Friday 22 April 2016

விவேகானந்தரை பற்றி

விவேகானந்தரின் ஜென்ம தினத்தையொட்டி, 1921 ஜனவரி 30 அன்று பேலூர் ராமகிருஷ்ண தலைமை மடத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற மகாத்மா காந்தி தமது உரையில் மறைந்த மகான் விவேகானந்தரிடம் தமக்கு அத்தியந்த மரியாதையும் ஈடுபாடும் உண்டு என்றார்.
""சுவாமிஜி எழுதியுள்ள பல புத்தகங்களை நான் ஆழ்ந்து படித்தறிந்துள்ளேன். எனது குறிக்கோள்கள் யாவுமே அந்த மாமனிதனின் லட்சியங்களுக்குப் பல்வேறு கூறுகளில் ஒத்ததாக அமைந்துள்ளது எனக் கண்டேன். இன்று மட்டும் விவேகானந்தர் உயிரோடிருந்திருந்தால் ஆன்மிகம் இழைந்த தேசிய விழிப்புக்கு நாங்களிருவரும் கைகோத்துப் பாடுபட்டிருப்போம். எனினும், அன்னாரது தெய்வதம் நம்மிடையே நிலவி வருகிறது. அவரது எழுச்சிமிகு பேச்சுகள் நம் அனைவருக்கும் உந்துதல் அளித்துவரும்'' என்றார் - (""கலக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி'', நூல் 19, பக். 307-8).,,,...........
என்னுடைய கருத்தின்படி, இந்திய விடுதலைப் போருக்கு உரிய தேசியப் போராட்டத்தைத் துவக்கிய மாமனிதர்களில் சுவாமி விவேகானந்தரும் ஒருவர். அதோடு, அந்த விடுதலைப் போராட்ட இயக்கத்தை விவேகானந்தருக்குப் பிறகு நாடு முழுவதும் பரப்பிய பலரும் அதற்கு உரிய வலிமையையும் வேகத்தையும் அவரிடமிருந்துதான் பெற்றார்கள். பெரும்பாலும் நேரடியாகவும் மறைமுக மாகவும், இன்றைய இந்தியா சுவாமி விவேகானந்தரால்தான் உருவாக்கப்பட்டது. அவருடைய முழக்கம், இந்தியாவின் இதயத்திலிருந்து எழுந்த முழக்கமாகும். அவர் அன்றைய இந்தியாவின் அடிமைத்தனம் ஆன்மிகச் சீரழிவு முதலிய அனைத்தையும் ஆண்மையோடு எதிர்த்துப் போரிட்டார்; எதிர்த்து வீர முழக்கம் செய்தார்.
இந்தியா தன்னுடைய வீரத்தையெல்லாம் இழந்து கோழையாக இருந்த சமயத்தில் இந்த நாடு ஆண்மை இழந்து சிதறிப் போயிருந்த சமயத்தில் அவர் இந்திய நாட்டிற்கு வீரத்தையும் ஆண்மையையும் ஊட்டினார். பெரிய ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர்: விவேகானந்தர், தான் வாழ்ந்த காலத்தில் இந்தியா வீரத்தையும், ஆண்மையையும் அடியோடு இழந்து பேடியாக நிற்பதைப் பார்த்தார். அதனால் அவர் இந்தியா முழுவதிற்கும் இந்தியா வின் மூலைமுடுக்குகளில் இருந்த ஒவ்வோர் இந்தியனின் நாடி நரம்பிற்கும் தன்னிடமிருந்து வலிமை என்ற ஆற்றலை வாரி வாரி வழங்கினார். அவ்விதம் அவர் வீசிய அந்த வலிமை வாய்ந்த அறிவுரைகள் நம் மக்கள் உள்ளத்தில் பதிந்து பெரிய ஒரு புரட்சியையே ஏற்படுத்தின.....ஜவஹர்லால் நேரு
-..............
