ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-33

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-33

தமது சாதனையின் முதல் நான்கு ஆண்டுகளில் இறைவனை உணர்வதற்கு தணியாத ஆன்ம தாகம் ஒன்றையே குருதேவர் துணையாகக் கொண்டிருந்தார் என்று முன்பே கண்டோம். அந்தக் காலகட்டத்தில் சாஸ்திர விதிமுறைகளின்படி அவருக்கு யாரும் சாதனைகளைக் கற்பிக்கவில்லை.
எல்லா சாதனைகளுக்கும் இன்றியமையாத தான தீவிர ஆன்ம தாகம் ஒன்றுதான் அவருக்குத்துணையாக இருந்தது.
ஆன்ம தாகத்தால் மட்டுமே அவர் அன்னையின் தரிசனம் பெற்றதிலிருந்து, ஒரு சாதகன் மற்ற எதன் துணையும் இன்றி தீவிர மனஏக்கம் ஒன்றினாலேயே இறைக்காட்சி பெறமுடியும் என்பது உண்மையாயிற்று.
 ஆனால் எத்தகைய தீவிரமான மனஏக்கம் இதற்குத்தேவை என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம்.
 குருதேவரின்  வாழ்க்கையில் இந்தக் காலகட்டத்தை சற்றுக் கவனித்தால் இது நமக்குத் தெளிவாகும்.
 தீவிர மனஏக்கத்தின் விளைவால் அவரது உடலும் மனமும் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டதுபோலாகிவிட்டது.
உணவு, உறக்கம், வெட்கம், பயம் போன்ற நன்கு வேரூன்றிவிட்ட உணர்ச்சிகள் கூட அவரிடமிருந்து மறைந்தது. உயிர்தரிப்பதற்குத்தேவையான முயற்சிகளில் கூட ஈடுபடாத போது, உடல் நலம் பேணுவதைப் பற்றிய பேச்சே இல்லை. இவற்றில் அவர் எவ்வித கவனமும் செலுத்தவில்லை.
குருதேவர் கூறினார், உடலைச்சுத்தம் செய்யாததால் தலைமுடியில் தூசிபடிந்து, அது சடையாகி விட்டிருந்தது.
 தியானம் செய்ய அமரும் போது மனம் மிகவும் ஆழ்ந்து ஒருமைப்படுவதால் உடல் ஒரு மரக்கட்டையைப்போலச் செயலிழந்து விடும்.
உடலை ஏதோ ஜடம் என்று எண்ணிய பறவைகள் சிறிதும் பயமின்றி  என் தலையில் அமர்ந்து, அழுக்கும் தூசியும் மண்டிக்கிடந்த முடியில் ஏதாவது உணவுத்துணுக்குகள்  கிடைக்குமா என்று கொத்திக்கிளறும், இறைவனின் திருக்காட்சி கிடைக்காத ஏக்கத்தினால், பொறுமையிழந்து நான் என் முகத்தைத் தரையில் பலமாகத்தேய்த்துக் கொண்டதால் காயங்கள், ஏற்பட்டு ப் பல இடங்களில் ரத்தம் வழியும், நாள் முழுவதும் பிராத்தனை தியானம், பூஜை, சரணாகதி, என்று சாதனைகளிலேயே ஈடுபட்டிருந்ததால் நேரம் எவ்வாறு கழிந்தது என்பதே எனக்கு நினைவில்லை. கோயிலில் சங்கொலியும் மணியோசையும் கேட்கும் போது தான் பகல் கழிந்து விட்டது. என்பது நினைவுக்கு வரும்.
இன்னொரு நாளும் வீணாக முடியப்போகின்றதே, அன்னையின் திருக்காட்சி இன்னும் கிட்டவில்லையே, என்ற எண்ணம் அலைபோல் தொடர்ந்து வரும். இந்த எண்ணத்தின் எழுச்சியால் மனம்  பட்டபாட்டைச் சொல்லி முடியாது. ஏதோ உணர்ச்சிப் பிரவாகத்தில் அடித்துச்செல்லப்பட்டது போல் நிலைகுலைந்து அமைதி இழந்து தரையில் விழுந்து புரண்டு, அம்மா இன்னும் உன் தரிசனம் எனக்குக் கிட்டவில்லையே! என்று கதறுவேன்.என்கூக்குரல் நாலாபக்கமும் எதிரொலித்துப் பரவும். என்னைக் கண்டவர்கள், பாவம் தாளாத வயிற்றுவலி போலிருக்கிறது. அதனால் தான் இந்தப் பாடுபடுகிறார் என்று பேசிக்கொள்வார்கள்.
சாதனையின் போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பலமுறை குருதேவர் எங்களிடம் கூறியிருக்கிறார். ஆன்ம தாகத்தின் தேவையை எங்களுக்கு உணர்த்துவது தான் அவரது நோக்கம். மனைவி, மக்கள், உற்றார், உறவினர், இறந்து விட்டாலோ செல்வத்தை இழந்துவிட்டாலோ மக்கள் குடம்குடமாகக் கண்ணீர் விட்டு அழுவார்கள். இறைவனை அடைய முடியவில்லையே என்று யார் அழுகிறார்கள், சொல் பார்க்கலாம், நாங்களும் இறைவனிடம் எவ்வளவோ பிராத்தனை செய்து விட்டோம். ஆனால் அவன் இன்னமும் காட்சி தரவில்லை. என்று கூறுவதை மட்டும் அவர்கள்  விடுவதில்லை.
ஒரு முறையேனும் மனம் விட்டு ஏங்கி அழட்டும். அவன் எப்படிக்காட்சி தராமல் இருக்கிறான் என்று  பார்ப்போம் என்று உணர்ச்சிப்பெருக்குடன் கூறுவார்கள். இதய ஆழத்திலிருந்து வரும் இந்த வார்த்தைகள் எங்களை அப்படியே உறையச் செய்து விடும்! இந்த வார்த்தைகளின் உண்மையை அவர் தம் வாழ்க்கையில் உணர்ந்திருப்பதால் தான் இவ்வளவு ஆணித்தரமாகப்பேச முடிகிறது என்பது எங்களுக்குத் தெளிவாயிற்று.

