ராஜயோக வகுப்புகள்-பகுதி-5

சுவாமி விவேகானந்தரின் ராஜயோக வகுப்புகள்-பகுதி-5
--
உணவு பற்றிய சில கட்டுப்பாடுகள் உள்ளன. மனத்தை மிகவும் தூய்மையாக்கும் உணவையே நாம் உட்கொள்ள வேண்டும். மிருகக் காட்சிச்சாலைக்குச் சென்றால் இதன் உண்மையை நீங்கள் உடனடியாக அறியலாம். யானை பெரிய மிருகமாக இருந்தும், அமைதியாக சாதுவாக இருக்கிறது. சிங்கம், புலி இருக்கும் கூண்டுகளின் அருகில் சென்றாலோ அவை சஞ்சலத்துடன் அலைந்து கொண்டிருப்பதைக் காண முடியும். உணவு எத்தகைய வேறுபாட்டை உண்டாக்கியிருக்கிறது என்பதை இது காட்டுகிறது. 
-
உடலில் செயல்படும் சக்திகள் எல்லாம் உணவிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகின்றன. நாம் ஒவ்வொரு நாளும் அதை அனுபவிக்கிறோம். பட்டினியாக இருந்தால் முதலில் உடல் பலவீனம் அடையும். பின்னர் பவுதீக சக்திகள் பாதிக்கப்படும், சில நாட்களுக்குப் பின் மன ஆற்றல்கள் தளரத் தொடங்கும். முதலில் ஞாபக சக்தி குறையும். பிறகு எதையும் சிந்திக்க முடியாத நிலை வரும், எதையாவது ஆராய்வது என்ற பேச்சே இல்லை.
-
எனவே ஆரம்பத்தில் நாம் என்ன உண்கிறோம் என்பதில் கவனம் வேண்டும். போதிய வலிமை பெற்றபின், நமது முயற்சி நன்றாக முன்னேறிய பின் இந்த விஷயத்தில் அவ்வளவு எச்சரிக்கை வேண்டியதில்லை. இளம் பயிராக இருக்கும்போது தீங்கு ஏற்படாதபடி வேலியிடுவது அவசியம். அது வளர்ந்து மரமானபின் வேலி தேவையில்லை. தாக்குதல்களைச் சமாளிப்பதற்கான ஆற்றலை அது பெற்றுவிடும்.
-
அதிக சுகபோகம், கடின தவம் ஆகிய இரண்டு எல்லைகளையும் யோகி விலக்க வேண்டும். அவன் பட்டினி கிடக்கக் கூடாது. உடலையும் துன்புறுத்தக் கூடாது. அப்படிச் செய்பவன் யோகியாக இருக்க முடியாது என்கிறது கீதை: பட்டினி கிடப்பவன், விழித்தே இருப்பவன், அதிகம் தூங்குபவன், ஒரு வேலையும் செய்யாமல் இருப்பவன்-இவர்களுள் யாருமே யோகியாக முடியாது.
-
--தொடரும்---

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?