளது.
-
முடிவுரைக்கு வருவோம். இந்துமதத்தின் லட்சியம் என்ன? முக்தி. ஒரு மனிதனை முக்தியை நோக்கி இட்டுச்செல்லும் வழிபாடுகளை இந்துமதம் ஆதரிக்கிறது. மற்றவைகளை ஆதரிப்பதில்லை. இந்த பல்வேறு வழிபாடுகள் மனிதனை முக்தியை நோக்கி கொண்டு செல்லுமா? கேள்வியை உங்களிடமே கேட்கிறேன். இந்த வழிபாடுகளை இந்து மதம் எவ்வாறு ஆதரிக்கும்?. பலர் பல காலம் வழிபட்டு வந்தார்கள் என்பதற்காக இந்துமதம் அதை ஆதரிப்பதில்லை. லட்சக்கணக்கான மக்கள் வழிபடுகிறார்கள் என்பதற்காகவும் இந்துமதம் அதை ஆதரிப்பதில்லை.
-
இங்கே சுவாமி விவேகானந்தரின் ஒரு செய்தியை மட்டும் சொல்லி முடிக்கிறேன்.
-
மனிதர்கள் பிறவியிலிருந்தே ஒருவகையான சூழ்நிலைக்குப் பழக்கப்பட்டு விடுகிறார்கள். அது மட்டுமல்லாமல், பழங்கால மூடநம்பிக்கைகள், பரம்பரை மூட நம்பிக்கைகள், இன மூட நம்பிக்கைகள், நகர மூட நம்பிக்கைகள், நாட்டு மூட நம்பிக்கைகள், இவற்றைத் தவிர மனிதனுக்குள்ளே இயற்கையாகவே ஊறிக்கிடக்கும் அளவில்லாத மூட நம்பிக்கைகள் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் அவன் விடுபட வேண்டியுள்ளது.
மிகவும் முரணான பல பழக்கவழக்கங்கள் நம்மிடையே நிலவுகின்றன. மதம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் தமது சமுதாயத்தில் உள்ளன. இவற்றுக் கெல்லாம் இந்து சாஸ்திரங்களின் சம்மதமும் இல்லை இன்னும் சில பழக்க வழக்கங்கள் நம் நாட்டில் உள்ளன; அவற்றைப்பற்றிப் புத்தகங்களில் படிக்கிறோம், பார்க்கவும் வியப்பாக இருக்கிறது. இவற்றிற்கு வேதங்கள் ஸ்மிருதிகள்,புராணங்கள் எவற்றின் சம்மதமும் கிடையாது; இவை வெறும் வட்டார வழக்கங்கள். எனினும் அந்தச் சிறு வழக்கம் கூட அழிந்து போகுமானால், தான் ஓர் இந்துவாக நிலைக்க முடியாது என்றே ஒவ்வொரு பாமர கிராமவாசியும் நினைக்கிறான்.
அவனைப் பொறுத்தவரையில் வேதாந்தமும் ஒன்றுதான் அந்தச் சிறிய வட்டார வழக்கமும் ஒன்று தான். அவன் செய்வதற்கு சாஸ்திர சம்மதம் இல்லை அவற்றை விட்டுவிட்டால் அவனுக்கு எவ்விதத் தீங்கும்நேரிடாது; மாறாக அவைகளை விட்டுவிட்டால் ஒரு சிறந்த மனிதனாவதற்கே அது துணை செய்யும் .
-----
-சுவாமி விவேகானந்தர்

மனித பிறப்பின் நோக்கம் என்ன?


கேள்வி..மனித பிறப்பின் நோக்கம் என்ன?
-
சுவாமி வித்யானந்தர்....
-
ஒவ்வொரு உயிரும் இயற்கையின் கட்டுகளிலிருந்து விடுபடவே விரும்புகிறது.கடலில் வாழும் மீன் தன்னைவிட பெரிய மீன் துரத்துவதை அறிந்து அதிலிருந்து தப்பிக்க நினைக்கிறது. வானத்தில் உள்ள பற்வையை பார்க்கிறது. அது சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறது. எனவே அது படிப்படியாக பரிணமித்து பறவையாகிறது. 
