Monday, 15 June 2020

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-39

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-39

🌸

வெடிகுண்டு  எறிவேன்

..................

 மார்ச் மாதத்திலிருந்து  சுவாமிஜி சான் பிரான்சிஸ்கோவில் அளித்த சொற்பொழிவுகள் மனம், மன இயல்  சம்பந்தமானவை, ராஜ யோகத்துடன் தொடர்பு உடையவனாக இருந்தன. முக்திக்கு வழி என்ற தலைப்பில் ஒரு நாள் பேசினார். அந்தச் சொற்பொழிவு நிறைவுறும் வேளையில், நாளை நான் மனம் அதன் ஆற்றல்களும் சாத்திய கூறுகளும் என்ற தலைப்பில் பேசவுள்ளேன் வந்து கேளுங்கள். அதில் சிறப்பான செய்தி ஒன்றை உங்களுக்கா ச் சொல்லப்போகிறோம். ஆம், வெடிகுண்டு ஒன்றை வீசப்போகிறேன் என்றார். இதனை க்  கூறிவிட்டு முகத்தில் புன்னகை மலர பார்வையாளர்களை ஒரு முறை பார்த்தார். பிறகு கைகளை அசைத்தபடியே, வாருங்கள், அது உங்களுக்கு நன்மை செய்யும் என்றார்.

 

 மறுநாள்  அரங்கம் நிரம்பி வழிந்தது. நிற்கக் கூட இடமில்லாத அளவிற்குக் கூட்டம் அலை மோதியது. சவாமிஜியும் வெடிகுண்டை எறியவே செய்தார். மக்கள் மனத்தில் விழுந்து, ஒரு மாபெரும் விளைவை ஏற்படுத்தும் வண்ணம் சொல்-குண்டை எப்படி எறிவது என்பது அவருக்கே கைவந்த கலை என்கிறார் ரொடீமல். அப்படி அவர் எறிந்த வெடிகுண்டு தான் என்னஃ தூய்மை, புனிதம், கற்பு, நல்லொழுக்கம் போன்ற கருத்துக்களை அவர் ஆணித்தரமாகஎடுத்துக் கூறியது தான் அந்த வெடிகுண்டு இவை மேலை நாட்டினருக்குத் தெரிந்த விஷயங்கள் தான். ஆனால் அவர்களுக்கு அவற்றின் முழுப் பரிமாணம் , இந்திய அணுகுமுறை போன்றவை புதியவை. காம ஆற்றலை முற்றிலுமாக க் கட்டுப் படத்த முடியும் என்பதில் மேலை விங்ஙானம் அக்கறை காட்டுவதில்லை. கத்தோலிக்கத் தத்துவம் ஏற்றுக் கொண்ட போதிலும் அவ்வளவு வற்புறுத்துவதில்லை. சவாமிஜி உண்மையைப் பேசினார்.

 அன்று இந்து இளைஞன் ஒருவன் என்னைக் காண வந்திருந்தான். உடல் நிலை, சரியில்லாமல் இருந்தான் அவன். பேச்சுவாக்கில் அவன், பிரம்மச்சாரியம்  என்பதெல்லாம் பொய், அது முடியவே முடியாது. அது இயற்கை நியதிக்கே எதிரானதுஎன்று இந்த நாட்டிலுள்ள டாக்டர்கள் கூறுகிறார்கள் என்றான் அவன். நான் அவனிடம்,பொ. இந்தியாவிற்குத் திரும்பிப்போ. உன் முன்னோர்களின் உபதேசங்களைப் படி. அது சாத்தியம் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் போதிப்பது மட்டுமல்ல. வாழ்ந்ததும் காட்டி வருகிறார்கள்  என்றேன்.

