அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-104

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-104

1894- இல் காசிக்கும் பிருந்தாவனத்திற்கும்  இரண்டாம் முறையாகப் பயணம் செய்தார் அன்னை. இந்த முறை அவருடன் சியாமாசுந்தரி தேவி, அன்னையின் சகோதரர்கள், சுவாமி யோகானந்தர், யோகின்மா,கோலாப்மா ஆகியோர் சென்றனர்.அன்னை பிருந்தாவனத்திலிருந்து திரும்பிய போது பாலகோபாலனின்  சிறு விக்கிரகம் ஒன்றை வாங்கி வந்தார். பூஜை எதுவுமின்றி அதை ஜெயராம்பாடி வீட்டில் ஓர் அலமாரியில் வைத்திருந்தார். ஒரு நாள் அன்னை கட்டிலில் படுத்திருந்தபோது சின்னக் கண்ணன் அங்கே தவழ்ந்து வந்தான். அன்னையின் அருகில் அமர்ந்து கொண்டு,ஆமாம் நீ என்னை இங்கே கொண்டு வந்தாய்.ஆனால் உணவோ பூஜையோ எதுவுமின்றி வைத்துவிட்டாய். நீயே என்னைக் கவனிக்காவிட்டால் வேறு யார் கவனிப்பார்கள்? என்று கேட்டு மறைந்தான். அன்னை உடனே எழுந்து,  அலமாரியில் வைத்திருந்த அந்த பாலகோபாலனை எடுத்து, அன்புடன் அவனது முகவாயைத் தடவி, குருதேவரின் படத்திற்கு அருகில் வைத்து சில மலர்களை அர்ப்பித்தார். அதன் பிறகு குருதேவருடன் கண்ணனுக்கு தினசரி வழிபாடு நடைபெறலாயிற்று.
பின்னர் 1904 நவம்பரில் மீண்டும் அன்னை புரி சென்றார். சியாமா சுந்தரி,சுரபாலா,ராது, அன்னையின் சகோதரரான காளி, அவரது குடும்பத்தினர், பிரேமானந்தர்,மற்றும குருதேவரின்சீடர்கள்  பலரும் உடன் சென்றனர். புரியில் அனைவரும் சில நாட்கள் தங்கினர். அப்போது அன்னைக்குக் காலில் கட்டி ஒன்று தோன்றியது. அது அவருக்கு மிகுந்த வேதனை தந்தது. வலியின் காரணமாக அவர் அதைத் தொடுவதற்குக்கூட யாரையும் அனுமதிக்க வில்லை. இதைக்கண்ட பிரேமானந்தர் அன்னையின் சீடரான ஒரு மருத்துவருடன்  ஆலோசித்தார். அதன் படி யாருக்கும், அன்னைக்குக் கூட,சொல்லாமல் காலில் உள்ள கட்டியை அறுத்துவிடுவது என்று முடிவு செய்தனர். மறுநாள் வழக்கம் போல் மருத்துவரான அந்தச் சீடர் வந்தார். வணங்குவதற்காக அன்னையின் திருவடிகளை நோக்கிக் குனிந்த அவர்,மறைவாகத் தன் கையில்  கொண்டு வந்திருந்த கத்தியால், மிகுந்த கவனத்தோடு கட்டியைக் கீறி விட்டார். அவ்வளவு தான்.அன்னை வலியால் ஓவென்று அலறிவிட்டார். அருகிலிருந்தவர்கள்  அதிர்ந்து சிலையாக நின்றனர். அந்தக் காரியத்தைச் செய்த மருத்துவர்  மீதும், அதற்கு உடந்தையாக இருந்த பிரேமானந்தர் மீதும் அன்னைக்குக் கோபமோ கோபம். ஆனால் கட்டி அறுக்கப்பட்டுச் சீழ் முழுவதும் வெளியேற்றப்பட்ட பின் வலி பெரிதும் குறைந்து விட்டது. அன்னையும் மகிழ்ச்சியுடன் இருவருக்கும் நன்றி செலுத்தினார். வலி குறைந்து விட்டதால் ஜகன்னாதர் கோயிலையும்,மற்ற கோயில்களையும் நன்றாக தரிசித்தார். ஆலயத்தை அடுத்திருந்த கடலில் இரண்டு முறை நீராடவும் செய்தார். நல்ல சீதோஷ்ணத்திற்குப் பெயர் பெற்ற அந்தத் தலத்தில் இரண்டு மாதங்கள் தங்கியபின் திரும்பினார்.
