Tuesday 18 March 2014

என் வீர இளைஞர்களுக்கு,

என் வீர இளைஞர்களுக்கு,

நியூயார்க்
19.11.1894

என் வீர இளைஞர்களுக்கு, 


அன்பு, நேர்மை, பொறுமை ஆகிய மூன்றும் இருந்தால் போதும் - வேறு எதுவும் தேவையில்லை. அன்புதான் வாழ்க்கையின் ஒரே நியதி. எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான். மற்றவர்களுக்கு நன்மை செய்வதுதான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமல் இருப்பதுதான் மரணம். என் இளைஞர்களே, அன்புடையவர்களைத் தவிர மற்றவர்கள் வாழ்பவர்கள் அல்லர். என் குழந்தைகளே! மற்றவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும் - மற்றவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும்; ஏழை எளியவர்கள், பாமரர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும் - மிகவும் மனம் உருக வேண்டும். மற்றவர்களின் நன்மையின் பொருட்டு உங்கள் இதயமே நின்று, மூளைக் குழம்பி, உங்களுக்குப் பைத்தியம் பிடிக்கும் என்ற நிலை வரும் வரையில் மற்றவர்களுக்காக நீங்கள் மனம் உருகுங்கள். பிறகு இறைவனின் திருவடிகளில் உங்கள் ஆன்மாவைச் சமர்ப்பியுங்கள். அப்போது உங்களுக்கு ஆற்றல் வரும், உதவி வரும், குறையாத ஊக்கம் வரும். 
முயற்சி செய்யுங்கள்! முயற்சி செய்யுங்கள்! - கடந்த பத்து ஆண்டுகளாக இதுதான் என் இலட்சியமாக இருந்து வந்தது. முயற்சி செய்யுங்கள்! - இதையே இப்போதும் நான் சொல்கிறேன். 

என்னைச் சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தபோதும், முயற்சி செய்யுங்கள்! என்று கூறினேன்; இப்போது ஒளி வருகின்ற வேளையிலும், முயற்சி செய்யுங்கள்! என்று அதையே நான் சொல்கிறேன். என் குழந்தைகளே! பயப்படாதீர்கள்! பணத்தால் பயனில்லை, பெயரால் பயனில்லை, புகழலால் பயனில்லை, கல்வியால் பயனில்லை - அன்பு ஒன்றுதான் பயன் தருகிறது; ஒழுக்கம் ஒன்றுதான் துளைக்க முடியாத சுவர்களையெல்லாம் துளைத்து நம்மை முன்னேறச் செய்கிறது. சுதந்திரம் இல்லாமல் எந்த வளர்ச்சியும் அடைய முடியாது. நமது முன்னோர்கள் ஆன்மிகச் சிந்தனைக்குச் சுதந்திரம் அளித்தார்கள். அதனால் அற்புதமான ஒரு மதம் நமக்குக் கிடைத்தது. ஆனால் அதே சமயம், அவர்கள் சமுதாயத்தின் கால்களில் கனத்த சங்கிலியைக் கட்டி வைத்தனர். அதனால் இப்போது நமது சமுதாயம் - ஒரு வார்த்தையில் சொல்வதானால் - மிகவும் பயங்கரமாகவும், காட்டுமிராண்டித்தனமானதாகவும் இருக்கிறது. இதற்கு மாறாக, மேற்கு நாடுகளில் சமுதாயத்தில் மக்களுக்கு எப்போதும் சுதந்திரம் இருந்து வந்திருக்கிறது; அவர்களுடைய சமுதாயத்தைப் பாருங்கள்! அதற்கு மாறாக அவர்களின் மதத்தையும் பாருங்கள்!

வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை சுதந்திரம். சிந்திக்கவும் பேசவும் சுதந்திரம் தேவைப்படுவதுபோல் உணவு, உடை, திருமணம் முதலிய ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களுக்குத் தீமை செய்யாத அளவில் மனிதனுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். இந்தியாவை உயர்த்த வேண்டும், ஏழைகளுக்கு உணவு தர வேண்டும், கல்வியைப் பரப்ப வேண்டும், சமுதாயத்தில் கொடுமைகளை அகற்ற வேண்டும். சமுதாயத்தில் கொடுமைகள் வேண்டாம்; ஒவ்வொருவருக்கும் இன்னும் அதிகமாக உணவு வேண்டும், இன்னும் அதிகமான வாய்ப்புகள் தர வேண்டும்! மற்றவர்களுக்குச் சுதந்திரம் அளிக்கத் தயாராக இல்லாதவனுக்கு, சுதந்திரம் பெறுவதற்குத் தகுதி கிடையாது. எல்லா அதிகாரங்களையும் ஆங்கிலேயர்கள் உங்களுக்கே தந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். அதனால் என்ன ஆகும்? அந்த அதிகாரம், சாதாரண மக்கள் அதைப் பெறாமல் இருப்பதற்குத்தான் பயன்படும். அடிமைகள் மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்காகவே அதிகாரம் கேட்கிறார்கள். இந்தியாவில் இந்தியாவின் ஆன்மிகத்தைக் கொண்ட ஓர் ஐரோப்பிய சமுதாயத்தை உங்களால் உருவாக்க முடியுமா? முடியும், முடிய வேண்டும் என்பதுதான் என் நம்பிக்கை. எல்லோருக்கும் முக்தி உண்டு, எல்லோரும் சமம் என்று போதித்த பண்டைய ஆச்சாரியர்களான சங்கரர், இராமானுஜர், சைதன்யர் போன்றவர்களின் வழியில் சமுதாயத்தைப் புதுப்பிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

உங்களிடம் ஊக்கம் என்ற நெருப்பு பற்றி எரிய வேண்டும். பிறகு அதை எல்லா இடங்களிலும் பரப்புங்கள். வேலை செய்யுங்கள், வேலை செய்யுங்கள். மற்றவர்களை வழி நடத்திச் செல்லும்போது, நீ ஒரு வேலைக்காரன் போலவே நடந்துகொள். சுயநலம் இல்லாதவனாக இரு. உன்னுடைய நண்பன் மற்றொருவனைத் தனிமையில் திட்டுவதை ஒருபோதும் கேட்டுக்கொண்டிருக்காதே! எல்லையற்ற பொறுமையுடன் இரு. அவ்விதம் நீ செய்தால் உனக்கு வெற்றி நிச்சயம். மற்றவர்களின் நன்மைக்காக வேலை செய்வதுதான் வாழ்க்கையின் இலட்சியம். போலித்தனம் என்பது இருக்கக் கூடாது, பொய் கூடாது, போக்கிரித்தனம் கூடாது - இதைத்தான் நான் விரும்புகிறான். நான் எப்போதும் இறைவனையே நம்பி இருக்கிறேன்; பெயரும் புகழும் தேடிக்கொள்வதற்காகவோ, ஏன் பொதுநன்மைக்காகவோகூட, நான் போலியாக வாழ்ந்தேன் என்ற கறைபடிந்த மனசாட்சியுடன் இறந்துபோக நான் விரும்பவில்லை. ஒழுக்கக்கேடு என்ற மூச்சுக்காற்றுகூட வீசக் கூடாது; செயல்முறையில் குற்றத்தின் நிழல்கூடப் படியக் கூடாது.
சலனபுத்தி வேண்டாம், இரகசிய வித்தை என்ற அயோக்கியத்தனம் வேண்டாம், இருட்டில் செய்யும் எதுவும் வேண்டாம். என் வீரக் குழந்தைகளே, முன்னேறுங்கள். பணம் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி - உங்களுடன் மனிதர்கள் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி - முன்னேறிச் செல்லுங்கள்! 

உங்களிடம் அன்பு இருக்கிறதா, இல்லையா? உங்களிடம் இறைவன் இருக்கிறாரா, இல்லையா? முன்னேறிச் செல்லுங்கள்! தொடர்ந்து முன்னேறுங்கள்! எதுவும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது! கவனமாக இருங்கள். உண்மைக்குப் புறம்பான எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருங்கள். உண்மையைவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள், நாம் வெற்றி பெறுவோம்; அது மெதுவாக இருக்கலாம், ஆனால் வெற்றி நிச்சயம். இந்தியாவின் எதிர்காலம் உங்களையே நம்பியிருக்கிறது. வேலை செய்துகொண்டே போங்கள்! 

ஆசீர்வாதங்கள்.
அன்புள்ள,
விவேகானந்த

பிரபஞ்சம் - சிற்றண்டம்

பிரபஞ்சம் - சிற்றண்டம்


மனித மனம் இயல்பாகவே புறத்தில் செல்ல விரும்புகிறது. பொறிகளாகிய பாதைகள் வழியாக உடலுக்கு வெளியே அது தொடர்பு கொள்ள விரும்புவது போலுள்ளது. கண் பார்க்க வேண்டும், காதுகள் கேட்க வேண்டும், மற்ற புலன்கள் புற உலகை உணர வேண்டும். இயல்பாகவே, இயற்கையின் அழகும் நுட்பமும்தான் முதலில் மனிதனின் கருத்தைக் கவர்கின்றன. மனித மனத்தில் புற உலகத்தைப் பற்றிய கேள்விகளே முதலில் எழுந்தன. வானம், நட்சத்திரங்கள், கிரகங்கள், பூமி, நதிகள், மலைகள், கடல் இவற்றின் மர்மத்திற்கெல்லாம் மனிதன் தீர்வு காண விரும்பினான். இருட்டில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த மனித மனம் முதலில் புற உலகத்தையே அறிய விரும்பியது என்பதற்கான ஆதாரங்களை உலகின் எல்லா பழைய மதங்களிலும் நாம் காணலாம். நதிதெய்வம், வானதெய்வம், மேகதெய்வம், மழைதெய்வம் என்று எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு தெய்வத்தையும் கற்பனை செய்துகொண்டான். இன்று நாம் இயற்கையின் சக்திகள் என்று சொல்பவை எல்லாவற்றையுமே பழங்கால மனிதன், தெய்வங்களாகவும் தேவர்களாகவும் உருவகப்படுத்திக் கொண்டிருந்தான்.


ஆராய்ச்சியின் ஆழம் அதிகமாக ஆக, இந்தப் புற வெளிப்பாடுகள் மனித மனத்திற்குத் திருப்தி அளிக்கவில்லை, கடைசியில், மனிதன் அகமுகமாகத் திரும்பினான். அவனது ஆன்மா பற்றியே கேள்விகள் கேட்கப்படலாயின. பேரண்டத்திலிருந்து ஆராய்ச்சி சிற்றண்டத்தை நோக்கித் திரும்பியது. புற உலகத்திலிருந்து ஆராய்ச்சி அக உலகத்தை நோக்கித் திரும்பியது. புற இயற்கையை ஆராய்வதிலிருந்து அக இயற்கையை ஆராய்வதில் அவன் இறங்கினான். இத்தகைய ஆராய்ச்சியின் பயனாக நாகரீகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தான். இயற்கையைப் பற்றிய ஆழ்ந்த அறிவைப் பெற்றான். வளர்ச்சியில் உயர்ந்த நிலையை அடைந்தான்.


இன்றைய சொற்பொழிவு இந்த அக மனிதனைப் பற்றியதுதான். அக மனிதனைப் பற்றிய இந்தப் பிரச்சினைபோல், மனிதனுக்கு இவ்வளவு நெருக்கமானதும் விருப்பமானதுமான பிரச்சினை வேறில்லை. எத்தனையோ நாடுகளில், எத்தனையோ கோடி தடவை இந்தக் கேள்வி எழுந்திருக்கிறது. ரிஷிகள், அரசர்கள், பணக்காரர்கள், ஏழைகள், புண்ணியவான்கள், பாவிகள் என்று ஒவ்வோர் ஆணும் ஒவ்வொரு பெண்ணும் அவ்வப்போது இந்தக் கேள்வியைக் கேட்டு வந்திருக்கிறார்கள்: நிலையற்ற இந்த மனித வாழ்க்கையில் நிலையான ஏதாவது உண்டா? இந்த உடல் அழிந்த பின்னும் அழியாமல் இருப்பது எதுவுமே இல்லையா? இந்த உடற்கூடு மாய்ந்து சாம்பலான பின்னும் ஏதோ ஒன்று வாழ்ந்து கொண்டிருப்பதில்லையா? உடலை எரித்துச் சாம்பலாக்கும் நெருப்பினால் பாதிக்கப்படாத ஏதோ ஒன்று இல்லையா? அப்படி ஒன்று இருக்குமானால் அது என்ன ஆகிறது? எங்கே போகிறது? அது எங்கிருந்து வந்தது? இந்தக் கேள்விகள் திரும்பத்திரும்பக் கேட்கப்பட்டன. இந்தப் படைப்பு இருக்கும்வரையில் இந்தக் கேள்விகளும் இருக்கத்தான் செய்யும்.


இவற்றிற்கெல்லாம் பதில் கிடைக்காமலும் இல்லை. ஒவ்வொரு முறையும் பதில் கிடைத்தது. காலம் செல்லச்செல்ல, பதில் மேலும்மேலும் உறுதிபெற்றது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதற்கு முடிவான பதில் கிடைத்துவிட்டது. அந்தப் பதிலே திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது, விளக்கப்படுகிறது, நமது அறிவிற்குத் தெளிவாகப் புரியும்படி எடுத்துக் கூறப்படுகிறது. நாம் இப்போது செய்ய வேண்டிய காரியமும் அதே பதிலைத் திரும்ப எடுத்துச் சொல்வதுதான். இந்த மிகப் பெரிய பிரச்சினைக்குப் புதிய தீர்வு காண்பதாக நாம் பாசாங்கு செய்வதில்லை. பழைய உண்மையைப் புதிய மொழியில் எடுத்துச் சொல்கிறோம். பழங்காலத்தினரின் சிந்தனையைத் தற்காலத்தினரின் மொழியில் சொல்கிறோம். தத்துவ ஞானிகளின் மொழியை மக்களின் மொழியில் சொல்கிறோம். தேவதைகளின் மொழியை மனிதனின் மொழியில் சொல்கிறோம். கடவுளின் மொழியைப் பாமர மக்களின் மொழியில் சொல்கிறோம். அப்போதுதான் மனிதனால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் இந்தக் கருத்துக்கள் எந்தத் தெய்வீக சக்தியிலிருந்து தோன்றினவோ அது எப்போதும் மனிதனில் இருக்கிறது. ஆகவே அவனால் இந்தக் கருத்துக்களை எப்போதும் புரிந்துகொள்ள முடியாது.


நான் உங்களைப் பார்க்கிறேன். பார்வைக்கு என்னென்ன தேவைப்படுகின்றன? முதலில் கண்கள். மற்ற எந்த விதத்திலும் குறையில்லாதிருந்தாலும் கண்கள் இல்லையென்றால், என்னால் உங்களைப் பார்க்க முடியாது. இரண்டாவது தேவை, உண்மையான பார்வைப் புலன். கண்கள், பார்க்கும் உறுப்புகள் அல்ல. அவை பார்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பொறிகளே. உண்மையான புலன் இந்தப் பொறிகளுக்குப் பின்னால் மூளையிலுள்ள நரம்பு மையமே. அந்தப் புலன் சேதப்படுமானால், மிகவும் தெளிவான கண்களை உடையவனால் கூட எதையும் பார்க்க முடியாது. எனவே இந்த மையம், இந்த உண்மையான பார்வைப்புலன் இருப்பது அவசியம். எல்லா புலன்களின் விஷயமும் இப்படித்தான்.


புறக் காதுகள் ஒலி அலைகளைக் கேள்விப்புலனுக்குத் தெரிவிக்கத்தான் பயன்படுகிறது. இதுவும் போதாது. நீங்கள் நூல்நிலையத்தில், ஒரு புத்தகத்தைப் படிப்பதில் உங்களை மறந்து ஈடுபட்டிருக்கிறீர்கள். அப்போது மணி அடிக்கிறது. அது உங்கள் காதில் விழுவதில்லை. சத்தம் எழுகிறது; அது காற்றில் பயணம் செய்து, காதுகளின்மூலம், கேள்விப்புலனையும் அடைகிறது. ஆனாலும் அதை நீங்கள் கேட்கவில்லை. எதில் குறைபாடு? மனம் அதில் ஈடுபடவில்லை. ஆகவே மூன்றாவதாக, மனத்தின் ஈடுபாடு அவசியம்.


முதலில் புறக் கருவிகள் அதாவது பொறிகள்; பின்னர் பொறிகள் உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கின்ற மையமாகிய புலன்; கடைசியாக, புலன்களோடு இணைந்த மனம் இவைமூன்றும் தேவை. மனம் புலனோடு இணைந்திருக்காதபோது, பொறிகளும் புலன்களும் உணர்ச்சிகளை ஏற்கலாம். ஆனாலும் நாம் அதை உணர மாட்டோம். மனமும் தாங்கிச் செல்லும் சாதனம் மட்டுமே, உணர்ச்சியை அது தாங்கிச் சென்று புத்தியின் முன்வைக்க வேண்டும். புத்திதான், தன் முன் வைக்கப்பட்டது என்ன என்பதைத் தீர்மானம் செய்கிறது. இதுகூடப் போதாது. புத்தி எல்லாவற்றையும் தாங்கிச் சென்று, உடலுக்குள், அதிபதியாக சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ஆன்மாவாகிய அரசனின் முன் சமர்ப்பிக்க வேண்டும். இதைச் செய்யலாம், இதைச் செய்யக் கூடாது என்ற கட்டளைகள் அவரிடமிருந்தே பிறக்கின்றன. அந்தக் கட்டளை புத்தி, மனம், புலன்கள் என்று அதே வழியாகப் பொறியை அடைகிறது. அதன்பிறகுதான் செயல் முழுமையாகிறது.


பொறிகள் மனிதனின் புறவுடலில், தூல உடலில் இருக்கின்றன. மனமும் புத்தியும் அப்படியல்ல. அவை இந்துத் தத்துவத்தில் சூட்சும உடல் என்றும் கிறிஸ்தவ மதத் தத்துவத்தில் ஆன்ம உடல் என்றும் அழைக்கப்படுகின்ற உடலில் இருக்கின்றன. இந்தச் சூட்சும உடல், தூல உடலைவிட மிகவும் நுட்பமானது. ஆனால் இது ஆன்மாவல்ல. ஆன்மா, இவை எல்லாவற்றையும் கடந்தது. தூல உடல் சில வருடங்களில் அழிந்துவிடுகிறது. ஒரு சிறு காரணம்கூட அதை அழித்துவிடலாம். சூட்சும உடல் அவ்வளவு சுலபமாக அழியாது. ஆனாலும் சில வேளைகளில் அது சக்தியை இழக்கிறது. மற்ற வேளைகளில் வலிமையாக இருக்கிறது. வயதானவனின் மனம் பலவீனமடைகிறது; உடல் சுறுசுறுப்பாக இயங்கும்போது மனமும் சுறுசுறுப்பாக இயங்குகிறது; பல்வேறு மருந்துகளும் போதைப் பொருட்களும் மனத்தைப் பாதிக்கின்றன; வெளியில் இருக்கும் எல்லாமே அதைப் பாதிக்கின்றன; மனமும் வெளியுலகை எதர்கொள்கிறது-இவையெல்லாம் நமக்குத் தெரியும்.