-
பறவை தன்னைவிட பெரிய பறவை துரத்துவதை கண்டு வேதனையடைகிறது. அது மிருகங்களை காண்கிறது. அது சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறது. பரிணாம வளர்ச்சியில் மிருகங்களாக மாறுகிறது.
மிருகங்களும் மனிதனை காண்கிறது.மனிதன் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறது,பரிணமித்து மனிதனாகிறது. இதுவரை நாம் பார்த்தது நவீன விஞ்ஞானத்தில் பரிணாமவாதம்.
-
மனிதன் தன்னைவிட சுதந்திரமாக இருப்பவர்யாராவது இருக்கிறார்களா என்று தேடுகிறான். இயற்கையின் பிடியில் சிக்கி பிணி,மூப்பு,இறப்பு இவைகள் இல்லாத யாராவது இருக்கிறார்களா என கேள்வி கேட்கிறான். இறைவனுக்கு பிணி,மூப்பு,இறப்பு இல்லை என்று பதில் வருகிறது.
-
ஆகவே இறைவனாகவே மாற வேண்டும் என்று முயற்சிக்கிறான். கடைசியில் அவனது முயற்சி வெற்றி பெறுகிறது. அவன் முற்றிலும் சுதந்திரன் ஆகிறான்.
-
ஆகவே மனிதனின் நோக்கம் சுதந்திரம் அடைவது தான். எதிலிருந்து சுதந்திரம்? இயற்கையின் அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம். பிறப்பு,வாழ்க்கை,நோய்,வயோதிகம்,இறப்பு என்ற முடிவற்ற சங்கிலியிலிருந்து விடுதலை. மனிதன் எவ்வாறு விடுதலையடைவது என்பதை போதிப்பது தான் இந்துமதத்தின் மையகருத்து.

சில சமுதாயத்தில் ஒரே கடவுள் கொள்கை உள்ளது, சில சமுதாயத்தில் பல கடவுள் கொள்கை உள்ளது


கேள்வி....சில சமுதாயத்தில் ஒரே கடவுள் கொள்கை உள்ளது, சில சமுதாயத்தில் பல கடவுள் கொள்கை உள்ளது. இதில் எது சரி? எது தவறு?
-
சுவாமி வித்யானந்தர்...
-
கேள்வி சிறியதாக இருந்தாலும் இதற்கான பதில் பெரியதாக இருக்கலாம். இந்த கேள்வியை சரியாக புரிந்துகொள்ள வேண்டுமானால், நாம் நமது மூதாதயரின் வாழ்க்கையையும்,வழிபாடுகளையும் ஆராய வேண்டும். நீங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்நோக்கி செல்ல வேண்டும்.
-
பண்டைய மனிதன் விலங்குகளை வேட்டையாடி அவைகளை உண்டும். இயற்கையாக கிடைக்கும் பழங்களை,கிழங்குகளை உண்டும் வாழ்ந்தான். அப்படி வாழ்ந்த மனிதன் கூட தன்னை காக்க உயர்ந்த தெய்வம் இருப்பதாக எண்ணினான். தனக்கு கிடைக்கும் இறைச்சியையும் அந்த தெய்வத்திற்கு படைத்த பிறகே உண்டான்.அதே போல் வேட்டையாடும் போது அந்த தெய்வம், விலங்குகளை பிடித்து தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டான். இவர்கள் ஒரு குழுவாக வேட்டையாடுவதும். பின்பு அவைகளை பங்கிட்டு சாப்பிடுவதும் வழக்கம். இந்த குழுவுக்கு ஒரு காவல் தெய்வம் இருக்கும். அவ்வப்போது இந்த காவல் தெய்வத்திற்கு விழா எடுப்பார்கள்.சிறந்த மாமிசத்தை படைத்து மகிழ்வார்கள்.
