அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-113

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-113

1917-இல் ஒரு முறை அவர் கோயால்பாராவில் தங்கியிருந்தார். அப்போது ஒரு நாள் அங்கே ஆலங்கட்டி மழை பெய்தது. அதைப் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்து கொண்டு, பனிக்கட்டிகளைப்பொறுக்கிச் சேர்ப்பதும், உருவங்களைச் செய்வதுமாகச் சிறுமிகளோடு சிறுமியாக விளையாடிக் களித்தார். விளைவு? ஜீரம் மிகவும் அதிகமாகி விட்டது. எந்தச் சிகிச்சையும் பலனளிக்கவில்லை. சுவாமி சாரதானந்தர்  டாக்டர்களுடன் விரைந்தார். தெய்வாதீனமாக அன்னை அப்போது பிழைத்தார்.
இப்போது கோயால்பாராவிலிருந்து வந்த பிறகு அன்னையின் உடல்நிலை கவலைக்கிடமாகியது. காய்ச்சல் அடிக்கடி வர ஆரம்பித்தது. அங்குள்ள டாக்டர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே அன்னையை உத்போதன் வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்தார் சாரதானந்தர். பிப்ரவரி 24-ஆம் நாள் செவ்வாயன்று அன்னை புறப்படுவதாக ஏற்பாடாயிற்று. விடைபெறும் நோக்கத்துடனோ என்னவோ புறப்படுவதற்கு இரண்டுநாள் முன்பு அன்னை சிம்மவாஹினி கோயிலுக்குச் சென்றார். போய் வருவதற்குள் மிகவும் சிரமப்பட்டார். புறப்படுகின்ற அன்று காலையில் புண்யபூகூர் படிக்கட்டில் கால்தவறி விழுந்து விட்டார். இவ்வாறு ஆறு மாதங்கள் தளர்ந்த நிலையில் ஜெயராம்பாடியில் தங்கிவிட்டு அன்னை கல்கத்தா புறப்பட்டார். அவருடன் வழக்கம்போல் ராது, சுரபாலா, மாக்கு, நளினி மற்றும் பிரம்மசாரி வரதர் ஆகியோரும் வேறு ஓரிரு பக்தைகளும் சென்றனர்.
அன்னை புறப்பட்ட காட்சி காண்பவர் நெஞ்சங்களை எல்லாம் துயரில் ஆழ்த்துவதாக இருந்தது. இது பிறந்தகத்திற்குப் பிரியாவிடை என்பதை அன்னையும் அறிந்திருக்க வேண்டும். அன்னை புறப்பட துவங்கியதும் அந்தச் சின்னஞ்சிறு கிராம மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். இவ்வளவு நாட்கள் நிழல் தந்து, பெற்ற தாயினும் பெருந்தாயாக  இருந்த அன்னை, இப்போது நடக்கவும் முடியாதவராய்த் தளர்ந்து போய் ஊரை விட்டுச் செல்கிறார். இந்தக் காட்சியைக் கள்ளங்கபடமற்ற அந்த கிராம மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களின் கண்கள் அருவிகளாயின. அம்மா! எங்களை  மறந்து விடாதீர்கள்! நோய் குணமாகி சீக்கிரமாக வந்து விடுங்கள்! என்று தழுதழுத்தக் குரலில் வேண்டிக்கொண்டனர். அன்னை தாம் வழிபட்டுவந்த குருதேவரின் படத்தைத் துணியில் சுற்றி பெட்டி ஒன்றில் வைத்துவிட்டு, எல்லாம் குருதேவரின் திருவுளம் போல் நடக்கும். நான் உங்களையெல்லாம் மறக்க முடியுமா? என்றார். பின்னர் எழுந்து வாசலைக் கடந்து வெளியே வந்தார்.
