அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-55

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-55

அன்றைய சமூகம் விதவைக்கு மரியாதையோ அந்தஸ்தோ அளிக்கத் தயாராக இருக்கவில்லை. விதவைக்கு எல்லா இன்பங்களும் மறுக்கப்பட்டன. அவள் ஒரு நடைபிணமாகவே கருதப்பட்டாள்.கிராமங்களில்  இந்தக்கட்டுபாடு வெறி அதன் முழுவேகத்தில் தலைவிரித்தாடியது.இங்கோ ஒரு விதவை அவர் முழுக்கமுழுக்க வெள்ளைப்புடவையை அணிந்திருக்கவில்லை. வெள்ளைச்சேலையாக இருந்தாலும் அதில் சிவப்புக் கரை இருந்தது. கைகளிலிருந்து  தங்க வளையல்கள் கழற்றப்படவில்லை.ஊராருக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். அனுதாபம் தோன்றுவதற்குப் பதிலாக கோபமும் ஆத்திரமும் கொண்டு அன்னையை உல்லாச விதவை” என்று கேவலமாகப் பேசத்துவங்கினர். அன்னையுடன் கோலாப்மா தங்கி இருந்த ஒருமாத காலமும் கிராம மக்களின்  பேச்சும் ஆர்பாட்டமும் அவரை நெருங்க முடியாதபடி பார்த்துக்கொண்டார். அவர்போனது தான் தாமதம், கிராமத்தினர் தங்கள் வெறுப்பை ப்பல வழிகளில் காட்டத்தொடங்கினர். அன்னை என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கினார்.
ஆனால் ஜெயராம்பாடியில் ஒரு பானு மாமியைப்போல் காமார்புகூரில் அன்னைக்கு ஆறுதலாக வந்தார் ஒரு பிரசன்னா மாமி.குருதேவரின் இளம்பிராயத்திலேயே அவரைக் கடவுளாகக் கண்டு போற்றியவர்அவர். வயது முதிர்ந்த அவர் ஒருவிதவை . அவரது பக்திக்காகவும் தூய வாழ்வுக்காகவும் ஊரார் அவரை மிகவும் மதித்தனர். அன்னையைத் தூற்றிய ஊராரிடம் அவர்,கதாயியின் மனைவி சாதாரணப்பெண் அல்ல.கதாயியைப்போல் இவளும் தெய்வமேஎன்று எவ்வளவோ எடுத்துக் கூறினார். அவரது பேச்சை க்கேட்டபின்னர் ஊராரின் எதிர்ப்பு முற்றிலுமாக அடங்காவிட்டாலும் சற்று தணியவே செய்தது.
பிரசன்னாவைத் தவிர காமார்புகூரில் அன்னைக்கு ஆதரவாக இருந்தது தனி என்னும் முதிய பெண்மணி. அவரும்அன்னையைத் தன் உயிருக்கு  உயிராக நேசித்து அவருக்குத்துணை நின்றார்.
கடவுள் விட்ட வழியே வாழ்வதுஎன்று அவரது திருவடிகளில்  அன்னை தம்மை முற்றிலுமாக சமர்ப்பித்துக் கொண்டார். அவரிடம் சல்லிக்காசு இல்லை. கொஞ்சம் நெல் இருந்தது.அந்த நெல்லைக்குத்தி அரிசியாக்கி, அதைச் சமைத்து வெறும் அரிசிச்சோற்றை குருதேவருக்கு நைவேத்தியமாகப் படைத்துத் தாமும் உண்டார்.பிறகு ஒரு நாள் மண்வெட்டியைத் தாமே கையில் எடுத்துக்கொண்டு தோட்டத்தைக் கொத்தி கீரை விதைகளைப் பாத்திகளில் விதைத்தார். இந்தக்கீரை வளர்கின்ற  வரையில் அவர் வெறும் அரிசிச்சோற்றையே உண்ணநேர்ந்தது. அதில் சேர்த்துக்கொள்வதற்கு உப்பு வாங்கக்கூட அவரிடம் காசு இல்லை.இருந்த துணிகள் கிழிந்துபோகஅவற்றை முடிச்சு போட்டு அணிந்துவந்தார். அந்த அளவுக்கு வறுமை அவரை வாட்டியது.
சமூக க் கட்டுப்பாடுகளின்  காரணத்தால் ஊரார்தான் அன்னையை அவமதித்தார்கள் என்றால்,உறவினர்கள் அதைவிட ஒருபடி மேலே சென்று அவரைப்புறக்கணித்தார்கள். ஒரு விதவை சுமங்கலி போல் வாழ நினைக்கிறாளே என்ற எண்ணத்தாலா,இல்லை ஊரார் எங்கே தங்களையும் விலக்கி விடுவார்களோ என்ற பயத்தாலா,அவர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது தெரியவில்லை. அன்னையின் இந்தத்தனிமை நாட்களில் உடனிருக்க வேண்டியவர்கள் குருதேவரின் அண்ணன் ராமேசுவரரின் பிள்ளைகளான ராம்லாலும், சிவராமும், லட்சுமியும் தான்.ஆனால் தட்சிணேசுவரக் காளிகோயிலில் தலைமைப்பூஜாரியாக இருக்கின்ற ராம்லால் உதவி செய்யாதது மட்டுமல்ல,அன்னைக்கு மாதந்தோறும் கொடுக்கப்பட்டு வந்த உதவிப் பணத்தை நிறுத்தினான். சிவராம் அன்னையிடம் மிகவும் அன்பாக இருந்தான்.உபநயனத்தின் பிறகு முதல் பிச்சையை அன்னையிடமே ஏற்றான். ஆனால் நடைமுறையில் அவருக்கு எவ்வித உதவியும் செய்ய முடியாத நிலையில்  இருந்தான். அவனும்  தன் அண்ணனுடன் தட்சிணேசுவரத்திலேயே வாழ்ந்து வந்தான்.லட்சுமியும் அண்ணன்களுடன் தட்சிணேசுவரத்தில் தங்கிவிட்டதை ஏற்கனவே கண்டோம்.
தொடரும்...
-

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6