-
இதேபோல் பல காட்டுவாசி குழுக்கள் இருந்தன. இவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்தால் மரணம்தான் முடிவாக இருக்கும்.வேறு குழுவில் உள்ளவர்கள் இங்குள்ள ஆண்களை கொன்று,இவர்களது பெண்களை கடத்தி சென்றுவிடுவார்கள். கொல்லப்பட்ட ஆண்களின் தலையை துண்டித்து மாலையாக கோர்த்து, தங்கள் தெய்வத்திற்கு சமர்ப்பிப்பார்கள். இவ்வாறு அதிக அளவில் மனிதர்களை கொன்று மாலையாக போடுபவன் சிறந்தவீரனாக மதிக்கப்பட்டான்.அவனே குழுவின் தலைவனாகவும் இருந்தான்.
-
நாளடைவில் காட்டுவிலங்குகளை கொல்வதை குறைத்துக்கொண்டு.அவைகளை பயிர்தொழில் செய்ய பயன்படுத்திக்கொண்டான். இவ்வாறு பயிர்தொழிலில் ஈடுபட்ட சமுதாயம் சற்று முன்னேற்றம் அடைந்தது. மனிதர்களை கொல்வது தவறு என்று புரிந்துகொண்டார்கள். இதுவரை நரமாமிசம் கேட்ட தெய்வத்தின் மதிப்பு குறைந்தது. மனிதஉயிர்களை விரும்பாத தெய்வம் உயர்ந்த தெய்வமானது, உயிர்பலி கேட்ட தெய்வம் சிறு தெய்வமானது.
-
இதே போல் ஆறுகள் இருக்கும் பகுதிகளில் மனித நாகரீகம் வளர ஆரம்பித்தது.இங்கேயும் மனிதர்கள் பல குழுக்களாக பிரிந்திருந்தார்கள். ஒவ்வொரு குழுவிலும் பல தெய்வங்கள் இருந்தன. ஆனாலும் குழுக்களிடையே உள்ள சண்டை மட்டும் ஓயவில்லை. அவ்வப்போது வேறு குழுக்களில் உள்ளவர்கள், இங்குள்ளவர்களை கொன்று இங்குள்ள பெண்களை கடத்தி சென்றுவிடுவார்கள். இப்போது இன்னும் கூடுதலாக இங்குள்ள விலங்குகளையும், சேமித்துவைத்த உணவுகளையும் கொள்ளையடித்து சென்றுவிடுவார்கள்.
-
இதை தடுப்பதற்காக அவர்களுக்குள்ளே முடிவு செய்து, இவர்களை காக்க போர்வீரர்களை உருவாக்கினார்கள். இந்த வீரர்களில் சிறந்தவன் மன்னராக இருப்பான்.இவர்கள் எதிரி நாட்டிலிருந்து யாராவது வந்தால் அவர்களை கொன்று இந்த நாட்டு மக்களை காப்பார்கள். தற்போது அந்த குழுவின் தெய்வம் மன்னரின் பொறுப்பில் சென்றது. மன்னரே அந்த தெய்வத்தின் பிரதிநிதியாக கருதப்பட்டார்.மன்னர் சட்டங்களை இயற்றினார்.மக்கள் தங்களுக்கு கிடைக்கும் உணவில் ஒரு பகுதியை மன்னருக்கு வழங்கினார்கள். நாட்டு மக்களுக்கு உயிர்பயம் குறைந்தது.
-
இப்போது பிரச்சினைக்கு உள்ளானது, மன்னரும் போர்வீரர்களும்,அவரது சட்டங்களும்,அவர்கள் பொறுப்பில் உள்ள தெய்வமும் தான். எதிரி நாட்டு மன்னன் போரிட்டு வந்து இந்த நாட்டில் உள்ள மன்னரை கொன்று,இந்த நாட்டு தெய்வத்தை தூர எறிந்து, தன்நாட்டு தெய்வத்தை அனைவரின் தெய்வமாக மாற்றினான்.தன்நாட்டு சட்டத்தை இந்த நாட்டில் பின்பற்றும் படி கட்டளையிட்டான். இந்த மக்களையும் தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டான். இப்போது தெய்வங்கும்,சட்டங்களும், மன்னரும் மட்டும் மாற்றப்பட்டார்கள். மக்கள் சாகவில்லை.
