அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-79

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-79

சகோதரர்கள் அனைவருமே பணத்திற்காக அன்னையைப் பல வழிகளிலும் பிழிந்தெடுத்தனர். இவர்களுள் காளி கொடுத்த வேதனைகள் தான் அதிகம். கட்டுமஸ்தானதேகத்துடன்,பார்ப்பவர்கள் அஞ்சக்கூடிய உருவத்தோடு கூடியவர் காளி. அவருக்குக் கோபம் வந்தால் கண்கள் ரத்தம் போல் சிவந்து விடும்.ஆஊ என்று பயங்கரமாகக் கத்துவார். குடும்பத்தில் எல்லோருமே அவரிடம் பயப்படுவார்கள். அவரது பணவெறியும் அளவற்றதாக இருந்தது.ஜகத்தாத்ரி பூஜை,குருதேவர் அல்லது அன்னையின் பிறந்தநாள் விழா என்று எது நடந்தாலும் அவரிடம் தான் பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டும். ஏனெனில் வாங்குகின்ற ஒவ்வொரு பொருளிலும் திருடிப்பணம் சேர்ப்பார். அதன்மூலம் நல்ல வருமானம் வரும். யாராவது எதிர்த்துப் பேசிவிட்டால் அவ்வளவு தான். எல்லாவற்றையும் வீசி எறிந்துவிட்டு, விழாவே நடக்காத படி அல்லது அன்னையின் மனம் வருந்தும் படி ஏதாவது செய்வார். ஒரு முறை விழா ஒன்றின் போது இப்படித்தான் செய்துவிட்டார்.அதோடு அன்று முழுவதும் சாப்பிடாமல் இருந்தார். அதனால் அன்னையும்பட்டினி கிடக்க நேர்ந்தது. இத்தகைய குழப்பங்கள் நேர்வதைத் தவிப்பதற்காக, விழா என்று வந்தால் பொறுப்பைக் காளியிடம் கொடுத்துவிடுவார் அன்னை. அவர் செய்வதை மற்றவர்கள் குறை சொல்லாமலும் பார்த்துக்கொள்வார்.
வீட்டின் அருகில் மூன்று சகோதரர்களுக்கும் சொந்தமான ஒரு நிலம் இருந்தது.அன்னை அந்த இடத்தில் தான் பிறந்தார். அன்னை பிறந்த அந்த இடத்தில் ஓர் அடையாளக்கல் நடுவதற்கு  பக்தர்கள் சிலர் விரும்பினர்.அதற்காகக் கற்களையும் செதுக்கிக் கொண்டு வந்தனர். ஆனால் சகோதரர்கள் அந்த நிலத்தில் தங்களுக்கு இருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. எனவே எந்த வேலையும் நடக்கவில்லை. கொண்டு வந்த கற்கள் அப்படியே கிடந்தன.அப்போது ஜெயராம்பாடி வந்திருந்த அன்னையின் பெங்களுர் சீடரான நாராயண ஐயங்கார் அந்த இடத்தில் அன்னையின் வசதிக்காக ஒரு கிணறு வெட்ட விரும்பினார். இதையறிந்த காளி அந்த நிலத்தில் தனக்கிருக்கும் சிறிய பங்கிற்கு மிகுந்த பணம் பறிக்கத் திட்டமிட்டார். அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. பிறகு அந்த இடத்தை அன்னையின் மூலம் சாரதானந்தரிடம் அவரும் மற்ற தம்பிகளும் பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு விற்றனர்.சாரதானந்தர் அந்த இடத்தில் கிணற்றை வெட்டினார்.
இரவும் பகலும் தம்பிகளின் குடும்பத்திற்கு இப்படி அன்னை உழைப்பதைக் கண்ட கிரீஷ் ஒரு முறை நாமெல்லாம் அன்னையை தேவி பராசக்தியாகப் போற்றுகிறோம்.ஆனால்  அந்த தேவியோ தம் தம்பிகளுக்குக் காலையிலிருந்து இரவு வரை இப்படி ஓயாமல் பாடுபடுகிறார். இதைப்பார்க்கும் போது, இவர்கள் முன் பிறவிகளில் அன்னைக்காக எவ்வளவு கடுமையான தவங்களைச் செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அதனால் தான் இப்படிப்பட்ட அன்னையைத் தமக்கையாகப் பெற்றிருக்கிறார்கள் என்று கூறினார்.
அன்னைக்கு ஏற்பட்ட தொந்தரவுகள் இத்துடன்  நின்றதா என்றால் இல்லை. பிரசன்னரின்  இரு பெண்களான நளினியும் மாக்குவும் தங்கள் பங்குக்கு தங்களால் முடிந்த அளவு அன்னைக்குத் தொந்தரவு கொடுத்தார்கள். இவர்கள் இளமையிலேயே தாயை  இழந்தவர்கள். அதனால் அவர்களின் பொறுப்பையும்  அன்னை ஏற்றுக் கொண்டிருந்தார்.நளினி எதற்கெடுத்தாலும் ஆசாரம் ஆசாரம் என்று கூறிதன்னையும் வருத்தி அன்னையையும்  துன்பப்படுத்தினாள். அத்துடன் தனக்கு விருப்பமே இல்லாத ஒருவனை மணந்துகொள்ளும் கட்டாய நிலைக்கு ஆளானார்.மாக்கு தன்னை வைத்துக் காப்பாற்ற முடியாத ஓர் ஏழைக்கு மனைவியானாள்.எனவே திருமணமான பிறகும் அவர்கள் இருவரும் அன்னையின் தயவை எதிர்பார்த்தே வாழும் நிலை ஏற்பட்டது. மற்ற மூன்று தம்பிகளின்  பிள்ளைகளும் அன்னை காட்டும் பேரன்பால் தங்கள் தாய்களையும் மறந்து அவருடனேயே இருந்தார்கள். இவர்கள் ஜெயராம்பாடியில் இருந்ததோடு, அன்னை கல்கத்தா போகும் போதும் உடன் சென்றார்கள். தம்பிகளின் பணத்தாசையும் சுயநலமும் தம்பிமகள்கள் ஒருத்தி மற்றொருத்தியிடம்  கொண்ட பொறாமையும்,எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற நளினியின் ஆசாரப் பித்தும்,ராதுவின் நச்சரிப்பும்,சுரபாலாவின்  பைத்தியமும் ஒன்று சேர்ந்து அன்னைக்குச் சொல்ல முடியாத வேதனைகளை உருவாக்கின. சகிக்க முடியாத இந்தச் சூழ்நிலையில் அன்னை மனக்கலக்கமோ,கசப்போ அடையாமல்,மிகுந்த பொறுமையோடும் கருணையோடும் அனைத்து துன்பங்களையும் தாங்கினார்.
-
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்


Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?