 இந்த இடத்தில் சுவாமிஜி வார்த்தைகளால் விளக்க முடியாத வெறுப்பை முகத்தில் தேக்கியபடி பார்வையாளர்களை ஒரு முறை பார்த்தார். பிறகு அதிர் வேட்டு போல் முழங்கினார். இந்த நாட்டின் ம டாக்டர்களே! காம ஆற்றலைக் கட்டுப் படுத்துவது இயற்கை நியதிக்கே முரணானது என்று நீங்கள்  கூறுகிறீர்கள். பாவம், என்ன சொல்கிறீர்கள் என்பதே உங்களுக்குத் தெரியவில்லை. கற்பு என்பதன் பொருள் உங்களுக்குப் புரிய வில்லை. நீங்கள் மிருகங்கள்! மிருகங்கள்! மிருகங்களின் ஒழுக்க முறையை வாழ்கின்ற நீங்கள் இதற்கு மேல் என்ன சொல்ல முடியும்?

 தாம் சொல்வதற்கு ஏதாவது எதிர்க் கருத்துக்கள் இருக்குமானால் சொல்லலாம் என்று சவால் விடுவது போல் சுவாமிஜி கூட்டத்தின ரை ஒரு முறை பார்த்தார்.  எங்கும் நிசப்தம்! ஒருவரும் பேசத் துணியவில்லை. அந்தக் கூட்டத்தில் டாக்டர்களும் பலர் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி,  அந்த 19- ஆம் நூற்றாண்டில் காமம், உறவு, உடலுறவு போன்ற வார்த்தைகளைப் பொது இடங்களில் பேசவே மக்கள் தயங்கினர். இந்தத் தலைப்பில் பொதுச் சொற்பொழிவுகள் இந்த நாட்டில் வரவேற்கப் படுவதில்லை என்று சுவாமிஜியே கூறியதுண்டு. அது தெரிந்தும் அவர் அவைபற்றி பேசினார். சுவாமிஜியின் பேச்சு பலரை முகம் சுளிக்க வைத்தது. பலர் அதன் பிறகு அவரது சொற்பொழிவுகளுக்கு வருவதையே நிறுத்தி விட்டனர். சிலரோ, சுவாமிஜி இந்த அளவிற்குப் பேசக் கூடாது என்றெல்லாம் அவருக்கு அறிவுரை கூறினர்.

 

 ஆனால் சுவாமிஜி எதையும் பொருட்படுத்த வில்லை. அது மட்டுமல்ல, தொடர்ந்தும் அவர் தேவையான இடங்களில் அத்தகைய ரீதியில் பேசவே செய்தார். ஒரு முறை ” ம ன ஒருமைப் பாடு என்ற தலைப்பில் பேசிக் கொண்டிருந்த போது, ஒருவர் அவரிடம் தத்துவச் சொற்பொழிவுகள் வேண்டும் என்று கேட்டார். அப்போதும் சுவாமிஜி, உங்களுக்குத் தத்துவம் வேண்டுமா? அப்படியானால் பீரங்கி குண்டுகளை எதிர்கொள்ள த் தயாராக இருங்கள் என்று கூறினார். அது போலவே அவர் தொடர்ந்து பேசிய, ” இயற்கையும் மனிதனும் ஆன்மாவும் கடவுளும் நான் அந்த நானே ”லட்சியம் போன்ற சொற்பொழிவுகள் மேலை நாட்டுத் தத்துவக் கருத்துக்களை அடியோடு  அசைப்பனவாக இருந்தன! தங்கள் மதக் கொள்கைகள் அடியோடு அசைவது கண்டு பார்வையாளர்கள் திகைப்பதும் பிரமிப்புடன் உட்கார்ந்திருப்பதும் சுவாமிஜிக்கு சிரிப்பையே அளித்தன. சல வேளைகளில் பற்களால் கீழ் உதட்டை அழுத்தியபடி சிரிப்பை அடக்கிக் கொள்வாராம் அவர்!

 நான் எல்லையற்ற ஆன்மா, இயற்கையின் தலைவன், நான் இயற்கையின்  அடிமை அல்ல, வேறுபாடுகள், தொகுப்புகள் எல்லாவற்றிற்கும் அப்பால், காலம் இடம் காரண காரிய நியதழ அனைத்திற்கும் அப்பால், நான் அந்த நானாக இருக்கிறேன்.

