ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-26

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-26

நாட்கள் செல்லச்செல்ல கதாதரரின் பக்தியும் ஆன்மதாகமும் அதிகரித்துக்கொண்டே சென்றன. லட்சியத்தை நோக்கி மனம் இடைவிடாமல் சென்று கொண்டிருந்ததால் அவரது உடலில் பல மாறுதல்கள் ஏற்பட்டன.
பசி, தூக்கம், ஆகியவை குறைந்தன. மூளை, மார்புப் பகுதிகளில் ரத்தம் வேகமாகச் சென்றதால் அவரது மார்பு எப்போதும் சிவந்து காணப்பட்டது. கண்கண் அடிக்கடி நீரால் நிரம்பி  நின்றன.
அன்னையை நேரில் காணும் ஆவலும், ஏக்கமும் தீவிரமாகி, என்ன செய்யலாம்? என்ன செய்தால் அன்னையின் திருக்காட்சி கிடைக்கும்? என்ற எண்ணம் தொடர்ந்து அவர் மனத்தில் ஆர்ப்பரித்துக்கொண்டே இருந்தது. அதனால் பூஜை, தியான வேளைகளைத் தவிர மற்ற நேரங்களில் அவரது உடலில் ஒரு பரபரப்பும் அமைதியின்மையும் காணப்பட்டது.
பின்னாளில் குருதேவர் கூறினார், ஒரு நாள் அன்னையின் திருமுன்னர் பாடிக்கெண்டிருந்தேன். அவளது அருட்காட்சிக்காக என்னையும் மீறி அழுதவாறே, அம்மா எவ்வளவு தூரம் அழைக்கிறேன். எதுவும் உன் செவிகளில் விழவில்லையா? ராமபிரசாதருக்குக் காட்சி அளித்தாய். ஏன் என் முன் மட்டும் வராதிருக்கிறாய்? என்று பிராத்தனை செய்தேன்.