முதல் நான்கு ஆண்டு சாதனையின் போது கூட அன்னையின் தரிசனத்தால் மட்டும் குருதேவர் திருப்தி அடைந்து  நின்றுவிடவில்லை.
பாவமுகத்தில் இருந்தபோது அன்னையின் தரிசனம் கிடைத்த பின்னர், குலதெய்வமான ஸ்ரீரகுவீரரின் காட்சியைப்பெற விழைந்தது குருதேவரின் மனம். அனுமன் கொண்டது போன்ற வேறெதையும் வேண்டாத பக்தியிருந்தால் மட்டுமே ஸ்ரீராமசந்திரரின் தரிசனம் கிடைக்கும். என்று உணர்ந்த அவர், தாச பக்தியின் மூலம்  இறைவனை அடைவதற்காக அனுமனின் அகவுணர்வுகளை மனத்தில் வரவழைத்துக்கொண்டு சில காலம் சாதனையில் ஈடுபட்டார்.
இடைவிடாது அனுமனைச் சிந்தித்ததன் பயனாக, அந்தக் காலகட்டத்தில் தன்னை அனுமனிலிருந்து வேறுபட்ட ஒரு தனிமனிதனாகக் காண அவரால் இயலாது போயிற்று.
அந்த நாட்களைப் பற்றி குருதேவர் கூறினார், அந்த நாட்களில் நான் அனுமனைப் போலவே நடந்தேன். உண்டேன், மற்ற செயல்களையும் செய்தேன். வேண்டுமென்று அவ்வாறு செய்யவில்லை. தானாகவே அவை நிகழ்ந்தன! இடுப்பை சுற்றி ஒரு துணியைக் கட்டி வால் போல் தொங்கவிட்டுக்கொண்டேன். குதித்துக்குதித்து நடந்தேன். பழங்களையும் கிழங்குகளையும் தவிர வேறெதையும்  உண்ணாதிருந்தேன்.  அவற்றைக்கூட த்தோல் உரித்து உண்ணத்தோன்றவில்லை. நாளின் பெரும்பகுதியை மரக்கிளையிலேயே  கழித்தேன். பக்தி மேலீட்டால் எப்போதும், ராமா, ராமா  என்று கூவிக்கொண்டிருந்தேன். வானரங்களைப்போலவே என் கண்களும்  எப்போதும் ஒரு பரபரப்பான பார்வையைப் பெற்றன. விந்தை என்னவென்றால் என் முதுகுத் தண்டின் கீழ்பகுதி ஓர் அங்குலத்திற்கும்மேலாக அப்போது வளர்ந்திருந்தது. இதைக்கேட்டதும் நாங்கள் குருதேவரிடம் இப்போதும் உங்கள் முதுகுத் தண்டின் கீழ்பகுதி அவ்வாறுதான் இருக்கிறதா?  என்று கேட்டோம். அதற்கு அவர் இல்லை, அந்த உணர்வில் நான் முழுமை பெற்று மனம் அதிலிருந்து விடுபட்ட பின்னர் அந்த வளர்ச்சி சிறிதுசிறிதாகக் குறைந்து முன்போலாகி விட்டது  என்றார்.....
குருதேவர் தாச பக்தி சாதனை செய்த நாட்களில் ஓர் அசாதாரணமான காட்சி கிடைத்தது.
