ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
-
பாகம்-8

இவ்வாறு நாட்கள் மாதங்களாகி வருடங்களாகி மறைந்தன. கதாதரனுக்கு வயது ஏழு ஆகியது.
அவனுடன் அவனது இனிய இயல்புகளும் வளர்ந்தன.
கிராமத்திலுள்ள ஒவ்வொருவரும் அவனை நேசித்தனர். தங்கள் வீடுகளில் ஏதாவது தின்பண்டம் செய்தால், கதாதரனை எப்போது சாப்பிட அழைப்பது என்பது தான் பெண்களின் முதல் எண்ணமாக இருக்கும்.
நண்பர்களுக்கும் கதாதரனுடன் உணவைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் மகிழ்ச்சியே இருக்காது.இவற்றின் காரணம் கதாதரன் அடக்கமான சிறுவன் என்பதல்ல, அவனது குறும்புகளும் சுட்டித் தனமும் அடக்க முடியாதவை.ஆனால் அவனது நற்குணங்களும் நடிப்பாற்றலும் பாடும் திறமையும் அவனது மழலைக்குறும்புகளைப் பெரிதாக எண்ணாதிருக்கும் படிச் செய்துவிட்டன.

இந்தச் சமயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி பெற்றோரையும் நண்பர்களையும் கதாதரனைப்பற்றிய கவலையில் ஆழ்த்தியது.
இறையருளால் கதாதரன் உறுதியான, நலமான உடலைப் பெற்றிருந்தான். எந்த நோயாலும் அவன் பாதிக்கப்படவில்லை. எனவே வானத்துப் பறவை போல் உல்லாசமாக மகிழ்ச்சியாக இருந்தான்.
உடலுணர்வு இன்மையே உடல் நலத்திற்கு அறிகுறி  என்பதுசிறந்த மருத்துவர்களின் கருத்து. பிறந்ததிலிருந்தே இத்தகைய உடல் நலத்தைப் பெற்றிருந்தான் கதாதரன்.
இயற்கையிலேயே மனஒருமை படைத்த அவன் ஏதாவது சிந்தனையில் ஆழ்கின்ற போதெல்லாம் உடலுணர்வு முற்றிலுமாக அவனிடமிருந்து மறைந்துவிடும். இயற்கை அள்ளித் தெளிக்கின்ற இனிய கோலங்கள் அவனை வெகுவாகக் கவரும். சில்லென்ற காற்றில் சிலிர்க்கும் பரந்த வயல்கள், சலனமின்றி ஓடும் சிற்றாறு, பறவைகளின் இன்ப கீதம், நீல வானில் எத்தனை எத்தனையோ
 உருவங்களாக மாறிமாறி மிதக்கின்ற மேகக் கூட்டங்களின் மாயாஜாலம்-இவை யாவும் அவனுள் சிந்தனை நதிகளைப்பெருகச் செய்வதுண்டு.
இயற்கையின் வண்ணக்கோலம் கதாதரனை சொல்லொணா வியப்பில் ஆழ்த்தும். அவன் அதில் மூழ்கி தன்னை முழுவதுமாக இழந்துவிடுவான்.
இவ்வாறு இயற்கையுடன் ஒன்றிக் கலக்கின்ற வேளைகளில் எல்லாம் அவனது மனம் எங்கோ தொலை தூரத்தில் உணர்ச்சிகளின் ஆனந்தப் பிரவாகத்தில் சஞ்சரிக்கும்.
இப்போது நாம் சொல்லப்போகும் நிகழ்ச்சி அத்தகைய ஒன்று.

ஒரு நாள் கதாதரன் வயல்வெளி ஒன்றில் உல்லாசமாகச் சென்று கொண்டிருந்தான். அது மழைக்காலம். மழைமேகங்கள் திரண்டு வானம் கறுப்பாகக் காட்சி அளித்தது. அதன் கரிய வண்ணம் கதாதரனை வெகுவாகக் கவர்ந்தது. அவன் அதில் லயித்து நின்ற போது அந்தக் கருமைக் கிழித்து விடுவது போல எங்கிருந்தோ சில வெண்ணிற நாரைகள் சிறகுகளை விரித்துப் பறந்து சென்றன.கரிய வானம், அதில் வெண்ணிற நாரைகளின் ஊர்வலம்-இயற்கையின் இந்த எதிர்வண்ணக்கோலம் கதாதரனைத் தன்வயமிழக்கச் செய்து விட்டது.
 இயற்கையின் இனிய கோலத்தில் அவன் மனம் கரைந்தது. உடல் உணர்விழந்தது. புறவுலக நினைவின்றி அவன் தரையில்  சாய்ந்தான். பார்த்தவர்கள் பயந்து விட்டனர். உடனே அவனது பெற்றோருக்குச் சொல்லியனுப்பிவிட்டு அவனை வீட்டிற்குத்தூக்கிச் சென்றனர். சிறிது நேரத்திற்குப் பின்னர் உணர்வு பெற்றுப் பழைய நிலைக்குத் திரும்பினான் அவன்.
கூதிராமுக்கும்  சந்திராதேவிக்கும் இந்த நிகழ்ச்சி மிகுந்த கவலையைக்கொடுத்தது. மீண்டும் இது போல் நிகழாமல் இருக்கப் பல்வேறு வழிகளை அவர்கள்  சிந்தித்தனர். இது வலிப்பு நோயின் ஆரம்பமாக இருக்கலாம் என்ன மருத்துவம் செய்வது? சாந்தி.,ஸ்வஸ்த்யயனம் போன்ற சடங்குகளைச் செய்ய வேண்டுமா? என்றெல்லாம் எண்ணிக்குழம்பினர். கதாதரனோ தனக்கு நோய் எதுவம் இல்லை என்றும், தான் இதுவரை அனுபவித்தறியாத புத்துணர்வில் மூழ்கி இருந்ததால் தான் புறவுலக நினைவை இழக்க நேர்ந்ததாகவும் உடல் நினைவிழந்தாலும் உள்ளம் விழிப்புணர்வுடன் புதுமையான மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்ததாகவும் திரும்பத் திரும்பக்கூறினான். எப்படியானாலும், மீண்டும் இது போல் எதுவும் நேரவில்லை.