உடலுக்கு இருப்பது போலவே மனத்திற்கும் எழுச்சியும் வீழ்ச்சியும் உண்டு. ஆகவே மனம் ஆன்மா வல்ல. ஏனெனில் ஆன்மாவுக்கு அழிவோ வீழ்ச்சியோ கிடையாது. அது எப்படி நமக்குத் தெரியும்? இந்த மனத்திற்கும் பின்னால் ஏதோ இருக்கிறது என்பது நமக்கு எப்படித் தெரியும்? சுய ஒளி படைத்த ஞானமும் அறிவின் அடிப்படையும், மந்தமான உணர்வற்றதான ஜடப்பொருளில் இருக்க முடியாது என்பதால்தான். அறிவே உருவான ஜடப்பொருள் என்ற ஒன்று இதுவரை இருந்ததில்லை. எந்த ஜடப்பொருளும் சுயமாக ஒளிர முடியாது. ஜடப்பொருளையெல்லாம் ஒளிரச் செய்வது அறிவுதான். இந்தப் பெரிய கூடம் இங்கே இருப்பதற்கு அறிவுதான் காரணம். ஏதோ அறிவுப் பொருள் இதைக் கட்டியிருக்காவிட்டால் இது இங்கே இருக்க முடியாது. உடலும் சுய ஒளி பெற்றதல்ல. அப்படி இருந்தால் இறந்துபோன உடலிலும் சுய ஒளி இருக்க வேண்டும். மனத்திற்கும் சூட்சும உடலிற்கும் கூடச் சுய ஒளி இல்லை. அவை அறிவின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. சொந்த ஒளி உடைய எதுவும் அழிய முடியாது. வேறு ஒன்றின் ஒளியைப் பெற்றுப் பிரகாசிக்கும் எதன் ஒளியும் நிலையானதல்ல. ஆனால் ஒளியாகவே இருப்பது என்றும் நிலையானது. அதனை வளரவும் தேயவும் செய்ய எதனால் முடியும்? நிலவு வளரவும் தேயவும் செய்கிறது ஏனெனில் அது சூரியனிடமிருந்து பெற்ற ஒளியினால் பிரகாசிக்கிறது. ஓர் இரும்புத் துண்டை நெருப்பில் போட்டால் அது சிவந்து ஜொலிக்கிறது. அந்த ஒளி சுய ஒளி இல்லை என்பதால் விரைவில் மறைந்துவிடும். ஆகவே வேறொன்றிலிருந்து பெற்றுப் பிரகாசிக்கும் ஒளிக்கு அழிவு உண்டு. சுய ஒளிக்கு அழிவில்லை.


எனவே உடலுக்கு, இந்தப் புறக்கூட்டிற்கு சுய ஒளி இல்லை என்பதையும், அதனால் அது தன்னையே அறிந்துகொள்ள முடியாது என்பதையும் நாம் உணர்கிறோம். மனத்தின் விஷயமும் இதுதான். ஏன்? ஏனெனில் மனம் வளரவும் தேயவும் செய்கிறது; சிலவேளைகளில் உற்சாகமாகவும் சிலவேளைகளில் பலவீனமாகவும் இருக்கிறது. எது வேண்டுமானாலும் மனத்தைப் பாதிக்க முடியும். ஆகவே மனத்திற்மூலம் வீசும் ஒளி அதன் சொந்த ஒளியல்ல. அப்படியானால் அந்த ஒளி யாருடையது? அது ஒளியுருவமான ஒன்றிலிருந்துதான் வர வேண்டும். அந்தப் பொருள், தேய்வோ அழிவோ இல்லாததாக, பிரகாசத்தில் கூடுதலோ குறைவோ இல்லாததாக, சொந்த ஒளி உள்ளதாக, ஒளியே உருவானதாகத்தான் இருக்க வேண்டும். ஆன்மாவிற்கு அறிவு இருக்கிறது என்று சொல்வது சரியல்ல; ஆன்மாவே அறிவு வடிவம். ஆன்மாவிற்கு இருப்பு உண்டு என்று சொல்ல முடியாது; ஆன்மாதான் இருப்பு. ஆன்மா ஆனந்தம் அடைகிறது என்று சொல்ல முடியாது; ஆன்மாதான் ஆனந்தம். ஆனந்தம் அடைவது எதுவுமே, அந்த ஆனந்தத்தை வேறு எங்கிருந்தோதான் பெற்றிருக்க வேண்டும். அறிவை உடைய எதுவும் அதை வேறு எங்கிருந்தோதான் பெற்றிருக்க வேண்டும். மற்றவற்றைச் சார்ந்திருக்கும் எதற்குமே சுய இருப்பு இல்லை. எங்கே குணங்கள் இருக்கின்றனவோ, அவை உண்மைப் பொருளின்மீது பிரதிபலிக்கப்பட்டவை. ஆன்மாவின் சாரமே அவை. அறிவு, இருப்பு, ஆனந்தம் என்பவற்றை ஆன்மா குணங்களாகப் பெற்றிருக்கவில்லை.


இது இப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஏன் நாம் முடிவு செய்ய வேண்டும்? அறிவு, இருப்பு, ஆனந்தம் எல்லாம் ஆன்மாவின் சாரம். இவற்றை அது வேறு எங்கிருந்தும் பெறவில்லை என்பதை நாம் ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்? உடலின் ஒளி, மனத்திலிருந்து பெறப்பட்டது போல், ஆன்மாவின் ஒளி, ஆன்மாவின் ஆனந்தம், ஆன்மாவின் அறிவு எல்லாம் வேறு எங்கிருந்தோ பெறப்பட்டது என்று ஏன் சொல்லக் கூடாது? இது போன்ற வாதங்களுக்கு முடிவே இல்லை. ஆன்மா தனது குணங்களை வேறோரிடத்திலிருந்து பெறுகிறது என்றால், அது எங்கிருந்து இவற்றைப் பெறுகிறது என்று இப்படியே முடிவில்லாமல் போய்க் கொண்டுதான் இருக்கும். கடைசியில், சுய ஒளி உள்ள ஒரு பொருளில் போய்தான் இந்த வாதம் முடிந்தாக வேண்டும். எனவே தர்க்கரீதியாக விஷயத்தை முடிப்பதற்கு, சுய ஒளி உள்ள பொருள் இருக்கிறது என்ற நிலை வந்தவுடன் வாதத்தை நிறுத்திக்கொள்வதுதான் ஒரே வழி.


ஆகவே மனிதன் என்பவன், முதலில் வெளிப்போர்வையாகிய தூல உடல்; இரண்டாவது மனம், புத்தி, நான்-உணர்வு இவற்றைக் கொண்ட சூட்சும உடல் இவற்றால் ஆக்கப்பட்டவன் என்பதைக் காண்கிறோம். இவற்றிற்குப் பின்னால்தான் மனிதனின் உண்மையான ஆன்மா இருக்கிறது. தூல உடலின் குணங்களும் சக்திகளும் மனத்திலிருந்து பெறப்பட்டவை. மனம், அதாவது சூட்சும உடல் சக்திகளையும் ஒளியையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மாவிடமிருந்து பெறுகிறது.


இந்த ஆன்மாவின் இயல்பைப் பற்றிய பல கேள்விகள் இப்போது எழுகின்றன. ஆன்மா சுய ஒளி பெற்றது; அறிவு, இருப்பு, ஆனந்தம் இவற்றைச் சாரமாகக் கொண்டது; அதாவது சச்சிதானந்த இயல்புடையது என்ற வாதத்திலிருந்து ஆன்மாவின் இருப்பு நிரூபிக்கப்பட்டால், ஆன்மா படைக்கப்பட்டதாக இருக்க முடியாது என்பது உறுதியாகிறது. சொந்த ஒளி உள்ள, பிற எதையும் சாராத எந்தப் பொருளும், வேறு எதிலிருந்தும் தோன்றியதாக இருக்க முடியாது. அது எப்போதும் இருந்தது. அது இல்லாத காலமே இல்லை. ஆன்மா இல்லையென்றால் காலம் எப்படி இருக்க முடியும்? காலம் ஆன்மாவில்தான் இருக்கிறது. ஆன்மா தனது சக்திகளை மனத்தின்மீது பிரதிபலிக்கச் செய்து, மனம் சிந்திக்கத் தொடங்கும் போதுதான் காலம் பிறக்கிறது. ஆன்மா இல்லையென்றால் நிச்சயமாக எண்ணம் எதுவும் இல்லை. எண்ணம் இல்லாமல் காலம் இல்லை. காலமே ஆன்மாவில் அடங்கியதாக இருக்கும்போது ஆன்மா காலத்தில் இருப்பதாக எப்படிச் சொல்ல முடியும்? ஆன்மா, பிறப்பு இறப்பற்றது. ஆனால் அது இந்தப் பல்வேறு நிலைகளின் வழியாகவும் செல்கிறது; தாழ்ந்த நிலையிலிருந்து சிறிதுசிறிதாகத் தன்னை வெளிப்படுத்தியவாறு உயர்ந்த நிலைக்குச் செல்கிறது; மனத்தின்மூலமாக உடலை இயக்கி, தன் மகிமையை வெளிப்படுத்துகிறது; உடலின் மூலமாக வெளி உலகத்தைப் புரிந்து கொள்கிறது; ஓர் உடலை எடுத்துக் கொண்டு அதைப் பயன்படுத்துகிறது; அந்த உடல் நலிந்து போகும்போது வேறோர் உடலை எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு இது நடந்து கொண்டிருக்கிறது.


இந்த இடத்தில் ஒரு சுவாரஸ்யமான கேள்வி எழுகிறது. பொதுவாக மறுபிறப்பு என்று சொல்லப்படுவதைப் பற்றியது அது. இந்தக் கருத்து, சிலவேளைகளில் மக்களை வெகுவாகப் பயமுறுத்துகிறது. இதைப் பற்றிய மூடநம்பிக்கைகளோ மிகவும் அதிகமாக இருக்கிறது. சிந்தனையாளர்கள்கூடத் தாங்கள் சூன்யத்திலிருந்து தோன்றியதாகவும், அதேவேளையில் இனிமேல் எப்போதும் நிலையாக இருப்போம் என்றும் தர்க்கம் செய்து நிரூபிக்க முயல்கிறார்கள். சூன்யத்திலிருந்து தோன்றியவர்கள் சூன்யத்திற்குத்தான் திரும்பிப்போக வேண்டும். நீங்களும் சரி, நானும்சரி, ஒருவருமே சூன்யத்திலிருந்து தோன்றவில்லை. சூன்யத்திற்குத் திரும்பிப் போகப் போவதும் இல்லை. நாம் எப்போதுமே இருக்கிறோம்; இருப்போம். பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் நம்மை அழித்து, சூன்யத்திற்கு அனுப்ப முடியாது. இந்த மறுபிறப்புக் கொள்கையைப் பார்த்து, நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அது மட்டுமல்ல, மனிதகுலத்தின் நீதிநெறியும் நல்லொழுக்கமும் நிலைப்பதற்கு இந்தக் கொள்கை மிகவும் அவசியம். சிந்திக்கும் திறன் படைத்தவர்கள் வர முடிந்த தர்க்கரீதியான முடிவு இது மட்டுமே.


இனிமேல் என்றென்றைக்கும் நாம் இருக்கப் போவது உண்மையானால், இதற்கு முன்னாலும் எப்போதும் நாம் இருந்திருக்க வேண்டும். வேறுவிதமாக இருக்க முடியாது. இந்தக் கொள்கையை எதிர்த்து எழும் சில ஆட்சேபங்களுக்கு நான் பதில் சொல்ல முயல்கிறேன். நம்மில் பலருக்கு இந்தக் கேள்விகளே முட்டாள்தனமாக இருக்கும். இருந்தாலும் அவற்றிற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏனென்றால், சிலவேளைகளில், ஆழ்ந்த சிந்தனையாளர்களுக்கூட முட்டாள்தனமான கருத்துக்கள் எழுவதுண்டு. எவ்வளவு முட்டாள்தனமான, தவறான கருத்துக்களையும் ஆதரிக்கத் தத்துவ ஞானிகள் இருந்திருக்கிறார்கள் என்று யாரோ நன்றாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.


நமக்கு ஏன் முற்பிறவி நினைவு வருவதில்லை என்பதே முதல் ஆட்சேபம். இந்த வாழ்க்கையிலேயே பல வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்கள் நினைவில் இருக்கின்றனவா? குழந்தைகளாக இருந்தபோது என்ன செய்தோம் என்பது நம்மில் எத்தனைபேருக்கு நினைவிருக்கிறது? நம்மில் யாருக்குமே நமது குழந்தைப் பருவம் நினைவில் இல்லை. நம்முடைய இருப்புக்கு நினைவே ஆதாரம் என்றால் இந்த வாதத்தின்படி நமக்குக் குழந்தைப் பருவமே இருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நம் குழந்தைப் பருவம்தான் நம் நினைவில் இல்லையே! நம் இருப்புக்கு நம் நினைவே ஆதாரம் என்று சொல்வது கலப்படமற்ற முட்டாள்தனம். இறந்தகாலத்தை நாம் ஏன்தான் நினைக்க வேண்டும்? அந்தப் பழைய மூளை சிதறுண்டு போய்விட்டது. இப்போது நமக்கு இருப்பது புதிய மூளை. நமது கடந்தகால சம்ஸ்காரங்களின் மொத்தமே இந்தப் பிறவியில் புது மூளையாக உருவெடுத்திருக்கிறது. நமது மனம், இந்தப் புதிய மூளையுடன் தான் புதிய உடலை எடுத்திருக்கிறது.


என்னுடைய எல்லையற்ற முற்பிறவிகளின் பலனே இப்போது இங்கே நின்று கொண்டிருக்கும் நான். என் முற்பிறவிகளை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? உண்மையை நேருக்குநேர் கண்ட ஒரு பழங்கால ரிஷியோ, முனிவரோ ஏதாவது சொன்னால், உடனே தற்கால மக்கள், ஓ, அவர் ஒரு முட்டாள்! என்று கூறிவிடுவார்கள். பெயரை மட்டும் மாற்றுங்கள், ஹக்ஸ்லி சொன்னார், டிண்டால் சொன்னார் என்றால் அது உண்மையாகத் தான் இருக்க வேண்டும்; அது வேத வாக்கு. பழைய மூடநம்பிக்கைகளுக்குப் பதிலாகப் புதிய மூட நம்பிக்கைகள்; பழங்கால மத ஆச்சாரியர்களுக்குப் பதிலாக புதிய விஞ்ஞான ஆச்சாரியர்கள், அவ்வளவுதான். ஆகவே முற்பிறவி நினைவைப் பற்றிய ஆட்சேபம் பயனற்றது என்பது தெரிகிறது. மறுபிறவிக் கொள்கையை எதிர்த்து எழும் முக்கியமான ஆட்சேபம் இது ஒன்றுதான்.


முற்பிறவி நினைவுகள் இருக்க வேண்டும் என்பது மறுபிறவிக் கொள்கைக்கு அவசியமில்லை என்று கண்டோம். ஆனாலும் இந்த முற்பிறவி நினைவுகள் சிலவேளைகளில் வருகின்றன என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. எந்தப் பிறவியில் நாம் முக்தர்களாக ஆகிறோமோ, அந்தப் பிறவியில், நம்முடைய எல்லா முற்பிறவி நினைவுகளும் நம் ஒவ்வொருவருக்கும் வரும். அப்போதுதான் இந்த உலகமே ஒரு கனவு என்பதை நாம் உணர்வோம். அப்போதுதான் உலகமே ஒரு நாடகமேடை, நாமெல்லாம் அதில் நடிக்கும் நடிகர்கள் என்பதை நம் அந்தராத்மாவில் உணர்வோம். அப்போதுதான் பற்றின்மை என்ற கருத்து நம்மிடம் இடிபோல் உறுதியாக நிலைபெறும். அப்போது தான் வாழ்க்கையின் இன்பங்களுக்கான தாகம், உலகின் மீதும் வாழ்வின்மீதும் நமக்குள்ள மோகம் எல்லாம் என்றென்றைக்குமாக மறையும். இவற்றையெல்லாம் எத்தனைமுறை அனுபவித்திருக்கிறோம், எத்தனைகோடி தந்தையர், அன்னையர், மகன்கள், மகள்கள், கணவர்கள், மனைவிகள், உற்றார், உறவினர், பணம், பலம் எல்லாவற்றையும் பெற்று வாழ்ந்திருக்கிறோம் என்பது அப்போதுதான் வெட்டவெளிச்சமாகத் தெரியும். அவையெல்லாம் வந்துவந்து போய்க் கொண்டிருந்தன. எவ்வளவு தடவை நாம் வாழ்க்கை அலையின் உச்சியில் இருந்திருக்கிறோம்! எத்தனை தடவை நம்பிக்கையை இழந்து வாழ்க்கையின் முடிவுக்கே சென்றதுபோல் தவித்திருக்கிறோம். இதெல்லாம் நினைவு வரும்போதுதான் உலகம் நம்மை வெறுப்போடு பார்த்தாலும் நெஞ்சை நிமிர்த்தி நாம் புன்னகை செய்வோம். அப்போதுதான் தைரியமாக எழுந்து நின்று, மரணமே, உன்னைப்பற்றிக்கூட எனக்குக் கவலை கிடையாது, உன்னால் என்னைப் பயமுறுத்த முடியாது என்று கூறுவோம். இந்த நிலை எல்லோருக்கும் வரும்.


மறுபிறவிக் கொள்கையை அறிவுபூர்வமாக நிரூபிக்க முடியுமா? இதுவரை நாம் எதிர்மறையாக வாதம் செய்து வந்தோம். இந்தக் கொள்கையின் எதிர்வாதங்கள் பயனற்றவை என்று நிரூபித்துவிட்டோம். ஆனால் நேர்முகமான நிரூபணம் உண்டா? உண்டு. மிகவும் உறுதியான வாதங்கள் உண்டு. அறிவை வளர்த்துக் கொள்வதில், மனிதர்களுக்கிடையில் உள்ள வேறுபாட்டை இந்த மறுபிறவிக் கொள்கை மட்டுமே விளக்க முடியும். முதலில் நாம் அறிவைப் பெறும் வழிபற்றிப் பார்ப்போம். நான் தெருவில் போய்க் கொண்டிருக்கும்போது ஒரு நாயைப் பார்க்கிறேன், அது நாய் என்பது எனக்கு எப்படித் தெரியும்? நான் என் மனத்தில் அதைத் தேடுகிறேன். எனது கடந்தகால அனுபவங்களெல்லாம், தனித்தனி அறைகளில் வரிசைப்படுத்தப்பட்டது போல், மனத்தில் ஒழுங்காக வரிசைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. ஒரு புதிய அனுபவம் கிடைக்கும்போது, உடனே அதை என் மனத்திலுள்ள பழைய அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். இதே மாதிரி அனுபவம் ஏற்கனவே என் மனத்தில் இருந்தால், உடனே இரண்டையும் பொருத்திப் பார்த்துத் திருப்தியான முடிவுக்கு வருகிறேன். ஏற்கனவே உள்ள அனுபவங்களோடு புதிய அனுபவம் பொருந்துவதால், நான் பார்ப்பது நாய் என்பதை அறிகிறேன். புதிய அனுபவம் ஏற்கனவே உள்ள பழைய அனுபவம் எதனோடும் பொருந்தாவிட்டால், எனக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. பழைய, புதிய அனுபவங்கள் பொருந்தாததால் ஏற்படும் அதிருப்தி நிலையை அறியாமை என்கிறோம். இரண்டு அனுபவங்களும் பொருந்தும்போது ஏற்படும் திருப்தி நிலையை அறிவு என்கிறோம்.