யாராவது ஒருவர் என்னிடம் வந்து, ""குழந்தைகள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்? எந்த ஒரு பெரியவரை முன்னு தாரணமாக வைத்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்?'' என்று கேட்டால் இந்தக் குழந்தைகள் கற்றுக்கொள் வதற்கு என்று நிறைய விஷயங்கள் இருக் கின்றன; அவர்கள் தாங்கள் முன்மாதிரியாக ஒருவரை வைத்து, தாங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கும் வரலாற்றில் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் இளைய தலைமுறையினர் பின்பற்றிச் சிறந்த பயன் அடைவதற்கு உரிய ஒரே ஒருவராக, சுவாமி விவேகானந்தர் ஒருவரை மட்டும்தான் என்னால் காட்ட முடியும். அவரைத் தவிர, வேறு யாரையும் காட்டும் ஆற்றல் எனக்கு இல்லை.
நாம் சரியான பாதையில் நடக்க வேண் டும். நம் சிந்தனைகளை நாம் தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு நான் நீங்கள் பின்பற்றக்கூடிய இலட்சிய மனிதராக குழந்தைகளும் இளவயதிலி ருந்தே பின்பற்றக்கூடிய வீரராக என்னால் சுவாமி விவேகானந்தர் ஒருவரை மட்டும் தான் உங்கள் முன்பு நிறுத்த முடியும். சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களி லிருந்து, தங்களுக்குத் தேவையான எல்லா ஆற்றல்களையும் இளைய தலைமுறையினர் பெற முடியும்.
நம் நாட்டு மக்களை அதிலும் முக்கிய மாகச் சிறுவர்களையும் இளைஞர்களையும் ""விவேகானந்தரின் வாழ்க்கையை உங்களுக்கு முன்மாதிரியாக வைத்துக் கொள்ளுங்கள்'' கொள்ளுங்கள்'' என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இன்றைய இளைய சமுதாயம் சுவாமி விவேகானந்தரிடமிருந்து பொங்கிப் பெருகும் அறிவாற்றல், உற்சாகம், ஆர்வம் ஆகியவற்றைப் பெற்றுப் பயனடையும் என்று நான் நம்புகிறேன்......ஜவஹர்லால் நேரு
சுவாமி விவேகானந்தரைப் பற்றி நான் நினைத்தாலும், எழுதினாலும் என் மனம் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கிறது. அவர் எழுதிய கடிதங்களின் தொகுப் பும், உரையாடல்களின் தொகுப்பும், அவர் எழுதிய மற்ற நூல்களையும் சொற்பொழிவு களையும்விடச் சுவையானதாக இருக்கிறது. அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பலருக்குக் கிடைத்தபோதிலும், அவரை உண்மையில் ஒரு சிலர்தான் அறிந்துகொள்ள முடியும்.
அவரது குணங்களும் அறிவாற்ற லும் அவரது அறிவுரைகளைக் காட்டிலும், எழுத்துக்களைக் காட்டிலும் இந்திய மக்களை மிகவும் கவர்ந்தன என்றால் மிகையாகாது. சுவாமிஜி வேகம் உடையவர். அவர் சுயநலமற்ற தியாகமும், தளராத ஊக்கமும், கரைகாண இயலாத அன்பும் உடையவர். பரந்த அறிவும் ஆழ்ந்த எண்ணங்களும் கொண்டவர். எதிர்த்துப் போராடுவதில் மனஉறுதி உடையவர். என்றாலும் அவர் குழந்தை உள்ளம் கொண்டிருந்தார். அவர் நமது நாட்டின் அரும் பெரும் செல்வமாக இருக்கிறார்.அவருடைய உயர்ந்த குணங்களைப் பற்றி எவ்வளவோ எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் எத்தனை எழுதினாலும், அந்த மகானின் உயர்வைப் பற்றி முழுமை யாக எழுத முடியாது. அதை அளந்து கூறுவது எளிதல்ல. சுவாமி விவேகானந்தர் உயர்ந்தவர், ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளவர், சுலபத்தில் நம்மால் எடைபோட முடியாதவர். ஆன்மிகத்துறையின் உச்சியை அடைந்திருந்த அவர், தனது வாழ்நாட்களை இந்திய மக்களுக்கும் உலக மக்களுக்கும் அர்ப்பணித்தார். அவர் இப்போது உயிருடன் இருந்தால், நான் எப்போதும் அவர் காலடியில் அமர்ந்திருக்கவே விரும்புவேன். உண்மையில் இன்றைய இந்தியா அவரால் உருவாக் கப்பட்டதாகும்-----சுபாஷ் சந்திர போஸ்
கண்களைக் கவரும் வடிவம், மஞ்சளும் சிவப்பும் கொண்ட வண்ண உடை அணிந்தது, சிகாகோவில் இருண்ட ஆகாய மண்ட லத்தின் நடுவில் இந்தியாவின் ஞானசூரியன் போலத்திகழ்வது, ஊடுருவி நோக்கும் கண்கள், வேகத் தோடு விரைந்தெழும் இயக்கங்கள் இது சிகாகோ சர்வசமயப் பேரவை யில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் உபயோகிப்பதற்கு என்று
ஒதுக்கி யிருந்த அறைகளில் ஒன்றில், நான் சுவாமி விவேகானந்தரைப் பார்த்த போது என் உள்ளத்தில் தோன்றிய எண்ணமாகும்.
