அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-56

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-56

ஒரு முறை தட்சிணேசுவரத்திலிருந்து  வந்த ராம்லால் தன்னுடன்  நான்கு ஐந்து உறவினர்களை அழைத்து வந்தான். குடும்பச் சொத்துக்களை மடமடவென்று பங்குபோட்டு, அன்னையின் பங்காக குருதேவர் பிறந்த  சின்னஞ்சிறு குடிசையைக் கொடுத்து விட்டு, குல தெய்வமான ரகுவீரரின் பூஜைக்கும் நைவேத்தியத்திற்கும்  ஏற்பாடு செய்துவிட்டு போய்விட்டான்.
இந்த நிலையில் அன்னைக்குச் சற்றேனும் ஆறுதலாக இருந்தது எப்போதாவது வந்து செல்லும் பக்தர்கள் தாம்.  ஏழ்மையின் காரணமாக அவர்களுள் பலரால் காமார்புகூர் செல்ல முடியவில்லை.அபூர்வமாகச் செல்கின்ற அவர்களை அன்னை வரவேற்று உபசரிப்பார். அவர்கள் யாருக்கும் தமது வறுமையோ வேதனையோ தெரியாதிருப்பதில் மிகுந்த கவனமாக இருப்பார். அவர் தமத நிலையையை யாரிடமும் ஒருபோதும் கூறவில்லை.
இவ்வாறு தமக்குத் தாமே ஏற்றுக்கொண்ட தவ வாழ்வில் அன்னை முற்றிலுமாக மூழ்கியிருந்தார். அவரது புறவாழ்வு வறுமையும் வேதனையும் சூழ்ந்து தவக்கனலில் வறுத்தெடுக்கப்பட்ட அதே வேளையில் அவரது அகவாழ்வு ஆன்மீகப்புனலில் திளைத்துக் கொண்டிருந்தது.குருதேவரின் தரிசனமும் ஆன்மீகக் காட்சிகளும் அனுபவங்களும் அவரது அக வாழ்க்கையை நிறைத்தன. வறுமையையும், தனிமையையும் தவிர அன்னையின் முக்கியமான இரண்டு பிரச்சனைகள் ஆன்மீக அனுபவங்களால் தீர்க்கப்பட்டன.
அன்னை விதவைக்கோலத்தை ஏற்காதது ஊராரின் வம்புப்பேச்சுக்களுக்கு ஆதாரமாக இருந்தது. தெய்வத்துணைவர் தம்முடனேயே இருக்கும் போது அவர் எப்படி விதவையாக முடியும்? இது முதற்பிரச்சனை. சிறுவயதிலிருந்தே கங்கையின் மீது அன்னை அளவற்ற பக்தி  கொண்டிருந்தார்.தட்சிணேசுவரத்தில் வாழ்ந்த போது தினமும் அந்தப்புண்ணிய நதியில் நீராடி மகிழ்ந்த அவருக்கு இங்கே அதில்லாதது ஒரு குறையாக இருந்தது.இது இரண்டாம் பிரச்சனை. அன்னையின் இந்த இரு பிரச்சனைகளும் அற்புதமான ஆன்மீகக்காட்சி ஒன்றினால் விலகியது. அதைப்பற்றி அன்னை கூறினார்.
பிருந்தாவனத்திலிருந்து வந்து நான்  காமார்புகூரில் தங்கியிருந்தபோது ஊர்வம்புக்குப் பயந்து கைகளில் இருந்த வளையல்களைக் கழற்ற முற்பட்டேன். அவற்றை அணிந்திருப்பதற்காக ஏற்கனவே என்னைக்கேவலமாகப் பேச ஆரம்பித்து விட்டிருந்தார்கள். அதோடு கங்கையில் நீராடுவதற்கும் பெரிதும் விரும்பினேன். ஆனால் அது நெடுந்தொலைவில் இருந்தது. என்ன செய்வது! ஒரு நாள் இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போது குருதேவர், பூதிகால்வாயில் பக்கமிருந்து வீட்டை நோக்கி வருவதைக்கண்டேன். எனக்கு வியப்புத் தாளவில்லை. அவருக்குப பின்னால் நரேன், ராக்கால்,பாபுராம் முதலான பல சீடர்களும்  பக்தர்களும் வந்து கொண்டிருந்தனர். குருதேவரின் திருப்பாதங்களிலிருந்து தண்ணீர் ஊற்றெடுத்துப் பெருகி அவருக்கு முன்னால் அலைகளை வீசியபடிபாய்ந்து வந்து கொண்டிருந்தது.இதைக்கண்டதும் ஓ! அவரே எல்லாமாக இருக்கிறார்! அவர் பாதங்களிலிருந்தே கங்கை பொங்கி வருகிறது. என்று எனக்குள் கூறியபடி,ரகுவீரர் கோயிலின் அருகே நின்ற செடியிலிருந்து கை நிறைய மலர்களைப் பறித்து வந்து அந்த கங்கையில் இட்டு வணங்கினேன்.இதற்குள் அருகில் வந்த குருதேவர் வளையல்களைக் கழற்றாதே, வைணவ தந்திரம் பற்றி உனக்குத்தெரியுமா? என்று கேட்டார்.நான் அது என்ன? எனக்குத் தெரியாதே? என்றேன்.அதற்கு அவர், இன்று பிற்பகல் கௌரி வருவாள். அவள் இதைப்பற்றி உனக்குச்சொல்வாள், என்றார். அதற்குள் காட்சி மறைந்து விட்டது. அன்று பிற்பகல் குருதேவர் கூறியபடியே கௌரி வந்து சேர்ந்தாள். அவளிடமிருந்து ஒரு பெண்ணுக்குத் தன் கணவர் சின்மயமானவர்  என்று அறிந்து கொண்டேன்.
 இத்தகைய காட்சிகளின் காரணமாக அன்னை உயர்ந்த ஆன்மீக நிலைகளிலேயே வாழ்ந்தார். ஆன்மீக ஆற்றலும் அவரிடம் சிறப்பாக வெளிப்படத் தொடங்கியது.
-
தொடரும்...
-




Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6