ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-20

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-20

கல்கத்தாவுக்கு வந்த கதாதரர் தனக்கு அளிக்கப்பட்ட பணியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். பூஜை அவருக்கு விருப்பமான ஒன்றானதால் மகிழ்ச்சியுடன் அதில் ஈடுபட முடிந்தது. அண்ணனுக்கு உதவியாக வீடுகளில் சென்று பூஜைகளைச் செய்ததடன் அவரிடம் சிறிது கல்வியும் கற்று வந்தார். புன்முறுவல் மாறாத முகம் கொண்ட நற்பண்புகள் மிக்க அந்த இனிய இளைஞர் விரைவில்அனைவரின் அன்பையும் பெற்றார். காமார்புகூர் பெண்களைப்போலவே இங்கும் உயர் குடும்பங்களிலுள்ள பெண்கள்  கூட கதாதரரின் சுறுசுறுப்பு, களங்கமற்ற நடத்தை, இனிய சொற்கள், பக்தி ஆகியவற்றால்  கவரப்பட்டு எவ்வகைத் தயக்கமும் இன்றி அவரிடம் பழகினர். சிறுசிறு வேலைகளை கதாதரரிடம் கூறிச் செய்வித்த அவர்கள் முக்கியமாக,  இனிய குரலில் அவர் பாடுகின்ற பக்திப் பாடல்களைக்கேட்க மிகவும்       விரும்பினார். காமார்புகூரில் இருந்தது போலவே கல்கத்தாவிலும் கதாதரரைச் சுற்றி ஆண்களும், பெண்களுமாக ஒரு கூட்டம் தானாகவே அமைந்தது.ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் கதாதரர் அவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழித்தார். ஆகவே இங்கு வந்தும் கதாதரருடைய படிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இவை அனைத்தையும் ராம்குமார் கவனித்து வந்தாலும் கதாதரரிடம் எதுவும் சொல்லவில்லை. குடும்பத்தின் கடைசிப் பையனான அவனைத் தாயன்பினின்று பிரித்து, சொந்த வசதிக்காக கல்கத்தாவுக்கு அழைத்து வந்தது ராம்குமாரின் மனத்தில் ஒரு சுமையாக உறுத்திக்கொண்டிருந்தது. இதைவிட முக்கியமான வேறு ஒரு காரணமும் இருந்தது. கதாதரரின் நற்பண்புகளால் கவரப்பட்ட மக்கள் அடிக்கடி அவரைத் தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்வதுண்டு.
 அவ்வாறு அவர் செல்வதற்குத் தடைவிதித்து, அந்த மகிழ்ச்சியில் குறுக்கே நிற்க ராம்குமார் விரும்பவில்லை. கட்டுபாடுகள் விதித்தால் தம்பியின் கல்கத்தா வாழ்க்கை ஒரு வனவாசமாகி விடும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. குடும்பத்தில் வாழ்க்கைத்தேவைக்கான வசதிகள் இருந்திருப்பின் தம்பியைக் கல்கத்தாவிற்கு அழைத்து வந்திருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.காமார்புகூருக்கு அருகிலேயே ஏதாவது கிராமத்திற்கு அவனை அனுப்பி ஒரு பண்டிதரிடம் கல்வி கற்கச் செய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் அவன் அம்மாவுடன் தங்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கும் என்றெல்லாம்எண்ணி மனம் வருந்திய ராம்குமார் சில மாதங்கள் கதாதரரைக் கடிந்து எதுவும் சொல்லவில்லை.ஆயினும் கடமையுணர்வினால் உந்தப்பட்டு அவர் ஒரு நாள் படிப்பில் கவனம் செலுத்துமாறு கதாதரரைச் சிறிது கடிந்து கொண்டார்.ஏனெனில் இன்று கதாதரர் இப்படி இறையுணர்வில் தன்னை மறப்பதும் பாடல்களில் லயிப்பதுமாக இருந்தாலும் என்றாவது ஒரு நாள் இல்லற வாழ்வில் ஈடுபட்டுத்தானே தீர வேண்டும்! இப்போது உலக விஷயங்களில் ஈடுபட்டுத் தன்னை முன்னேற்றிக் கொள்ளாவிடில் வேறு எப்போது முடியும்? தம்பியின் மேலிருந்த அன்பும் சொந்த வாழ்க்கை அனுபவமும் ராம்குமாரை இவ்வாறெல்லாம் எண்ணவும் நடந்து கொள்ளவும் தூண்டியிருக்க வேண்டும்.