ஓர் ஆப்பிள் கீழே விழுந்தபோது, மனிதன் திருப்தி அடையவில்லை. பிறகு, எல்லா பழங்களும் கீழே விழுகின்றன என்று படிப்படியாகக் கண்டறிந்து, அவ்வாறு செய்யும் சக்தியை புவியீர்ப்புச் சக்தி என்று அழைத்தான். ஆகவே பழைய அனுபவங்கள் இல்லாமல் புதிய அனுபவம் எதுவும் இருக்க முடியாது, ஏனெனில் புதிய அனுபவத்தைப் பொருத்திப் பார்ப்பதற்கு பழைய அனுபவங்கள் எதுவும் இல்லை. சில ஐரோப்பியத் தத்துவ மேதைகள் கூறுவதுபோல், ஒரு குழந்தை பழைய அனுபவம் எதுவுமே இல்லாமல் உலகில் பிறக்குமானால், அந்தக் குழந்தைக்கு அறிவு வளர்ச்சியே இருக்காது. ஏனென்றால் புதிய அனுபவம் எதையும் பொருத்திப் பார்ப்பதற்கு அதனிடம் பழைய அனுபவம் எதுவும் இல்லையே! அறிவு வளர்ச்சிக்கான ஆற்றல் மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதைக் காண்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஏற்கனவே பெற்றுள்ள அனுபவ அறிவுடன்தான் பிறக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது.

அறிவை, அனுபவம் மூலமாக மட்டுமே பெற முடியும். வேறு வழியே இல்லை. இந்தப் பிறவியில் அந்த அனுபவத்தைப் பெற்றிருக்காவிட்டால், வேறு பிறவியில் பெற்றிருக்க வேண்டும். எங்கும் மரண பயம் காணப்படுகிறதே, அது எப்படி? முட்டையிலிருந்து கணநேரத்திற்கு முன்னர்தான் வெளிவந்த கோழிக்குஞ்சு, பருந்தைக் கண்டவுடன் பயந்து நடுங்கித் தாயிடம் ஓடுகிறது. இதற்குப் பழைய விளக்கம் ஒன்று இருக்கிறது. (விளக்கம் என்ற உயர்ந்த சொல்லை இதற்கு நான் பயன்படுத்துவதே தவறு). அதை இயல்புணர்ச்சி என்கிறார்கள். முட்டையிலிருந்து அப்போதுதான் வெளிவந்த கோழிக்குஞ்சுக்கு மரணபயம் ஏற்படச் செய்தது எது? கோழியால் அடைக்காக்கப்பட்டு, பொரித்து, அப்போதுதான் வெளிவந்த வாத்துக்குஞ்சு தண்ணீரைக் கண்டவுடன், அதில் குதித்து, நீந்தத் தொடங்குகிறதே, அது எப்படி? அது இதற்குமுன் நீந்தியதில்லை, வேறு ஏதாவது நீந்துவதையும் பார்த்ததில்லை. மனிதர்கள் அதை இயல்புணர்ச்சி என்கிறார்கள் . இது பெரிய வார்த்தைதான். ஆனால் இந்த வார்த்தை புதிதாக எதையும் நமக்கு விளக்கவில்லை.


இந்த இயல்புணர்ச்சி என்பதை நாம் சிறிது ஆராய்வோம். ஒரு சிறுமி பியானோ வாசிக்க ஆரம்பிக்கிறாள். முதலில் சிலகாலம் அவள் மிகவும் கவனமாக ஒவ்வொரு கட்டையிலும் கைவைத்துப் பழக வேண்டும். வருடக்கணக்காக வாசித்துப் பழகிய பிறகோ பியானோ வாசிப்பது ஏறக்குறைய அனிச்சைச் செயலாகி விடுகிறது; இயல்பாக வந்து விடுகிறது. முதலில் உணர்வுபூர்வமாகச் செய்ததை, பின்னர் எந்திரகதியில் செய்ய முடிகிறது. நிரூபணம் இன்னும் முழுமையாகவில்லை. ஒருபாதிக்கு விளக்கம் தேவைப்படுகிறது. அதாவது, அனிச்சையான இயல்புணர்ச்சிச் செயல்கள் எல்லாவற்றைமே மனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்பதே அது. உடம்பிலுள்ள ஒவ்வொரு தசையையும் சித்தத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். இது எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த விஷயம்தான். நாம் இயல்புணர்ச்சி என்று சொல்வது, மனத்திற்குக் கட்டுப்பட்ட செயல்களின் வீழ்ச்சியே என்பதை நாம் இரண்டு விதமாக நிரூபித்து விட்டோம். இதே கருத்தைப் படைப்பு முழுவதற்கும் பொருத்திப் பார்க்கும்போது, இயற்கை எங்கும் ஒரே சீராக இருக்குமானால், மனிதனிடமும் வேறு மிருகங்களிடமும் காணப்படும் இயல்புணர்ச்சி என்பது சுயேச்சையின் வீழ்ச்சியே என்பது தெளிவாகிறது.


ஒவ்வோர் ஒடுக்கத்திற்கும் முன்பு ஒரு விரிவு இருக்க வேண்டும், ஒவ்வொரு விரிவுக்கும் முன்பு ஓர் ஒடுக்கம் இருக்க வேண்டும் என்ற விதியை, பேரண்டம் என்ற தலைப்பின் கீழ் நாம் பார்த்தோம். அந்த விதியை இங்கே பொருத்திப் பார்த்தால், பகுத்தறிவின் ஒடுக்கமே இயல்புணர்ச்சி என்பதைக் காண்கிறோம். எனவே மனிதர்களிலோ மிருகங்களிலோ நாம் காணும் இயல்புணர்ச்சி என்பது மனத்திற்குக் கட்டுப்பட்ட செயல்களின் வீழ்ச்சியும் ஒடுக்கமுமே என்பது தெளிவு. இனி, அனுபவம் இல்லாமல் மனத்திற்குக் கட்டுப்பட்ட செயல்கள் இல்லை. அறிவுக்கு அனுபவமே காரணம். பிறக்கும்போதே எல்லா உயிர்களுக்கும் அந்த அறிவு இருக்கிறது. மரணபயம், வாத்துக் குஞ்சுக்குப் பிறந்தவுடனேயே நீந்தத் தெரிவது, மனிதர்களின் அனிச்சைச் செயல்கள் போன்ற எல்லா இயல்புணர்ச்சிகளும் முன் அனுபவத்தின் விளைவுகளே.


இதுவரை நாம் தெளிவாக ஆராய்ந்து வருகிறோம்; இதுவரை தற்கால விஞ்ஞானமும் நமக்கு ஒத்துப்போகிறது. ஆனால் இங்கே இன்னொரு பிரச்சினை எழுகிறது. தற்கால விஞ்ஞானிகள் ஆராய்ச்சியின்மூலம் புராதன ரிஷிகளின் கருத்துக்களுக்கே திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு வந்ததுவரை இரண்டு கருத்துக்களும் முற்றிலுமாக ஒத்துப்போகின்றன. ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு மிருகமும் முன் அனுபவத்துடனேயே பிறப்பதையும், மனத்தின் எல்லா இயக்கங்களுக்கும் முன் அனுபவமே காரணம் என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அந்த அனுபவம் ஆன்மாவிற்குச் சொந்தம் என்று சொல்வதில் என்ன பயன்? அது உடலுக்கு, உடலுக்கு மட்டுமே சொந்தம் என்று ஏன் சொல்லக்கூடாது? அது ஏன் பரம்பரைக் குணமாக இருக்கக்கூடாது? என்று அவர்கள் கேட்கிறார்கள். கடைசிக் கேள்வி இதுதான்! நாம் பிறக்கும்போது நம்முடன் பிறக்கும் அனுபவங்கள், நம் முன்னோர்களுடைய அனுபவங்களின் மொத்தப் பலனே என்று ஏன் சொல்லக் கூடாது? முதல் உயிரணுவிலிருந்து முழுமையடைந்த மனிதன் வரை பெற்ற அனுபவங்களின் மொத்தத் தொகுதி நம்முள் இருக்கிறது. அது பரம்பரையாக ஒவ்வோர் உடல்வழியாகவும் தொடர்ச்சியாக வந்துள்ளது. இதை ஏற்றுக்கொள்வதில் என்ன சிக்கல்?


கேள்வி நன்றாகத்தான் இருக்கிறது. பரம்பரை குணக்கருத்தை நாம் ஓரளவு ஒப்புக்கொள்ளவே செய்கிறோம். ஆனால் எதுவரை ஒப்புக்கொள்கிறோம்? மூலப்பொருள் அதாவது உடல் என்பது பரம்பரைகுணத்திற்கு உட்பட்டது என்பதுவரைதான். உடல்மட்டும்தான் பரம்பரையாக வருகிறது. அதாவது நம்முடைய முன்வினைப் பயனால், குறித்த ஓர் உடலில் நாம் பிறக்கிறோம். நம்முடைய ஆன்மாவைத் தங்கள் குழந்தையாகப் பெறுவதற்குத் தகுதியுள்ள பெற்றோர்கள் அந்த உடலுக்கான உருவத்தை மட்டுமே கொடுக்கிறார்கள்.


மன அனுபவம் ஜடப்பொருளில் பதிந்திருக்க முடியும், ஒடுங்கியிருக்க முடியும் என்று, நிரூபணமற்ற வினோதமான ஒரு கருத்தைப் பரம்பரைகுணக் கொள்கை நம் முன் வைக்கிறது. நான் உங்களைப் பார்க்கும்போது, என் மனமாகிய ஏரியில் ஓர் அலை எழுகிறது. பின்னர் அது அடங்கிவிடுகிறது; ஆனால் நுட்பமான உருவத்துடன் சமஸ்காரமாக என் மனத்தில் பதிகிறது. உடலாகிய பொருளில் ஒரு பவுதீகப் பதிவு இருக்க முடியும், அதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் அழியும் இயல்புடைய உடலில் மனப்பதிவு இருக்க முடியும் என்று எப்படி ஊகிக்க முடியும்? மனப்பதிவை எது எடுத்துச் செல்கிறது? சரி, மனப்பதிவு ஒவ்வொன்றும் உடலில் பதிந்திருக்க முடியும் என்றே வைத்துக் கொள்வோம். முதல் மனிதனிலிருந்து என் தந்தைவரை ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட ஒவ்வொரு பதிவும் என் தந்தையின் உடலில் இருந்ததாகவும் வைத்துக் கொள்வோம். அது என் தந்தையிடமிருந்து எனக்கு எப்படி வந்தது? உயிரணுவின் மூலமாகவா? அது எப்படி இருக்க முடியும்? ஏனென்றால் தந்தையின் உடல் அப்படியே குழந்தைக்கு வருவதில்லை. ஒரே தாய்தந்தையருக்குப் பல குழந்தைகள் இருக்கலாம். அப்படியானால் பரம்பரைகுணக் கொள்கையின்படி பதிவும் பதிக்கப்பட்ட பொருளும் ஒன்று என்றால், ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் தங்கள் பதிவில் ஒரு பகுதியைப் பெற்றோர்கள் இழக்க வேண்டும். அல்லது, பெற்றோர்கள் தங்கள் பதிவுகள் முழுவதையும் முதல் குழந்தைக்குக் கொடுத்துவிட்டால் முதல் குழந்தை பிறந்தபிறகு பெற்றோர்களின் மனம் சூன்யப் பிரதேசமாகத் தான் இருக்க வேண்டும்.


சரி. இதுவரை கடந்து சென்ற எல்லா காலங்களின் பதிவுகளும் உயிரணுவில் இருந்தால், அது எங்கே இருக்கிறது? எப்படி இருக்கிறது? அது சாத்தியமில்லாத ஒன்று. அந்த உயிரணுவில், எங்கே, எப்படி அந்தப் பதிவுகள் இருக்கின்றன என்பதை உடலியல் வல்லுனர்கள் நிரூபிக்கும் வரையிலும், உடலிலுள்ள உயிரணுவில் மனப்பதிவு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்வதன் பொருள் என்ன என்பதை அவர்கள் விளக்கும்வரையிலும், அவர்கள் சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது. ஆகவே அனுபவப் பதிவு மனத்தில் இருக்கிறது, மனமே மறுபடியும் மறுபடியும் பிறக்கிறது, தனக்கு மிகவும் பொருத்தமான உடலை அது பயன்படுத்துகிறது. அத்தகைய ஓர் உடல் கிடைக்கும்வரை அது காத்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இதை நாம் புரிந்து கொள்கிறோம்.


ஆன்மாவிற்குப் பொருத்தமான உடலைக் கொடுக்கும்வரை, பரம்பரைகுணக் கொள்கை சரியாக இருக்கிறது. ஆனால் மனம் உடலுக்கு உடல் தாவிக்கொண்டே இருக்கிறது; அதன் பயணம் தொடர்கிறது. நான் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும் செய்யும் ஒவ்வொரு செயலும் மனத்தில் நுட்பமான உருவங்களாகப் பதிந்திருக்கின்றன. வேளை வாய்க்கும்போது அவை வெளிவந்து புதிய உருவம் தாங்குகின்றன. நான் உங்களைப் பார்க்கும்போது என் மனத்தில் ஓர் அலை எழுகிறது. அது ஆழமாகப் பாய்ந்து சென்று மிகமிக நுட்பமாக மாறுகிறது; ஆனால் அழிவதில்லை. நினைவு வடிவாக மறுபடியும் எழுவதற்கு அது தயாராக இருக்கிறது. இந்தப் பதிவுகளெல்லாம் என் மனத்தில் இருக்கின்றன. நான் இறக்கும்போது இந்தப்பதிவுகளின் ஒட்டுமொத்தப்பலன் என்னில் எஞ்சி நிற்கும். இங்கே ஒரு பந்து இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் கையில் ஒரு மட்டையை எடுத்துக்கொண்டு இந்தப்பந்தை அடிப்பதாக வைத்துக் கொள்வோம். பந்து இந்த அறைக்குள் அங்குமிங்கும் பறக்கிறது, கதவை அடைந்துவிட்டால் வெளியே பறக்கிறது. அது தன்னுடன் எதை எடுத்துக் கொண்டு போகிறது? அது வாங்கிய அடிகளின் மொத்தப் பலனையே, பந்து எங்கே போக வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது இதுவே.


உடல் அழியும்போது ஆன்மாவிற்கு வழிகாட்டுவது எது? அது முதலிலிருந்தே செய்த செயல்கள், நினைத்த எண்ணங்கள் ஆகியவற்றின் மொத்தப் பலனே. இந்தப் பலன், மனம் இன்னும் அனுபவம் பெறுவதற்காகப் புதிய உடலை எடுக்கும் அளவுக்கு இருந்தால், அந்த உடலுக்குத் தேவையான மூலப்பொருளைத் தருவதற்குத் தயாராக இருக்கும் பெற்றோர்களை நாடிச் செல்கிறது. இவ்வாறு அது ஓர் உடலை விட்டு மற்றோர் உடலுக்குத் தாவுகிறது. சிலவேளைகளில் ஏதாவது ஒரு சொர்க்கத்திற்குப் போகிறது. திரும்பவும் உலகிற்கு வந்து, மனிதனாகவோ மிருகமாகவோ உருவெடுக்கிறது. இவ்வாறு, முழு அனுபவம் பெறும்வரையிலும் வட்டத்தை நிறைவு செய்யும் வரையிலும் ஆன்மா இயங்கிக்கொண்டே இருக்கிறது. அதன் பிறகுதான், அது உண்மை இயல்பை அறிகிறது தான் யார் என்பதை உணர்கிறது. அப்போது அதன் அறியாமை மறைகிறது; அதன் ஆற்றல்கள் வெளிப்படுகின்றன; அது நிறைநிலையை அடைகிறது.


அதன்பிறகு ஆன்மா தூல உடலின்மூலம் இயங்க வேண்டியதில்லை; சூட்சுமமான அல்லது மனம் போன்ற நுட்பமான உடல்கள் மூலமாக இயங்கும் அவசியமும் இல்லை. அது தன் ஒளியிலேயே ஒளிர்கிறது; பரிபூரண சுதந்திரம் பெற்றுவிடுகிறது. இனி அது பிறக்க வேண்டியதில்லை, இறக்கவும் வேண்டியதில்லை. இதைப் பற்றிய விளக்கங்களுக்கு நாம் இப்போது போக வேண்டாம்.

மறுபிறவி பற்றிய மற்றோர் அம்சத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். மனித ஆன்மாவின் சுதந்திர நிலையைப் பற்றிய கொள்கையே அது. சொந்த பலவீனங்கள் எல்லாவற்றையும் வேறொருவரின் மீது சுமத்துவது பொதுவான மனித இயல்பு. மறுபிறவிக் கொள்கை ஒன்றுதான் இந்தத் தவறைச் செய்வதில்லை. நாம் நம்முடைய தவறுகளைப் பார்ப்பதில்லை. கண்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள முடியாது, பிறர் ஒவ்வொருடைய கண்களையும் அதனால் பார்க்க முடியும். நமது குற்றங்களைச் சுமத்துவதற்கு வேறொருவர் இருக்கும் வரை நாம் நம்முடைய பலவீனங்களையும் தவறுகளையும் மெதுவாகத்தான் புரிந்து கொள்கிறோம். மனிதர்கள் பொதுவாகத் தங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீதே தங்கள் குற்றங்களைச் சுமத்துகிறார்கள். அது முடியாவிட்டால் கடவுள்மீது சுமத்துகிறார்கள். அல்லது ஒரு பிசாசைக் கற்பனை செய்து, அதன்மீது சுமத்துகிறார்கள். இல்லாவிட்டால் விதி என்பார்கள். விதி எங்கே இருக்கிறது? விதியாக இருப்பது யார்? நாம் விதைத்ததைத்தான் நாம் அறுக்கிறோம். நம்விதிக்கு நாமே காரணம். பழியாகட்டும், புகழாகட்டும், அதற்கு வேறு யாரும் பொறுப்பல்ல.