அவர் ஒரு வீரத்துறவி. ஆம், அவரிடம் நான் வீரர்களுக்கு உரிய பண்புகளையே முதலில் பார்த்தேன். அவர் சிகாகோ சர்வசமயப் பேரவையில், சொற்பொழிவு மேடையை  விட்டுச் சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்தார். அவரது உருவம், இந்தியாவின் பண்புகளையும் பெருமைகளையும் தாங்கியிருந்தது.
இன்று இருக்கும் மதங்களில் மிகவும் பழமை வாய்ந்த இந்துமதத்தின் பிரதிநிதி அவர்; இந்திய மகனாகிய அவர், இந்தியாவின் தூதராக இந்தியத் தாயின் செய்தியை சிகாகோ சர்வ சமயப் பேரவைக்குக் கொண்டு வந்திருந்தார். அங்கு அவர், அந்த இந்தியத் தாயின் பெயரால் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அவரது இந்துமத விளக்கச் சொற்பொழிவு களைக் கேட்டு, சிகாகோ சர்வசமயப் பேரவையில் கலந்துகொள்ள வந்திருந்த மக்கள் எல்லோரும் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அந்தப் பேரவையில் விவேகானந்தரின் சொற்பொழிவு முடிந்தபிறகு வெளியே வநத ஒருவர், ""இந்த மனிதரா கதியில்லாத இந்துமதத்தைச் சேர்ந்தவர்! இவரைச் சேர்ந்த இந்திய மக்களுக்கு நாம் போய்க் கிறிஸ்துவப் பாதிரிமார்களை அனுப்பி வைக்கிறோமே! அவர்கள் நமக்கு இந்துமதப் பிரசாரகர்களை இங்கு அனுப்பி வைப்பதுதான் மிக வும் பொருத்தமாக இருக்கும்'' என்று கூறினார்.
விவேகானந்தரைப் பற்றி  அன்னி பெசண்ட் அம்மையார் கூறியது
ஆஹா! சுவாமி விவேகானந்தரைப் போன்று பத்து பேர் இப்போது இருந்தால், இன்னும் ஒரு வருடத் திற்குள் இந்து தர்மத்தின் வெற்றிக்கொடியை உலகம் எங்கும் நாட்டலாம்.
சுவாமி விவேகானந்தர், யோசனை செய்யாத பெரிய விஷயமே கிடையாது. அவருக்குத் தெரியாத முக்கிய சாஸ்திரம் எதுவுமே
கிடையாது. அவருடைய அறிவின் வேகத்திற்குத் தடையே கிடையாது. அவருடைய தைரியத்திற்கோ எல்லையே கிடையாது. கண்ணபிரான் கீதை உபதேசம் செய்து, எல்லா விதமான மக்களின் சந்தேகங்களையும் அறுத்து வேதஞானத்தை நிலைநிறுத்திய காலத்திற்குப் பிறகு, இந்துமதத்தின் உண்மைக் கருத்துக்களை முழுவதும் மிகவும் தெளிவாக, எல்லா மக்களுக்கும் புரியும் வகையில் எடுத்துக் கூறிய ஞானி விவேகானந்தரே ஆவார் என்று தோன்றுகிறது.
