அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-86

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-86

உண்மையான குரு-சிஷ்ய உறவு என்பது  சாதாரண உலகியல் உறவுகளைப்போல்  வெறும் விளிச்சொற்களால் மட்டும் அமைந்து விடுவதில்லை. மிக முக்கியமான மூன்று நிபந்தனைகளைப்பூர்த்தி செய்யும் போது மட்டுமே ஒருவர் உண்மையான குருவாக முடியும்.
1.மனப்பாங்கிற்கு ஏற்ற பாதையைக் காட்டுதல்.
2. ஆன்மீகப் பாதையில் வரும் தடைகளை விலக்குதல்.
3.சீடனின் பாவங்களை ஏற்றுக்கொள்ளல்.
மேற்கண்ட இந்த நிபந்தனைகளைப் பார்க்கும்போது குரு என்ற பொறுப்பின் பரிமாணத்தை நாம் ஊகிக்க முடியும். மற்றொருவரின் பொறுப்பை ஏற்றுக் கொள்வது என்பது சாமானிய காரியமா என்ன? குரு தேவர் கூறுவதுபோல் இறைவனின் ஆணை பெற்றவர் மட்டுமே அதைச்செய்ய முடியும். இதனால் தான் குரு-சிஷ்ய உறவை மற்ற எல்லா உறவுகளையும் விட மேலானதாக,புனிதமானதாக இந்து சமயம் போற்றுகிறது. ஒருவர் அல்ல, இருவர் அல்ல,நூற்றுக்கணக்கானோரின்       பொறுப்பை ஏற்றுக்கொண்டார் அன்னை.அவரால் எப்படி இது முடிந்தது? அவரது குருநிலை தெய்வீகத் தாய்மையைப் பின்னணியாகக் கொண்டிருந்ததால் தான் வருகின்ற அனைவரையும் இப்படி வாரியணைத்துக் கொள்வது சாத்தியமாயிற்று. தாயன்பால் கவரப்பட்டு தம்மிடம் வருபவர்களுக்கு,குருவாக இருந்து தீட்சை அளித்து தமது தெய்வீக ஆற்றலால் அவர்களுக்கு முக்திப்பாதையைக் காட்டினார் அன்னை. இந்த தெய்வீகத் தாய்மை அவரது சிறப்பம்சமாக இருந்தது. அவரது  ஈடிணையற்ற அன்பினால் கவரப்பட்டு அவரை மானுடத் தாயாகக் கருதத் தலைப்பட்ட பலரிடம் அன்னை மகனே, நான் என் அன்னை தான். அதில் ஐயமில்லை.ஆனால் நான் என் குருவும் கூட என்பதை மறந்து விடாதே, என்று கூறுவதுண்டு.
தம்மிடம் தீட்சை பெற வருபவர்களுள் பலர் அதற்கான தகுதியற்றவர்கள் என்பது அன்னைக்குத் தெரியும்.ஆனால்  அவரது பெருங்கருணை அவர்களின் குறைகளை ஒதுக்கி வைத்துவிட்டது. இதைப்பற்றி அவர் சீடர் ஒருவரிடம், மகனே! என்னிடம் தீட்சைக்காக வருபவர்களுள் பலர் ஒன்றுக்குமே உதவாதவர்கள் என்பது எனக்குத்தெரியும். அவர்கள்  செய்யாத பாவங்கள் எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் என்னை அம்மா என்று அழைத்ததும், நான் அனைத்தையும் மறந்து விடுகிறேன். அவர்களும் தங்கள் தகுதிக்கு அதிகமாக என்னிடமிருந்து பெற்றுச் செல்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அன்னையிடம் தீட்சை பெற்று உயர்ந்தோர் எண்ணற்றோர். அவர்கள் அத்தனை பேரையும் பற்றியோ அல்லது அன்னை குருநிலையில் எவ்வாறெல்லாம் அருள் புரிந்தார் என்பதையோ அறிந்து கொள்வது மனித சக்திக்கு அப்பாற்பட்ட காரியம். மேலே நாம் கண்ட மூன்று நிபந்தனைகளும் அன்னையின் குருநிலையில் எவ்வாறு  நிறைவேறின. என்பதையும் குருநிலையில் அன்னையின் தனித்தன்மையையும் மட்டும் நம்மால் இயன்ற அளவு இங்கே காண முயற்சிப்போம்.
எந்த துறையிலும் சரி,சரியான பாதையை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டோமானால் குறிக்கோள் நிறைவேறியே தீரும் என்பார் சுவாமி விவேகானந்தர். மனிதர்கள் உடலமைப்பில் மட்டுமல்ல மன அமைப்பிலும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள். மனப்பாங்கிற்கேற்ப அவர்களின் பாதைகள் மாறுபடுகின்றன. தவறான பாதையைத் தேர்ந்தெடுத்த ஒருவன் தலைகீழாக நின்று சாதனைகள் புரிந்தாலும் முன்னேறுவதில்லை. ஓர் அதிசயமான உண்மை என்னவென்றால் பிறரைப் பற்றிய விஷயங்களை அக்குவேறு ஆணிவேறாக அறிந்திருக்கின்ற நமக்கு நம்மைப்பற்றி நமது மன அமைப்பைப்பற்றி எதுவும் தெரியாது.
இங்கு தான் ஒரு குரு தேவைப்படுகிறார். உண்மையான குருவால் மட்டுமே நமக்கேற்ற பாதையைக் காட்ட முடியும், அன்னையைப் பொறுத்தவரை பார்த்ததுமே ஒருவரை முழுமையாக எடைபோட்டு விடுவார். முதலில் அவர் இல்லறத்தில் ஈடுபடுவாரா,இல்லை துறவற வாழ்வை ஏற்று நடப்பாரா என்பதைக் கண்டு  அதற்கேற்ப அவரிடம் பழகுவார். சில வேளைகளில் இது வியப்பூட்டுவதாகவும் விந்தையாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியைக் காண்போம்.
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6