அன்னையின் திருக்கோலத்தைக் காண முடியவில்லை.என்ற துயரம் என் இதயத்தை வாட்டியது. ஈரத்துணியை முறுக்கிப்பிழிவது போல என் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போன்ற வேதனையை நான் அனுபவித்தேன்.
ஒரு வேளை அன்னையின் காட்சி கிடைக்காமலே போய் விடுமோ என்ற தவிப்பு என்னுள் அளவு கடந்த துயரத்தை உண்டாக்கியது.
இப்படி வாழ்வதால் எவ்வித பயனும் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். அப்போது கோயிலில் இருந்த வாளின் மீது தற்செயலாக என் பார்வை விழுந்தது.
அந்தக் கணமே வாளால் என் உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணினேன். பைத்தியக்காரனைப்போல ஓடிச்சென்று அந்த வாளை எடுத்தேன்.
மறுகணமே் அகிலாண்டேசுவரியான அன்னை என்முன் தோன்றினாள்.
நான் நினைவிழந்து கீழே விழுந்தேன்.
வெளி உலகில் என்ன நடந்தது என்பதோ அந்த நாளும் மறுநாளும் எப்படிக்கழிந்தன என்பதோ எனக்குத் தெரியாது.
ஆனால் என் இதயத்தின் ஆழத்தில் இதுவரை அனுபவித்திராத ஓர் எல்லையற்ற ஆனந்தம் பொங்கிப் பெருகுவதை உணர்ந்தேன்.
 ஒளி மயமான அன்னையின் தரிசனம் பெற்றேன்.
வேறொரு  சமயத்தில் குருதேவர் தமது முதற்காட்சியைப்பற்றி மிகவும் விளக்கமாகக்கூறினார்.
வீடு, கோயில், கதவு அனைத்தும் அடியோடு மறைந்து போனது போலிருந்தது!
எங்கும் எதுவும் இல்லாதது போல் தோன்றிற்று. நான் கண்டதெல்லாம் கங்குகரையற்ற ஞானப்பேரொளிக் கடல் ஒன்றையே!
எவ்வளவு தூரம் எந்தத் திசையில் நோக்கினாலும் ஒளிமயமான அலைகள் கொந்தளித்துக் குமுறியபடி முன்னோக்கிப்பெரும் வேகத்துடன் வந்து கொண்டிருந்த அந்தக்கடல் தான் தெரிந்தது.
அந்த அலைகள் அப்படியே விரைந்து வந்து என்னைக்கௌவிக்கொண்டு ஆழங்காண முடியாத பேரின்ப சாகரத்தில் மூழ்கடித்துவிட்டன.
நான் போராடினேன். துடித்தேன், வெளியுலக நினைவிழந்து வீழ்ந்தேன்.
தமது முதற்காட்சியின் போது ஞானப்பேரொளி வெள்ளத்தைக் கண்டதாக குருதேவர் கூறியுள்ளார்.
அப்படியானால் வரமும் அபயமும் அளிக்கின்ற திருக்கரங்களைக்கொண்ட சுத்த சைதன்ய மயமான அன்னை?
குருதேவர் தாம் கண்ட ஒளி வெள்ளத்தில் அன்னையின் அந்த உருவத்தையும் கண்டாரா? அவர் கண்டதாகத் தான்தெரிகிறது.
ஏனெனில் புறவுணர்வை இழந்து கிடந்த அவர் சுய உணர்வு பெற்றபோது அம்மா, அம்மா என்று நாத்தழுதழுக்க உணர்ச்சி பொங்கக் கூறியதாக நாங்கள் கேள்விப்பட்டோம்.
இந்த அற்புதத் திருக்காட்சி மறைந்தபோது குருதேவரின் ஏக்கம் முன்பைவிடப் பன்மடங்காகியது.
 சைதன்ய மயமான அன்னை எப்போதும் தமக்கு தரிசனம் தர வேண்டும் என்ற தீவிர ஏக்கம் அவரை ஆட்கொண்டது. இடைவிடாது அவளிடம் முறையிட்டு மனத்திற்குள் கதறினார்.
பொதுவாக அந்த ஏக்கம் புறத்தே தெரியவில்லை. எப்போதும் அவர்அழுது கொண்டும் புரண்டு கொண்டும் இருக்கவில்லை.ஆனால் நீறுபூத்த நெருப்பாக அந்த ஏக்கம் அவரது உள்ளத்தில் கனன்று கொண்டே இருந்தது.
சில வேளைகளில் அந்தத்துயரம் அடக்க முடியாதபடி பொங்கிவிடும். அப்போது தரையில் விழுந்து புரள்வார், துடிப்பார், அம்மா! அருள்மழை பொழிவாய்! என் முன் எழுந்தருள்வாய்! என்று வேண்டுவார்.
 இப்படிக் கண்ணீர் உகுத்துக் கதறி அழும்போது அவரைச்சுற்றிலும் மக்கள் கூடி விடுவர். தம்மைப்பார்த்துமற்றவர்கள் என்ன நினைப்பார்கள்  என்ற எண்ணம் சிறிது கூட அவரிடம் எழவில்லை.
பிற்காலத்தில் அவர், அப்போது என்னைச்சுற்றி நின்ற மனிதர்கள் வெறும் நிழல்களாக, சித்திரங்களாக எனக்குத் தோன்றினர்.
என் மனத்தில் எள்ளளவும் வெட்கமோ தயக்கமோ எழவில்லை. இப்படித் தாங்க முடியாத மனவேதனையினால் துடித்து புறவுலக நினைவிழக்கும் போதெல்லாம் ஆனந்தமயமான அன்னை என் முன் தோன்றுவாள்.
அவள் சிரித்தாள், பேசினாள், ஆறுதல் கூறினாள், கணக்கற்ற வழிகளில் எனக்குக் கற்பித்தாள் என்று கூறியுள்ளார்.

தொடரும்..

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?