சுவாமி விவேகானந்தரும் அவரது குரு-ஸ்ரீராமகிருஷ்ணரும்-பாகம்-5


சுவாமி விவேகானந்தரும் அவரது குரு-ஸ்ரீராமகிருஷ்ணரும்-பாகம்-5
-
இறைவனை நேருக்கு நேர் கண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா? இந்த கேள்வியுடன் நரேந்திரர் அலைந்துகொண்டிருந்தார்.
அந்த நாட்களில் பலரால் ஆன்மீக குரு என்று அழைக்கப்பட்டவர் தேவேந்திரநாத் தாகூர். இவர் ரவீந்திரநாத் தாகூரின் தந்தை.ஒரு நாள் மஹரிஷி தேவேந்திரநாத் தாகூரை சந்திக்க நேர்ந்தது.
”ஐயா, நீங்கள் கடவுளைக்கண்டிருக்கிறீர்களா?” என்று நேரடியாகவே அவரிடம் கேட்டார் நரேந்திரர்.
மகரிஷி நேரடியாக பதில் சொல்லாமல், மகனே உன்னிடம் யோகியின் கண்கள் உள்ளன. தியானம் பழகு என்று அறிவுரை மட்டுமே சொல்லி அனுப்பினார். இது நரேந்திரருக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது.
1881 நவம்பர் மாதம் நரேந்திரர் F.A.(FineArts)படித்துக்கொண்டிருந்தார். அன்றைய ஆங்கில இலக்கிய வகுப்பை கல்லூரி முதல்வரான பேராசிரியர் வில்லியம் ஹேஸ்டி நடத்திக்கொண்டிருந்தார்.
பேச்சுவாக்கில் அவர் இயற்யையில் ஒன்றி பரவசநிலை அடைவது பற்றி மாணவர்களுக்கு புரியவைத்துக்கொண்டிருந்தார். மாணவர்களுக்கு இது புரியவில்லை.பலமுறை முயன்றும் மாணவர்களுக்கு புரியவைக்க முடியாததால், இப்படிப்பட்ட பரவசநிலையை பற்றி மேலும் அறிந்துகொள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற ஆன்மீககுருவை நேரில் சந்தித்து தெரிந்துகொள்ளும் படி கூறினார்.
மற்றவர்கள் இதைபற்றி எந்த அக்கரையும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் நரேந்திரரின் உள்மனது ஸ்ரீராமகிருஷ்ணரை சந்திக்கும் படி தூண்டியது.
நரேந்திரர் பல காலமாக பலருடன் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வியை இவரிடமும் கேட்டுப்பார்க்கலாம் என்ற எண்ணத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரை சந்திக்க முடிவு செய்தார்.
--
நரரேந்திரர் ஸ்ரீராமகிருஷ்ணரை சந்திப்பது பற்றி விளக்குவதற்கு முன்னால் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையை பற்றி பாரப்போம்,
-
வங்காள மாநிலத்தில் ஹுக்ளி மாவட்டத்தில் காமார்புகூர் என்ற கிராமத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் பிறந்தார். கதாதரர் என்பது அவரது இயற்பெயர்.
நாமும் வளர்ந்து பெரியவனாகும் வரை அந்த பெயரிலேயே அழைப்போம்.
ஹுதிராமுக்கும், சந்திராவுக்கும் மகனாக 1836 பிப்ரவரி 17 புதன்கிழமை கதாதரர் பிறந்தார்.
கதாதரர் குழந்தையாக இருந்த போதே காண்போரை சுண்டியிழுக்கும் கவர்ச்சி நிறைந்தவனாக காணப்பாட்டான்.
அந்த கிராமத்தில் உள்ள பெண்கள் எல்லாம் சந்திராதேவியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து அந்த குழந்தையை காண்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
பக்கத்து கிராமத்து பெண்கள் கூட கதாதரனை காண சந்திராவின் வீட்டிற்கு வருவதுண்டு. சந்திரா ஏன் எல்லோரும் அடிக்கடி இங்கு வருகிறீர்கள் என்று கேட்கும் போது, என்ன செய்வது உனது மகனை பார்க்கும் போது எங்களுக்கு ஆனந்தம் ஏற்படுகிறது, அவனை பார்க்காமல் எங்களால் இருக்க முடியவில்லை என்று பதில் சொல்வார்கள்.
ஹுதிராம் சிறுவயதில் பெரிய செல்வந்தராக வாழ்ந்து வந்தார்.ஆனால் ஜமீன்தார் ஒருவரின் சூழ்ச்சியின் காரணமாக அனைத்து சொத்துக்களையும் இழந்து ஏழ்மைநிலையில் குடிசையில் வாழக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஏழையாக இருந்தாலும் அவர் நல்லவராகவும், இறைவன்மீது பக்தி கொண்டவராகவும்.இரக்கசிந்தனை உடையவராகவும் இருந்தார்.
கதாதரனின் தாயார் சந்திராவும் அதே போல் இறைவனிடம் பக்தியும், நற்குணங்களும் பெற்றிருந்தார். அவர்களுக்கு ,ராம்குமார்(1805), காத்யாயினி(1810),ராமேஸ்வரர்(1826),கதாதரன்(1836), சர்வமங்களா (1840)என ஐந்து குழந்தைகள்.
கதாதரன் வளர வளர அவனது அறிவுக்கூர்மையும் நினைவாற்றலும் வளர்ந்தன. அவனது அபார அறிவாற்றல் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது.
ராமாயணம், மகாபாரதம் உட்பட அனைத்து தேவதேவியரின் கதைகளையும் தந்தை அவனுக்கு எடுத்துக்கூறுவார். கதாதரன் அவற்றை நன்றாக மனதில் பதியவைத்து, அவற்றை திருப்பிச்சொல்லும் திறமையும் பெற்றிருந்தான். ஆனால் கணிதத்தில் கூட்டல், பெருக்கல் போன்றவை அவனுக்கு பலமுறை சொல்லிக்கொடுத்தும், அதில் ஆர்வம் இல்லை என்பதை தந்தை கண்டார். எனவே பள்ளிக்கு அனுப்பிவைக்க முடிவெடுத்தார்.
கதாதரன் வளரவளர அவனுக்கு குறும்புகளும் கூடவே வளர்ந்தன. பள்ளிக்கு செல்வதற்கு பதிலாக கிராமத்திற்கு வெளியே சென்று விருப்பம்போல் விளையாடுவான். யாத்ரா எனப்படும் திறந்தவெளி நாடகத்திற்கு யாரிடமும் சொல்லாமல் சென்றுவிடுவான்.
-
தொடரும்...
-
விவேகானந்தர் விஜயம்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?