-
இவ்வாறு அரசர்கள் பேரரசர்களாக மாறினார்கள். தெய்வங்கள் பெரிய தெய்வங்களாக பலர் வழிபடும் தெய்வங்களாக மாறின. அவைகளுக்கு பிரம்மாண்டமான கோவில்கள் கட்டப்பட்டன. ஏற்கனவே மக்கள் வழிபட்டவந்த தெய்வங்கள், பெரிய தெய்வத்தின் ,கீழ் உள்ள சிறு தெய்வங்களாக மாற்றப்பட்டன.
-
மனிதர்கள் நாளடைவில் நாகரீகம் அடைய ஆரம்பித்தார்கள். அதே போல் அவர்கள் வழிபட்டுவந்த தெய்வமும் நாகரீகம் அடைய ஆரம்பித்தது.அன்பும்,கருணையும் கொண்டவராக தெய்வங்கள் உருவாக்கபட்டன.தெய்ங்கள் மிருகத்தை பலிகேட்கவில்லை. விலைஉயர்ந்த வாசனை திரவியங்களும், பழங்களும்,உயர்ந்த உணவுகளும் படைக்கப்பட்டன.ஆனாலும் மக்கள் தங்களுக்குள் அவர்கள் ஏற்கனவே வழிபட்டு வந்த சிறுசிறு தெய்வங்களையும் வழிபடுவதை நிறுத்தவில்லை.அவைகள் மிருகபலியை தொடர்ந்து கேட்டுவந்தார்கள்.சிலநாடுகளில் இந்தசிறுசிறு வழிபாடுகளுக்கு தடைவிதிக்கப்ட்டது.மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். அவர்கள் மீது ஒரே தெய்வகொள்கை புகுத்தப்பட்டது.
-
பல நேரங்களில் சிலைகளாக வணங்கப்படும் தெய்வங்கள் எதிரி நாட்டினரால் அடித்து உடைக்கப்படும்.ஆகவே மக்கள் இந்த தெய்வங்களால் தங்களை தாங்களே காத்துக்கொள்ள முடியவில்லையே என்று கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். இதை நிவர்த்தி செய்ய தெய்வத்திற்கு உருவம் வைக்கும் பழக்கம் நிறுத்தப்பட்டது. நமது தெய்வம் உங்கள் பிராத்தனைகளை கேட்கிறார், உங்களுக்கு உதவுகிறார், உங்களை எப்போதும் கண்காணிக்கிறார்.ஆனால் அவரது உருவத்தை உங்களால் காணமுடியாது. அவர் உங்களைவிட மிகப்பெரியவர். அவருக்கு ஈடுஇணை இல்லை.அவரை குறித்து கேள்வி கேட்டாலோ, சந்தேகப்படாலோ, அவருக்கு பிடிக்காது.அவர் மிகக்கடுமையானவர். அவர் சொன்னதை நம்பினால் இறந்த பிறகு சொர்க்கம் கிடைக்கும்.அங்கே பல பெண்களும், பலவித உணவுகளும் கிடைக்கும். மாறாக சந்தேகப்பட்டால் இறந்த பிறகு நரகம் கிடைக்கும். அங்கே எரிகின்ற தீயில் உங்களை வாட்டி வதக்குவார்கள்.. ஆகவே கேள்வி கேட்டகாதீர்கள் என்று உபதேசிக்கப்பட்டது.இப்போது தெய்வத்தை பற்றி கேள்வி கேட்ட மக்களுக்கு தடைவிதிக்கபட்டது. நரக பயத்தாலும், சொர்க்கத்து ஆசையாலும் மக்கள் கேள்வி கேட்கும் எண்ணத்தைவிட்டுவிட்டு வாழஆரம்பித்தார்கள்.
-
ஆனால் இவ்வாறு மிரட்டலுக்கு பயப்பாடாத மனிதர்கள் சிலர் இருந்தார்கள்.
