இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-57


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-57
(சுவாமி விவேகானந்தர்)
-
அப்படியானால் இந்த அறிவு என்பது என்ன?
ஏற்கனவே அது முதல் உயிரணுவுக்குள் ஒடுங்கி இருந்திருக்கிறது. திடீரென்று சூன்யத்திலிருந்து தோன்றவில்லை.
ஆகவே இயற்கையின் விதிகளைக் கடந்த, எல்லாவற்றையும் கடந்த, பிறப்பு இறப்பு அற்றவனான, பரிணாம வளர்ச்சிக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லாதவனான, நிறைமனிதனான சுதந்திரனான, தெய்வமனிதன், பரிணாம வளர்ச்சியாகிய சங்கிலியின் ஒரு முனையில் இருப்பவனான மனிதன், அந்தப் பரிணாமச் சங்கிலியின் மறுமுனையிலுள்ள முதல் உயிரணுவுக்குள் ஒடுங்கி இருந்திருக்கவே வேண்டும்.
இதே வாதத்தைப் பிரபஞ்சம் முழுவதற்கும் பொருத்திப் பார்த்தால், படைப்பிற்கு மூலகாரணமே அந்த அறிவுதான் என்பதைக் காண்கிறோம்.
அறிவுதான் எல்லாவற்றிற்கும் ஆரம்பமாக இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் அந்த அறிவு ஒடுங்கியிருக்கிறது. முடிவில் அது முற்றிலும் விரிந்து நிற்கிறது.
பிரபஞ்சம் முழுவதும் பரவி நிற்கும் இந்த அறிவைத் தான் கடவுள் என்கிறோம். வேறு எந்தப் பெயரால் வேண்டுமானாலும் அழையுங்கள். ஆரம்பத்தில் இருந்தது இந்த எல்லையற்ற அறிவுதான் என்பது நிச்சயம்.
பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த இந்த அறிவு,
முதல்கருவில் ஒடுங்கி நின்று, பின்னர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு விரிவடைந்து கடைசியில், நிறைமனிதனாகப் பரிணமிக்கிறது. பிறகு இந்த அறிவு, மூலகாரணத்திற்கு உள்ளேயே மறுபடியும் ஒடுங்கி விடுகிறது.
அதானால்தான் எல்லா சாஸ்திரங்களும், நாம் வாழ்வது, இயங்குவது, இருப்பது எல்லாம் அவருள் தான் என்று சொல்கின்றன. நாம் கடவுளிடமிருந்து வந்தோம், கடவுளிடமே திரும்பிச் செல்கிறோம் என்று எல்லா சாஸ்திரங்களும் சொல்கின்றன.
தத்துவச் சொல்லங்காரங்களைக் கண்டு பயப்படாதீர்கள். வார்த்தைகளைக் கண்டு பயப்பட்டால், தத்துவ வாதிகள் ஆவதற்கு நாம் தகுதியற்றவர்கள்.
பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்திருக்கும் இந்த அறிவையே தத்துவவாதிகள் கடவுள் என்று சொல்கிறார்கள்.
கடவுள் என்று அந்தப் பழைய வார்த்தையை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? என்று பலர் என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறார்கள். ஏனெனில் அந்த வார்த்தைதான் நம் நோக்கத்திற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. அதைவிடச்சிறந்த வார்த்தை நமக்குக் கிடைக்காது.
மனித குலத்தின் நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஆனந்தம் எல்லாமே அந்த வார்த்தையில் அடங்கியிருக்கின்றன. இப்போது அந்த வார்த்தையை மாற்றுவது முடியாத காரியம். இது போன்ற வார்த்தைகளை உண்டாக்கியவர்கள் பெரிய மகான்கள். அவர்கள் இத்தகைய வார்த்தைகளின் சக்தியையும் பொருளையும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் சமுதாயத்தில் இந்த வார்த்தைகள் பழக்கத்திற்கு வந்தபோது மூடர்களும் இதைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இதன் விளைவாக அவை தங்கள் உண்மைப் பொருளையும் மகிமையையும் இழந்துவிட்டன.
--
தொடரும்....
--

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?