அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-75

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-75

காலம் கடந்தது.ராதுவின் உடம்பு வளர்ந்ததே தவிர மனம் வளரவில்லை. உலகத்தைப் புரிந்து கொள்ளவோ,நல்லது கெட்டதைத் தெரிந்து கொள்ளவோ அவளால் முடியவில்லை.எளிதில் எரிச்சலும் கோபமும் அடைவாள்.விசித்திரமான போக்கும்,வழிக்குக் கொண்டுவரவே முடியாத இயல்பும் அவளிடம் இருந்தன.அன்னை சொரிந்த அளவற்ற அன்பும் அவளுடையசுகத்துக்காக அவர் பட்ட வேதனைகளும் கூட அவளை மாற்ற முடியவில்லை. இதைக்கண்டு அன்னை மிகவும் மனம் நொந்தார்.ஒரு நாள் வேதனையுடன் இந்த ராதுவோடு நான் படும் வேதனைகளைப்பார்! கௌரி தன் பெண்ணை எவ்வளவு அற்புதமாக வளர்த்திருக்கிறாள்.நானோ குரங்காக வளர்த்திருக்கிறேன். என்றார். ராதுவும் அன்னையிடம் அன்பு கொண்டிருந்தாள்.ஆனால் அவளைப் பொறுத்தவரையில் அன்பு என்பது அன்னையிடம் அளவுக்கு மிஞ்சிய சலுகைகளையும் வசதிகளையும் பெறுவதாகவே இருந்தது. எனவே அன்னையை மதிக்காமல் பலர் முன்னிலையில் அலட்சியமாக நடத்தினாள். காரணமே இல்லாமல் அவர் மீது எரிச்சல் கொண்டு கேவலமாகப்பேசவும் சபிக்கவும் செய்தாள்.கையில் எது இருந்தாலும் அன்னையின் மீது வீசி எறிவாள்.அவரை உதைத்தாள். காறித்துப்பினாள். அவர் முன் கூச்சலிட்டாள். வேறு எந்த மனித ஜீவனும் தன் பொறுமையை இழந்து போகும் படி அவ்வளவு மோசமாக நடத்தினாள்.
ராது தன்னைவிட அன்னையை அதிகமாக நேசிப்பதை சுரபாலாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பொறாமையால் வெந்த அவளது பைத்தியக்கார மூளை விசித்திரமான  கற்பனைகளை அதற்குக் காரணங்களாக கண்டுபிடித்தன. இந்தக்கற்பனைகளை வைத்துக்கொண்டு அன்னை தனியாக இருக்கும்போது பலர் முன்னிலையிலும் அவரைத்திட்டிக் கொண்டேயிருந்தார்.பிறந்ததிலிருந்து அடிக்கடி நோயில் படுத்துவிடுகின்ற ராதுவுக்கு அன்னை மருந்து கொடுப்பார்.இதைக்காணும் சுரபாலா.ஐயோ!என் மகளைச் சாகடிப்பதற்காகமருந்துகளைக் கொடுக்கிறாளே என்று கத்துவாள்.
மற்றொரு முறை,அப்போது ராதுவுக்குத் திருமணம் முடிந்து விட்டிருந்தது. தன் மருமகன் கிணற்றில் மூழ்கிச் செத்து விட்டதாக  எப்படியோ ஓர் எண்ணம் சுரபாலாவின்  மூளையில் புகுந்து விட்டது. ஐயோ ஐயோ என்று அடித்துக் கொண்டு வீட்டில் உள்ள எல்லோரிடமும் கிணற்றில்  கிடக்கும் தன் மருமகனைக் காப்பாற்றும்படி கூச்சல் போட்டு, அமர்களம்  செய்தாள்.பேசாமல் இருக்கும் எல்லோரையும் அதிலும் முக்கியமாக அன்னையைஏசினாள்.இறுதியில்  மருமகனை நேரில் கொண்டுவந்து நிறுத்தும் வரை வீட்டை நகரமாக்கி  விட்டாள்.
