அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-66

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-66

சங்க ஜனனியாகத் தமது பணியை ஆரம்பித்த பின்னர் அன்னை இந்தப் பூவுலகில் சுமார் இருபது ஆண்டுகள் வாழ்ந்தார்.இந்தக் காலத்தில் தான் அவரது வாழ்க்கை புறவுலகிற்குத் தெரிவதாக அமைந்தது. பண்டிதர்,-பாமரர்,பணக்காரர்-ஏழை,முதியவர்-இளையவர்.ஆண்- பெண்என்ற பாகுபாடின்றி எண்ணற்றோர் அவரை நாடி வரத் தொடங்கினர். வந்தோர் அனைவரும் அவரது அன்பு மழையில் குளித்தனர்.ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் கண்டனர். இப்படி குருதேவியாக ஒரு புறம்.இந்த அன்பையோ ஆன்மீகத்தையோ பொருட்படுத்தாமல்அவரிடமிருந்து எவ்வளவு பணம் கிடைக்கும் என்று  போட்டி போட்டுக்கொண்டு அவரைச் சூழ்ந்திருந்த உறவினருடன் குடும்பத் தலைவியாக ஒருபுறம் .இனி எதைப்பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் ஒவ்வொரு வாழ்க்கையிலும் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்திய வண்ணம் விரைகின்ற காலம்  அவரது வாழ்க்கையில் கொண்டு வந்த நிகழ்ச்சிகள்  ஒருபுறம். இப்படி மும்முனையாகச் சென்றது அன்னையின் வாழ்க்கை ஆனால் இவை எவற்றாலும் சிறிதும் பாதிக்கப்படாமல் அனைத்தையும் கடந்து நின்றார்.அவர்கோபுரம் ஒன்றின் மேலிருந்து அனைத்தையும் சமமாகப் பார்க்கின்ற ஒருவரைப்போல் எப்போதும் சம நிலையில் திளைத்திருக்கின்ற யோகியாக, ஸ்ரீராமகிருஷ்ணரின் ஒன்றிய ஞானியாக ஸ்ரீராமகிருஷ்ணரின் எண்ணங்களில் மகிழ்கின்ற பக்தையாக ஒரு கணம் கூட இடையீடின்றிச் செயல்புரிகின்ற கர்மயோகியாக, அனைத்திற்கும் மேலாக இதுவரை உலகம் கண்டிராத ஒரு தாயாக வாழ்ந்தார் அன்னை.
இத்தகையதொரு பெருவாழ்வை அதன் அனைத்துப்பரிமாணங்களுடனும் விளக்குவது என்பது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட விஷயம். எனவே நாம் மேலே கண்ட மும்முனை வாழ்வையும் அது நமக்குத்தருகின்ற செய்திகளையும் மட்டும் அறிந்து கொள்ள முயற்சிப்போம்.அன்னையின் மும்முனை வாழ்வில் எந்த ஒன்றையும் தனியாக பிரித்துப் பார்ப்பது கடினம்.ஏனெனில் வாழ்க்கை நிகழ்ச்சிகளும் ,குடும்பத்தலைவியாகப் பெண்ணினத்திற்கும் ஒரு லட்சிய வாழ்க்கையை வாழ்ந்ததும், குருவாக இருந்து துறவியருக்கும் இல்லத்தாருக்கும் வழி காட்டியதும் ஒரே காலத்தில் நடைபெற்றவை. ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை. ஆனால் நாம் புரிந்து கொள்வதற்காக அவற்றைப் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
 இது வரை குருதேவருடன் மட்டுமே இணைந்திருந்த அன்னையின் வாழ்க்கை இந்தக்காலக்கட்டத்தில் பக்தர்கள்,சீடர்கள், உறவினர்கள் என்று பலருடன்  பிணைக்கப்பட்டது.இந்தச் சிலர் இல்லாவிடில் அன்னையின் வாழ்க்கை தரும் செய்தியையும் அதன் பல பரிமாணங்களையும் நாம் அறிய  முடியாமலே போயிருக்கும். அவர்களுள் பக்தர்கள் சிலரை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். இவர்களுள் ஓரிருவரை இந்த வரலாற்றில் அங்குமிங்குமாகச் சந்தித்து விட்டோம். இங்கு சற்று விரிவாகத் தொகுத்துப் பார்ப்போம்.
இறைவன் அவதரிக்கும்போது,அவரது பூவுலக வாழ்க்கையின் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்காக சில உயர்ந்த ஆன்மாக்களும் அவர்களுடன் பிறக்கின்றனர். அவதார புருஷர்களின் வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்க்கும் போது நமது வாழ்க்கையைப்போன்றசாதாரணமான ஒன்றாகத்தான் தெரியும். ஆனால் இரண்டுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உண்டு. அவர்களுக்குச் சேவை செய்வதற்கு ஆன்மீக சாதனைகளின் மூலம்  உயர்ந்த நிலையை அடைந்தவர்களால் மட்டுமே முடியும். எனவே இந்த உயர் ஆன்மாக்கள் அவதார புருஷர்களுடன் பிறந்து அவர்களது பூவுலக வாழ்க்கையை எளிதாக்குவதுடன் அவர்களின் அவதார ப் பணியில் பங்கு கொண்டு அவர்களது செய்தியையும் மக்களிடம் பரப்புகின்றனர். இவ்வாறு குருதேவருடன் வந்த சிலர் அன்னையின் வாழ்க்கையுடனும்  பிணைக்கப்பட்டனர்.
அன்னைக்குச்சேவை செய்வது என்பது ஒருவிதத்தில் குருதேவருக்குச் சேவை செய்வதைவிடக் கடினமானது. அன்னையின் தனிப்பட்ட சேவையைப்பொறுத்தவரை எந்தப்பிரச்சனையும் இல்லை. ஆனால் அவரைச் சூழ்ந்து கொண்டு வாழ்ந்த உறவினர் கூட்டம் இருக்கிறதே, அவர்களைப் பேணுவது மிகவும்  சிரமமான காரியம். அரைப்பைத்தியம்,முக்கால் பைத்தியம் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.அன்னை ஜெயராம்பாடியிலிருந்து கல்கத்தாவுக்கோ,இல்லை கல்கத்தாவிலிருந்து ஜெயராம்பாடிக்கோ செல்“லும் போது பண்டமும்,பாத்திரமும் மனிதர்களுமாக குறைந்தது நான்குமாட்டு வண்டிகளாவது தேவைப்படுமாம். இந்த நிலையில் அவருக்குச் சேவை செய்வது என்பது  சுலபமாக இருக்குமா என்ன?சீடர் ஒருவரிடம் அன்னை, எனது சேவைக்கு நல்ல சாதுவாக இருந்துவிட்டால் மட்டும் போதாது., செயல் வீரர்களாக இருக்க வேண்டும், என்று கூறினாராம். அத்தகைய செயல்வீரர்களான இரண்டு துறவியரை அன்னை தமது ” சுமை தாங்கிகளாகக் கருதினார். அவர்கள் சுவாமி யோகானந்தர் .சுவாமி சாரதானந்தர்.
-

தொடரும்...





Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6