தன்னலம் மிக்க உலகத்தின் கடினமான வழிகளினால் தமக்குத் துன்பங்கள் நேர்ந்து அவற்றால் சிறிது அனுபவம் பெற்றிருந்தாலும் ராம்குமார் தன் தம்பியின் அசாதாரணமான மனநிலையைப்பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.கதாதரர் இந்த இளவயதிலேயே சம்சார சாகரத்தில் உழலும் மனிதர்களின் எல்லா வகையான பயனற்ற முயற்சிகளையும் அவர்கள் வாழ்நாள் முழுவதம் துன்பப்படுவதைன் நோக்கத்தையும் புரிந்து கொண்டுள்ளார். ஓரிரு நாட்களில் மறையக்கூடிய  இன்பங்களின் நிலையாமையை அறிந்து கொண்டுள்ளார் என்பதையெல்லாம் ராம்குமார் கனவிலும் கருதவில்லை. பெற்றோர்களின் செல்லக்குழந்தையாக வளர்ந்த அவனைக் கடிந்து கொண்டதற்காகத் தான் தன்மேல் கோபம் கொண்டு இவ்வாறு பேசி விட்டான் என்று ராம்குமார் எண்ணினார். ஆனால் தாம் ஏன் வெறும் வயிற்றுப் பிழைப்பிற்கான கல்வியைக் கற்க விரும்பவில்லை. என்பதைத் தன்னால் முடிந்தவரை விளக்கிக்கூறினார் கதாதரர். அவரது சொற்களை யார் செவிமடுப்பார்கள்? இளைஞன் , இளைஞன் தானே! தன்னலமற்ற ஒருவன் இருந்தால் அவனைப் பைத்தியக்காரன் என்று கருதும் உலகிலன்றோ நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ராம்குமார் கதாதரரின் பேச்சைப்புரிந்து கொள்ளவில்லை. நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரைக் கடிந்து கொள்ள நேர்ந்தால் பிறகு நம் செயலை எண்ணி வருந்துகிறோம். பின்னர்  நம் மனத்தை அமைதிப்படுத்த அவரிடம் பல மடங்கு அன்பு காட்டுகிறோம். இதைப்போன்று தான் ராம்குமாரும் கதாதரரிடம் நடந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப்பின் கதாதரரின் செயல்கள் எல்லாம் தான் கொண்ட குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான தருணத்தை எதிர்பார்த்தே அமைந்தன.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் சகோதரர்கள் இருவர் வாழ்விலும் பல்வேறு  நிகழ்ச்சிகள் வேகமாக நிகழ்ந்தன. ராம்குமாரின் வருவாய் குறையத் தொடங்கியது. பல வழிகளில் முயன்றும் வருவாயை அவரால் அதிகரித்துக் கொள்ள முடியவில்லை.பள்ளியை மூடிவிட்டு வேறு தொழிலில் ஈடுபடலாமா என்று அவர் சிந்திக்கத் தொடங்கினார். அவரால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை.வேறு ஒரு தொழிலைத்தேடிக் கொள்ளாமல் இப்படியே நாட்களைக் கழித்தால் குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமமாகிவிடும். கடன்பட நேர்ந்தால் வாழ்க்கையே துன்பமாகிவிடும். எனவே வேறு தொழில் தேடிக்கொள்வதே உசிதம்? ஆனால் என்ன தொழிலை மேற்கொள்வது? கற்பிப்பதையும் பூஜை முதலான சடங்குகள் செய்வதையும் தவிர  தமக்கு வேறுறொன்றும் தெரியாது. மேலும் ஏறிக் கொண்டே போகின்ற இந்த வயதில் நல்ல வருவாய் தரக்கூடிய வேறு தொழிலை மேற்கொள்ளும் சக்தியும் ஊக்கமும் தம்மிடம் உள்ளதா? அத்தகைய தொழிலை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்து, அதன் மூலம் அதிகம் வருவாய் பெற முயன்றால் நித்திய பூஜை மற்றும் வழிபாடுகளுக்கான நேரம் கிடைப்பது மிகவும் கடினமாகிவிடும். இவற்றை எல்லாம் எண்ணியெண்ணி கவலையுற்ற  ராம்குமார் இறுதியில் ஸ்ரீரகுவீரர் விருப்பப்படி நடக்கட்டும் என்று தன்  மனத்தை இத்தகைய எண்ணங்களிலிருந்து விடுவித்துக்கொண்டு தாம் செய்து வந்த பணிகளில் முன்னைப்போலவே ஈடுபட்டார். ராம்குமார் இறைநம்பிக்கை மிக்கவர். உள்ளதைக்கொண்டு திருப்தி அடையும் மனப்பான்மை கொண்டவர். பொருள் ஈட்டி மிகுவும் வசதியான வாழ்க்கை அமைத்துக்கொள்ளவிழையாதவர் என்பதையெல்லாம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தூயவரானஅவரைக் கடவுள் எப்படிக் கைவிடுவார்.? அவரது துயரங்கள் தீரும் வண்ணம் ஒரு நிகழ்ச்சி அப்போது கடவுளின் அருளால் நடைபெற்றது.

தொடரும்...

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6