 

 சாஸ்திரங்கள் இல்லை. கற்பிப்பவர் இல்லை, தெய்வங்கள் இல்லை, கோயில்கள், பூஜாரிகள், தெய்வங்கள், அவதாரங்கள், ஏன், கடவுளையே கூட விட்டு விடுங்கள். இது வரை இருந்துள்ள அனைத்துக் கடவுளும் நானே!

 சுவாமிஜி இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டத்தினர் ஸ்தம்பித்துப்போய் அமர்ந்திருப்பார்கள். ”நான் பாவி நான் அஞ்ஞானி என்றெல்லாம் கூறப் பட்ட கருத்துக்கள் அதிர்ச்சியை அளித்திருக்கும் என்பதில் ஐய மில்லை. இத்தகைய சொற்பொழிவு ஒன்றின் போது முன் வரிசையில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் எழுந்து, ஐயோ, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இங்கிருந்து தப்பித்து விட வேண்டும் என்று கூறியபடியே எழுந்து தமது கைத்தடியை வேகமாக ஊன்றி நடந்தபடி வெளியேறினார். சுவாமிஜி முகத்தில் புன்னகை தவழ பார்த்துக்கொண்டிருந்தார்.

 

 தமது சொற்பொழிவுகளில் கூறப் படுகின்ற சில கருத்தைக்கேட்டு , இன்று அவர்கள் கோபம் கொண்டாலும் நாளை அவர்கள் இதனால் பெரும் பயன் அடைவார்கள் என்பது சுவாமிஜிக்குத் தெரிந்திருந்தது.  உண்மையை நான் எதற்கு ஒப்பிடுவேன் தெரியுமா? அளவிட முடியாத ஆற்றல் வாய்ந்த அமிலத்திற்கு. எங்கு விழுந்தாலும் அந்த இடத்தை அது அரித்து எரித்துவிடும். மென்மையான  பொருட்களை விரைவில் அழிக்கும். கடினமாக கல்போன்றவற்றைக் கொஞ்சம் தாமதமாக அழிக்கும்.  ஆனால் என்றாவது அது அழிந்தே தீரும்........... நானும் தருவதெற்கென்று செய்தி  ஒன்று உள்ளது. அதனை இனிமையான மொழியில் பேசி இதமாக எல்லோருக்கும் எடுத்துச் சொல்வதற்கு எனக்கு நேரமில்லை. அது மட்டுமல்ல, இனிமையாக மாறுவதற்கான முயற்சிகள் ஒருவனை ஏமாற்றுப் பேர் வழியாகவே மாற்றும்

என்று ஒரு முறை சுவாமிஜி கூறினார்.

......

  மின்சார அதிர்ச்சி

.........

 சுவாமிஜியைச் ” சூறாவளித் துறவி என்று கூறுவதுண்டு. ஆனால் இப்போது அவர் அந்த அளவிற்குச் சொற்பொழிவுகள் செய்யவில்லை. ஆனால் செய்தவை இத்தகைய ஆற்றல் மிக்கவையாக இருந்தன. சான் பிரான்சிஸ்கோவில் தான் அவர் தமது மிகச் சிறந்த ஆன்மீக ஆற்றலை வெளிப்படுத்தினார் என்று எழதுகிறார் ஹேன்ஸ்ப்ரோ. தமது ஒரே வாக்கியத்தால் அரங்கத்தில் அமர்ந்திருந்த அனைவருக்கும் மின்சார அதிர்ச்சி போன்ற அனுபவத்தை அவர் அளித்த  நிகழ்ச்சியும் நடைபெற்றதுண்டு. ஒரு நாள் தமது சொற்பொழிவை ஆரம்பிக்கு முன் ஒரு முறை அனைவரையும் பார்த்தார். பிறகு திடீரென்று, ”எழுந்திருங்கள் விழித்திருங்கள். லட்சியம் கைகூடும்வரை நில்லாது செல்லுங்கள் என்று கூறினார். அங்கிருந்த அனைவரும் தங்கள் உடம்பில் மின்சாரம் போன்ற ஒரு சக்தி பாய்ந்ததை நிதர்சனமாக உணர்ந்தனர் என்கிறார் மிசஸ் எடித் ஆலன்!