"அமெரிக்காவிற்குச் சென்று ஹிந்து மதப் பிரச்சாரம் செய்ய வேண்டும்' என்ற நோக்கத்தில், சுவாமி விவேகானந்தர் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குச் சென்ற மாத்திரத்தில், வேதசக்தியாகிய பராசக்தி அவருக்கு ஞானச்சிறகுகள் அருள் புரிந்துவிட்டாள். அவர் ஜப்பானி லிருந்து இந்தியாவுக்கு எழுதிய கடிதங்களில், புதிய ஜ்வாலை தோன்றத் தொடங்கிவிட்டது; நவீன ஹிந்து தர்மத்தின் அக்கினி அவருடைய உள்ளத்தில் இறங்கி நர்த்தனம் செய்யத் தொடங்கிவிட்டது.
"பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய நாகரிகத்துக்கு இலட்சிய பூமியாக விளங்கிய அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ஹிந்து தர்மம் தன் வெற்றிக்கொடியை நிலைநாட்ட வேண்டும்' என்று, இறைவனின் சங்கல்பம் இருந்தது. அதற்கு சுவாமி விவேகானந்தர் கருவி யாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
ஹிந்து தர்மத்தின் புதிய கிளர்ச்சிக்கு, ஹிந்து தர்மத்தின் மறுமலர்ச்சிக்கு விவேகானந்தர் ஆரம்பம் செய்தார். அவரை தமிழ் நாடு முதலில் அங்கீகாரம் செய்த பிறகுதான் வங்கம், மகாராஷ்டிரம் போன்ற இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.
"விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அஸ்திவாரம் போட்டவர்' என்பதை உலகம் அறியும்............
விவேகானந்தரை பற்றி மகாகவி பாரதியார்

About me

நான் 6 ஆண்டுகள் (2000-2005) வரை ராமகிருஷ்ண மடத்தில் துறவிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். தற்போது நான் அங்கு இல்லை. ஏன்? அங்கு இல்லை.நீங்கள் வெளியேற காரணம் என்ன என்று கேட்கிறீர்கள்.இதற்கான விடையை சற்று விரிவாக தருகிறேன். நான் எனது 20வது வயதில் கடவுளை காணவேண்டும் என்ற எண்ணத்தில் ராமகிருஷ்ண மடத்தில் சேர முயற்சித்தேன்.ஆனால் மடத்தின் செயல்பாடுகளை நன்கு தெரிந்து கொண்டபின் சேரவும் என அறிவுறித்தினார்கள்.அதனால் 2 வருடம் volunteer ஆக பணிபுரிந்தேன்.அதாவது வாரத்தில் 2 நாட்கள் அங்கே உள்ள பணிகளை செய்வது.மற்றும் திருவிழா நாட்களில் பணிபுரிவது.22வது வயதில் மடத்தில் துறவிக்கான பயிற்சியில் அங்கே சேர்ந்தேன்.2005 ல் கல்கத்தா பேலூர் மடத்தில் பயிற்சியை முடித்த சமயத்தில் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்தது.மடத்தில் இருந்தால் அதை செய்ய முடியாது.அதே நேரத்தில் மடத்தை விட்டு வெளியேறவும் விருப்பம் இல்லை. இந்த இக்கட்டன நிலையில் முடிவை குருதேவர் ராமகிருஷ்ணரிடம் ஒப்படைத்தேன்...ஒரு நாள் பேலுர் மடத்து நிர்வாகிகள் என்னை அழைத்து .உனக்கு இங்கு கிடைக்க வேண்டிய அனைத்து பயிற்சிகளும் கிடைத்துவிட்டது.இனி நீ மடத்தில் தங்க தேவையில்லை.உனது விருப்பம் போல செயல்படலாம் என்றார்கள்... நான் வெளியே வந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டது. தற்போது சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஓரளவு முன்னனேற்றம் ஏற்பட்டிருக்கிறது....

whatsapp status Tamil