இந்துமதம்-வகுப்பு-15

இந்துமதம்-வகுப்பு-15🕉️
நாள்-5-6-2020
..
ஆரிய மதம் தோன்றிய வரலாறு
..
மதம் என்றால் நம்பிக்கை என்று அர்த்தம்
உலகம் முழுவதுமே பல்வேறான மதங்கள் தோன்றியிருக்கின்றன.
பல மதங்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றன.பல மதங்கள் அழிந்துபோயிருக்கின்றன.
.
பொதுவாக மதம் என்பது எப்படி தோன்றுகிறது என்பதை பார்ப்போம்.
..
ஆதிகாலத்தில் மக்கள் காடுகளில் வாழ்ந்தார்கள்.ஒவ்வொரு காட்டிலும் வாழ்ந்தவர்கள் தங்களை ஒரு இனமாக கருதிக்கொண்டார்கள். பிற இனங்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்கொண்டார்கள்.
ஒவ்வொரு இனத்தையும் ஆள்வதற்கு தலைவன் இருந்தான்.
இந்த தலைவன் திடீரென்று இறந்துவிட்டால் அத்தோடு அழிந்துவிடுவதில்லை,அவன் .ஆவியாக அலைந்துகொண்டிருப்பான்.
அந்த ஆவியை சமாதானப்படுத்தி,தங்களுக்கு வேண்டிதை செய்வதற்காக,எதிரிகளை அழிப்பதற்காக பலிகளும்,வழிபாடுகளும் செய்வதுண்டு.
இறந்தவர்களின் நினைவிடத்தில் மண்டபங்கள் கட்டப்பட்டன.
..
இவ்வாறு ஒவ்வொரு இனத்திலும் உள்ள தலைவர்கள் இறக்கும்போது அவர்களுக்கு மண்டபங்கள் கட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.பலிகள் கொடுக்கப்பட்டன.
இந்த பழக்கம் இன்னும் பல நாடுகளில் நடந்துகொண்டிருக்கிறது.குறிப்பாக இந்தியாவில் இன்னும் பரவலாக காணப்படுகிறது.
ஒரு குடும்பத்தில் திருமணமாகாத பெண் அல்லது ஆண் திடீரென்று இறந்துவிட்டால் அவர்களுக்கு வழிபாடு நடத்துவதை இன்னும் காணலாம்.
அதேபோல கட்சித்தலைவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் நினைவிடத்தில் மண்டபங்கள் எழுப்பி வழிபாடு நடத்துவதையும் காண்கிறோம்.
..
குலதெய்வம்,இனதெய்வம்,நாட்டார்தெய்வம்,காவல்தெய்வம்,புனிதர்,தீர்க்கதரிசி,மகான்,சித்தர்,அவதாரபுருஷர் என்று பல நிலைகளில் இந்த வழிபாடுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது..
..
முற்காலத்தில் இரண்டு இனங்களுக்கு இடையே போர் மூளும்போது.வெற்றிபெறும் இனத்தின் தெய்வம் பெரும்தெய்வமாகவும்.தோற்கும் இனத்தின் தெய்வம் சிறுதெய்வமாகவும் மாறிவிடுகிறது.
இப்படி பல இனங்கள் ஒன்றுகலக்கும்போது,அனைவரின் வழிபாட்டு தெய்வங்களும் ஒரே இடத்தில் வைத்து வழிபடப்படுகின்றன.
சில நேரங்களில் இப்படிப்பட்ட பல தெய்வ வழிபாடுகளை சில தெய்வம் விரும்புவதில்லை.தன்னைத்தவிர பிற தெய்வங்களை வணங்கக்கூடாது என்று ஆணையிடுகிறது.அது மட்டுமல்ல பிற தெய்வங்களின் நினைவிடங்கள்,உருவங்கள் அனைத்தும் இடித்து அழிக்கவும் ஆணையிடுகிறது.
பலதெய்வ வழிபாடு ஒரு தெய்வ வழிபாடுகளாக மாறுகின்றன.
இவ்வாறு பல இடங்களில் தோன்றிய வழிபாடுகள் சில காலத்திற்கு பிறகு அழிந்துபோகிறது.
..
இந்தியாவிலும் இதேபோன்று பல இனத்தினர் பல தெய்வங்களை வணங்கும் நிலை ஒரு காலத்தில் காணப்பட்டது.
இன்று தேவர்கள் என்று குறிப்பிடப்படும் பல பெயர்கள் ஒரு காலத்தில் ஒவ்வொரு இனத்திற்கும் உரிய தெய்வமாக இருந்தது.