இன்னொரு முறை அவள் தன் நகைகளையும்  ராதுவின்  நகைகளையும் எடுத்துக்கொண்டு தந்தையின் வீட்டிற்குச் சென்றாள். அவளுக்குத் தந்தை மட்டுமே இருந்தார். பணப்பைத்தியமான அவர் நகைகளைப்பறித்துக்கொண்டு அவளை விரட்டி விட்டார்.
நகைகளைப்பறிகொடுத்த துயரத்தில் சுரபாலா நேராக சிம்மவாஹினி கோயிலுக்குச் சென்று  என் நகைகளைக் கொடு” என்று தேவியிடம் முரண்டு பிடித்து அழ ஆரம்பித்தாள். அன்னை அப்போது வீட்டில் அமர்ந்திருந்தார். அவரது அருகில் இருப்பவர்களின் காதில் விழாத அந்த அழுகுரல் அன்னையின் காதில் விழுந்தது. நான் போக வேண்டும். நான் போக வேண்டும். அந்தப்பைத்தியம் சிம்மவாஹினியைப் போய் த் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறாள். பாவம் அவளுக்கு என்னைத் தவிர யார் இருக்கிறார்கள்.! என்று பரிவுடன் கூறியபடியே கோயிலுக்கு ஓடினார். அவளைச் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார். ஆனால்  சுரபாலாவோ அன்னையின் மீதே பழியைப்போட்டு, நீதான் என்நகையைப் பிடுங்கி வைத்துக் கொண்டாய். என்று அரற்ற ஆரம்பித்தாள். அதற்கு அன்னை அது குப்பை.அது என்னிடம் இருக்குமானால் எப்போதோ எறிந்து விட்டிருப்பேன்.என்றார். எப்படியோ சுரபாலாவிடமிருந்து செய்தியை அறிந்ததும் அவளுடைய தந்தையை அழைத்து நகைகளைக் கொடுத்துவிடும் படி பலவாறு கெஞ்சிக்கேட்டார் அன்னை. கிழவர் கொடுப்பதாக இல்லை.கடைசியில் கல்கத்தாவிலிருந்து வந்த அன்னையின் ஒரு சீடர் சில போலீசாருடன் சென்று நகைகளை மீட்டு வந்தார்.
நாள்தோறும் இந்தப்பைத்தியக்காரியால்  ஏற்படும் வேதனைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத அன்னை,நான் சிவபெருமானை முள் நிறைந்த வில்வ இலைகளால் பூஜை செய்தேன்போலிருக்கிறது.அதனால் தான் இவர்கள் என்னை முள்ளாக இப்படிக் குத்துகிறார்கள் என்றார்.
சுரபாலாவின் மனத்தில் ஒரு கருத்து ஆழமாகப் பதிந்திருந்தது. அது அன்னைக்கு வருகின்ற எல்லா பணமும் சொத்துக்களும் கடைசியில் ராதுவுக்குத்தான்  சேரும் என்பதாகும். இதனால் அன்னையின் பெயரில் சுவாமி சாரதானந்தர் கல்கத்தாவில் வீடு கட்டியபோது அவள் அடைந்த  மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அதே வேளையில் அன்னை தமக்கு வரும் பணத்திலோ,பழங்கள் துணிகள் முதலான பொருட்களிலோ வேறு யாருக்காவது சிறிது கொடுத்துவிட்டால் கோபம் கொண்டு கொண்டு அமளிதுமளி செய்து விடுவாள்.ஒரு முறை காசியில் அன்னை தானம் செய்வதைக் கண்ட சுரபாலா,அன்னையிடம் சண்டையிட்டாள். அதற்க அன்னை பொறுமையுடன் என் இயல்பு குழந்தையைப் போன்றது. கணக்குப் போடுவது என்னால் முடியக்கூடிய காரியமா? யாராவது கேட்டால் நான் கொடுத்து விடுகிறேன் என்றார்.
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6