காற்று வீசுகிறது; பாய்மரம் விரித்த கப்பல்கள் காற்றின் துணையுடன் முன்னேறுகின்றன. பாயைச் சுருட்டி வைத்திருக்கும் கப்பல்களுக்குக் காற்றின் துணை கிடைப்பதில்லை. அது காற்றின் குற்றமா? கடவுளின் கருணை என்னும் காற்று, இரவுபகலாக இடையீடின்றி வீசிக்கொண்டிருக்கிறது. அந்தக் கருணை அழிவற்றது. நம்மில் சிலர் சந்தோஷமும் சிலர் துன்பமும் அடைவது கடவுளின் குற்றமா? நாமே நம் விதியை உருவாக்குகிறோம். வலியவர், எளியவர் இருவருக்கும் இறைவனின் சூரியன் ஒரே மாதிரிதான் ஒளி வீசுகிறான். புண்ணியவான்களுக்கும் பாவிகளுக்கும் அவரது காற்று ஒரே மாதிரிதான் வீசுகிறது.

கடவுள் எல்லோருக்கும் தலைவர், எல்லோருக்கும் தந்தை. அவர் கருணை வடிவினர். பாரபட்சமற்றவர். எல்லாவற்றையும் படைத்து எல்லாவற்றிற்கும் அதிபதியாக இருக்கின்ற அவர் நமது வாழ்க்கையின் அற்ப விஷயங்களை நாம் பார்ப்பது போலவா பார்ப்பார்! கடவுளைப்பற்றிய என்ன அற்பத்தனமான கருத்து! நாம் சிறிய நாய்க்குட்டிகளைப்போல் வாழ்வு, சாவு என்ற போராட்டத்தில் இங்கே ஈடுபட்டிருக்கிறோம். கடவுளும் இந்தப் பிரச்சினைக்கு நம்மைப்போல் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார் என்று முட்டாள்தனமாக நினைக்கிறோம். நாய்க்குட்டிகளின் விளையாட்டைப்பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும்.

கடவுளின்மீது பழியைப் போட்டு, தண்டிப்பவராகவோ பரிசளிப்பவராகவோ அவரை உருவகப்படுத்துவதற்கான நமது முயற்சிகளெல்லாம் வெறும் முட்டாள்தனம். கடவுள் யாரையும் தண்டிப்பதும் இல்லை, யாருக்கும் பரிசளிப்பதுமில்லை. எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும், எந்தச் சந்தர்ப்பத்திலும், உறுதியாக, நிச்சயமாக எல்லோருக்கும் உதவக் காத்திருப்பது கடவுளின் கருணை. அதை எப்படித் துணைகொள்கிறோம், பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. மனிதர்களையோ கடவுளையோ வேறு யாரையுமோ பழி சொல்லாதீர்கள். துன்புற நேருமானால் பழியை நம் மீதே சுமத்திக் கொள்ள வேண்டும். நம்மை உயர்த்திக் கொள்ள முயல வேண்டும்.


பிரச்சினைக்கு இது ஒன்றுதான் தீர்வு. அந்தோ, பிறர்மீது பழி போடுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். பொதுவாக அவர்கள் துன்பப்படுபவர்களாக, நம்பிக்கை இழந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய தவறுகளின் மூலமாகவே இந்தக் கஷ்டத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆனால் பிறர்மீது பழிபோடுகிறார்கள். இது அவர்களின் நிலைமையை மாற்றுவதில்லை, அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவுவதில்லை, பிறர்மீது பழிபோட முயல்வது அவர்களை மேலும் பலவீனப்படுத்துகிறது. ஆகவே உங்கள் தவறுகளுக்குப் பிறரைப் பழி சொல்லாதீர்கள். சொந்தக் காலிலேயே நில்லுங்கள், பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.


நான் அனுபவிக்கும் இந்தத் துன்பத்திற்கு நானே காரணம். ஆகவே நானேதான் இதற்குப் பரிகாரமும் தேடிக் கொள்ள வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நான் படைத்ததை நானேஅழிக்க முடியும். மற்றவர்கள் படைத்ததை என்னால் அழிக்க முடியாது. ஆகவே எழுந்திருங்கள், உறுதியுடனும் தைரியத்துடனும் இருங்கள். பொறுப்பு முழுவதையும் உங்கள் தோளிலேயே சுமந்துகொள்ளுங்கள். உங்கள் விதிக்கு நீங்களே காரணம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்புகின்ற வலிமையும் உதவியும் உங்களுள்ளேயே இருக்கின்றன. உங்கள் எதிர்காலத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். போனது போகட்டும். எல்லையற்ற எதிர்காலம் உங்கள் முன்னே இருக்கிறது. உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வோர் எண்ணமும் ஒவ்வொரு செயலும் அதற்கு ஏற்ற பலனை உண்டாக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். தீய செயல்களும் தீய எண்ணங்களும் புலிகளைப் போல் நம்மீது பாயத் தயாராக இருக்கின்றன. ஆனால் அதோடுகூடவே நல் எண்ணங்களும் நற்செயல்களும் பல்லாயிரக்கணக்கான தேவ தூதர்களைப் போல் நம்மைக் காப்பாற்ற எப்போதும் தயாராக இருக்கின்றன என்பதையும் நம்புங்கள். உத்வேகத்துடன் செயல்படுங்கள்.

ஆன்மா

ஆன்மா

ஆன்மா

பேராசிரியர் மாக்ஸ்முல்லரின் வேதாந்தத் தத்துவம் பற்றிய மூன்று சொற்பொழிவுகள் என்ற பிரபல நூலை உங்களுள் பலர் படித்திருப்பீர்கள். அதே விஷயத்தைப் பற்றி பேராசிரியர் டய்சன் ஜெர்மானிய மொழியில் எழுதிய நூலை சிலர் படித்திருக்கலாம். இந்திய மதச் சிந்தனையைப்பற்றி மேலை நாடுகளில் எழுதியும் கற்பித்தும் வருபவற்றுள் ஒரு நெறி முக்கியமாகக் கையாளப்படுகிறது. அது அத்வைதம். வேதங்களின் போதனைகள் முழுவதும் அந்த ஒரு நெறியிலேயே அடங்கி விட்டது என்றும் கருதப்படுகிறது. ஆனால் இந்தியச் சிந்தனையில் பல நிலைகள் இருக்கின்றன. மற்ற நிலைகளோடு ஒப்பிட்டால், அத்வைதம் சிறுபான்மை நெறி என்றே சொல்ல வேண்டும்.

மிகப் பழங்காலத்திலிருந்தே இந்தியச் சிந்தனையில் பல பிரிவுகள் இருந்திருக்கின்றன. இன்ன பிரிவினர் இன்ன கோட்பாட்டை நம்ப வேண்டும் என்றெல்லாம் வகுத்துத் தருவதற்கான அத்தாட்சி பெற்ற எந்தச் சங்கமோ அமைப்போ இல்லாததால், மக்கள் தங்களுக்குப் பிடித்த மதப் பிரிவைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், தங்களுக்கென்று சொந்தமாக ஒரு தத்துவத்தையும் மதப்பிரிவையும் ஏற்படுத்திக் கொள்வதற்கும் சுதந்திரம் இருந்தது. எனவே மிகப் பழங்காலத்திலிருந்தே இந்தியா மதப் பிரிவுகளால் நிறைந்திருப்பதைக் காண்கிறோம். இப்போதுகூட எத்தனை நூறு மதப் பிரிவுகள் இந்தியாவில் இருக்கின்றன என்பதோ, ஆண்டுதோறும் எத்தனை புதிய பிரிவுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன என்பதோ எனக்குத் தெரியாது. இந்தியாவின் மதப் பேரூற்று வற்றாமல் இருப்பதாகவே தோன்றுகிறது.

இந்தப் பல பிரிவுகளையும் இரண்டு தலைப்புகளின் கீழே கொண்டு வந்துவிடலாம். ஒன்று வைதீகம், மற்றொன்று அவைதீகம், அதாவது வைதீகம் அல்லாதது. இந்துமத சாஸ்திரங்களான வேதங்கள் நிலையான அருள் வெளிப்பாடுகள் என்று நம்பும் பிரிவுகள் வைதீகமானவை. வேதங்களை மறுத்து, வேறு பிரமாணங்களைக் கொள்கின்ற பிரிவுகள் அவைதீகமானவை. தற்கால அவைதீகப் பிரிவுகளில் முக்கியமானவை சமண மதமும் புத்த மதமுமே. வைதீகப் பிரிவினருள் சிலர், பகுத்தறிவைவிட வேதங்களே உயர்ந்த பிரமாணங்கள் என்கிறார்கள். வேறு சிலர், சாஸ்திரங்களில் அறிவுபூர்வமானவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றவற்றை விட்டுவிட வேண்டும் என்கிறார்கள்.

வைதீகப் பிரிவுகளுள் சாங்கியம், நையாயிகம், மீமாம்சகம் என்பவை முக்கியமான மூன்று ஆகும். இவற்றுள் முதலிரண்டும் தத்துவங்களுடன் நின்று விட்டனவே தவிர எந்த நெறிகளையும் அவை படைக்கவில்லை. மீமாம்சகர் அல்லது வேதாந்திகளே இப்போது உண்மையில் இந்தியா முழுவதும் பரவியிருக்கின்ற ஒரே பிரிவினர். அவர்களுடைய தத்துவமே வேதாந்தம். இந்து மதத்திலுள்ள எல்லாத் தத்துவப் பிரிவுகளும் வேதாந்தம் அல்லது உபநிடதங்களிலிருந்தே தொடங்குகின்றன. ஆனால் அத்வைதிகள் தங்களுக்கு, அந்தப் பெயரை ஒரு சிறப்புப் பெயராக வைத்துக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் வேதாந்தத்தைத் தவிர வேறு எந்த அடிப்படையிலும் அமைக்க விரும்பவில்லை. காலப்போக்கில் வேதாந்தம் மட்டும் வேரூன்றிவிட்டது. இப்போது உள்ள இந்து மதப் பிரிவுகள் எல்லாமே வேதாந்தத்தின் ஏதாவது ஒரு நெறியுடன் தொடர்பு உடையனவாகவே இருக்கின்றன. இருந்தாலும் இந்தப் பிரிவுகளின் கருத்துக்களெல்லாம் ஒருமித்தமாக இல்லை.

வேதாந்தத்தில் நாம் மூன்று முக்கியமான வேறுபட்ட கோட்பாடுகளைக் காண்கிறோம். ஒரு விஷயத்தை அவர்கள் எல்லோருமே கடவுளை நம்புகிறார்கள். மேலும், வேதங்கள் இறைவனால் வெளியிடப்பட்டவை என்றும் நம்புகிறார்கள். ஆனால் இது கிறிஸ்தவர்களோ முஸ்லீம்களோ தங்கள் நூல்களைப் பற்றி நம்புவதுபோல் அல்லாமல், சற்று மாறுபட்ட, தனிப்பட்ட கருத்தாக இருக்கிறது. வேதங்கள் கடவுளைப் பற்றிய அறிவை வெளிப்படுத்துபவை. கடவுள் நிரந்தரமானவர், ஆதலால் அவரைப் பற்றிய அறிவும் அவரிடம் நிரந்தரமாக உள்ளது. எனவே வேதங்களும் நிரந்தரமானவை என்பது வேதாந்திகளின் கருத்து.

வேதாந்திகளிடம் மற்றொரு பொதுவான நம்பிக்கை இருக்கிறது. படைப்பு சுழற்சியாக நடைபெறுகிறது என்பதே அது. படைப்பு முழுவதுமே தோன்றி மறைகிறது. அது தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, சிறிதுசிறிதாகத் தூலத் தன்மை பெற்று, கணக்கிட முடியாத காலத்திற்குப் பிறகு, சிறிதுசிறிதாகநுட்பத்தன்மை அடைந்து, கடைசியில் மறைந்து ஒடுங்கிவிடுகிறது. அந்த ஒடுங்கிய நிலையிலேயே சிலகாலம் இருக்கிறது. பின்னர் மறுபடியும் இதே சுழற்சி நடைபெறுகிறது. ஆகாசம், பிராணன் என்ற இரண்டு தத்துவங்களை அவர்கள் கற்பித்துக் கொள்கிறார்கள். இதில் ஆகாசம் என்பது ஏறுக்குறைய விஞ்ஞானிகள் கூறும் ஈதர் போன்றது.. பிராணன் என்பது ஒரு சக்தி. இந்தப் பிராணனின் அதிர்வினால்தான் பிரபஞ்சம் தோன்றுகிறது என்று அவர்கள் சொல்கிறார்கள். ஒரு சுழற்சி முடிந்தவுடனேயே, இயற்கையின் எல்லா வெளிப்பாடுகளும் சிறிதுசிறிதாக நுட்பத்தன்மை அடைந்து ஆகாசத்தில் கரைந்துவிடுகின்றன. ஆகாசத்தைப் பார்க்கவோ உணரவோ முடியாது. ஆனால் இந்த ஆகாசத்திலிருந்துதான் எல்லாமே தோன்றுகின்றன. இயற்கையின் பலவித சக்திகளான ஈர்ப்புசக்தி, கவர்ச்சி சக்தி, விலங்கு சக்தி, சிந்தனை, உணர்ச்சிகள், நரம்புகளின் இயக்கம் எல்லாமே பிராணனில் ஒடுங்குகின்றன. அப்போது பிராணனின் அதிர்வும் நின்றுவிடுகிறது. அடுத்த சுழற்சி ஆரம்பிக்கும் வரையில் பிராணன் அதே நிலையில் இருக்கிறது. மறுபடியும் பிராணன் அதிரத் தொடங்குகிறது. அந்த அதிர்வு ஆகாசத்தின்மீது செயல்படுகிறது. பிரபஞ்சத்திலுள்ள உருவங்கள் அனைத்தும் ஒழுங்குமுறையுடன் அதிலிருந்து வெளிவருகின்றன.

துவைதம் எனப்படுகின்ற வேதாந்தப் பிரிவைப் பற்றித் தான் நான் முதலில் உங்களிடம் பேசப் போகிறேன். பிரபஞ்சத்தைப் படைத்து அதை ஆள்பவரான கடவுள், இயற்கையிலிருந்தும் மனித ஆன்மாவிலிருந்தும் என்றென்றைக்குமாக வேறுபட்டவர் என்று துவைதிகள் நம்புகிறார்கள். கடவுள் என்றென்றும் இருப்பவர், இயற்கையும் என்றென்றும் இருப்பது, ஆன்மாக்களும் அப்படியே. இயற்கையும் ஆன்மாக்களும் தங்களை வெளிப்படுத்துகின்றன. மாற்றமடைகின்றன. ஆனால் கடவுள் மாறுவதில்லை; எப்போதும் ஒருபோலவே இருக்கிறார். கடவுள் சகுணமானவர்; குணங்கள் உள்ளவர், ஆனால் உடல் உள்ளவர் என்பதல்ல. அவருக்கு மனிதக் குணங்களெல்லாம் உள்ளன. அவர் கருணைமயமானவர், நியாயமானவர், சக்தி வாய்ந்தவர், சர்வ வல்லமை படைத்தவர், அவரை நாம் அணுக முடியும், பிரார்த்தனை செய்ய முடியும், அவரிடம் அன்பு செலுத்த முடியும், பிரதியாக அவரும் நம்மீது அன்பு செலுத்துகிறார் என்பனவெல்லாம் துவைதிகளின் கடவுள் பற்றிய கருத்துக்களாகும்.

ஒரே வார்த்தையில் சொல்லப்போனால், அவர் மனிதக் கடவுள். ஆனால் மனிதனைவிடப் பன்மடங்கு உயர்ந்தவர். மனிதர்களிடமுள்ள தீய குணங்கள் எதுவும் அவரிடமில்லை. எல்லையற்ற நற்குணக் களஞ்சியமே கடவுள் என்பதுதான் கடவுளைப்பற்றி துவைதிகளின் விளக்கம். மூலப் பொருட்கள் இல்லாமல் அவரால் படைக்க முடியாது. அந்த மூலப்பொருள் இயற்கை. அதைக்கொண்டே அவர் பிரபஞ்சம் முழுவதையும் படைக்கிறார்.

வேதாந்திகள் அல்லாத, அணுவாதிகள் என்ற சில துவைதிகள் இருக்கிறார்கள். இயற்கை முழுவதும் எல்லையற்ற அணுக்கூட்டமே தவிர வேறொன்றுமில்லை; இறைவனின் சங்கல்பம் இந்த அணுக் கூட்டத்தின்மீது செயல்படுவதால்தான் இந்தப் படைப்பு நிகழ்கிறது என்பது அவர்கள்கூற்று. வேதாந்திகள் இந்த அணுக்கொள்கையை மறுக்கிறார்கள். இந்த வாதம் அறிவு பூர்வமானதாக இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். பகுக்க முடியாத இந்த அணுக்கள், ஜியோமிதிப்புள்ளிகள் போன்றவை. அதாவது, அவற்றிற்குப் பகுதிகளோ பரிமாணங்களோ இல்லை. பரிமாணம் இல்லாதவற்றை எல்லையற்றமுறை பெருக்கினாலும் அவை முன்பிருந்தபடியேதான் இருக்கும். பகுதிகள் இல்லாத எதனாலும், பகுதிகள் உள்ள ஒன்றை ஆக்க முடியாது. எவ்வளவு பூஜ்யங்களைக் கூட்டினாலும் ஒரு முழு எண்ணைப் பெற முடியாது. அணுக்களுக்கும் பகுதிகளோ பரிமாணங்களோ இல்லையென்றால், இவற்றிலிருந்து பிரபஞ்சம் தோன்றுவது என்பது முடியாத காரியம். ஆகவே வேதாந்தத் துவைதிகளின் கருத்துப் படி, வேறுபாடில்லாமல், எங்கும் ஒரே போல் இருக்கும் இயற்கையிலிருந்துதான் கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார்.

இந்தியர்களில் பெரும்பான்மையோர் துவைதிகளே. சாதாரணமாக மனித இயல்பு உயர்ந்த எதையும் புரிந்து கொள்ளாது. மத நம்பிக்கை உள்ள உலக மக்களுள் நூற்றுக்குத் தொண்ணூறுபேர் துவைதிகளாக இருப்பதையே காண்கிறோம். ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளிலுள்ள எல்லா மதங்களுமே துவைத மதங்கள்தாம். அப்படித்தான் இருக்கவும் முடியும். நுட்பமானவற்றைச் சாதாரண மனிதனால் சிந்திக்க முடியாது. தன் அறிவுக்கு எட்டியவற்றைப் பிடித்துக் கொள்ளத்தான் அவன் விரும்புகிறான். அதாவது உயர்ந்த ஆன்மீக லட்சியங்களையும் தன்னுடைய நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம்தான் அவனால் புரிந்துகொள்ள முடியும். நுட்பமான கருத்துக்களைப் பவுதீக நிலைக்கு மாற்றினால்தான் அவன் புரிந்து கொள்வான். உலகம் முழுவதுமுள்ள சாதாரண மக்களின் மதம் இது தான். தங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, தங்களை அடக்கியாளும் வல்லமை படைத்த சக்கரவர்த்தி போன்ற ஒரு கடவுளே அவர்களுக்கு வேண்டும். அவரைப் பூமியிலுள்ள சக்கரவர்த்திகளை எல்லாம்விடத் தூயவர் ஆக்குகிறார்கள். எல்லா நற்பண்புகளையும் உடையவராக அவரைக் காண்கிறார்கள், தீய பண்புகளை அவரிடமிருந்து விலக்குகிறார்கள். ஆனால் நன்மையும் தீமையும் தனித்தனியாக இருப்பது சாத்தியமல்ல என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். இருட்டைப் பற்றிய கருத்து இருக்க முடியும் என்று சொல்வதைப்போல் இருக்கிறது, அவர்கள் சொல்வது!

