அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-102

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-102
-
சுவாமிஜி மேலை நாடுகளிலிருந்து திரும்பி வந்து தமது எண்ணங்களுக்கு ஓர் உறுதியான வடிவம் கொடுப்பதுவரை தத்தளிக்கின்ற கப்பலுக்கு ஒரு கைதேர்ந்த மாலுமிபோல் செயல்பட்டார் அன்னை. இத்தகைய போராட்டத்துடன்  செல்கின்ற துறவியரிடம் மகனே! வெறும் தேசப்பற்று என்ன சாதித்துவிட முடியும்? நமது லட்சியம் குருதேவரே, குருதேவர் மட்டுமே. நீ என்ன வேண்டுமானாலும் செய், ஆனால் குருதேவரைப் பற்றிப் பிடித்திருந்தாயானால் வழிதவற மாட்டாய். என்று அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பார். அவரது ஆன்மீக ஆற்றல் அந்தத் துறவியின் வாழ்க்கைப் போக்கை மாற்றியமைத்து விடும்.
அத்வைத அனுபூதி அதாவது இரண்டற்ற பரம்பொருளுடன் ஒன்று கலந்திருக்கின்ற அனுபவத்தையே மிகவுயர்ந்த ஆன்மீக அனுபவமாக நமது உபநிடதங்கள் கூறுகின்றன. அந்த உயர் லட்சியத்தைக் குறிக்கோளாகக் கொண்டு.உருவ வழிபாடு போன்ற சாதனைகள்இன்றி ஞான நெறி சாதனைகளை மட்டுமே பின்பற்றுகின்ற வகையில் ராமகிருஷ்ண மடங்களுள் ஒன்று அமைய வேண்டும்.என்பது சுவாமிஜி விரும்பினார். அதற்காக இமய மலையில் மாயாவதி என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே அத்வைத ஆசிரமம் ஒன்றை நிறுவினார். அங்கே உருவ வழிபாடு போன்ற எந்தக் கோட்பாடும் இடம்பெறக் கூடாது என்பதைக் கண்டிப்பாக க்கூறியிருந்தார்.ஆனால் அதையும் மீறி அங்கிருந்த துறவியர் குருதேவரிடம் படத்தை வைத்து வழிபாடு செய்தனர். சுவாமிஜியால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனடியாக அங்கே பூஜையை நிறுத்தும்படி கூறிவிட்டார். அங்கிருந்த துறவியர் அப்படியே செய்தாலும் ஓரிருவருக்கு அது என்னவோ சரியாகப் படவில்லை. சுவாமிஜியின் மறைவிற்குப்பின்னர் அன்னையிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டது. நாள்தோறும் குருதேவரின்  பூஜை புனஸ்காரம் என்று வாழ்பவர் அன்னை. எனவே அவர் தங்களுக்குச் சாதகமாக இருப்பார் என்று எண்ணினார். ஆனால் அன்னையோ குருதேவர் ஓர் அத்வைதி,அவர் அத்வைதத்தையே போதித்தார். அவரைப்பின்பற்றுபவர்கள் அனைவரும அத்வைதிகளே என்று பதில் எழுதினார். அதன் பின் எவ்வித மறுப்பும் இன்றி இன்றும் அந்த ஆசிரமம் அத்வைத ஆசிரமமாகவே செயல்பட்டு வருகிறது.
லட்சியப் பிரச்சனைகளில் மட்டுமல்ல.விவேகானந்தர் முதலான குருதேவரின் சீடர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அன்னை வகித்த இடம் மிகவுயர்ந்தது. மேலை நாடுகளைத் தமது ஆன்மீகப்பேராற்றலால் வெற்றிகொண்ட சுவாமிஜி அன்னையின் திருமுன்னர் ஒரு குழந்தையாக மாறிவிடுவதைக் காணும் போது நமது விழிகள் வியப்பால் விரிகின்றன. சுவாமிஜி போன்ற மகான்கள் அன்னையை எப்படிப் போற்றினார்கள் என்பதைக் காணும் போது தான் அன்னையின் உன்னதத்தை நாம் அறிய முடிகிறது.
மேலை நாட்டிலிருந்து திரும்பி வந்த சுவாமிஜி அக்டோபர் 1898-.இல் அன்னையை தரிசிக்கச் சென்றார். அப்போது தான் அவர் காஷ்மீர் சென்று வந்திருந்தார். காஷ்மீரில் நடந்த  ஒரு நிகழ்ச்சி அவரைச்சற்று கலங்கச் செய்திருந்தது. அன்னையைக் கண்டதும் அவர் புகார் கூறும் தொனியில் அம்மா உங்கள் குருதேவரின் ஆற்றல் பிரமாதம் தான்! காஷ்மீரில் ஒரு சாது இருந்தார். அவரது சீடன் என்னிடம் வரத் தொடங்கினான். அதனால் கோபமுற்ற அவர் எனக்கு வயிற்று நோய் கண்டு மூன்றே நாளில்  அங்கிருந்து புறப்பட்டு விடுவேன் என்று சபித்துவிட்டார். அப்படியே நடக்கவும் செய்தது. உங்கள் குருதேவரால் என்னைக் காக்க முடியவில்லை என்று கூறினார்.
அதற்கு அன்னை மகனே,அந்த சாது  பெற்றுள்ள சித்திகளின் விளைவு அது. அவற்றின் ஆற்றலை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். குருதேவர் அவற்றை நம்பினார். அவர் எதையும் அழிக்க வரவில்லை. எல்லா நெறிகளையும்  அவர் ஏற்றுக்கொண்டார் என்றார். சுவாமிஜி விடாமல் இனி தாம் குருதேவரை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றார். அதற்கு அன்னை  சற்று கேலி கலந்த குரலில்,” என் மகனே,அது உன்னால் முடியக்கூடிய காரியமா? என் குடுமி அவர் கையில் அல்லவா உள்ளது என்றார்.
மற்றொரு முறை நடைபெற்ற நிகழ்ச்சியைப்பற்றி அன்னையே கூறினார். ஒரு முறை சுவாமிஜி அன்னையிடம் சென்று,அம்மா என்னிடமிருந்து அனைத்தும் பறந்து கொண்டிருக்கின்றன.எல்லாமே என்னை விட்டுப் பறப்பதை நான் காண்கிறேன், என்றார். அதற்கு அன்னை சிரித்தவாறே,நரேன் கவனமாக இரு. நானும் பறந்து விடாமல் பார்த்துக்கொள் என்றார். உடனே சுவாமிஜி நீங்கள் என்னிடமிருந்து பறந்துவிட்டால் என் கதி என்னவாகும்! குருவின் பாதகமலங்களின் மகிமையை உணர்த்தாத ஞானம் ஒரு ஞானமா? அது அஞ்ஞானமே . குருவின் திருப்பாதங்களைத் தவிர வேறெங்கிருந்து ஞானம் உதிக்க முடியும்? என்று அதற்கு பதில் கூறினார்.


--
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்


Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6