ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-62

வகுப்பு-62  நாள்-20-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

மூன்றுவித செயல்கள் உள்ளன.

1.யக்ஞம்,2.தானம்,3.தபம்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

18.5 யக்ஞம்,தானம்,தபம் ஆகிய கர்மம் துறக்கப்படவேண்டியதில்லை.அது செய்யப்படவேண்டியதே.

யக்ஞமும். தானமும்,தபமுமே அறிஞர்களுக்கு தூய்மை தருபவை

-

18.6 பார்த்தா, இந்த கர்மங்கள் அனைத்தையும் பற்றுதலையும்,

பயனையும் ஒழித்து செய்யப்படவேண்டியவைகள் என்பது என்னுடைய நிச்சயமான உத்தமமான கொள்கை.

-

யக்ஞம்

-

பிரபஞ்சம் முழுவதிலும் யக்ஞம் நடந்துகொண்டிருக்கிறது. சூரியன் ஒளியைத்தருகிறது,வெப்பத்தைத் தருகிறது.இது யக்ஞம்.

காற்று வீசுகிறது,மழை பெய்கிறது,பூமி உயிரினங்களுக்கு வாழ்வழிக்கிறது இவைகள் எல்லாம் யக்ஞம் செய்து கொண்டிருக்கின்றன

தாய் தன் ரத்தத்தை பாலாக்கி குழந்தைக்கு கொடுத்து வளர்க்கிறாள் இது யக்ஞம்.

தந்தை குழந்தைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்.இது யக்ஞம்.

இராணுவ வீரர்கள் நாட்டை காப்பதற்காக உயிர் தியாகம் செய்கிறார்கள்.இது யக்ஞம்.

யக்ஞம் என்பது இயற்கை முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த செயல் ஒரு நிமிடம் நின்றுபோனால்கூட உலகம் அழிந்துவிடும்.

யக்ஞம் என்பது தியாகம்.

மனிதன் இதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

சூரியன் ஒளி தருகிறதே,பதிலுக்கு சூரியனுக்கு ஏதாவது கிடைக்கிறதா?

பூமி உயிரினங்களை காப்பாற்றுகிறதே பதிலுக்கு எதாவது பெறுகிறதா?

பெற்றோர் குழந்தையை காப்பாற்றுவது கடமை.அதற்கு பிரதியாக எதையும் எதிர்பார்க்கக் கூடாது.

-

தானம்

-

தன்னிடம் உள்ளவற்றை பிறருக்கு கொடுப்பது தானம்.

முதலில் கொடுப்பதற்கு தன்னிடம் ஏதாவது இருக்கவேண்டும்.

பிச்சைக்காரன் தானம் கொடுக்கும் நிலையில் இல்லை.

கடினமாக உழைத்து நிறைய சம்பாதித்துக்கொள்ள வேண்டும்.

நிறைய பணத்தை சம்பாதிக்கலாம்

நிறைய அறிவை சம்பாதிக்கலாம்

நிறைய ஆன்மசக்தியை சம்பாதிக்கலாம்

பிறகு இவைகளை பிறருக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

முதலில் சம்பாதித்துக்கொள்ள வேண்டும்.

 

தானம் மூன்று வகைப்படும்

1. உடல் தேவைகளை நீக்கும் உணவு,பணம் போன்றவற்றை கொடுத்தல்

2.வாழ்க்கையை சீர் படுத்தும் கல்வியைக் கொடுத்தல்

3. சம்சாரப்பெருங்கடலை கடக்க உதவும் ஆன்மீகத்தைக் கொடுத்தல்.

இதில் ஆன்மீகத்தை தானமாகக் கொடுப்பது உயர்ந்து.

-

தபம்

-

தபம் என்பது எரித்தல்.

தன்னுடைய பல பிறவி பாவங்களை எரித்தல்.

துன்பங்களை அனுபவிப்பதன் மூலம் பாவம் நீங்குகிறது.

பல பிறவிகளில் கோடிக்கணக்கான பாவம் செய்திருப்போம்,அவைகளை குறுகிய காலத்தில் நீக்குவதற்கு தவம் என்று பெயர்

 

சிலர் நான்கு பக்கமும் தீ மூட்டிக்கொண்டு மதிய வைளையில் அமர்ந்து தியானம் செய்வார்கள். உடல் சூட்டினால் வெந்துகொண்டிருக்கும். உடல் துன்பத்தால் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கும்போது அவர்கள் இறைவனை நினைத்துக்கொண்டிருப்பார்கள்.

சிலர் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருப்பார்கள்.சிலர் ஒற்றைக் கையை தூக்கிக்கொண்டிருப்பார்கள்.

இப்படி பல தவங்கள் இருக்கின்றன.