துவைதக் கருத்துக்கள் எல்லாவற்றிலுமே ஒரு பெரிய குறை இருக்கிறது. நற்குணக் களஞ்சியமாகவும், நீதியும் கருணையும் நிறைந்திருப்பவராகவும் இருக்கும் கடவுளின் ஆட்சிக்கு உட்பட்ட இந்த உலகில், இவ்வளவு தீமைகள் இருப்பது ஏன்? எல்லா துவைத நெறிகளிலும் இந்தக் கேள்வி எழுந்தது. ஆனால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்காக இந்துக்கள் எந்தச் சாத்தானையும் உருவாக்கவில்லை. ஒரேமனதாகக் குற்றத்தை மனிதனின் மீதே சுமத்தினார்கள் அது அவர்களுக்குச் சுலபமாகவும் இருந்தது. ஏன்? ஏனென்றால் நான் சற்றுமுன் சொன்னது போல், சூன்யத்திலிருந்து ஆன்மாக்கள் படைக்கப்பட்டதாக இந்துக்கள் நம்பவில்லை. நம்முடைய எதிர்காலத்தை நாமே உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதை இந்த வாழ்க்கையில் பார்க்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும், மறுநாளுக்கான ஏற்பாடுகளைச் செய்யவே முயன்று கொண்டிருக்கிறோம். இன்று, நாளைய விதியை நிர்ணயிக்கிறோம். நாளை, நாளைக்கு அடுத்த நாளின் விதியை நிர்ணயிப்போம். இவ்வாறே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இந்த வாதத்தை இறந்தகாலத்திற்குப் பொருத்திப் பார்ப்பது, நியாயமானதே. நாம் நமது செயல்களாலேயே நம் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்கிறோம் என்றால், அதே விதியை இறந்தகாலத்திற்கும் ஏன் பொருத்திப் பார்க்கக்கூடாது? ஓர் எல்லையற்ற சங்கிலித் தொடரில், ஒரே மாதிரியான சில சங்கிலிப் பிணைப்புகள் மாறி மாறி வந்து கொண்டிருந்தால், இந்த இணைப்புகளின் சேர்க்கையில் ஒரு பகுதியை மட்டும் ஆராய்வதன் மூலம், முழுச் சங்கிலியின் இயல்பையும் நம்மால் விளக்கிவிட முடியும். ஆகவே காலம் என்னும் எல்லையற்ற சங்கிலியில் ஒரு பகுதியை மட்டும் பிரித்து, அதைப் புரிந்துகொள்ள முடிந்தால், அத்துடன் இயற்கை எங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது என்பதும் உண்மையாக இருக்குமானால், காலம் என்னும் முழுச்சங்கிலியையும் நாம் விளக்கி விட முடியும். இந்தக் குறைந்த கால அளவில், இங்கே, நாமே நமது விதியை உருவாக்கிக் கொள்கிறோம் என்பது உண்மையானால், நாம் இப்போது காண்பதுபோல் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்பது உண்மையானால், இப்போது இருக்கும் நாம், நம்முடைய இறந்தகாலச் செயல்கள் முழுவதன் பலனே என்பதும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.

ஆகவே மனிதகுலத்தின் விதியை நிர்ணயிப்பதற்கு, மனிதனைத் தவிர வேறு யாருமே தேவையில்லை. உலகிலுள்ள தீமைகள் எல்லாவற்றிற்கும் நாம்தான் காரணம். தீய செயல்களின் பலனாகத் துன்பங்கள் வருவது நமக்குத் தெரிகிறது. எனவே இப்போது உலகில் காணப்படும் துன்பங்களுக்கு, மனிதன் முன்பு செய்த தீய செயல்கள்தாம் காரணமாக இருக்க வேண்டும். இந்தக் கருத்தின்படி, மனிதனே எல்லா துன்பங்களுக்கும் காரணம், கடவுள்மீது பழி சுமத்தக் கூடாது. அவர் எப்போதும் மாறாத கருணையுள்ள தந்தை. அவர்மீது குற்றம் சாட்டக் கூடாது. எதை நாம் விதைக்கிறோமோ அதையே அறுப்போம்.

ஒவ்வோர் ஆன்மாவும் முக்தியடைந்தே தீரும் என்பது துவைதிகளின் மற்றொரு வினோதமான கோட்பாடு. யாரும் இதற்கு விலக்கல்ல. சாதகமற்ற சூழ்நிலைகள் வழியாக, பல்வேறு இன்பதுன்பங்கள் வழியாகச் சென்று, கடைசியில் ஒவ்வொருவரும் வெளிவரத்தான் வேண்டும். எதிலிருந்து வெளிவர வேண்டும்? பிரபஞ்சத்தை விட்டு எல்லா ஆன்மாக்களும் வெளியேற வேண்டும் என்பது இந்து மதத்திலுள்ள எல்லா பிரிவுகளுக்கும் பொதுவான ஒரு கருத்து. நாம் பார்க்கின்ற உணர்கின்ற இந்தப் பிரபஞ்சமோ, அல்லது கற்பனை செய்துகொள்ளும் ஒரு பிரபஞ்சமோ, உண்மையான சரியான பிரபஞ்சமாக இருக்க முடியாது. ஏனென்றால் இரண்டிலுமே நன்மையும் தீமையும் கலந்துதான் இருக்கின்றன. துவைதிகளின் கருத்துப்படி, இந்தப் பிரபஞ்சத்திற்கு அப்பால், நன்மையும் இன்பமும் மட்டுமே நிறைந்த ஓர் உலகம் இருக்கிறது. அந்த உலகை அடைந்துவிட்டால் பிறவி, மறுபிறவி, வாழ்வு, சாவு எதற்குமே அவசியமில்லை. இந்தக் கருத்து அவர்கள் மிகவும் விரும்புகின்ற ஒன்றாகும். அங்கே வியாதிகளோ மரணமோ இல்லை. அங்கே நிரந்தரமான இன்பம் இருக்கும். அந்த உலகை அடைபவர்கள் எப்போதும் கடவுளின் திருமுன்னர் இருந்துகொண்டு, அவரைக் கண்ணும் மனமும் குளிர தரித்துக் கொண்டிருப்பார்கள்.

சாதாரணமான புழுவிலிருந்து உயர்ந்த நிலையிலிருக்கும் தேவர்கள்வரை எல்லோருமே ஒருநாள் துன்ப மற்ற அந்த உலகை அடைந்தே தீர வேண்டும். ஆனால் இந்த உலகம் முடிந்து விடாது! எல்லையற்ற காலம்வரை இருந்துகொண்டேதான் இருக்கும். அதன் இயக்கம் அலை போன்றதாக, எழுவதும் வீழ்வதுமாக இருக்கும். அத்தகைய சுழற்சியான இயக்கமாக இருந்தாலும் அது முடிவதில்லை. காக்கப்பட வேண்டிய, முக்தி பெற வேண்டிய ஆன்மாக்களின் எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லை. சிலஆன்மாக்கள் செடிகொடிகளிலும், சில, தாழ்ந்த மிருகங்களிலும், சில, மனிதர்களிலும், சில, தேவர்களிலும் இருக்கின்றன. ஆனால் உயர்ந்த தேவர்கள் உட்பட அனைவருமே நிறை நிலையை அடையாதவர்கள், பந்தத்தில் கட்டுண்டவர்கள். அந்தப் பந்தம் எது? பிறப்பதும், இறந்தேயாக வேண்டும் என்ற அவசியமும்தான். அது. மிக உயர்ந்த தேவர்களுக்குக் கூட மரணம் உண்டு.

இந்தத் தேவர்கள் என்பது என்ன? அவை சில நிலைகள், சில பதவிகள். உதாரணமாக, தேவர்களின் அரசனாகிய இந்திரன் என்பது ஒரு பதவி; மிக உயர்ந்த நிலைக்குச் சென்றுவிட்ட ஓர் ஆன்மா. அது இந்தக் கல்பத்தில் அந்தப் பதவியை நிரப்புகிறது. இந்திரனாக இருந்தவன் இந்தக் கல்பம் முடிந்ததும் பூமியில் மனிதனாகப் பிறக்கிறான். இந்தக் கல்பத்தில் மிகவும் நல்லவனாக இருந்தவன் அடுத்த கல்பத்தில் அந்த இந்திரப் பதவியை நிரப்புகிறான். மற்ற தேவர்களின் நிலையும் கதியும் இதுதான். கோடிக்கணக்கான ஆன்மாக்கள் மாறிமாறி நிரப்பிய பதவிகளே இவை. அந்தப் பதவிகளை வகித்தபின் அவர்கள் பூமியில் மனிதர்களாகப் பிறக்கிறார்கள். சொர்க்கத்தை அடையும் எண்ணத்துடனேயோ, புகழ் பெறுவதற்காகவோ இந்த உலகில் நற்காரியங்கள் செய்பவர்கள் இறந்தபின் அந்த நற்செயல்களுக்கான பலனை அடைவார்கள். அவர்கள் இந்தத் தேவர்கள் ஆவார்கள். ஆனால் இது முக்தியல்ல. பலனை எதிர்பார்த்து வேலை செய்தால் முக்தி கிடைக்காது.

மனிதன் எதை விரும்பினாலும் அதைக் கடவுள் கொடுக்கிறார். அவன் அதிகாரத்தை விரும்புகிறான், கவுரவத்தை விரும்புகிறான், தேவர்கள் அனுபவிப்பது போன்ற இன்பங்களை விரும்புகிறான், அவை நிறைவேறவும் செய்கின்றன. ஆனால் எந்தச் செயலானாலும் அதன் பலன் நிரந்தரமானதல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தப் பலன் தீர்ந்துவிடும். தீர்வதற்குப் பல யுகங்கள் ஆகலாம்; ஆனால் அது தீரவே செய்யும். அப்போது தேவர்கள் மறுபடியும் பூமியில் மனிதர்களாகப் பிறந்து, முக்திக்கு வழி தேட மறுபடியும் ஒரு வாய்ப்பினைப் பெறுகிறார்கள்.

தாழ்ந்த மிருகங்கள் உயர்ந்து, மனிதர்களாகின்றன; பிறகு தேவர்கள் ஆகின்றன. ஒருவேளை மறுபடியும் மனிதர்களாகலாம் அல்லது மிருகங்களாகலாம். இன்பம் அனுபவிக்கும் ஆசையையும், வாழ்க்கை மீதுள்ள மோகத்தையும், நான், எனது என்ற பற்றுக்களைப் பிடித்துக் கொண்டிருக்கும் உடும்புப் பிடியையும் விடும்வரை இப்படியேதான் நடந்து கொண்டிருக்கும். நான், எனது என்பவைதான் எல்லா தீமைகளுக்கும் மூலகாரணமாகும். ஒரு துவைதியைப் பார்த்து, இந்தக் குழந்தை உன்னுடையதா? என்று கேட்டால், இல்லை, கடவுளுடையது; என் சொத்துக்களெல்லாம் எனக்குச் சொந்தம் அல்ல, கடவுளுக்கே சொந்தம் என்று அவன் சொல்வான். எல்லாவற்றையுமே கடவுளுக்குச் சொந்தமானதாகத்தான் கருத வேண்டும்.

இந்தியாவிலுள்ள இந்தத் துவைதப் பிரிவினர் எல்லோருமே சைவ உணவு உண்பவர்கள்; தீவிர அஹிம்சாவாதிகள். ஆனால் அவர்களுடைய கருத்து பவுத்தர்களின் கருத்திலிருந்து வேறுபட்டது. எந்த மிருகத்தையும் கொல்லக்கூடாது என்று ஏன் பிரச்சாரம் செய்கிறீர்கள்? என்று ஒரு பவுத்தனைக் கேட்டால், அவன், எந்தப் பிராணியையும் கொல்ல நமக்கு உரிமை இல்லை என்று சொல்வான். ஒரு துவைதியிடம் நீ எந்தப் பிராணியையும் ஏன் கொல்வதில்லை? என்று கேட்டால், அது கடவுளுக்குச் சொந்தமானதாக இருப்பதால்தான் என்று பதில் கூறுவான். ஆகவே, நான், எனது என்பதைக் கடவுளுடன், கடவுளுடன் மட்டுமே இணைத்துச் சொல்ல வேண்டும். நான், என்பது கடவுள் மட்டுமே. எல்லாமே அவருக்குத்தான் சொந்தம். நான், எனது என்ற எண்ணங்கள் அடியோடு இல்லாமல் போய் எல்லாவற்றையும் கடவுளுக்குச் சொந்தமாக்கி, எல்லோரிடமும் அன்பு செலுத்தி, பலனை எதிர்பார்க்காமல், ஒரு பிராணிக்காகத் தன் உயிரை இழக்கவும் தயாராக இருப்பவனுடைய இதயமே பரிசுத்தமானது. அத்தகைய இதயத்தில்தான் இறையன்பு தோன்றும்.

ஒவ்வோர் ஆன்மாவையும் தன்னை நோக்கிக் கவர்ந்துகொள்வது கடவுள்தான். களிமண்ணால் மூடியுள்ள ஊசியைக் காந்தத்தால் கவர முடியாது. களி மண்ணை நீக்கிவிட்டால் காந்தம் ஊசியைச் சுலபமாகக் கவர்ந்துவிடும் என்று துவைதி சொல்வான். கடவுளே காந்தம், ஆன்மாவே ஊசி. அதன் தீய செயல்களே அதை மூடிக்கொண்டிருக்கும் மண்ணும் தூசியும். ஆன்மா தூய்மையடைந்த உடனே, இயல்பாகவே அது கடவுளால் கவரப்பட்டு, அவரை அடைந்து, அவரோடு எப்போதுமே இருக்கும். ஆனால் அவரிடமிருந்து நிரந்தரமாக வேறுபட்டே நிற்கும்.

நிறைநிலையை அடைந்த ஆன்மா, தான் விரும்பினால், எந்த உருவத்தையும் எடுத்துக்கொள்ள முடியும்; நூறு உடல்களைக்கூட எடுத்துக்கொள்ள முடியும், எந்த உடலையுமே எடுத்துக்கொள்ளாமல் வேண்டுமானாலும் இருக்க முடியும். அது ஏறக்குறைய எல்லாம் வல்லதாக ஆகிவிடுகிறது. ஒரே வித்தியாசம் என்னவென்றால் அதனால் படைக்க முடியாது. அந்தச் சக்தி கடவுளுக்கு மட்டுமே சொந்தமானது. எவ்வளவுதான் நிறைநிலையடைந்த ஆன்மாவாக இருந்தாலும் பிரபஞ்சத்தை நடத்த முடியாது. அந்த வேலை கடவுளுக்கு மட்டுமே சொந்தமானது. ஆனால் எல்லா ஆன்மாக்களும் நிறைநிலை அடைந்ததும் நிலையான பேரின்பத்தில் திளைக்கின்றன, நிரந்தரமாகக் கடவுளுடனேயே வாழ்கின்றன. இதுதான் துவைதிகளின் கருத்து.

துவைதிகள் இன்னுமொரு கருத்தையும் பிரச்சாரம் செய்கிறார்கள். இறைவா, எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று பிரார்த்திப்பதை அவர்கள் கண்டிக்கிறார்கள். அப்படிச் செய்வது தவறு என்று அவர்கள் நினைக்கிறார்கள். லவுகீக ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்ள விரும்பினால், தாழ்ந்த நிலையிலுள்ள தேவர்களையே பிரார்த்திக்க வேண்டும். தேவர்களில் ஒருவரிடமோ, ஒரு தேவதையிடமோ, நிறைநிலை பெற்ற ஒருவரிடமோதான் இதைப் போன்ற பிரார்த்தனைகளைச் செய்ய வேண்டும். கடவுளிடம் பக்தி மட்டுமே செலுத்த வேண்டும். இறைவா, எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று கேட்பது ஏறக்குறைய தெய்வ நிந்தனைதான். இந்தத் தேவர்களில் ஒருவரைப் பிரார்த்தனை செய்வதன்மூலம் தனக்கு வேண்டிய எதையும் ஒரு மனிதன் இன்றோ நாளையோ பெறுவான். ஆனால் முக்தி வேண்டுமென்றால் கடவுளைத்தான் வழிபட வேண்டும். இந்தியாவிலுள்ள சாதாரண மக்களின் மதம் இதுதான்.

வேதாந்தத் தத்துவம் உண்மையில் விசிஷ்டாத்வைதத்திலிருந்துதான் தொடங்குகிறது. காரியம், காரணத்திலிருந்து ஒருபோதும் வேறுபடுவதில்லை. காரணத்தின் வேறுபட்ட உருவமே காரியம். பிரபஞ்சம் காரியமாகவும் கடவுள் காரணமாகவும் இருந்தால், பிரபஞ்சம் என்பது கடவுளேதான்; வேறு எப்படியும் இருக்க முடியாது. கடவுளே பிரபஞ்சத்தின் உபாதான காரணமாகவும் நிமித்த காரணமாகவும் இருக்கிறார் என்ற உறுதிப்பாட்டுடன் தான் அவர்கள் தங்கள் வாதத்தை ஆரம்பிக்கிறார்கள். கடவுள்தான் படைப்பவர். பிரபஞ்சத்திற்குக் காரணமான மூலப்பொருளும் அவரே. (படைப்பு) என்ற வார்த்தைக்கு இணையான வார்த்தை சமஸ்கிருதத்தில் இல்லை. ஏனெனில் மேலை நாடுகளில் நம்புவதைப்போல் சூன்யத்திலிருந்து எதையோ உருவாக்குவது என்ற கருத்தை இந்தியாவின் எந்த மதப் பிரிவினரும் நம்புவதில்லை. ஒரு காலத்தில் இதுபோன்ற எண்ணமுள்ள சிலர் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு வெகுசீக்கிரமே வாய்ப்பூட்டு போடப் பட்டுவிட்டது. தற்காலத்தில் இப்படி நம்பும் இந்திய மதப் பிரிவு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏற்கனவே இருக்கும் ஒன்றின் வெளிப்பாடுதான் படைப்பு என்பதே எங்கள் கருத்து. விசிஷ்டாத்வைதத்தின் கருத்துப்படி பிரபஞ்சம் என்பது கடவுளேதான். பிரபஞ்சத்திற்குக் காரணமான மூலப்பொருளும் அவர்தான். சிலந்தி தன் உடலிலிருந்தே நூலெடுத்து வலை பின்னுகிறது..., அது போல் கடவுளிடம் இருந்தே பிரபஞ்சம் முழுவதும் வெளிவந்திருக்கிறது. என்று நாம் வேதங்களில் படிக்கிறோம்.