அதன் பின் கிராம தெய்வங்களான சிம்மவாஹினியையும் மற்ற தெய்வங்களையும் பெயர் சொல்லி அழைத்து வணங்கினார். பின்னர்  மெள்ளமெள்ள நடக்கத் தொடங்கினார். பரசன்னரின் மனைவி வழியில் தன் வீட்டிற்கு முன்னால் அன்னையின் திருப்பாதங்களைக் கழுவி வழிபடத் தயாராக நின்றார். அது நிறைவுற்றதும் சிறிது இனிப்பும் தண்ணீரும் உட்கொண்டார். சிம்மவாஹினி முதலான தெய்வங்கள் உறைவதால் ஊர் எல்லை வரை பல்லக்கை மறுத்துவிட்டு நடந்தே சென்றார். வழியில்யாத்ரா  சித்திராயனையும் வணங்கி விடைபெற்றுக்கொண்டார். கையெடுத்துக் கும்பிட்டபடியே நெடுநேரம் நின்றார். பின்னர் பல்லக்கில் ஏறி அமர்ந்தார். அன்னை அமர்ந்ததும் பல்லக்கு புறப்பட்டது. கிராம மக்கள் அதுவரை வந்து கண்ணீருடன் விடை கொடுத்தனர்.
ஜெயராம்பாடியை அன்னை மிகவும் நேசித்தார். தமது காலத்திற்குப் பிறகு எண்ணற்ற தம் பிள்ளைகள் அங்கு வரப்போவதும் அவருக்குத்தெரியும். எனவே தான் ஒரு நாள் சுவாமி சாரதானந்தரிடம், மகனே, நான் மறைந்த பிறகு என்னைத்தேடி என் பிள்ளைகள் எத்தனையோ பேர் இங்கு வருவார்கள்.  வருகின்ற அவர்களுக்குச் சிறிது உணவும் ஓய்வெடுத்துக்கொள்ள இடமும் கிடைக்குமாறு பார்த்துக்கொள், என்று கூறவும் செய்திருந்தார்.
இரவு நெடுநேரம் கழித்து அன்னையும் பிறரும் கோயால் பாரா  சேர்ந்தனர். அன்று இரவு அங்கேயே தங்கினர். மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது வணங்கிய அனைவரையும் மனதார ஆசீர்வதித்தார் அனனை. தாம் வைத்திருந்த கைத்தடியையும் கொசுவலையையும் பிரம்மசாரி ககனிடம் கொடுத்து, இவை பிரசன்னனுடையது, அவனிடமே கொடுத்துவிடு” என்று கூறினார். பிறந்த கத்தைச் சேர்ந்த அவை தம்மிடம் தங்கிவிடக்கூடாது என்று எண்ணினாரோ என்னவோ! அன்னையின் உணர்வைப்புரிந்து கொண்டதாலோ, அவரது அன்பில் கரைந்ததாலோ ககனின் கண்களில் நீர் மல்கியது. அதைக் கண்ட அன்னை வருந்தாதே, சரத் இருக்கிறான் .உங்களைக் கவனித்துக்கொள்வான் என்றார்.
கோதுல்பூர் வழியாக அன்று பகல் இரண்டு மணிக்கு அனைவரும் விஷ்ணுபூரை அடைந்தனர். அங்கே சுரேஸ்வர்சேன் என்ற பக்தரின் வீட்டில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு மறுநாள் அங்கிருந்து ரயில் மூலம் கல்கத்தா புறப்பட்டனர். பிப்ரவரி 27, வெள்ளி இரவு 9 மணிக்கு வண்டி கல்கத்தாவை அடைந்தது.
கல்கத்தா ரயில் நிலையத்தில் அன்னையை வரவேற்க யோகின்மாவும் கோலாப்மாவும் வேறு பல பக்தர்களும் வந்திருந்தனர். இளைத்துக் கறுத்து வண்டியிலிருந்து இறங்கிய அன்னையைக் கண்டதும் அவர்கள் பெரும் அதிர்ச்சியும் சொல்ல முடியாத வேதனையும் அடைந்து, இது என்ன கோலம், அன்னையையா கூட்டி வந்திருக்கிறீர்கள்? எலும்பும் தோலுமாக அவர் ஒரு கரிக்கட்டையைப்போல் அல்லவா உள்ளார்? என்று தங்களை மறந்து கூவிவிட்டனர். பின்னர் எல்லோருமாக உத்போதன் வந்து சேர்ந்தனர்.

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6