அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-93

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-93

அன்னையின் அருகில் சென்ற அனைவருமே அவரது புனித அன்பு தங்களைத்தழுவி பேரமைதியை அளிப்பதை உணர்ந்தனர். அன்னை ஒவ்வொருவரிடமும் அன்பு செலுத்தினார் என்பதில்லை.அவர் அன்பின் ஒரு திரண்ட வடிவாக இருந்தார். அவரிடம் சென்ற அனைவரும் அதன் இனிமையையும் இதத்தையும் உணர்ந்தனர். அன்பு என்பது ஓர் ஒருமை சக்தி.அது ஒன்றாக இருக்கும் போது மட்டுமே உண்மை நிலையில் இருக்கிறது. இவரிடம் அவரிடம் என்று அதனைப்பிரித்துச் செலுத்தும் போது அது தன் புனிதத்தை இழந்து விடுகிறது. பிரிவுபட்ட அந்த அன்பு துன்பத்தையே தரும். இதைத்தான் அன்னை, மனிதர்களிடம் அன்பு செலுத்தினால்  அதனால் துன்பம் வரத்தான் செய்யும். இறைவனிடம் அன்பு செலுத்த முடிந்தால் அது பெரிய விஷயம். அதனால் துன்பமோ துயரமோ எதுவும் வராது, என்று குறிப்பிட்டார். இதனால் தான் அவர் தனித்தனியாக யாரிடமும் அன்பு செலுத்தவில்லை என்று கூறினோம்.ஆனால் அவரது அருகில் சென்ற ஒவ்வொருவரும் அன்னை தனினிடம் விசேஷ அன்பு செலுத்துவதாக உணர்ந்தனர்.
இத்தகைய அன்பு பெருக்கின் காரணமாகத்தான் எந்த பாரபட்சமும் காட்டாமல் தம்மை நாடி வந்த அனைவருக்கும் தீட்சை அளித்தார் அன்னை. அன்னையின் இந்தப்போக்கைப் பற்றி அவரது சீடர் ஒருவர், அம்மா! நீங்கள் கணக்கற்ற வகையில் ஏராளமானோருக்கு தீட்சை தருகிறீர்கள், அவர்கள் அத்தனை பேரையும் உங்களால் நினைவு கூட வைத்துக்கொள்ள மடியாது.அவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள், எந்த நிலையில் இருக்கிறார் கள் என்றும் நீங்கள் நினைத்துப்பார்ப்பதில்லை ஆனால் ஒரு குரு தன் சீடனின் ஆன்மீக வளர்ச்சியில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். எனவே எவ்வளவு பேரை நீங்கள் நினைவில் வைத்து கொள்ள முடியுமோ? அவ்வளவு பேருக்கு மட்டும் தீட்சை கொடுங்கள் என்றார். அதற்கு அன்னைமகனே நான் தீட்சை தருவதை குருதேவர் ஒருபோதும் தடுப்பதில்லை.அவர் எனக்குப் பல விஷயங்களில் அறிவுரை கூறியிருக்கிறார். தேவையானால் இது பற்றியும் சொல்லியிருப்பார் அல்லவா! நான் என் சீடர்களின் பொறுப்பை குருதேவரிடம் கொடுத்து விடுகிறேன்.தினமும் நான் அவரிடம் பகவானே! இந்தச் சிடர்கள் எங்கிருந்தாலும் அருள் கூர்ந்து அவர்களைக் காப்பாற்றுங்கள் என்று பிராத்திக்கிறேன். இதற்கு மேலாக அவர்களுக்குத் தரும் மந்திரத்தை நான் குருதேவரிடமிருந்தே பெறுகிறேன். அதன் மூலம் அவர்கள் பூரண நிலையை அடைவது நிச்சயம் என்றார்.
இனி பிராத்தனையுடன் மட்டும் அன்னை நின்று விடுவதில்லை,நாள்தோறும் ஜபம் செய்வார். அந்த ஜபம் எல்லாம் தமது சீடர்களின் நலனுக்காக என்பதை அவரே கூறியுள்ளார். இறுதி நாட்களில் தியானம் செய்வதற்காகக்கூட அவரால் எழுந்து உட்கார முடியாத நிலைமை உண்டாயிற்று.அப்போதும் அவர் விடியற்காலை இரண்டு மணிக்கு எழுந்து நெடுநேரம் ஜபம் செய்வார். இதைக் கவனித்த சீடர் ஒருவர் அன்னையிடம் , இரவில் ஏன் நன்றாக த் தூங்க முடியவில்லையா? என்று கேட்டார். அதற்கு அன்னை என்னால் எப்படித் தூங்க முடியும் மகனே? என் பிள்ளைகள் ஆர்வத்தோடு தீட்சை பெற  வருகிறார்கள். ஆனாதல் பெரும் பாலானவர்கள் தொடர்ந்து முறையாக ஜபம் செய்வதில்லை.ஆனால் அவர்களுடைய நன்மைக்குப் பொறுப்பேற்றுக்  கொண்ட நான் சும்மா இருக்க முடியுமா? எனவே அவர்களுக்காக குருதேவரிடம் ஓ! பகவானே! இந்த உலகில் எங்கு பார்த்தாலும் சொல்ல முடியாத வேதனை நிறைந்திருக்கிறது.அவர்கள் மீண்டும் இந்த உலகில் பிறக்க வேண்டாம்.அவர்களின் ஆன்மீக உணர்வை எழுப்புங்கள்.அவர்களுக்கு முக்தி அளியுங்கள் என்று பிராத்தனை செய்கிறேன் என்றார்.
ஒரு முறை பக்தர் ஒருவர் ஒழுங்காகச் சாதனைகளைச் செய்ய முடியாமல் தடுமாறினார். இதை அவர் அன்னையிடம் கூறியதும் அன்னை தாம் அவருக்கு நிலையான துணையாக எப்போதும்  இருப்பதாக ஆறுதல் கூறினார். இதைக்கேட்ட பக்தர் அன்னையிடம் அம்மா உங்கள் பிள்ளைகள் எங்கிருந்தாலும் அவர்கள் அனைவருக்காகவும் நீங்கள் சாதனைகள் செய்வீர்களா? என்று கேட்டார். அதற்கு அன்னை ஆம், எல்லோருக்காகவும் நான் ஜபம் தியானம் செய்தாக வேண்டும் என்றார். அந்த பக்தர் மேலும் உங்களுக்கோ நிறைய சீடர்கள். அவ்வளவு பேரையும் உங்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியுமா? என்று கேட்டார். அதற்கு அன்னை எவ்வளவு பேரை என்னால் நினைவு படுத்த முடியுமோ,அவர்களை நினைவுபடுத்தி,அவர்களுக்காக ஜபம் செய்கிறேன்.நினைவுக்கு கொண்டுவர முடியாதவர்களுக்காக குருதேவரிடம் பகவானே! எனக்கு எத்தனையோ இடங்களில் எவ்வளவோ பிள்ளைகள் இருக்கிறார்கள், பலருடைய பெயர் கூட என் நினைவில் இல்லை. என் நினைவுக்கு வராத அவர்களையெல்லாம் நீங்கள் தாம் பாதுகாக்க வேண்டும்.அவர்களுக்குக் கருணை காட்டி வாழ்க்கையில் முன்னேறச் செய்ய வேண்டும்.என்று பிராத்திப்பேன் என்று கூறினார். சீடர்கள் குருவுக்குச் செய்வதற்கு மாறாக சீடர்களுக்காக சாதனைகள் செய்த அன்பின் திருவுருவான குருவை வேறெங்கு நாம் காண முடியும்.
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்


Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?