முன்னர் கிட்டிய காட்சிகளிலிருந்து அது முற்றிலும் வேறுபட்ட புதுமையான அனுபவம். அது அவரது உள்ளத்தில் ஆழப்பதிந்து எப்போதும் நினைவில் நிலைபெற்றிருந்தது. அவர் கூறினார்,ஒரு நாள் பஞ்சவடியில் அமர்ந்திருந்தேன்.தியானம் எதுவும் செய்யவில்லை வெறுமனே உட்கார்ந்திருந்தேன்.அப்போது ஈடிணையற்ற பிரகாசம் பொருந்திய பெண் என் முன் தோன்றினாள்.
அவளது உடலிலிருந்து தோன்றிய ஒளியால் அந்தப்பகுதி முழுவதுமே ஒளி வெள்ளத்தில் ஆழ்ந்தது. நான் அந்தப் பெண்மணியை மட்டும் தான் கண்டேன் என்பதில்லை, பஞ்சவடியின் மரங்கள், கொடிகள், கங்கை என்று அனைத்தையும் அப்படியே கண்டேன். என் முன்தோன்றிய பெண்ணும் ஒரு மானிடப்பெண்ணாகவே தோன்றினாள். ஏனெனில் அவளுக்கு தேவதேவியரைப்போல் மூன்று கண்கள் இருக்கவில்லை. அனால் பொதுவாக தேவதேவியரின் முகத்தில் கூட காணப்படாத ஓர் அசாதாரணமான அன்பும், கனிந்த கருணையும், அளவற்ற பொறுமையும் ஆழ்ந்த துயரமும் அவளது திருமுகத்தில் பொலிந்தன.
கருணைத் திருநோக்கால் என்னைப்பார்த்த அவள் வடதிசையிலிருந்து என்னை நோக்கி  மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்து வந்தாள். அது யாராக இருக்கும் என்று நான் வியந்து நின்றபோது, எங்கிருந்தோ திடீ ரென்று குரங்கு ஒன்று தோன்றி கீச்கீச்சென்று ஒலி எழுப்பியவாறே அவளது திருவடியில் வீழ்ந்து வணங்கிற்று.  என் உள்ளம் ”சீதா, சீதா , துயரமே வடிவான சீதா ஜனகரின் மகள்  சீதா, ராமனையே உயிர்மூச்சாகக்கொண்ட சீதா” என்று கூவியது.
நான் மெய்மறந்து அம்மா அம்மா என்று அழைத்தபடியே அவளது திருவடிகளில் வீழ்ந்து வணங்க முற்பட்டேன்.
அதற்கு அவள் மிக விரைவாக நடந்து வந்து இதனுள் (தம் சரீரத்தைக்காட்டி) புகுந்து விட்டாள்!
வியப்பாலும் ஆனந்தத்தாலும் நான் சுயவுணர்வை இழந்து சாய்ந்தேன், இதற்கு முன் தியானம், சிந்தனை, எதுவும் செய்யாத நிலையில் இத்தகைய காட்சிகளை நான் கண்டதில்லை.துயரமே வடிவான சீதையை முதன்முதலில் கண்டதாலோ என்னவோ, அவளைப்போன்றே நானும் வாழ்க்கை முழுவதும் துயரங்களில் உழல வேண்டியதாயிற்று.

தொடரும்..

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?