காமார்புகூரிலிருந்து இருபத்தெட்டு மைலில் உள்ள விஷ்ணுபூருக்கும் ஒரு முறை அன்னை பயணம் செய்தார் விஷ்ணுபூர் ஒரு காலத்தில் வளத்தோடு கூடிய தலைநகராக இருந்தது. அதனை ஆண்ட பக்தி மிக்க வைணவ மன்னர்கள் அந்த ஊரில் அழகிய கோயில்களைக் கட்டினார். அவற்றுள் பலவும் கவனிப்பாரற்றுச் சிதைந்து கிடந்தன. குருதேவர் இந்த கோயில்களையும் ஊரையும் மிகவும் புனிதமாகப்போற்றினார். விஷ்ணுபூர் மறைந்திருக்கின்ற மற்றொரு பிருந்தாவனம். நீ ஒரு முறை அந்தத் தலத்திற்குச் சென்று வா, என்று அன்னையிடம் கூறியும் இருந்தார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக அன்னை விஷ்ணுபூர் சென்றார்.
அன்னையின் புனிதத் திருப்பாதங்கள் படுவதற்கு தென்னகம், குறிப்பாக தமிழ்நாடு கொடுத்து வைத்திருந்தது. தமிழகத்தின் முக்கிய சிவத்தலமான ராமேசுவரத்தை தரிசிக்கும் ஆவல் அன்னைக்கு இருந்தது. குருதேவரின் சீடரும், சென்னை ஸ்ரீராகிருஷ்ண மடத்தின் முதல் தலைவருமான சுவாமி ராமகிருஷ்ணானந்தரும் அன்னையைப் பலமுறை அழைத்திருந்தனர். ஆனால் என்னவோ  யாத்திரை தள்ளிப்போய்க் கொண்டேயிருந்தது. கடைசியாக,1910-ஆம் ஆண்டு இறுதியில் அன்னை புறப்பட்டார். வழக்கம் போல் சுரபாலா,ராது மற்றும் கோலாப்மா,பிரம்மசாரிகள் சுகுல் மற்றும் கிருஷ்ணலால், இவர்களுடன் இன்னும் பல பக்தர்கள்  என்று அன்னையின் பரிவாரமும் உடன் புறப்பட்டது. ஒரிசாவில் கோட்டார் என்னும் ஊரில் பலராம் போஸின் வீடும் பண்ணை நிலமும் இருந்தது. அங்கே அன்னை இரு மாதங்கள் தங்கினார். பல பக்தர்களுக்கு தீட்சையும் அளித்தார்.
அங்கிருந்து சென்னைக்குப் பயணமானார். இந்தத் தென்னிந்திய யாத்திரை அன்னைக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. சில்கா ஏரியின் கரை வழியாக ரயில் சென்ற போது அதிகாலை வேளையாக இருந்தது. இதமான குளிருடன் வீசிய பனிக்காற்றும்,காற்றின் சுருதிக்குத் தாளமிட்டபடியே தவழ்ந்த அந்த நீல நிற ஏரியின் சிற்றலைகளும், அலைகளுடன் களித்து நீந்திய மீன்களும், மீன்களைப் பிடிக்க தங்கள் கூரிய அலகை நுழைத்தவாறே நடந்த நாரைகளும், எப்போதாவது மேற்பரப்புக்கு வருகின்ற மீன்களைக் கொத்திச் செல்வதற்காகப் பறந்த நீலக்குருவிகளும் அன்னையின் மனத்தை வெகுவாக ஆக்கிரமித்தது. மெள்ள,மெள்ள சூரியன் உதித்ததும் காட்சி மாறியது. நீர்ப்பரப்பிலிருந்து மேலே கிளம்பிய பனி மண்டலப்புகை, அனைத்தையும் சூழ்ந்து அந்தக்காட்சியை ஒரு கனவுலகக்காட்சி போல் மாற்றியது. இப்படி மாறுகின்ற காட்சிகளை அளித்தவாறே விரைந்து கொண்டிருந்தது ரயில். அன்னைக்கு மனநிலை விவரணைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ஒரு கணம் இயற்கையின் இந்த எழிலைக் கண்டு ஒரு சிறுமி போல் கைகொட்டிக் களிப்பார். மறுகணம்,இயற்கையின் மகிமை இறைவனின் மாட்சிமையை நினைவூட்டும்போது கைகூப்பி வணங்குவார்.
ரயில் பெர்ஹாம்பூரை அடைந்தது. ராமகிருஷ்ணானந்தரின் ஏற்பாட்டின்படி அங்கே பக்தர் ஒருவர் அன்னையைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே பக்தர்கள் பலர் வந்து அன்னையை வணங்கினர். மறுநாள் அங்கிருந்து புறப்பட்டனர். ரயில் விசாகப்பட்டினத்தைக் கடந்த போது இருபுறமும் நீண்டு கிடந்த குன்றுகளைக் கண்ட அன்னை,பார் பார் அற்புதச் சித்திரம் போல் எத்தனை அழகாக உள்ளது என்று வியந்து கூறினார்.

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6