 

சுவாமிஜி தமது சொற்பொழிவுகளுக்கு முன்னால் எதுவும் சாப்பிடுவதில்லை, அது சிந்திக்கும் ஆற்றலைத் தாமதப்படுத்துகிறது என்பார் அவர். சொற்பொழிவு முடிந்ததும் சாப்பிடுவார். பொதுவாக யாராவது அவருக்கு விருந்து ஏற்பாடு செய்திருப்பார்கள். சில வேளைகளில் அவரும் சிலருக்கு விருந்தளிப்பது உண்டு.

  நான் விரும்புவதை இன்று போதிக்கிறேன். இப்படி லட்சியத்திலேயே நான் வளர்ந்திருக்க க் கூடாதா. துவைதக் கொள்கைகளைடீய அறியாமல் இருந்திருக்கக் கூடாதா என்று நான் எண்ணுகிறேன் என்று தமது ” எதிர்கால மதம் வேதாந்தமா? என்ற சொற்பொழிவில் சுவாமிஜி கூறுகிறார். அவர் விரும்பினார். போதித்தார் என்பதல்ல இதன் பொருள். காலத்தின் தேவை என்பதை உணர்ந்திருந்த தால் அவர் இதனைச்செய்தார்.

 இதே சொற்பொழிவில் சுவாமிஜி கூறுகின்ற மற்றொரு கருத்து மிகவும் சிந்திக்கத் தக்கது.உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த நூல்கள்வேதங்கள். அந்த நூல்கள் கூறுகின்ற அறுதித் தத்துவமாக வேதாந்தம் கருதப்படுகிறது. ஆனால் அது ஒரு வாழ்க்கை நெறியாக இது வரை கருதப் படவில்லை என்பது சுவாமிஜியின் அனுபவ பூர்வமான கருத்து.

 மறைந்த ஒருவரின் சேவகன் நான். நான் தூதன் மட்டுமே. நான் பரிசோதனை செய்து பார்க்க விரும்புகிறேன். நான்  உங்களுக்குக் கூறிய வேதாந்த போதனைகள் இதற்கு முன் பரிசோதனை செய்யப்படவில்லை. தத்துவங்களில் மிகப் பழமையானது வேதாந்தம் என்பது  உண்மையானாலும், அது எப்போதும் மூட நம்பிக்கைகளுடனும் அவை போன்ற பிறவற்றுடனும் கலந்து குழம்பியே இருந்திருக்கிறது.

 

 நானும் என் தந்தையும் ஒருவரே  என்றார் எசு. நீங்களும் அதைத் திருப்பிச் சொல்கிறீர்கள். ஆனால் அது மனித குலத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை. பத்தொன்பது நூற்றாண்டுகளாகியும் இன்னும் அவர்கள் அந்தப் போதனையைப் புரிந்து கொள்ளவில்லை. ஏசுவை அவர்கள் மனிதர்களின் ரட்சகர் ஆக்குகிறார்கள்.  அவர் கடவுள், நாம் புழுக்கள்! இந்தியாவிலும் இப்படித்தான்.

 ஒவ்வொரு நாட்டிலும் இது போன்ற நம்பிக்கை தான் மதத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பலகோடி மக்கள் உலக நாயகராகிய ஒருவரை, அவதார புருஷர்களை, ஆச்சாரிய புருஷர்களை வழிபடவே கற்பிக்கப் பட்டிருக்கிறார்கள். தாங்கள் எந்தவித ஆற்றலும் அற்றவர்கள், துன்பத்தில் உழல்வதற்கே பிறந்தவர்கள், முக்தி பெறுவதற்கு  வேறு ஒருவர் அல்லது பலரின் கருணை அவசியம் என்றே போதிக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகளில் பல சிறந்த விஷயங்கள் உள்ளன என்பது உண்மை தான். இவை மிகச் சிறப்பான நிலையில் இருந்தாலும் மதத்தின் பாலர் வகுப்பு நிலையில் உள்ளவை மட்டுமே. அவை செய்துள்ள உதவியும்மிகக் குறைவே. மனிதர்களின் மனம் இந்த நம்பிக்கைகளால் எந்த இழிவையும் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு மயங்கியுள்ளது. என் றாலும் சில மாமனிதர்கள் இந்த  மயக்கத்திலிருந்து விடுபடுகின்றனர். மகான்கள் தோன்றுவார்கள். இந்தக் குழந்தை விளையாட்டுக்களை  ஒதுக்கித் தள்ளி, ஆன்மாவின் மூலமே ஆன்மாவை வழிபடுவதான இந்த உண்மை மதத்தைத்  தெளிவாகவும் ஆற்றல் மிக்கதாகவும் செய்வார்கள்- அதற்கான காலம் விரைவில் வந்து கொண்டிருக்கிறது.