காரணமே காரியமாகத் தோன்றியிருக்கிறது என்றால் ஜடப்பொருள் அல்லாத, நிரந்தரமான பேரறிவு படைத்த கடவுளிடமிருந்து, ஜடப்பொருளான மந்தமான அறிவற்ற பிரபஞ்சம் தோன்றியது எப்படி? காரணம், தூய்மையாகவும் முழுமையாகவும் இருக்கும்போது, காரியம் வேறுபட்டிருப்பது எப்படி? என்பதே கேள்வி. இதற்கு விசிஷ்டாத்வைதிகள் என்ன பதில் சொல்கிறார்கள்? அவர்களுடைய கொள்கை மிகவும் விசித்திரமானது.

கடவுள், இயற்கை, ஆன்மா ஆகிய மூன்றும் உண்மையில் ஒரே பொருள்தான் என்கிறார்கள் விசிஷ்டாத்வைதிகள். இயற்கையும் ஆன்மாக்களும் கடவுளின் உடம்பு போலவும் கடவுள்தான் ஆன்மா என்றும் கூறுகிறார்கள் அவர்கள். எனக்கு ஓர் உடலும் ஓர் ஆன்மாவும் இருப்பது போலவே, பிரபஞ்சமும் எல்லா ஆன்மாக்களும் சேர்ந்து கடவுளின் உடலாகவும் கடவுளே ஆன்மாக்களுக்கெல்லாம் ஆன்மாவாகவும் இருக்கிறார். இவ்வாறு கடவுள் பிரபஞ்சத்தின் உபாதான காரணமாக இருக்கிறார். உடல் மாறலாம்; இளமையாகவோ, முதுமையாகவோ, பலம் படைத்ததாகவோ, பலவீனமாகவோ ஆகலாம். அது ஆன்மாவை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை. உடலின் மூலம் தன்னை வெளிப்படுத்தியவாறு ஆன்மா எப்போதும் நிரந்தரமாக இருக்கிறது. உடல்கள் வரும், போகும். ஆனால் ஆன்மா மாறுவதில்லை. அதேபோல் பிரபஞ்சம் முழுவதுமே கடவுளின் உடல்தான். அந்த விதத்தில் பிரபஞ்சம் கடவுளே. ஆனால் பிரபஞ்சத்தில் ஏற்படும் மாறுதல்கள் கடவுளை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை. இந்த மூலப்பொருளிலிருந்தே அவர் பிரபஞ்சத்தைப் படைக்கிறார். ஒரு கல்பத்தின் முடிவில், அவரது உடல் நுட்பமானதாகி சுருங்கி விடுகிறது. அடுத்த கல்பத்தின் ஆரம்பத்தில் அது மறுபடியும் விரிவடைந்து, அதிலிருந்து பல்வேறு உலகங்களும் வெளிப்படுகின்றன.

ஆன்மா இயல்பாகவே தூய்மையானது; ஆனால் அதனுடைய செயல்களாலேயே அது தன் தூய்மையை இழந்துவிடுகிறது என்று துவைதிகள், விசிஷ்டாத்வைதிகள் இருவருமே ஒப்புக்கொள்கிறார்கள். அதனைத் துவைதிகளைவிட விசிஷ்டாத்வைதிகள் அழகாக வெளியிடுகிறார்கள். ஆன்மாவின் தூய்மையும் பரிபூரணத் தன்மையும் சுருங்கி, பின்னர் விரிகின்றன. அதன் பேரறிவு, தூய்மை, அதற்கே இயல்பான சக்தி எல்லாவற்றையும் மறுபடியும் வெளிப்படுத்தவே நாம் முயன்று கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆன்மாக்களுக்குப் பல குணங்கள் இருக்கின்றன. ஆனாலும் அவற்றிற்குச் சர்வ வல்லமையோ, எல்லாம் அறியும் தன்மையோ இல்லை. ஒவ்வொரு தீய செயலும் ஆன்மாவின் இயல்பைச் சுருக்குகிறது. ஒவ்வொரு நற்செயலும் அதை விரிவடையச் செய்கிறது. இந்த ஆன்மாக்கள் எல்லாம் கடவுளின் அம்சங்களே. கொழுந்துவிட்டெரியும் நெருப்பிலிருந்து, அதே இயல்புள்ள பல கோடிக்கணக்கான தீப்பொறிகள் சிதறுவதுபோல், எல்லையற்ற பரம்பொருளிடமிருந்து இந்த ஆன்மாக்கள் தோன்றியிருக்கின்றன. எல்லா ஆன்மாக்களுக்கும் குறிக்கோள் ஒன்றுதான்.

விசிஷ்டாத்வைதிகளின் கடவுளும் சகுணமானவரே. அவர் நற்குணக் களஞ்சியமாக விளங்குகிறார்; பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றிலும் ஊடுருவியிருக்கிறார்; எங்கும் எதிலும் அந்தர்யாமியாக இருக்கிறார். கடவுளே எல்லாமாக இருக்கிறார் என்று சாஸ்திரங்கள் சொல்லும் போது, அவர் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்கிறார் என்பதே பொருள். கடவுளே சுவராக இருக்கிறார் என்பது அல்ல, கடவுள் சுவருள் இருக்கிறார் என்பதே பொருள். அவர் இல்லாத துகளோ அணுவோ பிரபஞ்சத்தில் இல்லை. ஆன்மாக்களுக்கு எல்லை உண்டு. அவை எங்கும் நிறைந்தவை அல்ல. அவற்றின் சக்தி விரிவடைந்து அவை நிறைநிலை பெற்றவுடன், பிறப்பு இறப்பு அற்றவை ஆகிவிடுகின்றன; என்றென்றைக்குமாகக் கடவுளுடன் வாழ்கின்றன.

இனி நாம் இறுதித் தத்துவமான அத்வைதத்திற்கு வருவோம். தத்துவம் மற்றும் மதம் என்னும் மலர்களுள், இதுவரை எந்த நாடும் எந்தக் காலத்திலும் உருவாக்கியவற்றுள் மிகச் சிறந்தது என்று இதனை நாம் கருதுகிறோம். இங்கே மனித சிந்தனை அதன் மிக உயர்ந்த சிகரத்தை எட்டுகிறது; ஊடுருவிச் செல்ல முடியாததைப்போல் தோன்றிய மர்மங்களையும் துளைத்து அப்பால் செல்கிறது. இதுதான் அத்வைத வேதாந்தம். புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமாக, மிகவும் உயர்ந்த தத்துவமாக இருப்பதால் இது சாதாரண மக்களின் மதமாக இருக்க முடியவில்லை. அதன் பிறப்பிடமான இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளாகத் தனியரசு செலுத்தி வந்தபோதிலும், சாதாரண மக்களிடம் நுழைய முடியவில்லை. எந்த நாட்டிலும் உள்ள ஆண்களிலும் பெண்களிலும் உள்ள மிகச் சிறந்த சிந்தனையாளர்களால்கூட அத்வைதத் தத்துவத்தைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம் என்பதைப் போகப்போக அறிந்து கொள்வோம்.

நாம் நம்மை மிகவும் பலவீனர்களாக்கிக் கொண்டு விட்டோம்; நம்மை மிகவும் தாழ்த்திக் கொண்டுவிட்டோம். நாம் பெரிய சாதனைகளைப் புரிந்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இயல்பாகவே நமக்கு யார் துணையாவது வேண்டியிருக்கிறது. எப்போதும் கொழுகொம்பை நாடுகின்ற பலவீனமான கொடிகளைப் போலவே நாம் இருக்கிறோம். வசதியான மதம் ஏதாவது இருக்கிறதா, என்று எத்தனை முறை என்னை எத்தனையோ பேர் கேட்டிருப்பார்கள்! உண்மை வேண்டும் என்று எண்ணுபவர்கள் வெகுசிலரே; அதை அறியும் தைரியமுள்ளவர்கள் இன்னும் குறைவு; உண்மையை உணர்ந்து எல்லா விதத்திலும் அதன்படி நடக்கும் தைரியம் உள்ளவர்களோ மிகமிகக் குறைவு. அது அவர்களது தவறு அல்ல; மூளையின் பலவீனமே. எந்தப் புதிய சிந்தனையும், குறிப்பாக, உயர்ந்த சிந்தனைகள் மூளையில் ஒரு புதிய பாதையை உருவாக்க முயல்வது போலுள்ளது. இந்த முயற்சி, நரம்பு மண்டலத்தையே உலுக்கி, மனிதர்களை நிலைகுலையச் செய்துவிடுகிறது. மனிதர்கள் பிறவியிலிருந்தே ஒருவகையான சூழ்நிலைக்குப் பழக்கப்பட்டு விடுகிறார்கள். அது மட்டுமல்லாமல், பழங்கால மூடநம்பிக்கைகள், பரம்பரை மூட நம்பிக்கைகள், இன மூட நம்பிக்கைகள், நகர மூட நம்பிக்கைகள், நாட்டு மூட நம்பிக்கைகள், இவற்றைத் தவிர மனிதனுக்குள்ளே இயற்கையாகவே ஊறிக்கிடக்கும் அளவில்லாத மூட நம்பிக்கைகள் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் அவன் விடுபட வேண்டியுள்ளது. ஆனாலும் உண்மையைப் புரிந்து கொண்டு அதை ஏற்று, வாழ்க்கையிலும் அதைக் கடைசி வரை பின்பற்றும் துணிவு மிக்க வீரர்களும் சிலர் இருக்கிறார்கள்.

அத்வைதம் தீர்மானமாகக் கூறுவது என்ன? கடவுள் என்று ஒருவர் இருப்பாரானால், பிரபஞ்சத்தின் நிமித்த காரணமும் உபாதான காரணமும் அவரே. படைப்பவர் மட்டுமல்ல, படைப்பும் அவரே. அவரே இந்தப் பிரபஞ்சம். அது எப்படி முடியும்? தூய, உணர்வுமயமான கடவுள் பிரபஞ்சமாக ஆனாரா? ஆம். அப்படித்தான் தோன்றுகிறது. அறியாமை மிக்கவர்கள் எதைப் பிரபஞ்சமாகப் பார்க்கிறார்களோ, அது உண்மையில் இல்லை. நீங்கள், நான், நாம் பார்க்கும் பொருட்கள் இவையெல்லாம் என்ன? எல்லாம் சுய மனோவசியம்தான். இருப்பது ஒன்றே. அது எல்லையற்றது; எப்போதும் ஆனந்தமயமானது. இருக்கின்ற அந்த ஒரு பொருளிலேயே நாம் இந்தப் பல்வேறு கனவுகளையெல்லாம் கண்டு கொண்டிருக்கிறோம்.

உள்ளது ஆன்மா ஒன்றுதான். அது எல்லாவற்றையும் கடந்தது, எல்லையற்றது. நாம் அறிந்த, அறியக்கூடிய எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அதிலேயே, அதன் மூலமாகவே நாம் பிரபஞ்சத்தைக் காண்கிறோம். இருக்கும் உண்மை அது ஒன்றுதான். இந்த மேஜை அதுதான். என் முன்னால் இருக்கும் கூட்டம் அதுதான். சுவரும் அதுதான். நாமரூபத்தை எடுத்துவிட்டால் எல்லாமே அதுதான். மேஜை என்ற பெயரையும் மேஜை உருவத்தையும் எடுத்து விட்டால் எஞ்சுவது அதுதான். வேதாந்தி அதை அவன் என்றோ அவள் என்றோ அழைப்பதில்லை. இவையெல்லாம் கட்டுக்கதைகள்; மனித மூளையின் மயக்கங்கள்.

ஆன்மாவில் பால்வேறுபாடு இல்லை. மன மயக்கத்திற்கு அடிமையாகி, மிருகங்கள்போல் ஆகிவிட்டவர்கள் தான் ஆணையோ பெண்ணையோ பார்க்கிறார்கள். மனித தெய்வங்கள் ஆணையோ பெண்ணையோ பார்ப்பதில்லை. எல்லாவற்றையும் கடந்தவர்களுக்குப் பால்வேறுபாடு பற்றிய எண்ணம் எப்படி வரும்? எல்லோருமே எல்லாமே ஆன்மாதான்; ஆண்பெண் பேதமற்ற, தூய்மையான, எப்போதும் ஆனந்தமயமான ஆன்மாதான். ஜடப்பொருட்களான பெயர், உருவம், உடல் இவைதான் இந்த வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன. பெயர், வடிவம் ஆகிய இரண்டு வேறுபாடுகளையும் நீக்கிவிட்டால், பிரபஞ்சம் முழுவதும் ஒன்றுதான்; இரண்டு என்பதே இல்லை; எங்குமே ஒன்றுதான். நீங்களும் நானும் ஒன்றே. இயற்கையோ கடவுளோ பிரபஞ்சமோ இல்லை. உள்ளது ஒன்றே. அது எல்லையற்றது. எல்லாமே நாம ரூபங்களால் அதிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளன. அறிபவனை அறிவது எப்படி? அது அறிய முடியாதது; அறிவுக்கு எட்டாதது. நமது ஆன்மாவை நாமே எப்படிப் பார்க்க முடியும்? அதைப் பிரதிபலிக்கத்தான் முடியும். ஆகவே நிரந்தரமான பரம்பொருளின் பிரதிபலிப்பே பிரபஞ்சம். இதைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளின் நல்ல மற்றும் தீய இயல்புக்கேற்ப பிரதிபலிப்பும் மாறுபட்டுத் தெரிகிறது. ஒரு கொலைகாரனில் பிரதிபலிக்கும்போது, ஆன்மா தூய்மையற்றது என்று பொருளல்ல; பிரதிபலிக்கும் கண்ணாடிக்கு அந்தத் தீய தன்மை இருக்கிறது என்பதே பொருள். ஒரு மகானில் பிரதிபலிக்கும்போது, கண்ணாடி தூய்மையாக இருப்பதால், பிரதிபலிப்பும் தூய்மையாக இருக்கிறது. ஆன்மா இயல்பாகவே தூய்மையாகத்தான் இருக்கிறது. சாதாரணமான புழுவிலிருந்து, மிக உயர்ந்த நிறைமனிதன் வரையிலும் தன்னைப் பிரதிபலித்துக் கொள்வது இந்த ஒன்றேயான ஆன்மாதான்.

பவுதீகரீதியாக, மனரீதியாக, தார்மீகரீதியாக, ஆன்மீக ரீதியாக இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே தனி ஒருமைதான். இந்த ஒன்றையே நாம் பலவாகக் கண்டு, அதன்மீது பலஉருவங்களைக் கற்பனை செய்து கொள்கிறோம். மனிதனாகத் தன்னை எல்லைப்படுத்திக் கொண்ட உயிருக்கு, இந்த உலகம் மனிதர்களின் உலகமாகத் தெரிகிறது. இன்னும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உலகம் சொர்க்கமாகத் தெரியலாம். பிரபஞ்சத்தில் இருப்பது ஒரே ஆன்மாதான்; இரண்டல்ல. அது வருவதுமில்லை, போவதுமில்லை. அது பிறக்கவுமில்லை, இறப்பதுமில்லை. அதற்கு மறுபிறவியும் இல்லை. அது எப்படிச் சாக முடியும்? அது எங்கே போக முடியும்? சொர்க்கங்கள், பூமிகள் என்று எல்லா இடங்களுமே மனத்தின் வீண் கற்பனைகள். அவை இல்லாதவை; அவை முன்பும் இல்லை, இப்போதும் இல்லை, இனி இருக்கவும் செய்யாது.

நான் எங்கும் நிறைந்தவன்; அழிவற்றவன். நான் எங்கே போக முடியும்? நான் ஏற்கனவே இல்லாத இடம் எது? நான் இயற்கை என்னும் இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு பக்கத்தை முடிக்கிறேன். அந்தப் பக்கத்தைத் திருப்புகிறேன். அதனுடன் ஒரு வாழ்க்கைக் கனவும் முடிகிறது. வாழ்க்கையின் அடுத்த பக்கத்தைப் படிக்கிறேன், அடுத்த வாழ்க்கைக் கனவு வருகிறது, அதுவும் முடிகிறது. இப்படியே தொடர்ந்து செல்கிறது. புத்தகத்தைப் படித்து முடித்தவுடன், அதை ஒருபுறமாக வைத்துவிட்டு, நான் தனியாக விலகி நிற்கிறேன். பின்னர் புத்தகத்தை எறிந்துவிடுகிறேன். எல்லாம் முடிந்து விடுகின்றன.

அத்வைதி போதிப்பது என்ன? இதுவரை இருந்த, இனிமேல் இருக்கப் போகின்ற எல்லா தேவர்களையும் அவன் சிம்மாசனத்திலிருந்து இறக்கிவிடுகிறான். சூரியனை விட, சந்திரனைவிட, சொர்க்கங்களைவிட உயர்ந்த மனித ஆன்மாவை அந்தச் சிம்மாசனத்திற்கு அதிபதியாக்குகிறான். மனிதனாகத் தோன்றுகின்ற அந்த ஆன்மாவின் சிறப்பை எந்தப் புத்தகத்தாலும், எந்த சாஸ்திரத்தாலும், எந்த விஞ்ஞானத்தாலும் கற்பனைகூடச் செய்ய முடியாது. அந்த ஆன்மா ஒன்றுதான் என்றும் சிறப்பு வாய்ந்ததாக இருந்த ஒரே தெய்வம். முன்பு இருந்த, இப்போது இருக்கின்ற, இனிமேல் இருக்கப்போகின்ற ஒரே கடவுள் அதுதான். ஆகவே நான் வழிபட வேண்டியது என் ஆன்மாவைத் தவிர வேறு யாரையும் அல்ல. நான் என் ஆன்மாவையே வழிபடுகிறேன் என்று அத்வைதி கூறுகிறான். நான் யாருக்கு அடிபணிய வேண்டும்? எனது ஆன்மாவிற்கு மட்டுமே. உதவி தேடி யாரிடம் செல்வேன்? எல்லையற்ற ஆன்மாவாகிய எனக்கு யாரால் உதவி செய்ய முடியும்? இவையெல்லாம் முட்டாள்தனமான கனவுகள்! பொய்த் தோற்றங்கள். இதுவரை யாராவது யாருக்காவது உதவி செய்திருக்கிறார்களா? இல்லை.

