அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-82

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-82

தீட்சை வழங்குவதில் அன்னை பழைய சம்பிரதாயங்களையும் பூஜைகளையும் சடங்குகளையும் மிகவும் குறைவாகவே கைக்கொண்டார். தீட்சை கொடுப்பதற்கான  அடிப்படை விதிகளை அவர் கையாண்டார். ஆனால் தமக்கென்று சில வழிமுறைகளையும் ஏற்படுத்திக் கொண்டார். சாதாரணமாக அவர் காசியில் யாருக்கும் தீட்சை அளிப்பதில்லை. காசி சிவபெருமானின் இடம். அங்கு அவர் ஒருவரே குருஎன்பார்.அது போல் குருதேவரின் பிறந்த நாளிலும் யாருக்கும் தீட்சை தருவதில்லை. பொதுவாக தம் குடும்பத்திலுள்ளவர்களுக்கும் அன்னை தீட்சை அளிப்பதில்லை. வேறு என்ன வேண்டும்.? இங்கு நீங்கள் பிறந்ததே போதும், என்று கூறிவிடுவார். ஆனால் பிரசன்னரின் மனைவியான சுவாசினி மிகவும் வேண்டிக் கொண்டதற்கிணங்க அன்னை அவருக்கு தீட்சை அளித்தார். பின்னர் மாக்கு,பூதேவ்,அவன் மனைவி,ராது,மன்மதன் போன்றோருக்கும் தீட்சை அளித்தார். இவர்களுள் சுவாசினி அன்னையிடம் மிகுந்த பக்தி பூண்டவளாக இருந்தாள். இத்தகைய சில நியதிகளைத் தவிர அவர் எந்தச் சட்டத்தையும் சம்பிரதாயத்தையும் கடைப்பிடிக்கவில்லை. சூழ்நிலைகளுக்குஏற்ப பூஜை செய்யும் போதும் தீட்சையின் போது சடங்குகளைக் குறைத்துக் கொள்ளவோ  முற்றிலும் நீக்கவோ செய்வார். மரணத்தீட்டு,மாதவிலக்கு  போன்ற நாட்களில் கூட சிலரை,சில வேளைகளில் பூஜை செய்ய அனுமதித்தும் தீட்சை அளித்தும் இருக்கிறார். பூஜைக்கு முன் தேனீர் போன்ற பானங்களை அருந்துவதற்கும், மாமிச உணவு உண்பவர்களைத் தொடர்ந்து அந்த உணவுகளைச் சாப்பிடவும் அனுமதித்தார். ஏனெனில் ஆன்மாவிற்கும் உடம்பிற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. தீட்டு என்பதெல்லாம் பொருளற்ற பேச்சுக்கள் என்பது அன்னையின் கருத்தாக இருந்தது.
 தீட்சை தருவதற்கு இது தான் பொருத்தமான இடம்.என்று குறிப்பாக எந்த இடத்தையும் அவர் தேர்ந்தெடுப்பதும் இல்லை. தம் வீட்டு வராந்தாவில் வைத்துக்கூட தீட்சை தந்துள்ளார். இளம் பக்தர் ஒருவர் தேசிய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு போலீசாரின் கண்காணிப்பிற்கு ஆளாகி இருந்தார். அதன் காரணமாக அவரை ஜெயராம்பாடியில் தம் வீட்டில் தங்க வைக்க அன்னையால் முடியவில்லை. எனினும் அவரது ஆர்வத்தைக் கண்ட போது அவரை ஒரு புல்வெளியில் வைக்கோலின் மீது உட்காரவைத்தே தீட்சை தந்தார். மற்றொரு பக்தருக்“கு புகைவண்டி நிலையத்தின் மதில் சுவர் அருகே உட்காரவைத்து குடையைக் கூரையாகவும் அங்கே தேங்கியிருந்த மழைநீரையே மந்திர நீராகவும் பயன்படுத்தி தீட்சை தந்தார். சில நேரங்களில் தகுதியான சாதகர்களுக்கு அவர்கள் கேட்காமலே தீட்சை தந்தார். எட்டு பத்து வயதான சிறுவர்கள் தீட்சை வேண்டுமென்று கெஞ்சும் போது, கோலாப்மா முதலியவர்கள் தடுத்தும் கூட அவர்களுக்கு தீட்சை தந்து ஆசீர்வதித்திருக்கிறார்.
ஒரு நாள் ஒருவன்  நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து அன்னையின் கால்களைப் பிடித்துக் கொண்டு தீட்சை வேண்டுமென்று மனத்தில் பிராத்தித்தவாறே அழுதான். அன்னை அதே இடத்தில் நின்றபடியே அவனுக்கு தீட்சை தந்தார். தமது சிறுவயது சிநேகிதை ஒருத்திக்குப்படுக்கையில் படுத்தவாறே தீட்சை தந்தார். இவ்வாறு அன்னையின்  கருணைக்கு சம்பிரதாயமும் சடங்கும் ஒருபோதும் குறுக்கே நிற்கவில்லை. பொதுவாக காலையில்  பூஜையை முடித்த பிறகே அன்னை தீட்சை அளிப்பார். தீட்சை பெறுபவர்கள் அவரிடம் முன்பே அனுமதி பெற்றிருக்க வேண்டும். தீட்சை தருவதற்கும் மிகக் குறைவான நேரமே ஆகும். ஒரு முறை சீடர் ஒருவர்  சுவாமி சாரதானந்தரிடம் அன்னை தீட்சை தர  இரண்டு மூன்று நிமிடங்களே ஆகின்றன. நிங்கள் அரைமணிக்கு மேலாக எடுத்துக் கொள்கிறீர்களே ஏன்? என்று கேட்டார். அதற்கு அவர் அன்னையின் விஷயமே வேறு. அவர் ஒருவரை குருதேவரிடம் அர்ப்பணிப்பதற்கு அவனைத் தொடுவதோ அல்லது நினைப்பதோ கூட போதுமானதுநான் குருதேவரிடம் என் சீடனை ஒப்புவிக்கவும் அவர் ஏற்றுக் கொண்டதைத் தெரிந்து கொள்ளவும் நெடுநேரம் தியானம் செய்ய வேண்டியிருக்கிறது  என்றார். சீடருக்கு ஏற்ற மந்திரம் மனத்தில் உடனடியாகத்தோன்றி விடுவதும்,அன்னை விரைவில் தீட்சை தருவதற்கான காரணமாக இருக்கலாம்.
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6