 சுவாமிஜி ஏன் வேதாந்தத்தைப்போதித்தார் என்பதை இங்கே தெளிவாக எடுத்துக் கூறுகிறார். நான் தூதன் மட்டுமே, என்று கூறுவதன் மூலம் இது  ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆணைப்படி நடக்கின்ற ஒன்று என்பதையும் அவர்  தெளிவு படுத்துகிறார். ஆன்மாவின் மூலமே ஆன்மாவை வழிபடுவதான அந்தக் காலம் எப்போது வரும்.

 எனக்குத் தெரியாது. ஆயிரம் ஆண்டுகளுக்குள் நடக்காது. பழைய மூட நம்பிக்கைகள் ஒழிய வேண்டும். மூட நம்பிக்கைகளை எப்படி அழியாமல் காப்பது என்பதிலேயே நீங்கள் மூழ்கி யிருக்கிறீர்கள். இத்துடன் உடன் பிறந்த சகோதரன், ஜாதிச் சகோதரன், சமுதாயச் சகோதரன் என்ற எண்ணங்கள் வேறு இருக்கின்றன. வேதாந்த லட்சியத்தை அடைவதில் இவை எல்லாம்  தடைகள். மதம் என்பது இது வரை ஒரு சிலருக்கே மதமாக இருந்திருக்கிறது. உலகம் முழுவதும் மதத் துறையில் வேலை செய்தவர்களுள் பலரும் உண்மையில் அரசியல் வாதிகள்........

...... இங்கே நான் இந்தக் கோட்பாடுகளைச் சொல்கிறேன். எத்தனைபேர் இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வீர்கள்? ஆனால் எல்லா உண்மையும் இங்கே உள்ளது, உண்மையை  உங்களுக்குச் சொல்ல வேண்டுவது என் கடமை.

.....

  பணத்திற்காகச் சொற்பொழிவு

.....................

 மேற்கண்ட  சொற்பொழிவு தான் சான்பிரான்சிஸ்கோ வில் சுவாமிஜியின் கடைசி சொற்பொழிவு. பணத்திற்காகச் சொற்பொழிவு செய்கின்ற இந்தநிலையிலிருந்து  நான் விடுபடுவேனா? என்று சவாமிஜி ஏங்குவதுண்டு. ஆனால் மடத்திற்காகவும்  பணிகளுக்காகவும் அவர் சம்பாதித்தாக வேண்டியிருந்தது. அவருக்குக் கணக்கு என்பது சுத்தமாக வராது. இருப்பினும் ஏதோ ஒரு கணக்கு வைத்துக் கொள்வார். அவரது வரவு செலவுகளை யெல்லாம் ஹேன்ஸ்ப்ரோதான்  கவனித்துக் கொண்டார். அவருக்கு உதவி செய்த ஹேன்ஸ்ப்ரோவும் இந்த விஷயத்தில் அவ்வளவு திறமை சாலி அல்ல. அவர் உண்டியல் போன்ற சிறிய பானைகளை வைத்திருந்தார். பணம் வரவர அவற்றில் இட்டு வைப்பார். கடைசியில் எடுத்து எண்ணுவார். இவ்வளவு பணம் என்று சுவாமிஜியிடம் தெரிவிப்பார். அது போதாது என்று தோன்றினால் சுவாமிஜி மீண்டும் சொற்பொழிவுகள் செய்ய ஆரம்பிப்பார். இப்படிச் சென்றது அவரது வாழ்வு.