ஒரு துவைதி, பலவீனமான மனிதன், விண்வெளிக்கு அப்பாலுள்ள ஏதோ ஒன்றிடமிருந்து உதவியை எதிர்பார்த்து, அழுது கதறுகிறான். தனக்குள்ளேயே அந்த விண்வெளி இருப்பதை உணராததாலேயே அவன் அவ்வாறு செய்கிறான். அவன் வானத்திலிருந்து உதவியை எதிர்பார்க்கிறான். உதவி வருகிறது. அது வருவது நமக்குத் தெரிகிறது, ஆனால் அது அவனுள்ளிருந்தேதான் வருகிறது. வெளியிலிருந்து வருவதாக அவன் தவறாக நினைத்துக் கொள்கிறான். படுக்கையில் கிடக்கின்ற நோயாளிக்கு யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. அவன் எழுந்து, கதவைத் திறக்கிறான், வெளியே யாரும் இல்லை. படுக்கையில் சென்று படுக்கிறான், மீண்டும் தட்டப்படும் சத்தம் கேட்கிறது. எழுந்து சென்று கதவைத் திறக்கிறான். அங்கே யாரும் இல்லை. கடைசியில் தன்னுடைய இதயத் துடிப்பையே, கதவு தட்டும் சத்தமாக நினைத்ததை அவன் உணர்கிறான். இவ்வாறு தனக்கு வெளியே பல தெய்வங்கள் இருப்பதாக நினைத்து, வீணாகத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மனிதன், எங்கே ஆரம்பித்தானோ அங்கேயே திரும்பி வருகிறான். அதுதான் மனித ஆன்மா. மலைகளிலும் காடுகளிலும் அருவிகளிலும் அவன் தேடிய, கோயில்கள்தோறும் தேடிய, சர்ச்சுகளில் தேடிய, சொர்க்கங்களில் அவன் தேடிய கடவுள், சொர்க்கத்தில் அமர்ந்துகொண்டு உலகை ஆள்வதாக அவன் கற்பனை செய்துகொண்டிருந்த கடவுள், உண்மையில், அவனுடைய ஆன்மாவேதான் என்பதை உணர்கிறான். நானே அவன்; அவனே நான் நானேதான் கடவுளாக இருந்தேன். அற்ப மனிதனான நான் எப்போதுமே இருக்கவில்லை.

அது சரி. அந்தப் பூரணப் பரம்பொருள் எப்படி மனமயக்கத்திற்கு உட்பட்டார்? அவர் மனமயக்கத்திற்கு உட்படவே இல்லை. பூரணப் பரம்பொருள் எப்படிக் கனவு காண முடியும்? அவர் கனவே காணவில்லை. உண்மை, கனவு காண்பதில்லை. இந்தப் பொய்த் தோற்றம் எங்கிருந்து எழுந்தது என்ற கேள்வியே அபத்தமானது. பொய்த் தோற்றம் பொய்த் தோற்றத்தில் இருந்தே எழுகிறது. உண்மையைக் காண்கிற அந்தக் கணமே பொய்த் தோற்றம் மறைந்துவிடுகிறது. பொய்த் தோற்றம் எப்போதும் ஆதாரமாகக் கொண்டிருப்பது பொய்த் தோற்றத்தைத்தான். கடவுள், அதாவது உண்மை, அதாவது ஆன்மா ஒருபோதும் பொய்த் தோற்றத்திற்கு இடமாவதில்லை. நாம் ஒருபோதும் மனமயக்கத்திற்கு உள்ளாகவில்லை. அந்த மயக்கம் நமக்கு உள்ளே, நமக்கு முன்னால் இருக்கிறது. ஒரு மேகத்தைப் பார்க்கிறோம்; வேறு ஒரு மேகம் வந்து அதைத் தள்ளிவிட்டு, அந்த இடத்தை ஆக்கிரமிக்கிறது. இன்னுமொரு மேகம் வந்து இதைத் தள்ளிவிடுகிறது. எப்போதும் நீலமான வானம் இருக்கிறது. பலநிறங்கள் கொண்ட மேகங்கள் அதன்முன் வருகின்றன. சிறிதுநேரம் இருக்கின்றன, பின்னர் விலகிச் செல்கின்றன. இவற்றால் எல்லாம் வானம் பாதிக்கப்படுவதே இல்லை. அதைப் போலவே, நாமும் எப்போதும் தூயவர்கள், எப்போதும் முழுமையானவர்கள். நாமே பிரபஞ்சத்தின் கடவுளர்கள், இல்லையில்லை, இரண்டு இல்லை, இருப்பதே ஒன்றுதானே! நீங்களும் நானும் என்று சொல்வதே தவறு; நான் என்றுதான் சொல்ல வேண்டும்.

கோடிக்கணக்கான வாய்களின் மூலமாக உண்பது நானே; எனக்குப் பசி ஏது? எண்ணற்ற கைகளின் மூலமாக வேலை செய்வது நானே; நான் எப்படிச் செயலற்று இருக்க முடியும்? இந்தப் பிரபஞ்சம் முழுவதன் வாழ்க்கை முழுவதிலும் வாழ்வது நானே; எனக்கு மரணம் ஏது? நான் எல்லா வாழ்வையும் கடந்தவன், எல்லா சாவையும் கடந்தவன். சுதந்திரத்தைத் தேடி நான் எங்கே போவது? நான் இயல்பாகவே சுதந்திரமானவன். பிரபஞ்சத்தின் கடவுளான என்னை யார் கட்டுப்படுத்த முடியும்? பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஒரே பொருளான எனது மகிமையை விளக்க முயல்கின்ற சிறுசிறு வரைபடங்களே இந்த உலகின் சாஸ்திரங்கள் எல்லாம். இந்தப் புத்தகங்களால் எனக்கு என்ன பயன்? இவ்வாறு சொல்கிறான் அத்வைதி.

உண்மையை அறிந்து, இந்தக் கணமே சுதந்திரமாக இரு. அப்போது இருளெல்லாம் விலகிவிடும். எப்போது மனிதன் தன்னைப் பிரபஞ்சத்தின் எல்லையற்ற பொருளுடன் ஒன்றாகக் காண்கிறானோ, எப்போது அவனிடம் வேறுபட்டு உணர்ச்சி இல்லாமல் போகுமோ, எப்போது ஆண்கள், பெண்கள், தெய்வங்கள், தேவதைகள், பிராணிகள், தாவரங்கள், ஏன் இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே அந்த ஒருமையில் கரையுமோ அப்போது எல்லா பயமும் அவனிடமிருந்து அகல்கிறது. நான் என்னையே வருத்திக் கொள்ள முடியுமா? நான் என்னையே கொல்ல முடியுமா? நான் என்னையே காயப்படுத்த முடியுமா? யாரைப் பார்த்து நான் பயப்பட வேண்டும்? நம்மைப் பார்த்தே நாம் பயப்பட முடியுமா? அப்போதுதான் எல்லா துன்பமும் மறையும். எனக்கு எது துன்பம் தர முடியும்? பிரபஞ்சத்தில் இருப்பது நான் மட்டுமே. அப்போது பொறாமைகள் எல்லாம் மறையும்; யாரைப் பார்த்துப் பொறாமைப்படுவது? என்னைப் பார்த்தேயா? அப்போது எல்லா தீய எண்ணங்களும் மறையும். யாருக்கு எதிராக என்னிடம் தீய எண்ணம் இருக்க முடியும்? எனக்கு எதிராகவா? பிரபஞ்சத்தில் இருப்பது நான் மட்டுமே.

ஞானம் பெற இதுதான் ஒரே வழி என்று வேதாந்தி கூறுகிறான். வேறுபாட்டை அழித்து ஒழியுங்கள். பன்மை உள்ளது என்ற மூட நம்பிக்கையை ஒழியுங்கள். பன்மை நிறைந்த உலகில் அந்த ஒன்றைக் காண்பவர் யாரோ, உணர்வற்ற இந்தப் பிரபஞ்சத்தில் அந்த ஒரே உணர்வுப் பொருளைக் காண்பவர் யாரோ, நிழல்கள் நிறைந்த இந்த உலகத்தில் சத்தியத்தைக் காண்பவர் யாரோ, அவனுக்கு மட்டுமே நிரந்தரமான அமைதி கிட்டுகிறது; வேறு யாருக்கும் இல்லை; வேறு யாருக்கும் இல்லை.

கடவுளைப் பற்றிய இந்திய மதச் சிந்தனையின் மூன்று முக்கியமான படிகளின் முக்கியமான அம்சங்கள் இவை. பிரபஞ்சத்திற்கு வெளியே உள்ள சகுணமான கடவுள் என்ற கருத்துடன் அது ஆரம்பித்தது. கடவுள், பிரபஞ்சத்திற்கு வெளியே இருக்கிறார் என்பதிலிருந்து, பிரபஞ்சத்தின் உள்ளே இருக்கிறார், எல்லா பொருட்களிலும் அந்தர்யாமியாக இருக்கிறார் என்ற கருத்திற்கு உயர்ந்தது. கடைசியில், கடவுளும் இந்த ஆன்மாவும் வெவ்வேறல்ல, ஒன்றே தான்; அதன் வெளிப்பாடுதான் பிரபஞ்சத்திலுள்ள பல்வேறு தோற்றங்கள் என்ற உயர்ந்த கருத்தில் நிறைவுறுகிறது. வேதங்களின் அறுதி வாக்கு இதுதான். துவைதமாக ஆரம்பித்து, விசிஷ்டாத்வைதமாகத் தொடர்ந்து, அத்வைதமாக முடிந்திருக்கிறது. உலகத்தில் மிகச் சிலரே இந்தக் கடைசி முடிவுக்கு வருவார்கள். அதிலும் சிலரே இதை நம்புவார்கள். மிகமிகச் சிலரே இதைப் பின்பற்றும் துணிவு உடையவர்களாக இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும்.

ஆனாலும் பிரபஞ்சத்திலுள்ள தார்மீகம், ஒழுக்கம், ஆன்மீகம் எல்லாவற்றிற்கும் விளக்கம் அத்வைதத்தில் உள்ளது. பிறருக்கு நன்மை செய்யுங்கள் என்று எல்லோரும் சொல்வது எதனால்? இதற்கு விளக்கம் என்ன? சான்றோர்கள் மனித குலத்தின் சகோதரத்துவத்தைப்பற்றி ஏன் பிரச்சாரம் செய்தார்கள்? இன்னும் மேலானோர் உயிர்கள் அனைத்தின் சகோதரத்துவத்தைப்பற்றி ஏன் பிரச்சாரம் செய்தார்கள்? ஏனெனில் அறிவுக்கு ஒவ்வாத, தனிப்பட்ட மூடநம்பிக்கைகளின் ஊடே, வேறுபாடுகளை மறுத்து, பிரபஞ்சமே ஒன்றுதான் என்பதை வலியுறுத்திய வண்ணம், ஆன்மப் பேரொளி தெரிந்தோ தெரியாமலோ அவர்களிடம் இடையீடற்றுப் பிரகாசித்துக் கொண்டிருந்ததுதான் காரணம்.

இனி, அத்வைதம் நமக்கு ஒரே பிரபஞ்சக் கருத்தைத் தருகிறது. புலன்களின் மூலமாகப் பார்க்கும்போது ஜடப்பொருளாகவும், அறிவின் மூலமாகப் பார்க்கும்போது ஆன்மாக்களாகவும், உணர்வின் வழியாகப் பார்க்கும் போது கடவுளாகவும் அதுவே தெரிகிறது. தீமை என்று உலகம் சொல்கின்ற முகமூடியைப் போட்டுக் கொண்டவனுக்குப் பிரபஞ்சம் பயங்கரமான இடமாகத் தெரிகிறது. இன்பத்தை நாடுகின்ற மனிதனுக்கு அது உருமாறி, சொர்க்கமாகத் தெரிகிறது. நிறைநிலையை அடைந்தவனுக்கோ எல்லாம் மறைந்து அது அவனது ஆன்மாவாக விளங்குகிறது.

இப்போது சமுதாயம் இருக்கும் நிலையில், இந்த மூன்று நிலைகளுமே அவசியம். இவற்றில், ஒன்று மற்றொன்றிற்கு முரண்பாடானது அல்ல; ஒன்று மற்றொன்றை நிறைவு செய்கிறது. அத்வைதியோ விசிஷ்டாத்வைதியோ துவைதம் தவறு என்று சொல்வதில்லை. அது சரியான கருத்துதான்; ஆனால் சற்று தாழ்ந்த கருத்து. அதுவும் உண்மையை நோக்கித்தான் போகிறது. ஒவ்வொருவரும் தங்கள் கருத்துப்படி இந்தப் பிரபஞ்சத்தைக் கற்பனை செய்து கொள்ளட்டும். யாரும் மற்றவர்களுடைய கருத்துக்களை மறுத்து, அவர்களைப் புண்படுத்த வேண்டாம். மனிதனை அவனிருக்கும் நிலையிலேயே ஏற்றுக்கொள்ளுங்கள். முடிந்தால் அவர்கள் மேல்நிலைக்கு உயர உதவுங்கள். ஆனால் அவர்களைப் புண்படுத்தாதீர்கள், அழிக்க முயற்சிக்காதீர்கள். எல்லோருமே காலப்போக்கில் உண்மையை அடைவார்கள். இதயத்தில் உள்ள எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டால், அழியும் தன்மை உள்ள நாம் அழியாத் தன்மை பெறுவோம். அப்போது மனிதனே கடவுளாகி விடுவான்.

கடவுள் என்பவர் யார்?

கடவுள் என்பவர் யார்? கடவுள் தத்துவம்


கடவுள் தத்துவம்
கடவுள் என்பவர் யார்? ஜன்மாத்யஸ்ய யத யாரிடம் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபெறல், ஒடுக்கம் இவை நடைபெறுகின்றனவோ அவரே கடவுள், அவர் என்றும் உள்ளவர், எப்போதும் தூயவர், என்றும் சுதந்திரர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர், கருணை வடிவினர், குருவிற்கெல்லாம் குருவானவர், எல்லாவற்றிற்கும் மேலாக ! ஈச்வர அநிர்வசனீய ப்ரேம ஸ்வரூப அந்த இறைவன் சொல்லுக்கு அடங்காத அன்பு வடிவினன்

இந்த விளக்கங்கள் நிச்சயமாக சகுணக் கடவுளுக்கானவை. அப்படியானால் இரண்டு கடவுள்கள் இருக்கிறார்களா? தத்துவ ஞானியின் இதுவல்ல, இது வல்ல என்ற சச்சிதானந்தக் கடவுள் பக்தனின் அன்பே வடிவான கடவுள் என்று இரண்டு கடவுளரா? இல்லை சச்சிதானந்தப் பொருள் எதுவோ அதுவே அன்பு மூர்த்தியும், நிர்க்குணமும் சகுணமும் ஒருவரே, பக்தன் வழிபடும் சகுணக் கடவுள், பிரம்மத்திலிருந்து வேறானவரோ,. வேறுபாடு உள்ளவரோ அல்ல என்பதை நாம் உணர வேண்டும். எல்லாமே இரண்டற்ற ஒன்றேயான பிரம்மம்தான், ஒருமையாகவும் தனிமையாகவும் உள்ள பிரம்மம், மனத்தால் உணர முடியாதபடி மிகமிக நுண்ணியதாக இருப்பதால் நம்மால் அன்பு செலுத்தவோ வழிபடவோ இயலாதபடி விளங்குகிறது. எனவே பக்தன் பிரம்மத்தை குணங்களோடு கூடிய நிலையில் அதாவது உலகங்கள் அனைத்தையும் ஆள்பவராகிய இறைவனாகக் கொள்கிறான்.

இதை ஓர் உவமை வாயிலாக விளக்கலாம். களி மண்ணிலிருந்தோ அல்லது வேறு ஏதாவது ஒரு மூலப்பொளிலிருந்தோ எண்ணிலடங்காத விதவிதமான பொருட்கள் செய்யப்படுகின்றன. களிமண்ணாகப் பார்க்கும்போது எல்லாமே ஒன்றுதான். ஆனால் உருவத்தில், புறத்தோற்றத்தில் அவை பலவேறாக உள்ளன. அவை ஒவ்வொன்றும் செய்யப்படுவதற்கு முன் தோன்றாநிலையில் மண்ணில் இருக்கவே செய்தன. மூலப் பொருள் நிலையில் அவை எல்லாம் ஒரே தன்மை உடையவை. ஆனால் வடிவம் பெற்ற பின்னர், அந்த வடிவம் நிலைத்து வெவ்வேறானவை. களிமண் சுண்டெலி ஒருநாளும் களிமண் யானையாக முடியாது. காரணம், களிமண்ணோடு களிமண்ணாய் ஒன்றாக இருந்த அவை, உருவம் பெற்ற அளவில், உருவம் காரணமாக வெவ்வேறாகிவிட்டன. உருவம் பெறாத களிமண் நிலையில் அவை எல்லாமே ஒன்றதான். அதுபோன்றே, அறுதி உண்மையான பிரம்மத்தின் மிகவுயர்ந்த வெளிப்பாடு இறைவன், இன்னும் தெளிவாகச் சொல்வதானால், பிரம்மத்தைப்பற்றி மனித மனத்தினால் உணரமுடிந்த மிகவுயர்ந்த கருத்து இறைவன். படைப்பு அனாதி காலந்தொட்டு என்றும் இருந்து வருவது, இறைவனும் அப்படியே

மோட்சத்தை அடைந்த பிறகு, முக்த ஆன்மா பெறுகின்ற ஏறக்குறைய எல்லையற்ற ஆற்றலையும் அறிவையும் பிரம்ம சூத்திரம் நான்காம் அத்தியாயத்தில், நான்காம் பாதத்தில் வியாச பகவான் குறிப்பிடுகிறார். ஆனால் பிரபஞ்சத்தைப் படைத்தல், காத்தல், ஒடுக்குதல் என்னும் முத்தொழில்களைச் செய்வதற்கான ஆற்றலை வேறு யாரும் பெற முடியாது. அது இறைவனுக்கே உரியது என்று தொடர்கின்ற மற்றொரு சூத்திரத்தில் கூறுகிறார். துவைத உரையாசிரியர்கள். சார்ந்தே விளங்கும் இயல்புடைய ஜீவன், தனித்தலைமையுடைய இறைவனின் எல்லையற்ற ஆற்றலையும், முழுச் சுதந்திரத்தையும் ஒருபோதும் பெற இயலாது. என்று பொருள் கூறி இந்தச் சூத்திரத்தை வெகு எளிதாக விளக்கி விடுகிறார்கள். தீவிர துவைத உரையாசிரியரான மத்வாச்சாரியர். தமக்கே உரிய தொகுத்துக்கூறும் பாணியில் வராஹ புராணத்தில் வரும் ஒரு பாடலை மேற்கோள் காட்டி இந்தச் சூத்திரத்தை விளக்கிச் சொல்கிறார்.

இந்தச் சூத்திரத்தின் உரையில் ராமானுஜர் எழுதுகிறார். இங்கு ஓர் ஐயம் எழுப்பப்படுகிறது. முக்தி நெற்ற ஜீவன்கள் பல்வேறு ஆற்றல்களைப் பெறுகின்றன. இறைவனுக்கே உரிய பிரபஞ்சப் படைப்பு முதலான சிறப்புச் சக்தியும், எல்லா உலகங்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஒரே அதிபதியாக இருப்பதும் இவற்றுள் அடங்குமா? அல்லது அவை எதுவுமின்றி, முக்தி பெற்றவர்களின் பெருமையெல்லாம் அந்தப் பரம்பொருளை நேராகக் காண்பதுடன் நின்றுவிடுமா?