 

அதிக அளவு தவம் செய்து உடலை அழிந்துக்கொள்ளக்கூடாது.அப்படி செய்தால் மீண்டும் பிறவி ஏற்படும்.

எனவே உடல் அழிந்துவிடவும்கூடாது,அதே நேரத்தில் துன்பத்தை அனுபவிக்கவும் வேண்டும் என்பதே தவத்தின் அடிப்படை.

 

சிலர் தவத்தின் மூலம் மிகமேலான உலகை விரைவில் அடைந்துவிடுவார்கள்.

சிலர் தவத்தின் மூலம் அற்புத ஆற்றல்களை பெறுகிறார்கள்.

தவத்தின் மூலம் மனம்மிக விரைவில் ஒருநிலைப்படுகிறது.

-

பலனை ஏற்காதே

-

ஒவ்வொரு செயலுக்கும் பிரதிபலன் ஒன்று உண்டு.

நன்மை செய்பவன் ஒருபோதும் அழிந்துவிடுவதில்லை.

நன்மை செய்யும்போது யாருக்கு செய்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும்.

ஒருவேளை அப்படி கவனிக்காமல் நன்மை செய்தாலும் நல்லது நடக்கும்,ஆனால் காலம் தாழ்ந்து நடக்கும்.

 

உதாரணமாக நல்லவன் ஒருவனுக்கு நன்மை செய்தால்,உடனடியாக புண்ணியம் கிடைக்கிறது.

நல்லவனுடைய புண்ணியத்தில் பங்கு கிடைக்கிறது.

ஆனால் தீயவன் ஒருனுக்கு நன்மை செய்தால் உடனடியாக பாவம் கிடைக்கிறது.

தீயவனின் பாவத்தில் பங்கு கிடைக்கிறது.

 

நான் நன்மைதானே செய்தேன் நன்மைக்கு பதில் நன்மைதானே கிடைக்க வேண்டும் பிறகு ஏன் பாவம் கிடைத்தது?

நாம் ஒருவருக்கு உதவும்போது பதிலுக்கு அவரிடம் என்ன இருக்கிறதோ அது நமக்கு வருகிறது.

 தீயவனிடம் பாவம்தான் இருக்கிறது. எனவே அது வருகிறது.

ஆனாலும் தீயவன் என்று தெரியாமல் நன்மை செய்தவனுக்கு பதில் நன்மை வரும்.

சற்று காலம் கடந்த பிறகு வரும்.

-

யக்ஞம்,தானம்,தபம் மூன்றும் மனிதனுக்கு அற்புதமான பிரதிபலனைக் கொண்டுவருகிறது.

இந்த பலனை பெற்றுக்கொள்பவன் மிக மேலான வாழ்க்கையை வாழ்கிறான்.

மரணத்திற்கு பிறகு மிக உயர்ந்த உலகங்களை அடைகிறான்.

ஆனால் முக்தி பெற முடியாது. மீண்டும் பிறக்க வேண்டும்.

யார் இந்த பலனை விரும்பவில்லையோ அவர்கள் மட்டுமே முக்தி பெறுகிறார்கள்.

-

மகான்கள் பிறருக்கு உதவும்போது. தான் உதவவில்லை.தான் கருவி மட்டுமே!  இறைவனே தனக்குள் இருந்துகொண்டு உதவினான்  என்று நினைக்கிறார்கள்.

எல்லா செயல்களும் இறைவனுக்குரியவை. இந்த உடல் வெறும் கருவி மட்டுமே என்று நினைக்கிறார்கள்.

எனவே எந்த செயலில் பலனையும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

-

யக்ஞம்,தானம்,தபம் இவைகளை செய்யவேண்டும்,பிறகு பலனை துறக்க வேண்டும் என்பதைவிட ஒன்றுமே செய்யாமல் இருப்பது நல்லதல்லவா? என்று உலகத்தை துறந்து செல்லும் துறவிகள் கேட்கிறார்கள்.

ஸ்ரீகிருஷ்ணர் துறவிகளின் கருத்தை ஆதரிக்கவில்லை.

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த மூன்று கர்மங்களிலிருந்தும் யாரும் தப்ப முடியாது.

நம்மை  அறியாமலே இவைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இதற்குரிய பலனும் வந்துகொண்டே இருக்கிறது.

இயற்கையிலிருந்து மனிதன் ஒளியைப்பெறுகிறான்,வெப்பத்தைப்பெறுகிறான்,காற்றைப்பெறுகிறான்,நிலத்தையும்,நீரையும் பெற்றுக்கொள்கிறான்,உணவைப்பெறுகிறான்.

பதிலுக்கு எதுவும் செய்யாமல் சும்மா இருப்பவன் உயர்வை அடைய முடியாது.


Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6