 

 இந்த நாட்களில் சுவாமிஜிக்குக்கேத்ரி மன்னர் அனுப்பி வந்த பணம் நிறுத்தப் பட்டது. பல வழிகளில் சுவாமிஜிக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்தினருக்கும் உதவி  வந்தவர் கேத்ரி மன்னர். சுவாமிஜியின் சொந்தச் செலவுகளுக்காக வும், அவரது தாயாருக்காகவும் அவர்  மாதந்தோறும் தனித்தனியாகப் பணம் அனுப்பி வந்தார். இப்போத திடீரென்று சுவாமிஜிக்கு அனுப்பி வந்த பணத்தை மட்டும் அவர் நிறுத்தினார். ஒரு வேளை சுவாமிஜிக்குப் பணக்கார அமெரிக்கச் சீடர்கள் பலர் உள்ளனர். எனவே தாம்  அனுப்ப வேண்டியதில்லை என்று மன்னர் எண்ணியிருக்கலாம். இதன் காரணமாக சுவாமிஜி அலமேடா சென்ற பிறகும் ஓரிரு முறை சான் பிரான்சிஸ்கோவிற்கு வந்து சொற்பொழிவு செய்ய வேண்டியதாயிற்று.

 சான்பிரான்சிஸ்கோவை விட்டுப் புறப்படு முன் சுவாமிஜி அங்கே நிரந்தரமாகச்  செயல்படுவதற்கான  வேதாந்த சொசைட்டி ஒன்றையும் தொடங்கி வைத்தார்.

...................

அமெரிக்காவில் கடைசி நாட்கள்

............................

துடுக்குச் சிறுவனாக

.......................

 சான் பிரான்சிஸ்கோவிலிருந்து  1900 ஏப்ரல் 11-ஆம் நாள் அலமேடா சென்றார் சுவாமிஜி. சான் பிரான்சிஸ்கோவிற்கு அருகில் அமைந்த அழகிய ஊர் இது. அங்கே உண்மை இல்லம் என்ற நிறுவனத்தின் கட்டிடத்தில்  சுவாமிஜி தங்கினார். அதன் நிறுவர்களான ஜார்ஜ் ரூர்பாக் தம்பதிகள் மற்றும் மிஸ் லூசி ஆகியோர் அவரை மிகவும் அன்பாக வரவேற்று தங்கச் செய்தனர். பூக்களும் அழகிய தோட்டங்களும் சுற்றிலும் அமைந்த ஒரு வீடு அது.

 உண்மை இல்லத்தில் யாரும் புகைபிடிக்கக் கூடாது என்பது நியதி. ஒரு நாள் சுவாமிஜி அங்கே ஒரு விருந்திற்கு அழைக்கப் பட்டிருந்தார். அழைத்தவர் உண்மை இல்லத்தின் அங்கத்தினர். அவர்  விருந்தின் இடையில் எதற்காகவோ உள்ளே சென்றார். நியதி தெரியாத சுவாமிஜி. அந்த நேரத்தில் புகைக் குழாயை எடுத்து புகை பிடிக்க ஆரம்பித்தார். அனைவரும் திகைப்புடன் பார்த்தனர். சுவாமிஜியை அழைத்திருந்தவர் அப்போது உள்ளே வந்தார். சுவாமிஜி புகைபிடிப்பதைக் கண்டதும் சற்று ஆத்திரத்துடன், சுவாமிஜி, மனிதன் புகை பிடிக்க வேண்டும் என்று கடவுள் நினைத்திருந்தால், புகையை வெளியே விடுவதற்காக அவர் மனிதனின் தலையில் ஒரு புகைக் குழாயை வைத்தே படைத்திருப்பாரே! என்றார் . சுவாமிஜி சற்றும் அதிராமல், அமைதியாக, ஆனால் புகைக் குழாயைக் கண்டு பிடிப்பதற்கான அறிவை நமக்கு அவர் தந்திருக்கிறாரே என்று புன்னகையுடன் கூறினார். அனைவரும் சிரித்தனர். சுவாமிஜி புகை பிடிக்க அனுமதி வழங்கப் பட்டது. உண்மை இல்லத்தின் நியதிகள் தெரிந்திருந்தால் சுவாமிஜி புகை பிடிப்பதைத் தவிர்த்திருப்பார். அல்லது  புகை பிடிப்பதற்கான அனுமதியாவது பெற்றிருந்திப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