கதாதரனின் உடல் நலமும் நன்றாகவே இருந்தது. எனவே அது வாய்வுக் கோளாறினால் நேர்ந்தது என்றுகூதிராம் முடிவு செய்தார். சந்திராவோ கதாதரன்  ஏதோ ஓர் உபதேவதையால் பீடிக்கப்பட்டுள்ளான். என்று நம்பினாள். சில நாட்கள் அவனைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. இது கதாதரனுக்கு இன்னும்  வசதியாகப்போய்விட்டது.
பள்ளிக்குச் செல்லாமல்  விரும்பிய இடங்களுக்கு எல்லாம் சென்று முன்னைவிட அதிகமாக விளையாட்டிலும் வேடிக்கைகளிலும்  ஈடுபட்டான்.

கதாதரனுக்கு ஏழரை வயது வங்காளத்தில் சிறந்த விழாவாகிய துர்க்காபூஜை வந்தது.
கூதிராமின் மருமகனான ராமச்சந்திரனைப் பற்றி ஏற்கனவே கூறியுள்ளோம். அவனது குடும்பம் செலாம்பூரில் பிறந்த வீட்டில் வசித்து வந்தது. வேலை காரணமாக ராமச்சந்திரன் பெரும்பாலான நாட்களை மேதினிபூரில் கழித்தான்.ஒவ்வோர் ஆண்டும் செலாம்பூரில் துர்க்கா பூஜையை மிகவும் விமரிசையாகக்கொண்டாடுவது வழக்கம்.
பூஜைக்காக ராமச்சந்திரன் ஏராளமாகச் செலவு செய்வான்.
எட்டு நாட்களும் பாட்டும், வாத்தியங்களுமாக வீடே அமர்க்களப்படும் என்று ஹிருதயரிடமிருந்து அறிந்திருக்கிறோம்.
அந்தணர்களுக்கு உணவு, பண்டிதர்களுக்கு வெகுமதி, ஏழைகளுக்கு அன்னதானம் இலவச உடை போன்ற தான தருமங்கள் அப்போது தாராளமாக நடைபெறும்.
அந்த வேளையில் ராமச்சந்திரன் கூதிராமையும் தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று அவருடன் அந்த நாட்களை மகிழ்ச்சியாகக் கழிப்பதுண்டு.இந்த ஆண்டும் கூதிராமைக்குடும்பத்துடன் வருமாறு அழைத்திருந்தான்.

கூதிராமிற்கு அறுபத்தெட்டு வயது ஆகி இருந்தது. இப்போது கொஞ்சகாலமாக அடிக்கடி வயிற்றுப்போக்கு, அஜீரணம் என்று பல நோய்களால் பாதிக்கப்பட்டு அவர் முந்தைய வலுவை இழந்திருந்தார்.
ஆகையால் விருப்பம் இருந்தும் அருமை மருமகனின் அழைப்பை ஏற்க அவர் தயங்கினார். அது மட்டும் இன்றி, வீட்டையும் குடும்பத்தையும் முக்கியமாக கதாதரனைச் வில நாட்கள் கூடப்பிரிய இந்த முறை ஏனோ அவரது மனம் மறுத்தது.
அதே வேளையில் ”என் உடலோ வலுவிழந்து வருகிறது. இந்த ஆண்டு போகாவிட்டால் இனி போக முடியுமோ, முடியாதோ, யார் கண்டது? என்ற எண்ணம் அவர் நெஞ்சை நெருடியது. எனவே இந்த முறை எப்படியாவது சென்று விட வேண்டும் என்று எண்ணிய அவர், போகும் போது கதாதரனை உடன் அழைத்துச்செல்ல விரும்பினார். அவனது பிரிவால் சந்திரா வருந்துவாள் என்ற எண்ணம் அவரது முடிவை மாற்றியது. கடைசியில் ராம்குமாருடன் செல்வதென்றும் சில நாட்கள் அங்கிருந்து விட்டுத் திரும்புவது என்றும் முடிவு செய்தார்.

பூஜைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் கூதிராமும் ராம்குமாரும் புறப்பட்டனர்.
அன்று கூதிராம் வழக்கம் போல் ஸ்ரீரகுவீரரை வணங்கினார். கதாதரனை அன்புடன் கொஞ்சினார். பின்னர் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு செலாம்பூர் நோக்கிப்புறப்பட்டார். கூதிராமையும் ராம்குமாரையும் கண்டு ராமச்சந்திரன் பெரிதும் மகிழ்ந்தான்.
செலாம்பூர் அடைந்த பின்னர் கூதிராமை வயிற்றுப்போக்கு மீண்டும் பற்றிக்கொண்டது.
உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.பூஜையின்  ஆறு, எட்டாம் நாட்களில் நிலவிய பரமானந்தச் சூழ்நிலையை அவரது நோய் பாதிக்கவில்லை. ஆனால் ஒன்பதாம் நாளன்று நோய் தீவிரமாகியது. அந்த ஆனந்தச்சூழ்நிலையில் கவலைக்குறிகள் தோன்றின.
ராமச்சந்திரன் திறமைமிக்க மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை செய்தான்.ஹேமாங்கினியும் ராம்குமாரும் கூதிராமின் அருகிலிருந்து தேவையானவற்றைக் கவனித்துக்கொண்டனர்.
ஆனால் கூதிராமின் உடல்நிலை தேறுவதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை. எப்படியோ அந்த ஒன்பதாம் நாள் பகலும் இரவும் கழிந்தன. இந்துக்களுக்குப்புனிதமான விஜயதசமி நாள் வந்தது. அன்று சிறிதும் பேச இயலாத அளவிற்கு கூதிராமின் நிலை கவலைக்க இடமாகியது.
துர்க்கையின் திருவுருவை நீரில் மூழ்கவிடுகின்ற விசர்ஜனச் சடங்கு நிறைவுற்றதும் ராமச்சந்திரன் மாமாவின் படுக்கை அருகில் வந்து அமர்ந்தான். அப்போது மாலை வேளையாகி விட்டிருந்தது.நேரம் நகர்ந்தது.
இரவு கவியலாயிற்று. கூதிராமின் இறுதி நேரம்நெருங்கி விட்டதுபோல் தோன்றியது. ராமச்சந்திரன் அங்கிருந்தோரை விசாரித்த போது கூதிராம் நீண்ட நேரமாக எதுவும் பேசாமல் அதே நிலையில் படுத்திருப்பதாகச்சொன்னார்கள்.
அவன் கண்களில் கண்ணீர் மல்க,
 தழுதழுத்த குரலில் கூதிராமிடம் மாமா, எப்போதும் ஸ்ரீரகுவீரரின் நாமத்தை ஓதுவீர்களே! இப்போது என் மௌனமாக இருக்கிறீர்கள்? அவரது திருப்பெயரை ஓதுங்கள்? என்று சொன்னான்.
இறைவனைப் பற்றிய பேச்சு கேட்டதும் கூதிராம் கண் திறந்து பார்த்தார். ஏதோ கூற விழைந்தார். ஆனால் உடம்பில் தெம்பில்லை. வலுவையெல்லாம் சேர்த்து குழறுகின்ற குரலில், ராமச்சந்திரனா,வா, விசர்ஜனம் முடிந்து விட்டதா?
அப்படியானால் என்னைச்சற்று உட்கார வை. குழந்தாய் என்றார். ராமசந்திரனும் ஹேமாங்கினியும்  ராம்குமாரும் அவரைப் படுக்கையில் உட்காரவைத்தனர்.
சிறிது நேர அமைதிக்குப் பின்னர் கம்பீரமான குரலில் மூன்று முறை ஸ்ரீரகுவீரரின் திருநாமத்தை ஓதினார் கூதிராம்.
திருநாமங்களின் உச்சாரணத்துடன்  அந்தப் புண்ணியாத்மாவின் உயிர் பிரிந்தது.
ஸ்ரீரகுவீரர் தன் அருமை பக்தனைத் தன்னுடன் அணைத்துக்கொண்டார். அப்போது நள்ளிரவு அந்த நடுநிசியில் இறைநாம சங்கீர்த்தனம் அந்த கிராமத்தில் உரத்த குரலில் எழுந்தது.
கூதிராமின் உடல் நதிக்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.
அடுத்த நாள் காமார்புகூருக்குச் செய்தி தெரிவிக்கப்பட்டது. ’

கூதிராமின் வீடு  துயரத்தில் ஆழ்ந்தது. துக்கநாட்கள் முடிந்ததும் ராம்குமார் எருது ஒன்றை  சாஸ்திர விதிப்படி விடுதலை செய்தார். பல அந்தணர்களுக்கு  உணவளித்து தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்தார்.
-
தொடரும்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?