இங்கு ஓர் ஐயம் எழுப்பப்படுகிறது: முக்தி பெற்ற ஜீவன்கள் பல்வேறு ஆற்றல்களைப் பெறுகின்றன. இறைவனுக்கே உரிய பிரபஞ்சப் படைப்பு முதலான சிறப்புச் சக்தியும், எல்லா உலகங்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஒரே அதிபதியாக இருப்பதும் இவற்றுள் அடங்குமா? அல்லது அவை எதுவுமின்றி, முக்தி பெற்றவர்களின் பெருமையெல்லாம் அந்தப் பரம்பொருளை நேராகக் காண்பதுடன் நின்றுவிடுமா?

இதைத் தொடர்ந்து பின்வரும் வாதத்தை நாம் காண்கிறோம். முக்தி பெற்றவன் அனைத்து உலகங்களையும் இயக்கியாளும் தலைமையை எய்துகிறான் என்பது அறிவுபூர்வமானதே. ஏனெனில் சாஸ்திரங்களும், பரம்பொருளின் மேலான அதே நிலையை அவனும் அடைகிறான். அவனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன. என்றே கூறுகின்றன. இனி, மேலான அதே நிலையை அடைவதும், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறப் பெறுவதும் பரம்பொருளின் தனிப் பேராற்றல் அதாவது பிரபஞ்சத்தை ஆளும் ஆற்றல் இன்றி நடைபெற முடியாது. எனவே முக்தி பெற்றவனின் விருப்பங்கள் நிறைவேறுகின்றன. அவன் மேலான நிலையில் இறைவனோடு ஒன்றியிருக்கிறான் என்னும்போது, உலகங்களை இயக்கியாளும் ஆற்றலையும் பெறுகிறான் என்பதை ஏற்றுக்கொண்டுதானே தீர வேண்டும்!

இதற்கு நாம் தரும் பதில் இதுதான் முக்தி பெற்றவன் பிரபஞ்சத்தை ஆளும் தனித்தலைமை தவிர பிற எல்லா ஆற்றல்களையும் பெறுகிறான். உலகை ஆள்வது என்பது உயிருள்ளவை, உயிரற்றவை ஆகியவற்றின் உடல், வாழ்க்கை, விருப்பங்கள் அனைத்தையும் வழிநடத்துவதைக் குறிப்பதாகும். முக்தி பெற்றவர்களுக்கு இந்த ஆற்றல் கிடையாது. அவர்களின் ஆன்ம சொரூபத்தை மறைத்துக் கொண்டிருக்கும் திரைகள் அகன்றுவிடுவதால், பிரம்மத்தின் தடையற்ற காட்சியில் எப்போதும் ஆழ்ந்து மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். பின்வரும் சாஸ்திர மேற்கோளால் இது நிரூபிக்கப்படுகிறது யாரிடமிருந்து இந்த அனைத்துப் பொருட்களும் தோன்றியுள்ளனவோ, பிறந்தவை அனைத்தும் யாரால் வாழ்கின்றனவோ, இறந்தபின் அனைத்தும் யாரிடம் ஒடுங்குகின்றனவோ அவரே பிரம்மம்

உலகை ஆளும் ஆற்றல் முக்தி அடைந்தவர்களுக்கும் பொதுவானது என்றால், மேலே குறிப்பிட்ட மேற்கோள் பிரம்மத்திற்கான விளக்கம் என்பது இங்கு பொருந்தாமல் போகிறது. ஏனெனில் இந்த விளக்கம், அவர்மூலமாக மட்டுமே இந்தப் பிரபஞ்சம் நடைபெறுகிறது என்று கூறுகிறது. பிற எதற்கும் இல்லாத சிறப்புப் பண்புகளைக் கொண்டுதான் ஒரு பொருளைச் சரியாக விவரிக்க முடியும். பின்வரும் சாஸ்திரப் பகுதிகளில் பிரம்மத்தைப் பற்றிய பகுதியையும் பார்ப்போம்.

என் அருமை மாணவனே! ஆரம்பத்தில் இரண்டற்ற ஒரே பொருள்தான் தன்னந்தனியாக இருந்தது. அது சிந்தித்தது. பின்னர் பலவற்றைத் தோற்றுவிப்பேன். என்றது அதிலிருந்து சூடு உண்டாயிற்று.

உண்மையில் பிரம்மம் ஒன்றே ஆரம்பத்தில் இருந்தது. அது பரிணமித்தது. அது க்ஷத்திரம் என்ற புண்ணிய வடிவினைத் தோற்றுவித்தது. வருணன், சோமன், ருத்திரன், பர்ஜன்யன், எமன், மிருத்யு, ஈசானன் முதலான தேவர்கள் க்ஷத்திரங்களே.

உண்மையில் ஆன்மா ஒன்றே ஆரம்பத்தில் இருந்தது. வேறு எதுவும் இயங்கவில்லை. ஆன்மா உலகைப் படைக்க எண்ணம் கொண்டது, பிறகு உலகைத் தோற்றுவித்தது.

நாராயணன் மட்டுமே இருந்தார். பிரம்மனோ, ஈசானனோ, தியாவா, பிருதிவியோ, நட்சத்திரங்களோ, நீரோ, நெருப்போ, சந்திரனோ, சூரியனோ யாருமே அப்போது இல்லை. தன்னந் தனியாக இருப்பதில் அவருக்கு மகிழ்ச்சி உண்டாகவில்லை. எனவே தியானத்தில் ஆழ்ந்தார். அதற்குப் பிறகு ஒரு மகளையும் பத்து அங்கங்களையும் இன்னும் பலவற்றையும் உருவாக்கியனார்.

இன்னும் வேறு நூல்களில் பரம்பொருளைப் பற்றிப் பேசும்போது, பூமியில் வாழ்ந்து வந்தாலும் அது பூமியிலிருந்து வேறுபட்டது. அது ஆன்மாவில் வாழ்ந்து என்றெல்லாம் உலகை ஆளும் அதன் செயலைக் கூறுகின்றன. இந்த விளக்கங்களில் எல்லாம் பிரபஞ்சத்தின்மீது இறைவனின் தனித்தன்மை பேசப் படுகிறதே தவிர, முக்தி பெற்ற ஆன்மாவைப் பற்றிய குறிப்போ அல்லது உலகத் தலைமை அதற்குக் கொடுக்கப்பட்டதாகவோ எந்தச் செய்தியும் இல்லை.

அடுத்த சூத்திரத்தை விளக்கும்போது ராமானுஜர் கூறுகிறார். அப்படியல்ல இந்தக் கருத்தை நேரடியாக மறுக்கும் பல பகுதிகள் வேதங்களில் கணாப்படுகின்றனவே என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் இந்தப் பகுதிகள் தேவர்களின் உலகில் வாழ்பவர்களான முக்த புருஷர்களின் மகிமையைத்தான் சுட்டிக்காட்டுகின்றன இதுவும் பிரச்சினைக்கு எளிதான் தீர்வாகத்தான் உள்ளது.

ராமானுஜரின் கோட்பாடு, முழுமையின் ஒருமையை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அந்த முழுமைக்குள் நிலையான வேறுபாடுகள் உள்ளன என்பது அவரது கருத்து. ஆகவே இந்த வேதாந்தம் நடைமுறையில் துவைதமாகவே இருப்பதால் முக்தியடைந்த ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ராமானுஜர் மிகத் தெளிவாக, எளிதாக விளக்கி விடுகிறார்.

இனி, அத்வைத நெறியின் மாபெரும் பிரதிநிதி இதுபற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். துவைதிகளின் நம்பிக்கைகளையும் எண்ணங்களையும் அத்வைதம் அப்படியே முழுமையாக ஏற்கிறது. அதே வேளையில் மனித இனத்தின் மிகவுயர்ந்த தெய்வீக லட்சியத்தைக் கருத்திற்கொண்டு இந்தப் பிரச்சினைக்கான தீர்வையும் தருகிறது.

முக்தி பெற்ற பிறகும் தங்கள் ஜீவாத்ம உணர்வை இழந்து விடாமல் தனித்து வேறாக இருக்க விரும்புபவர்கள், தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள எல்லா வாய்ப்புகளையும் பெறுவதோடு, குணங்களோடு கூடிய பிரம்மத்தின் பேரருளையும், பேரானந்தத்தையும் அனுபவிக்கின்றனர். இத்தகையோரைப் பற்றித்தான் பாகவத புராணம் பேசுகிறது. மன்னா! தங்கள் பிணைப்புக்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு, ஆத்மானந்தத்தில் மூழ்கியிருக்கின்ற ரிஷிகள்கூட எங்கும் நிறைந்திருக்கும் இறைவனிடம் அன்புக்காகவே அன்பு செலுத்துகிறார்கள். இறைவனின் பெருமை அவ்வளவு மகத்துவம் வாய்ந்தது.

சாங்கியர்கள் இத்தகையோரை இன்னொரு விதமாகப் போற்றுகிறார்கள். இவர்கள் ஒரு கல்பத்தில் பிரகிருதியோடு ஒன்றாகியிருக்கின்றனர். அடுத்த கல்பத்தில் இவர்கள் உலகத்தை ஆள்பவர்களாக வரக்கூடும். ஆயினும் இவர்கள் யாரும் இறைவனுக்கு நிகராக மாட்டார்கள்.

அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு பெருநிலையை அத்வைதம் கூறுகிறது. அந்த நிலையில் படைப்பு, படைக்கப்படும் பொருள், படைப்பவர் என்று எதுவும் இல்லை. காண்பவன், காணப்படும் பொருள், காட்சி என்றில்லை. நான், நீ, அவன் என்பவை இல்லை. செய்பவன், செய்யப்படும் பொருள் , தொடர்பு எதுவும் இல்லை. அங்கே யார் யாரைக் காண்பது? இத்தகைய பெருநிலையை அடைந்தவர்கள் எல்லாவற்றையும் கடந்துவிடுகின்றனர். வாக்கும் மனமும் போக முடியாத நிலையை அடைகின்றனர். இதுவல்ல, இதுவல்ல என்று வேதங்கள் கூறுகின்ற இடத்தை எட்டிவிடுகின்றனர். இந்தப் பெருநிலையை அடையாதவர்களுக்கும், அடைய இயலாதவர்களுக்கும், பிரகிருதி, ஆன்மா, இந்த இரண்டையும் காப்பவனும் அவையிரண்டினுள் ஊடுருவியிருப்பவனும் ஆகிய இறைவன் இந்த மூன்றின் பிரிக்கவொண்ணா பிணைப்பாகிய பிரம்மத்தின் காட்சி கட்டாயமாகக் கிடைக்கிறது.

எனவேதான் பிரகலாதன் தன்னை மறந்தபோது உலகையோ, அதன் மூலகாரணத்தையோ காணவில்லை. அவன் கண்டதெல்லாம் பெயரும் உருவமுமற்ற, பிரிக்க முடியாத, எல்லையற்றதான ஒன்றைத்தான், ஆனால், தான் பிரகலாதன் என்ற நினைவு எழுந்தபோது அவன் கண்முன் உலகம் விரிந்து, கூடவே உலகின் தலைவனான அனந்த கல்யாண குணங்களின் இருப்பிடமான இறைவனும் தோன்றினார்.

பேறு பெற்றவர்களான கோபியரின் நிலையும் இதுவே. தாங்கள் இன்னார் என்பதையும், தங்கள் தனித்தன்மையையும் இழந்த நிலையில் அவர்கள் அனைவரும் கிருஷ்ணர்களாகவே மாறிவிட்டார்கள். கிருஷ்ணன் தங்கள் வழிபடுதெய்வம் என்ற எண்ணம் எழுந்தவுடன் மீண்டும் கோபியர்களானார்கள். உடனே அவர்கள் முன்

தாஸாமாவிரபூச்சௌரி ஸ்மயமான முகாம்புஜ
பீதாம்பரதர ஸ்ரக்வீ ஸாக்ஷõன் மன்மத மன்மத 


தாமரை போன்ற முகத்தில் புன்னகை அரும்ப, பட்டுப் பீதாம்பரம் அணிந்து, மலர் மாலைகள் சூடி, அழகில் காதற் கடவுளான மன்மதனுக்கும் ஒரு மன்மதனாக ஸ்ரீகிருஷ்ணர் தோன்றினார். இப்போது நாம் ஆசாரிய சங்கரரிடம் திரும்புவோம் அவர் கூறுகிறார்- சகுண பிரம்மத்தை வழிபடுவதன் மூலம் தனிமுதல் தலைவனாகிய இறைவனுடன் இணைகின்றனர். அதேவேளையில் தங்கள் சொந்த மனத்தையும் தக்க வைத்துக் கொள்கின்றனர்,. இவர்களின் பெருமை எல்லைக்கு உட்பட்டதா, எல்லையற்றதா? இந்தச் சந்தேகத்திற்கு விடையாக ஒரு வாதம் வருகிறது. அவர்களுடைய பெருமை எல்லையற்றதாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் சாஸ்திரங்கள் தங்களுக்குரிய அரசை அவர்கள் பெறுகிறார்கள். எல்லா தேவதைகளும் அவர்களை வழிபடுகின்றனர். எல்லா உலகங்களிலும் அவர்களின் ஆசைகள் நிறைவேறுகின்றன. என்றே கூறுகின்றன. இதற்கு, விடைபோல் வியாசர் உலகை ஆளும் ஆற்றலைத் தவிர என்று எழுதுகிறார்.

படைத்தல் முதலிய சக்திகளைத் தவிர பிற அணிமா முதலிய எல்லா ஆற்றல்களையும் முக்தர்கள் பெறுகிறார்கள். உலகை இயக்கியாளும் தனித்தலைமை, என்றும் பரிபூரணனான இறைவனுக்கே எப்போதும் உரியது ஏன்? ஏனெனில் படைப்பைப் பற்றி விளக்கும் இடங்களில் எல்லா சாஸ்திரங்களும் இறைவனையே பொருளாகக் கொண்டு பேசுகின்றன. முக்த புருஷர்களைப் பற்றிய பேச்சே இல்லை. உலகை ஆளும் தனித்தலைமை பரம்பொருள் ஒருவருக்கே உரியது. படைப்பைப்பற்றிக் கூறும் நூல்களும் பரம்பொருளையே சுட்டுகின்றன. என்றும் பரிபூரணன் என்னும் அடைமொழியும் அவருக்கே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இறைவனை வழிபட்டதன் விளைவாகவே, பரம்பொருளைத் தேடியதவ் பலனாகவே அணிமா முதலான சக்திகள் முக்தர்களுக்குக் கிடைத்துள்ளன என்றுதான் சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே முக்த ஜீவர்களுக்கு உலகை ஆளும் தனித் தலைமையில் இடமில்லை என்பது தெளிவாகிறது.

அதுமட்டுமின்றி, முக்த ஜீவர்கள் மனத்தைத் தங்களிடமே நிறுத்திக் கொள்வதால் அவர்களது எண்ணங்கள் மாற வாய்ப்பு உள்ளது. ஒருவர் படைக்க விரும்பினால் இன்னொருவர் அழிவை விரும்பக்கூடும். ஆகவே இத்தகைய விபரீதங்கள் நிகழாமலிருக்க, எல்லா எண்ணங்களும் ஒரு மகா எண்ணத்திற்கு அடக்கம் என்று கொள்வதே பொருத்தமானது. எனவே முக்த ஜீவர்கள் பரம்பொருளுக்கு அடங்கியவர்களே என்பதை நாம் முடிந்த முடிவாகக் கொள்ளலாம்.

அதனால் பிரம்மத்தின் சகுண வடிவத்திடமே நாம் பக்திகொள்ள முடியும் க்லேசோ அதிகதரஸ்தேஷாம் அவ்யக்தாஸக்த சேதஸாம் நிர்க்குண பிரம்மத்திடம் மனத்தைப் பதிய வைக்கும் பாதையில் செல்வது மிகக் கடினமானது. ஆகையால் பக்தி நமது இயல்பிற்கு ஏற்ப இயைந்து இதமாகச் செல்ல வேண்டும். மனிதவுணர்வு கலவாத பிரம்மத்தைப் பற்றிய கருத்தை நாம் கொள்வது சாத்தியமில்லை என்பது உண்மைதான். சிந்தித்தப் பார்த்தால் நாம் அறிகின்ற அனைத்தைப் பொறுத்த வரையிலும்கூட இது உண்மையே அல்லவா! அகத்திலும் புறத்திலும் நாம் பெறுகின்ற அனுபவங்கள் மற்றும் நமது கருத்துக்கள் இவற்றை நமக்குத் தருகின்ற பொருட்கள் எல்லாம் மனிதவுணர்வு கலந்ததாகவே இருக்கும், என்ற கருத்தை, உலகம் இதுவரை கண்டவர்களுள் மகத்தான மனஇயல் ஞானியான கபிலர் நீண்ட காலத்திற்கு முன்பே நிறுவியிருக்கிறார். மனித உடல் முதல் இறைவன் வரையிலும் நாம் அனுபவிக்கின்ற ஒவ்வொரு பொருளும் மனிதவுணர்வும் இன்னொன்றும் சேர்ந்ததே அந்த இன்னொன்று எதுவாக இருந்தாலும் சரி, இந்தத் தவிர்க்க முடியாத கலவையைத்தான் நாம் உண்மைப் பொருள் என்று பொதுவாகக் கூறுகிறோம். அது உண்மைதான். மனிதன் தன் மணத்தினால் அறியக் கூடிய பொருட்களின் உண்மை என்பது இப்படித்தான் என்றென்றும் இருக்கவும் செய்யும். எனவே இறைவன் மனிதவுணர்வு கலந்தவன் என்பதால் அவன் இல்லை என்பது வடிகட்டின முட்டாள்தனம்.

உண்மை என்ற சொல்லிற்குப் பொருள் காண்பதில் எழுந்த கருத்து வேறுபாட்டினால், மேலை நாட்டில் லட்சியவாதிகளும் பிரத்தியட்ச வாதிகளும் பயங்கரமாக மோதிக்கொண்டனர்,. முட்டாள் தனமான இந்தக் கருத்தும் வாய்ச்சொல் வீரம் போன்றதே. உண்மை என்னும் சொல் இதுவரை எதையெல்லாம் குறிப்பிட்டு வந்துள்ளதோ, எதையெல்லாம் பொருளாகக் கொண்டதோ அவை அத்தனையையும் தழுவி நிற்பது இறைவன் பற்றிய கருத்தாகும். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு இறைவனும் உண்மை. பார்க்கப் போனால் உண்மை என்ற சொல் இப்பொழுது கூறப்பட்ட கருத்தைத் தவிர அதிகமாக வேறு எதையும் குறிக்கவில்லை. இறைவன் என்பதற்கு நமது தத்துவ விளக்கம் இதுவே.