-
இதுநாள்வரை தெய்வங்களின் செயல்கள் பற்றி கேள்வி கேட்க பயந்து வாழ்ந்த மனிதன்,தற்போது கேள்வி கேட்க ஆரம்பித்தான். இந்த உலகில் ஏற்படும் இயற்கை சீற்றங்களை இந்த தெய்வங்களால் ஏன் தடுக்க முடியவில்லை? மனிதர்களுக்கு ஏற்படும் வியாதிகளை இந்த தெய்வங்களால் ஏன் தடுக்க முடியவில்லை? பிற நாட்டினர் இங்குள்ள மக்களை கொல்லும் போது,இந்த தெய்வங்களால் ஏன் அதை தடுக்க முடிவில்லை? இவ்வாறு மனிதன் கேட்ட கேள்விகள் ஏராளம். ஆனால் தெய்வங்களிடமிருந்து உரிய பதில் வரவில்லை. உனது மரணத்திற்கு பிறகு தெய்வம் உன்னை தண்டிக்கும் என்று மக்கள் பயமுறுத்தினர். 
-
தற்போது தெய்வம் மனிதனின் மனசாட்சி முன்பு குற்றவாளி கூண்டில் நிறுத்ப்பட்டது. மனிதனின் மனம் நீதிபதியாகியது.
இந்த தெய்வங்களை வழிபடுவதால் நமது துன்பங்கள் தீரப்போவதில்லை. இந்த தெய்வங்களை வழிபடுவதால் இயற்கை சீற்றங்கள் மாறப்போவதில்லை. இந்த தெய்வங்கள் மனிதனை சாவிலிருந்து காப்பாற்றப்போவதில்லை. ஆகவே இவைகளை வழிபடாதீர்கள்,இவைகளை வழிபடுவது நமக்கு கேடு என்று மனிதர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.
-
நான் சொல்லிக்கொண்டிருப்பது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்த சம்பவங்கள்.
-
மனிதனின் துன்பங்களுக்கு யார் காரணம்? இறைவன் என்று ஒருவர் உண்டா?மனிதனினால் மரணத்தை தடுக்க முடியுமா? என்ற கேள்விகளுடன் சிலர் சமுதாயத்தை விட்டு விலகி தனிமையை நாடி,காடுகளிலும்,மலைகளிலும்,குகைளிலும் வாழ ஆரம்பித்தார்கள். 
இவ்வாறு பதில் கிடைக்காமல் அலைந்து,சோர்ந்து,உடலே இயங்காத நிலையில் மனமே வேலைசெய்ய முடியாத நிலையில், மனிதனுக்கு திடீரென்று ஒரு காட்சி கிடைத்து. அது இந்த மனத்தை கடந்ததாக இருந்தது.அங்கே அவன் கேட்ட கேள்விகளுக்கான பதில் இருந்தது.
-
அப்போது அந்த மனிதன் சத்தமிட்டு கத்தினான். ஏ மனிதர்களே! எனக்குள்ளே எழுந்த கேள்விக்கான பதிலை நான் கண்டுகொண்டேன். மனிதனால் மரணத்தை வெல்ல முடியும், மனிதனால் இயற்கையை வெல்ல முடியும். மனிதனால் துன்பங்களை வெல்ல முடியும். அதற்கு நாம் இந்த உடலையும், மனத்தையும் கடந்து அதற்கு அப்பால் செல்ல வேண்டும். மரணமற்ற நிலை என்பது மனத்தை கடந்து உள்ளது என்று சொன்னான். 
-
மக்களிடம் ,தான் கண்டது பற்றி விவரித்தான்.,மக்கள் இவரை ரிஷி என்று அழைத்தார்கள்.பல்வேறு உவமைகள் மூலம் அதை விளக்கினான். அதை சீடர்கள் குறித்துக்கொண்டார்கள். இந்த ரிஷி கூறியதை வேதம் என்று அழைத்தார்கள்.இந்த வேதத்தை சீடர்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள்.
-
ஆனால் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இவ்வாறு ஒவ்வொரு நாட்டிலும் உண்மையை உணர்ந்த ரிஷிகள் உருவானார்கள். அவர்கள் சொல்லியவைகளும் வேதம் என்று அந்த நாட்டினர் ஏற்றுக்கொண்டார்கள்.இப்போது யார் சொல்வது உண்மை? எந்த வேதத்தை ஏற்பது? ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக விளக்கியிருக்கிறார்கள் எதை ஏற்பது என்று மக்கள் குழம்பினார்கள்.
