அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-71

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-71

அன்னையோடு நெருக்கமாக  வாழ்ந்த மற்றொருவர் கௌரிமா. ஆன்மீகத்துடன் ஆழ்ந்த சாஸ்திர ஞானமும்,துணிச்சலும்,நிறுவனங்களை அமைத்துத் திறன்பட நடத்தும் ஆற்றலும் பெற்றிருந்தார் இவர். இள வயதிலிருந்தே ஆன்மீக வாழ்வில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்ததால் திருமண ஏற்பாடுகளையெல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு குருதேவரைச் சரணடைந்தார். இமாலயத்திற்குச் சென்று அங்கு தீவிரமான தவ வாழ்வில் ஈடுபட்டார். 1882-க்குப் பிறகு தட்சிணேசுவரத்தில் குருதேவருக்குத் தன்னால் முடிந்த அளவு சேவை செய்தபடி,நகபத்தில் அன்னையுடன் தங்கியிருந்தார்.
கௌரிமாவின் திறமையில் குருதேவர் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால் அவரைப் பெண்களிடம் ஆன்மீக உணர்வை ஊட்டுவதற்காக அனுப்புவார். பெண்களின் முன்னேற்றத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்குமாறும் அவரைத் தூண்டினார். குருதேவரின் மறைவுக்குப் பிறகு சிலகாலம் பிருந்தாவனத்தில் கடுமையான தவமியற்றிய அவர்.கல்கத்தா திரும்பியபின் பெண்களுக்காக சாரதேசுவரி ஆசிரமம் ஒன்றும் பள்ளியொன்றும் அன்னையின் நினைவாக நிறுவினார். கல்கத்தாவில் அமைந்துள்ள அந்தப்பள்ளி சிறப்பான கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக இயங்கிவருகிறது. பெண்களுக்கு இந்தப்பள்ளி பொதுவான கல்வியைத் தருவதுடன்,இந்து தர்ம முறைப்படி புனிதம், சேவை,பக்தி முதலியவற்றையும் போதிக்கிறது. பயிற்சி பெற்ற சன்னியாசினிகள் அதனை நடத்தி வருகின்றனர்.
 அன்னைக்கும் கௌரிமாவிற்கும் இடையே ஆழ்ந்த அன்பும் பரஸ்பர மதிப்பும் இருந்தது. ஒரு முறை நகபத்தில் அன்னையுடன் தங்கியிருந்தார். அப்போது குருதேவர் அங்கே சென்றிருந்தார்.  பேச்சின் இடையில் அவர் கௌரிமாவிடம், ”கௌரி எங்கள் இருவருள் யாரை நீ அதிகம் நேசிக்கிறாய்?என்னையா,அவளையா?என்று கேட்டார். அதற்கு கௌரிமா நேரடியாகப் பதில் கூறாமல் , ஓர் இனிய பாடலைப் பாடினார்.
கண்ணா நீ ஒன்றும் ராதையை விடப் பெரியவன் அல்ல
துன்பத்தில் மக்கள் உன்னை அழைக்கின்றனர்
உனக்குத்துன்பம் வரும்போதோ
ஓ ராதே என்று நீ அவளை அழைக்கிறாய்.
இந்தப்பாடலின் மூலம் தாம் அன்னையையே அதிகம் நேசிப்பதாகத் தெரிவித்தார்.
 அன்னை குருதேவரின் வாழ்க்கைத் துணைவி மட்டுமல்ல. அவரது வழிபாட்டிற்குப் பாத்திரமானவளும்  பிரபஞ்சத் தலைவியுமான ஆதிபராசக்தியும் ஆவார். மனைவியை பராசக்தியாக வழிபடுவது , உலகம் இதுவரை காணாத அற்புதமாகும்.மக்கள் இன்னும் அன்னையைப்புரிந்துக் கொள்ளவில்லை. அவரது வாழ்வு முழுமையாகப் புரிந்து கொள்ளபடும் போது உலகம் உயர்நிலை பெறும் என்பார் கௌரிமா. அன்னையிடம் மிகுந்த பணிவும் பக்தியும் கொண்டிருந்தாலும் அன்னை அவருடன் கேலியும் சிரிப்புமாக தாராளமாகப் பழகுவார். அவரை கௌர்தாசி” என்று அன்போடு அழைப்பார். கௌரிமா நோயுற்றிருந்த காலத்தில் அன்னை அவருக்குப் பல இரவுகள் கண்விழித்துப் பணிவிடை செய்தார். கௌரிமாவின் சாஸ்திர அறிவையும்  பல துறைகளில் அவர் கொண்டிருந்த ஆற்றலையும் பாராட்டுவார் அன்னை. மகத்தான ஒருவர் தோன்றுவது என்பது எப்போதும் நடைபெறுவதில்லை. கௌர்தாசி அப்படித் தோன்றியவள்  என்பார் அன்னை. சென்னைக்கு வந்த போது அன்னையிடம் சொற்பொழிவு செய்யும்படிக் கேட்டனர் அதற்கு கௌர்தாசி என்னோடு வந்திருந்தால் சிறப்பாகப் பேசியிருப்பாள்  என்றாள்.
 கௌரிமா செய்த எல்லா பொதுத் தொண்டிற்கும் அன்னை தமது மனமார்ந்த ஆசிகளை நல்கினார். அவர் தமது பள்ளியை அன்னையின் ஆசிகளுடன் தான் ஆரம்பித்தார். அன்னை அந்தப் பள்ளிக்கு அடிக்கடிச் செல்வதுண்டு.அங்கு கற்றுத் தரப்படுகின்ற  கல்விமுறையை வெகுவாகப் பாராட்டுவார். அவர். ஆசிமமும் பள்ளியும் துவங்கிய பிறகு அவைகளை உடன்  இருந்து கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால்  கௌரிமா முன்போல் அன்னையுடன் அதிகமாகத் தங்கியிருக்க இயலவில்லை. ஆனாலும் அடிக்கடி வந்து அன்னையை தரிசிப்பார். மாணவிகளையும் அழைத்துவந்து  தீட்சை பெற வைப்பார்.
-
தொடரும்...



Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6