இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-52


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-52
(சுவாமி விவேகானந்தர்)
----
ஒரு மனிதன் தன்னைச் சுற்றிக் காண்பது என்ன? ஒரு சிறிய செடியை எடுத்துக் கொள்வோம். மனிதன் ஒரு விதையைப் பூமியில் நட்டுத் தண்ணீர் விடுகிறான். சிறிது காலம் கழித்து, ஒரு சிறிய செடி பூமியிலிருந்து தலை நீட்டி, வளர்ந்து, பெரிய மரமாகிறது. பிறகு விதையை விட்டுவிட்டு அது அழிகிறது. விதையிலிருந்து முளைத்து, மரமாகி, மறுபடியும் விதையாகி, இப்படி ஒரு சுழற்சியை அது நிறைவு செய்கிறது.
ஒரு பறவையைப் பார்த்தால், அது முட்டையிலிருந்து பிறந்து, வளர்ந்து, எதிர்காலப் பறவைகளை உண்டாக்கும் விதைகளான முட்டைகளை இட்டுவிட்டு இறக்கிறது. மிருகங்கள், மனிதர்கள், ஆகிய அனைவரின் விஷயமும் இப்படித்தான்.
இயற்கையிலுள்ள எல்லாமே சில விதைகள், சில மூலப்பொருட்கள், சில நுட்பமான உருவங்கள் இவற்றிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன. சிறிதுசிறிதாகப் பருத்தன்மை அடைந்து, வளர்ந்து, சிலகாலம் அப்படியே தொடர்ந்து, பின்னர் மறுபடியும் பழைய நுட்பமான ஆரம்ப நிலையை அடைந்து, அடங்கிவிடுகின்றன.
சூரிய கிரணங்கள் புகுந்து விளையாடும் மழைத்துளி, கடலிலிருந்து நீராவியாகி காற்றில் வெகுதூரம் மேலே போய், மறுபடியும் நீராக மாறி, பூமிக்கு மறைத்துளியாக வருகிறது. மறுபடியும் இதே சுழற்சி தொடர்கிறது.
நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கையில் உள்ள எல்லாமே இந்தச் சுழற்சிக்குக் கட்டுப்பட்டவையே. பெரிய மலைகளைப் பனிப்பாறைகளும் ஆறுகளும் அரித்து, மெதுவாக ஆனால் நிச்சயமாக அவற்றை மணல்துகள்களாக மாற்றுகின்றன. இந்தத் துகள்கள் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டு, கடல் படுகையில் அடுக்கடுக்காக ஒன்றன்மேல் ஒன்றாகப் படிகின்றன. காலப்போக்கில் இறுகிப் பாறைகளாகி, எதிர்காலத்தில் மலைகளாக எழுகின்றன. இந்தச் சுழற்சி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. மணலிலிருந்து மலை தோன்றுகிறது; மலைமறுபடியும் மணலாகிறது.
இயற்கையின் இயக்கம் எங்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இதுவரை மனித அனுபவத்தில் இதற்கு மாறான கருத்து எழுந்ததில்லை
ஒரு மணல்துகள்கள் உண்டாகும் அதே முறையில்தான் பிரம்மாண்டமான சூரியர்களும், நட்சத்திரங்களும் இந்தப் பிரபஞ்சத்தில் உண்டாகின்றன .
ஓர் அணு எப்படி அமைக்கப்பட்டிருக்கிறதோ, அதே முறையில்தான் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அமைக்கப்பட்டிருக்கிறது . பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே விதிதான் நிலவுகிறது என்பதும் உண்மையானால், ஒரு பிடி மண்ணை அறிந்துகொள்வதன் மூலம், இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா மண்ணின் இயல்பையும் நாம் அறிந்துகொள்ள முடியும் என்று வேதங்கள் கூறுவது சரியானதே ஆகும்.
ஒரு சிறிய செடியின் வாழ்க்கையை நாம் அறிந்துகொண்டால், இந்தப் பிரபஞ்சத்தை, அது உள்ளபடியே நாம் அறிய முடியும். ஒரு சிறு மணல்துகளின் இயல்பை நாம் அறிந்துகொண்டால், இந்தப் பிரபஞ்சத்தின் ரகசியம் முழுவதையும் நாம் புரிந்து கொள்வோம்.
இதே தர்க்கத்தை இயற்கை நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பொருத்திப் பார்த்தால், எல்லாவற்றிற்கும் ஆரம்பமும் முடிவும் ஒரேமாதிரி இருப்பதை நாம் காணலாம்.
--
--
தொடரும்....
--

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6