அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-68

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-68

ஒரு முறை அன்னை  கல்கத்தாவிலிருந்து பர்த்வான்  வழியாக ஜெயராம்பாடிக்குத் தமது பரிவாரத்துடன் மாட்டு வண்டியில் வந்து கொண்டிருந்தார்.திரிகுணாதீதானந்தர் வண்டிக்கு முன்னால் தோளில் தடியுடன் ஒரு காவலன் போல் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மழைக்காலம்.இரவு மூன்றாம் யாமம் இருக்கும். அந்தப்பாதை மழையினால்  அரிக்கப்பட்டு நடுநடுவே பள்ளமாக இருந்தது. அத்தகைய பள்ளம் ஒன்றின் அருகே வண்டி வந்தது. வண்டி பள்ளத்தில் இறங் குமானால் ஆட்டம் கண்டு, அன்னையின் உறக்கத்திற்குத் தடை ஏற்படும். இதைக்கண்ட சுவாமிகள்  அந்தப்பள்ளத்தில் படுத்துக்கொண்டு தன்மீது வண்டியை ஓட்டும் படி  வண்டியோட்டியிடம் கூறினார். ஆனால் விழித்திருந்த அன்னை திரிகுணாதீதானந்தரின் செயலைக்கண்டு விட்டார். உடனே வண்டியிலிருந்து இறங்கி இந்த முரட்டுத்தனமான செயலுக்காக அவரை மிகவும் கடிந்து கொண்டார்.
திரிகுணாதீதானந்தர் அன்னையிடம் கொண்ட இத்தகைய முரட்டு பக்திக்கு இன்னொரு சான்றும் உள்ளது. ஒரு முறை கோலாப்மா அன்னைக்காக மிகவும் காரமான மிளகாயை வாங்கி வரும் படி கூறினார். சுவாமிகள் கடைத்தெரு முழுவதும் சுமார் மூன்று மைல் நடந்து சென்று ஒவ்வொரு கடையிலும் ஏறி, மிளகாயை  க் கடித்துப் பார்த்து மிகமிகக் காரமாக இருந்த மிளகாயை வாங்கி வந்தார். பல மிளகாய்களைக் கடித்ததில்  அவரது நாக்கும் உதடும் சொல்ல முடியாத எரிச்சல் கண்டு வீங்கிப்போய்விட்டன. அது ஆறுவதற்குப் பல நாட்கள் ஆயின.
அமெரிக்கா சென்ற பிறகு ஒவ்வொரு மாதமும் அவர் தவறாமல்அன்னைக்குப் பணம் அனுப்பி வைத்தார்.
 சுவாமி சாரதானந்தர்  பெயருக்கு ஏற்ப ஆனந்தராக இருந்தார். அன்னையின் பணியில் முழுமையாக அவர் தம்மை ஒப்படைத்திருந்தார். அன்னை ஜெயராம்பாடியில்  இருந்தாலும் கல்கத்தாவில் இருந்தாலும் அன்னையின் நலனைக் கவனிப்பது அவரது சிறப்புப் பணியாயிற்று. அன்னையிடம் அவர் வைத்திருந்த பக்தியை அளவிட முடியாது. உத்போதன் வீட்டின் கீழ்த்தளத்தில் உள்ள சிறிய அறை ஒன்றில்  அமர்ந்துகொண்டு அன்னையைக் காண்பதற்காகத் திரண்டு வரும்  பக்தர்களை வரிசையாக அனுப்புவார். பதிதாக வருபவர்களிடம் தம்மை அன்னையின்  வாசற்காவலன்” என்று அறிமுகப்படுத்திக் கொள்வார். எப்படியாவது எந்த வழியிலாவது அன்னைக்குச் சேவை செய்வது பெரும்பேறு என்பதை வெளிக்காட்டுவது போன்று அவரது நடத்தை இருக்கும். ஒரு நாள் பக்தர் ஒருவர் மாடியில் அன்னையை வணங்கிவிட்டுக் கீழே சாரதானந்தரிடம் வந்து, நெடுஞ்சாண்கிடையாக அவர்முன்  வீழ்ந்து வணங்கினார். பணியில் ஈடுபட்டிருந்த சுவாமிகள் தலையை உயர்த்தி,என்னப்பா, எனக்கு இவ்வளவு பெரிய நமஸ்காரம்? என்று கேட்டார். அதற்கு அந்த பக்தர், உங்களையன்றி வேறு யாரை வணங்குவது மஹராஜ்? என்று பதிலளித்தார். உடனேசுவாமிகள் மிகுந்த பணிவுடன்  அப்படிச் சொல்லாதே நீ யாருடைய ஆசிகளைப்பெற்று வருகிறாயோ அவரது ஆசிகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவன் நான். அந்த அன்னை நினைத்தாரானால் இந்தக் கணமே உன்னை எனது இடத்தில் அமர்த்த முடியும் என்றார். இதே போல் அன்னையும் சுவாமிகளிடம் அளவற்ற அன்பும் வைத்திருந்தார். பின்வரும் உரையாடல் அதனைத்தெளிவாகக் காட்டுகிறது.
ஒரு நாள்  அன்னை சுவாமி அரூபானந்தரிடம் சரத் இருக்கும் வரை மட்டுமே என்னால் உத்போதனில் தங்க முடியும். என் பொறுப்பை ஏற்று நடத்துவதற்கு அவனைத்தவிர யாரையும் நான் காணவில்லை.என் சுமையைத் தாங்கக் கூடியவன் சரத் ஒருவனே” என்றார்.
அ-ஏன். சுவாமிபிரம்மானந்தர் இருக்கிறாரே!
அன்னை-அவனால் முடியாது.அவனது மனநிலையே வேறு.
அ-சுவாமி பிரேமானந்தர்.?
அன்னை- அவனாலும் முடியாது.
அ-ஆனால் அவர் பேலூர் மடத்தையே நிர்வகிக்கிறாரே!
அன்னை- இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணுக்கு வேண்டியவற்றைக் கவனித்துக் கொள்வது என்பது தொல்லை பிடித்த விஷயம். சரத்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.
அன்னையின் சேவை என்று வரும்போது பணச்செலவு ஒருபுறமிருக்க, அடிக்கடி கோபித்துக் கொண்டும்.அன்னையையே குறை கூறிக் கொண்டும் இருக்கின்ற உறவினர்களுக்கும் அன்போடு சேவை செய்வது என்பது சாமானிய காரியமல்ல. சாரதானந்தர் இந்தக் காரியங்களை எல்லாம் மிகுந்த மகிழ்ச்சியுடனும் மதிப்புடனும் திறம்படச் செய்தார்.அதன் காரணமாக அன்னையின் அளவற்ற அன்பையும் நம்பிக்கையையும் பெற்றார். அவர் கல்கத்தாவில் இல்லாத வேளைகளில் அன்னை அங்கே போக மாட்டார்.சரத் கல்கத்தாவில் இல்லாத போது,நான் அங்கே போவது என்ற பேச்சிற்கே இடமில்லை.யாரை நம்பி நான் போவேன்? கல்கத்தாவில் நான் இருக்கும் போது, சரத் நான் வெளியூருக்குப் போவதாக என்னிடம் சொல்வதாக வைத்துக் கொள்வோம்,நான் அவனிடம் என்ன  சொல்வேன் தெரியுமா?மகனே. கொஞ்சநேரம் இருந்து என்னை முதலில் இங்கிருந்து அனுப்பிவிடு.அதற்குப் பிறகு நீ எங்கு வேண்டுமானாலும் போ” என்று கூறுவேன் என்பார்.
-
தொடரும்...


Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6