 

 ஒரு நாள் காலை உணவிற்கு வைத்திருந்த பாலாடைக் கட்டியைக் காணவில்லை. உணவிற்காக அமர்ந்த பின்னரே அதனைக் கவனித்தார்கள். தேடோதேடென்று அனைவரும் தேடினார்கள். எங்கும் கிடைக்கவில்லை. பால்காரன் அதனைக் கொண்டு வந்ததைக் கண்டதாக ஓரிருவர் கூறினார்கள். இந்தப் பரபரப்பு அனைத்தையும் கவனித்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தார் சுவாமிஜி. எவ்வளவு தேடியும் கிடைக்காமல் அனைவரும் ஓய்ந்து போய் அமர்ந்த போது, ஓ அதுவா, நான் தான் அதைச் சாப்பிட்டேன் என்று தோன்றுகிறது என்று அமைதியாகக் கூறினார் சுவாமிஜி. பலர் சுவாமிஜியின் துடுக்குத்தனத்தை ரசித்தாலும் சிலரால் இதனை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவர்கள் முகம் சுளித்தனர்.

....

 காற்றாலையின் நோய்.

...............................

 உண்மை இல்லம் என்பது அமெரிக்காவிலுள்ள கிறிஸ்தவ மதப் பிரிவுகளில் ஒன்று. ஏசுநாதர் நோயாளிகளைக் குணப்படுத்தினார். எனவே நாமும் நமது மன ஆற்றலைப் பயன் படுத்தி நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பது அவர்களின் கருத்து. தங்கள் கொள்கைப் பிடிப்பில், அவர்கள் தங்கள் ஆற்றலால் மனிதர்களின் நோயை மட்டுமல்ல, பழுதான எந்திரங்களையும்சரியாக்க முடியும் என்றுநம்பத் தொடங்கினர். கீழ் வரும் நிகழ்ச்சியை சுவாமிஜி கூறினார்.

 ஒரு முறை தொடர்ந்து மழை இல்லாமல் போனதால் இல்லத்தின் தோட்டத்தில் செடிகள் வாடத்தொடங்கின. அந்த வேளையில் காற்றாலை பழுதாகியது. அதனால் கிணற்றிலிருந்து நீரும் இறைக்க  இயலவில்லை. எளிய மனத்தினனான தோட்டக்காரன் அங்கத்தினரை அழைத்து, இந்தக் காற்றாலையின் நோயைக் குணப்படுத்துவோம். எல்லாம் தெய்வீக மனத்தில் உள்ளது. தெய்வீக மனத்தில் எந்தக் குறைபாடும் இல்லை. இந்தக் காற்றாலை உண்மையில் நன்றாகவே உள்ளது. நிர் இறைக்க அது தயாராகவே உள்ளது என்று இதய பூர்வமாக மனத்திற்குள் அனைவரும் சொல்வோம் என்று கூறினான். அனைவரும் எழுந்து மௌனமாக நின்று அவன் கூறியபடியே செய்தனர். அவர்களும் நின்றனர். காற்றாலையும் அப்படியே நின்றது. கடைசியில் தோட்டக்காரன் சென்று ஒரு மெக்கானிக்கைக் கூட்டி வந்து தான் சரி செய்ய வேண்டியிருந்தது!

....

 உடம்பை நினைப்பதா?

.......................

 நோயைக் குணப்படுத்துவதை ஒரு பெரிய விஷயமாக உண்மை இல்லத்தினர் கருதுவதை சுவாமிஜி ஆமோதிக்க வில்லை. ஸ்ரீராமகிருஷ்ணரின் இறுதி நாட்களில் அவரிடம் ஒருவர், மன ஆற்றலைப் பயன் படுத்தி நோயைக் குணப்படுத்துமாறு ஆலோசனை கூறினார். அதற்கு அவர், என்ன அற்பத்தனம்! தேவியிடம் கொடுத்த மனத்தைச் சதை பிண்டமான உடம்பில் செலுத்துவதா? என்று கேட்டார். ஒருநாள் இதனைக் கூறிய சுவாமிஜி, ஏசுநாதரும் தமது ஆற்றலைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்காமல் இருந்திருந்தால் இன்னும் மாமனிதராக த் திகழ்ந்திருப்பார். என்று கூறினார். இதுவும் இல்லத்தின் சில அங்கத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. சிலரோ, புளித்துப்போன சிந்தனை முறையிலிருந்து சுவாமிஜி தங்களை மீட்டதாகக் கொண்டாடினர்.

