Saturday 15 December 2018

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-18



அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-18

நகபத்  அறையச் சுற்றியுள்ள   வெளி வாரத்தில்  கிழக்குப்  பகுதியில்  மாடிக்குச்   செல்வதற்கான  படிக்கட்டுகள்  உள்ளன . இந்தப் படிக்கட்டின்     கீழ்ப்பகுதிதான்  அன்னையின்   சமையலறை . மாடியில்  குருதேவரின்  தாய் வாழ்ந்து வந்தார் .  கீழே   அன்னை  தங்கினார் .   
  அந்த அறை மிகவும் வசதி குறைவானது  . அதில் ஒருவர்  கால்நீட்டிப் படுப்பதற்குக்கூட முடியாது .  அரிசி மற்றும் பருப்பு மூட்டைகள்  , காய்கறிக் கூடைகள்  எல்லாம் அங்கேதான் .  போதாக்குறைக்கு , குருதேவருக்கான   உணவு வைத்துள்ள பானைகள்  வைக்கப்பட்ட   உறிகள் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் . ன்னையின்  தனிமை வாழ்க்கைக்காக  வராந்தாவைச் சுற்றி  ஆளுயரத்திற்கு மூங்கில்  தட்டிகள் வைக்கப்பட்டன . இதனால்  சூரிய ஒளி  உள்ளே வருவதும் தடைபட்டது .  அந்த  நாட்களைப்பற்றி அன்னை கூறுவார் .  , நகபத்தில் வாழ்ந்து  குருதேவருக்கு  சேவை செய்த நாட்களில்   அங்கிருந்த சிரமங்களைச் சொல்லி  முடியாது  . சமையல் , சாப்பாடு  , தூக்கம் என்று என் உலகமே  அதனுள்தான்  . பல நாட்கள்  தனிமையில்தான்  கழியும் . ஏதோ சில நாட்கள்  கோலாப் , கௌரி  என்று யாராவது  வருவார்கள் .... அறையின் வாசல் மிகவும் குட்டையாக  இருந்ததால் ,  மேல்  சட்டம் அடிக்கடி என் தலையில் இடித்துவிடும் .   ஒருநாள் இடித்துக் கொண்டதில் காயமே ஏற்பட்டுவிட்டது .  ஆனால் நாட்கள்  போகப்போகப் பழகிவிட்டது .  வாசலின்  அருகே வந்ததும்  என் தலை தானாகவே குனிந்து கொள்ளும்  .  கல்கத்தாவிலிருந்து பெரிய  இடத்துப் பெண்கள் சிலர் என்னைக் காண  வருவார்கள் . பருத்த தேகம்கொண்ட அவர்களால்  அந்த அறைக்குள் நுழைய முடியாது .  எனவே வாசல்  சட்டத்தைப் பார்த்து , ‘ ,  நம் பெண்  எவ்வளவு சிறிய அறையில்  வாழ்கிறாள் .  சீதையின் வாழ்க்கைபோல்  அல்லவா  உள்ளது இது ! ”  என்பார்கள்  . உண்மைதான்  . கஷ்டத்தில்  பெரிய கஷ்டம்   எது தெரியமா ?  குளிப்பதும்  இயற்கைக் கடன்களைக்  கழிப்பதும் தான் .  அதிகாலையில்  குளித்தபின்   அறைக்குள்  சென்று விட்டேனானால் நான் வெளியே வருவதே அபூர்வம் . அந்த நாட்களில் என் கூந்தல் கருகருவென்று  அடர்த்தியாக  நீண்டு  வளர்ந்திருந்தது .   அதைக்கூட  , பிற்பகலில்   ஆள் நடமாட்டம்  இல்லாத வேளையாகப் பார்த்து  வெளியில் வந்து  வாசற்படியில்  அமர்ந்து  உலர்த்திக் கொள்வேன் .
-
 ஒருநாள் அதிகாலை இருட்டில்  அன்னை கங்கையில்  குளிக்கச் சென்றபோது , படித்துறையில்  ஒதுங்கியிருந்த முதலை   ஒன்றைத் தெரியாமல்  மிதிக்கச் சென்றுவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக  , ஆள்  அரவம் கேட்ட  முதலை  தண்ணீருக்கள் சென்றுவிட்டது .  அதன்பின்னர் விளக்கு எடுத்துக் கொண்டு   குளிக்கச் செல்லுமாறு குருதேவர் அவரிடம் கூறினார் . 
-