உதாரணமாக இந்திரனை வணங்குபவர்கள் ஒரு இனமாக இருந்தார்கள்.தங்கள் தெய்வமே உலகத்தை படைத்து காத்து அழித்து வருவதாக கருதினார்கள்.அதேபோல வருணன் என்ற பெயரில் உள்ள தெய்வமே உலகத்தில் சிறந்தது.அந்த தெய்வம்தான் உலகத்தை படைத்து,காத்து,அழித்து வருகிறது என்று கருதினார்கள்.
இப்படி ஒவ்வொரு இனத்தினரும் தங்கள் தெய்வம்தான் உலகத்தில் உயர்ந்தது என்றே கருதினார்கள்.
பல இனத்தவர் ஒன்று சேர்ந்த போது வழிபாடு தொடர்பாக பிரச்சினைகள் ஏற்பட்டன.
ஆனால் நாம் பிற நாட்டினர்போல ஒரு தெய்வத்தைத்தவிர பிற தெய்வங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.மாறாக அனைத்தையும் ஒன்று சேர்க்கும் நிலையை பின்பற்றினோம்.
..
நாம் தெய்வங்களுக்கு பதவிகளைக் கொண்டுத்தோம்.
இந்திரன் என்பது ஒரு பதவி.வருணன் என்பது ஒரு பதவி,இதேபோல இயற்கையை ஆட்சி செய்ய பல பதவிகள் உருவாக்கப்பட்டன.ஒவ்வொரு நதிக்கும் ஒரு தெய்வம். ஒவ்வொரு மலைக்கும் ஒரு தெய்வம். சூரியன்,சந்திரன்,பல கிரகங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு தெய்வம்.இப்படிப்பட்ட தெய்வங்களின் எண்ணிக்கைக்கு கணக்கே இல்லை.
ஆனால் இவைகள் எல்லாமே பதவிகள்தான்.
ஒரு பிரதமர் ஐந்து ஆண்டுகள் நாட்டை ஆள்வார்.அதன்பிறகு இன்னொருவர் நாட்டை ஆள்வார். பிரதமர் என்ற பெயர் மாறாது.ஆனால் ஆட்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.
..
அதேபோல இந்திரன் என்ற பெயரும்,வருணன்,ஆதித்யன்,யமன் போன்ற பெயர்கள் மாறுவதில்லை. அந்த பதவியை அடையும் ஆன்மாக்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.
அரசர்கள் ஒவ்வொருவரும் பல யாகங்களை செய்து தெய்வபதவியை அடைந்து இன்புற்றிருந்தார்கள்.
பெண்கள் நதி தெய்வங்களானார்கள்.
சிலர் நட்சத்திரங்களாகி வானில் ஜொலித்தார்கள்.
..
இப்படிப்பட்ட ஒரு ஏற்பாட்டை முற்காலத்தில் ஆரியர்கள் மேற்கொண்டார்கள்.
ஒரு மன்னனுக்கு இந்திர பதவி வேண்டுமா?ஏற்கனவே இருக்கும் இந்திரனுடன் சண்டையிடத்தேவையில்லை.இந்திர பதவியை அடைவதற்குரிய புண்ணிய கர்மங்களை செய்தல்போதும்.ஏற்கனவே உள்ள இந்திரனின் பதவி முடிந்தவுடன் இவனுக்கு இந்திரபதவி கிடைத்துவிடும்.
இப்படியே பிற பதவிகளும்..
பிறநாடுகளில் நடந்ததுபோல என்னை மட்டுமே வழிபட வேண்டும்.பிறரை வழிபட்டால் கொலை செய்யப்படுவீர்கள் என்ற அதிகாரதெய்வங்கள் இங்கே இல்லை.
மனிதன் தெய்வங்களைவிட மேல்நிலையில் இருந்தான்.
தவம் செய்பவனைக்கண்டு தெய்வங்கள் பயப்பட்டன.எங்கே தங்கள் பதவி பறிபோய்விடுமோ என்று நினைத்தார்கள்.
தவயோகிகள் அனைத்து தெய்வங்களையும்விட உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டார்கள்.
..
இந்த காலத்தில் பல தத்துவங்கள் உருவானது.சிலர் வழிபாடுகளிலிருந்து விலகி தத்துவங்களை நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள்.சாங்கியம்,யோகம் போன்ற தத்துவங்களை பின்பற்றியவர்கள் மனிதர்களிடமிருந்து விலகி காடுகளில் சென்று தவவாழ்க்கை வாழ்ந்தார்கள்.
..
சிறுதெய்வங்கள்,காவல் தெய்வங்கள் இவர்களை வழிபடும் பழங்குடி மகக்ள் ஒரு பக்கம்
தேவர்களை வணங்கும் பொதுஜனங்கள் ஒரு பக்கம்.