 இல்லத்தின் தலைவர்களில் ஒருவரான மிசஸ் ரூர்பாக்  ஒருநாள் நேரடியாக சுவாமிஜியிடமே கூறினார். நோய்களைத் தீர்க்க வேண்டுமென்று மக்கள் எங்களிடம்  வருகிறார்கள்.  நானும் பலரது நோய்களைத் தீர்த்துள்ளேன். ஆனால் சுவாமிஜி, இது எப்படி நடக்கிறதென்றே எனக்குத்தெரியவில்லை. நானே புரிந்து கொள்ளாத ஓர் ஆற்றலை நான்  பயன் படுத்துகிறேன் என்று எனக்குத்தோன்றுகிறது. இந்த எண்ணம் எனக்கு பயத்தைத்தான் தருகிறது. இப்படி நோய் தீர்ப்பதை விட்டு விடலாம் என்று இருக்கிறேன்.  இதைக்கேட்டு விட்டு சுவாமிஜி அமைதியாகச் சிரித்தார். பிறகு, நல்லது, நல்லது என்று கூறினார்.

 

 அந்த நாட்களில் உண்மை இல்லம் பலர் பின்பற்றும் ஒரு மதப் பிரிவாக இருந்தது. சுவாமிஜியின் வருகையால் அதன் கருத்துக்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் களின் கொள்கைகளை மீறி, அவர் அங்கே புகை பிடித்தார். அசைவ உணவு சாப்பிட்டார். இவற்றை அவர் வேண்டுமென்றே செய்ததாகத்தான் தோன்றுகிறது.ஏனெனில்  எதையும் காரணமின்றி அவர்  செய்வதில்லை. இந்த நியதிகளை மீறியதன் மூலம் அவர்களுக்கு அவர் போதித்தார்.ஏன், அவர் சாப்பிடுவது, அவர் நடப்பது, அவரது வாழ்க்கை முறை உண்மையைத் தேடுபவர்களுக்கு ஒரு பாடமாக இருந்தது. இந்த நியதிகளை மீறியதன் மூலம் உண்மையான ஆன்மீகம் எது என்பதை அவர்களுக்குக் காட்டினார். கீரையை மட்டும் சாப்பிட்டு விட்டால் அது ஆன்மீகம் ஆகிவிடாது என்பதை அவர்களுக்குப் புரிய வைத்தார் சுவாமிஜி.

 ஏற்கனவே கண்டது போல் சுவாமிஜியின் மனம் மிக உன்னதங்களில்  திளைத்த நாட்கள் இவை. எப்போதுமே அவர் ஒருவிதமான பரவச நிலையில் காணப் பட்டார். அவர் பேசுவது, ஏதோ உயர் நிலையிலிருந்து பேசுவது போல் தோன்றியது. இந்த நாட்களில் எழுதிய கடிதங்கள் அவரது அற்புத உணர்வு நிலைகளைத் தெரிவிப்பனவாக உள்ளன. அவரது  எளிய உரையாடல்கூட அவர் திளைத்த உயர்நிலைகளை நமக்கு உணர்த்துகின்றன.

 ஒரு நாள் ஆலன் சுவாமிஜியைக் காண வந்தார். சுவாமிஜியைக் கண்டதும், ஓ! சுவாமிஜி , நீங்கள் அலமேடாவில் இருக்கிறீர்கள் என்றார். உடனே சுவாமிஜி, இல்லை, ஆலன், நான் அலமேடாவில் இல்லை. அலமேடா என்னில் இருக்கிறது என்றார்.


No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...