பிற்காலத்தில்  தம்பியின்  பெண்களிடம் அன்னை தம்  தட்சிணேசவர  வாழ்க்கையப் பற்றிக் கூறும்போது  ,  அந்த மாதிரி  அறையில்  உங்களால்  ஒருநாள்கூட இருக்க முடியாது  என்றார் . அவர்களும்   , ‘ உண்மைதான்  அத்தை ! என்று எல்லோரும் சிரித்துக்  கொண்டே  கூறினார்கள் .  நகபத்தில் அன்னையின் வாழ்க்கை அதிகாலை மூன்று மணிக்கே ஆரம்பித்துவிடும் .  அவரது  வாழ்க்கை  முறையைப்பற்றி யோகின்மா  பின்னாளில்    கூறினார் .  அந்த நாட்களில் அன்னை பெரிய    சிவப்புக்கரையிட்டு  புடவை  உடுத்துவார் .  வகிட்டில் சிவப்பு  குங்குமம் இட்டுக் கொள்வார் .   அவரது கூந்தல் கருகருவென்று  அடர்த்தியாக  , கால்  முட்டுகளைத்  தொடும் அளவிற்கு நீண்டு  வளர்ந்திருக்கும் .  தங்க அட்டிகை  , மூங்கில் வளையம் , கம்மல் , பொன் வளையல் போன்ற  ஆபரணங்கள் அணிந்து  சீதைபோன்றே நகபத்தில் வாழ்ந்தார்  அன்னை .  எல்லோரும்  தூங்கிக் கொண்டிருக்கின்ற  அதிகாலை வேளையில் எழுந்து .  கங்கையில் குளித்துவிட்டு  , மக்கள்  நடமாட்டம்  ஆரம்பிக்கும்  முன்பே  அறைக்குத்  திரும்பிவிடுவார் .  பின்னர்  தியானம்  செய்ய அமர்வார் .  தியானம்  நிறைவுற்ற  பிறகு  பூஜையும்  ஜபமும்  தொடங்கும் .  எல்லாம் முடிய  ஒன்றரை  மணி நேரம்  ஆகும் . அதன்பின்  மாடிப்படிக்கட்டின்  கீழ்  சமையலைத்   தொடங்குவார்.    சமையல்  முடிந்தபின்  , வாய்ப்பிருந்தால் , குருதேவர்   குளிக்குமுன் அவர் உடம்பில்  எண்ணை  தேய்த்துவிடுவார் . அவர் குளிக்கச் சென்றதும் அவருக்காக வெற்றிலைச் சுருள்   தயாரிப்பார் .  அவர் குளித்துவிட்டு  வந்ததும்   அவருக்காகச் சிறிய தடுக்கு ஒன்றை விரிப்பார்  .  குருதேவர்  காலை பத்தரை  முதல் பதினொரு   மணிக்குள் சாப்பிட அமர்வார் .  அன்னை  தட்டில்  உணவு   எடுத்து வந்து  , குருதேவருக்கப்  பரிமாறிவிட்டு   ,  அருகிலேயே  அமர்ந்து  பேசிக்  கொண்டிருப்பார் .  இதன்மூலம்   அவர் திடீரென  உயர் பரவச  நிலையில்  ஆழாமல்   தடுத்து   விடுவார் .  இந்த விஷயத்தில் அன்னைக்கு நிகர்  அன்னைதான் .   குருதேவர்  சாப்பிட்டு  முடிந்ததும்  தாமும்  விரைவாகச்  சிற்றுண்டி  எதாவது    அருந்திவிட்டு  ,  ஒரு  டம்ளர்  தண்ணீர் குடிப்பார் .  பின்னர் மீண்டும்  வெற்றிலைச்  சுருள்  செய்வார் . அப்போத  சிலைவேளைகளில்  மெல்லிய  குரலில்  பாடுவார்  . அன்னையின் குரல் பூக்கள் உதிர்வது போன்றது  மென்மையாக இருக்கும்  அதனுடன்  இனிமையென்றால்  அப்படியோர்  இனிமை அவர் குரலில்  தவழும்  . ஆனால்  தாம்  பாடும்போதும் யாரும்  கேட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார் அவர் .  இதற்குள் அருகிலுள்ள ஆலையில் பகல் ஒரு மணி சங்கொலி கேட்கும்.அதன்பின்னர் சாப்பிட அமர்வார்.முடியும்போது ஒன்றரை மணி ஆகிவிடும்.பிறகு சிறிதுநேரம் ஓய்வெடுப்பார்.பிற்பகல் 3 மணியளவில் வெளியில் வந்து அமர்ந்து கூந்தலை அவிழ்த்து உலர்த்துவார்.பின்னர் அவரது மாலைவேலை ஆரம்பிக்கும்.முதலில் விளக்குத்திரியையெல்லாம் வெட்டிச் சீராக்குவார்.அதன்பின் நகபத்திற்கு உள்ளயே எடுத்து  வைத்திருக்கின்ற  தண்ணீரில்  உடம்பைக் கழுவிக்கொண்டு  துணிகளையும்  நனைத்துக்  கொள்வார் .  சந்தியா வேளையானதும்   விளக்குகளைக்  கொளுத்திவிட்டு  ,  தெய்வப் படங்களுக்க தூபம் காட்டுவார் . பின்னர்  தியானத்திற்காக அமர்வார் .  அதன்பிறகு இரவு உணவு  சமைப்பார் .  எல்லோரும்  சாப்பிட்டபின்  தாமும் உண்பார் . சிறிதுநேரம்  கழித்து படுத்துக் கொள்வார் . 
-
நகபத்தே  அன்னையின்  உலகமாக  இருப்பதை யோகின்மா  கூறியதிலிருந்து  நாம்  அறிந்து கொள்ள முடிகிறது . பிறர்  யாரும்  அவரைப் பார்க்க  முடிந்ததில்லை . பட்டாச்சாரியாரின்(குருதேவர்)  மனைவி இங்கு வசிப்தாகக் கேள்விப்பட்டிருக்கிறோம் . ஆனால்  நாங்கள் ஒருநாள்கூட  அவரைப்  பார்த்ததில்லைஎன்று கோயில் அலுவலர்கள்   கூறுமளவிற்கு  அவர் யார் கண்களிலும் படாமல் வாழ்ந்தார்
-
தொடரும்..

அன்னை சாரதாதேவி- ஸ்ரீராமகிருஷ்ணர் வாட்ஸ் அப் குழு https://wa.me/919003767303