-
அப்போது ஒரு ரிஷி இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுகொண்டார். அவர் தெளிவாக கூறினார். ஏற்கனவே உண்மையை உணர்ந்த அந்த ரிஷிகள் அனைவரும் கண்டுகொண்டது ஒரே உண்மையை தான்.ஆனால் அதை வெளிப்படுத்தும் போது தங்களுக்கு தெரிந்த மொழியில், தங்களுக்கு தெரிந்த உவமானத்தில் மூலம்,மக்களுக்கு புரியும் படி சொன்னார்கள். இருப்பது ஒரு உண்மை தான், மகான்கள் அதை பலவாறு அழைக்கிறார்கள். ஆகவே உங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளாதீர்கள் என்றார்.
-
இவ்வாறு இந்த பல்வேறு காலங்களில்,பல்வேறு நாட்டில்,ரிஷிகள் கண்டுகொண்ட உண்மைகளான உபநிடதங்களை மக்கள் தொகுத்து ஒரே இடத்தில் கொண்டுவந்தார்கள். அவைகளை வேதத்தின் சாரம் என்று அழைத்தார்கள். வேதத்தின் சாரம் வேதாந்தம்.அது தான் இந்துமதம்.
-
இவ்வாறு ஆயிரக்காணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தியர்களால் தொகுக்கபட்ட வேதாந்தத்தை உலகமெங்கும் பரப்பி, இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தவர் சுவாமி விவேகானந்தர்.
-
மக்கள் மதத்தின் பெயரால் சண்டையிடாமல் ஒற்றுமையாக வாழ வேண்டுமானால் ஒவ்வொருவரும் வேதாந்தியாக மாறவேண்டும்.

இறைவனுக்கு இரு மனைவிகள் இது என்ன கோட்பாடு?


கேள்வி....இறைவனுக்கு இரு மனைவிகள் இது என்ன கோட்பாடு?
-
சுவாமி வித்யானந்தர்....
-
பழைய காலங்களில் சமுதாயத்தில் அடிக்கடி போர் நிகழ்வது உண்டு. இந்த போர்களில் பல ஆண்கள் கொல்லப்பட்டுவிடுவார்கள். 1000 பெண்கள் இருக்கும் இடத்தில் 500 ஆண்களே இருப்பார்கள். இதை சரி செய்ய ஆண்கள் இரு பெண்களை திருமணம்புரிய அனுமதித்தார்கள்.
தற்போது போர்கள் இல்லை.ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட சமஅளவில் இருப்பதால் ஒருவன் ஒருத்தியை திருமணம் செய்து கொள்கிறான்.
நேபாளம் போன்ற சில நாடுகளில் 100ஆண்டுகளுக்கு முன் 1000 ஆண்களுக்கு 500 பெண்கள் என்ற அளவில் பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.இதை சரி செய்ய ஒரு பெண் இரண்டு ஆண்களை திருமணம் செய்து வாழ அனுமதிக்கப்பட்டார்கள்.இவ்வாறு செய்யாவிட்டால் பெண்கள் கிடைக்காத ஆண்கள், பெண்களை கடத்திகொண்டு செல்வது அதிகரிக்கும்.
சமுதாயம் சிக்கலின்றி வாழ்வதற்கு ஏற்ப சமுதாய சட்டங்கள் அமைக்கப்படுகின்றன.
-
மக்கள் எப்படியோ அதேபோல் அவர்கள் வழிபடும் கடவுளும். சிலர் இரண்டு மனைவிகளோடு வாழும் கடவுளை வழிபட விரும்புகிறான். சிலர் ஒரு மனைவியோடு வாழும் இறைவனை வழிபடுகிறான். ஒருவன் தவக்கோலத்தில் இருக்கும் இறைவனை வழிபட விரும்புகிறான். சிலர் இறைவனை குழந்தையாகவும், சிலர் தந்தையாகவும்,சிலர் தாயாகவும்,சிலர் இறைவனை உருவம் இல்லாதவராக வழிபடுகிறார்கள்.
-