சமுதாயத்திலிருந்து விலகி தத்துவங்களில் நாட்டம் ஏற்பட்டு தவவாழ்வில் ஈடுபட்டவர்கள் ஒருபக்கம்
..
காலம் செல்ல செல்ல இந்த தெய்வங்கள் மனிதர்மீது அதிக ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்கள்.
தெய்வங்களின் எண்ணிக்கை கணக்கில்லாமல் இருந்ததால், யாகங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பலிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. பல்வேறு உயிரினங்கள் பலியிடப்பட்டன.
இவைகள் சாதாரணமனிதர்களுக்கு பெரும் தொந்தரவாக இருந்தது.
..
இந்த காலகட்டத்தில் புத்தமதமும்,சமண மதமும் தோன்றியது.
தத்துவங்களில் இருந்த சில அம்சங்களை ஏற்றுக்கொண்டு.புதிய மதங்களை உருவாக்கினார்கள்.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த அனைத்து வழிபாடுகளையும் எதிர்த்தார்கள்.
..
புத்தரை மையமாக வைத்து புதிய வழிபாடுகள், சடங்குகள்,கோவில்கள் உருவானது.
பல தேவர்களின் வழிபாடுகளுக்கு பதிலாக புத்தர் மட்டுமே வழிபடப்பட்டார்.
உயிரினங்களை பலியிடுதல் இல்லை.யாகங்கள் இல்லை.எளிமையான வழிபாடு,
மக்களுக்கு இருந்த சுமை மறைந்துவிட்டதால் ஏராளமானோர் புத்தமதத்தை பின்பற்றினார்கள்.
அதேபோல சமண மதமும் வளர்ச்சியடைந்தது.
..
ஒரு மனிதன் தவம் செய்து தேவனாக மாறியதுபோல, புத்தமதத்தில் ஒருவன் தவம் செய்து புத்தனாக மாறலாம்.புத்தனாகிவிட்டால் உலகத்திலிருந்து விடுதலை கிடைத்துவிடும்.மனித உடலிலிருந்து விடுதலை கிடைத்துவிடும்.
..
சொர்க்கம் நரகம் என்று எதையும் நம்பத்தேவையில்லை.
புத்தமதம்,சமண மதம் இந்த இரண்டும் முன்னோர் வழிபாடுகள்,குலதெய்வ வழிபாடு,இன வழிபாடு,தேவ வழிபாடு போன்ற பல தெய்வ வழிபாடுகளை எதிர்க்கிறது.
..
புத்தம்,சமணம் இவைகளை எல்லோராலும் பின்பற்ற முடியவில்லை.
அந்த காலத்தில் நன்கு படித்த,நாகரீகமடைந்த மக்களிடம் மட்டுமே புத்தமும்,சமணமும் சென்று சேர்ந்தது.
பல்வேறு இடங்களில் சிறுதெய்வங்களையும்,குல தெய்வங்களையும், காவல் தெய்வங்களையும் வழிபட்ட மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.அவர்களை புத்தமதம் ஏற்றுக்கொள்ளவில்லை.தன்னுடன் சேர்த்துக்கொள்ளவில்லை.
வெளிநாட்டிலிருந்து பலர் இந்தியாவை நோக்கி வந்தார்கள். அவர்கள் பல தெய்வங்களை வழிபடுபவர்களாக இருந்தார்கள். அவர்களையும் புத்தமதம் ஏற்றுக்கொள்ளவில்லை.
..
ஒரே சட்டம்.ஒரே தத்துவம்,ஒருதெய்வ மனிதர்
அதற்குள் அனைவரும் வரவேண்டும்.அப்படி இல்லாதவர்களுக்கு எதுவும் கிடைக்காது.
இப்படிப்பட்ட மதங்கள் சிலகாலம் சிறப்பாக வளர்கின்றன.பிறகு படிப்படியாக அழிவை சந்திக்கின்றன என்பதை வரலாறுகளிலிருந்து பார்க்கிறோம்
...
புத்தமும்,சமணமும் ஆரியமதம் அல்ல என்று சிலர் நினைக்கிறார்கள்.அது தவறு.
1.புத்தரும்.சமணமதத்தை தோற்றுவித்தவர்களும் ஆரிய வம்சத்தை சேர்ந்தவர்கள்தான்.
2.உபநிடதங்களில் உள்ள கருத்துக்களை ஏற்றுக்கொண்டுதான் புத்தமும்,சமணமும் தங்களை உருவாக்கிக்கொண்டன.
3.அந்த காலத்தில் தேவர்களை வழிபட்ட ஆரியர்கள்தான் புத்தமதத்திற்கும்,சமண மதத்திற்கும் மாறினார்கள்.

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?