சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-36


சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-36
---
-
சீடர்: சுவாமிஜி இந்த நான்-உணர்வை நீக்குவது எப்படி?
-
சுவாமிஜி: அதை நீக்குவது ஒரு வகையில் கடினம் தான்; ஆனால் மற்றொரு வகையில் மிகவும் எளிது! இந்த நான் எங்கே இருக்கிறது என்பதை உன்னால் சொல்ல முடியுமா?
-
ஒருபோதும் இல்லாத ஒன்றை நீக்குவது பற்றி நீ எப்படிப்பேச முடியும்? நான் உணர்வு என்னும் இந்தப் பொய் எண்ணத்தால் மனிதன் மன மயக்கத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த மனமயக்கப் பேய் நம்மைவிட்டுப் போகும் போது நான் எல்லா கனவுகளும் மறைந்துவிடும் அதன் பிறகு சிறு புல் முதல் பிரம்மாவரை எல்லாவற்றிலும் இருப்பது ஆன்மா மட்டுமே என்பது தெரியவரும். இதை அறிய வேண்டும் அனுபூதியில் உணர வேண்டும்.
-
நாம் செய்யும் எல்லா வழிபாடுகளும் சாதனைகளும் இந்தத் திரையை நீக்குவதற்காகத்தான். திரை நீங்கும் போது தனி ஞானமாகிய சூரியன் தனது சொந்த ஒளியுடன் பிரகாசித்துத் திளைப்பதை நீ காண்பாய்.
-
ஆன்மா ஒன்று தான் சுய ஒளி உடையது. ஆன்மாவை ஆன்மாவால் தான் உணர முடியும். தன்னாலேயே உணரப்பட வேண்டிய ஒன்றை மற்றொன்றின் உதவியால் எப்படி உணர முடியும்?
-
அதனால் தான் வேதங்கள் விஜ்ஞாதாரமரே கேன விஜானீயாத் - அறிபவனை எதனால் அறிவது? என்று கூறுகின்றன.
-
எதையெல்லாம் நீ அறிகிறாயோ அவற்றை உன் மனம் என்னும் கருவியின் மூலம்தான் அறிகிறாய். ஆனால் மனம் ஜடப்பொருள். தூய ஆன்மா பின்னால் இருப்பதால்தான் அது இயங்குகிறது, எனவே மனத்தால் ஆன்மாவை எப்படி அறிய முடியும்?
-
சீடர் : சுவாமிஜி, நான் என்பதே மனம்தான். அந்த மனம் போய்விட்டால் , நான் என்பதும் இருக்க முடியாது.
-
சுவாமிஜி: ஆம் அப்போதுள்ள நிலைதான் நான் உணர்வின் உண்மையான இயல்பு அந்த நான் எங்கும் நிறைந்ததாக எல்லாவற்றிலும் பரவியதாக எல்லாவற்றின் ஆன்மாவாக விளங்குகிறது.
-
உடம்பிற்குள் அடைப்பட்டிருப்பதாக நாம் நினைக்கின்ற இந்தச் சிறிய நான், உடல் அழிந்த பிறகு எங்கும் நிறைந்த நான் ஆக உணரப்படுகிறது.
-
இத்தகைய நான் அல்லது ஆன்மாவிற்கு மனம் இருப்பதிலோஅழிந்துபோவதிலோ என்ன கவலை இருக்கிறது?
-
இந்த எளிய விஷயத்தை விளக்குவதற்கு எத்தனை சாஸ்திரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன?. ஆனாலும் மனிதர்கள் இதை உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டார்களே!
--
----விவேகானந்தர் விஜயம்----

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?