சுவாமி விவேகானந்தரும் அவரது குரு -"ஸ்ரீராமகிருஷ்ணரும்"-பாகம்-3

சுவாமி விவேகானந்தரும் அவரது குரு -"ஸ்ரீராமகிருஷ்ணரும்"-பாகம்-3
-
நரேந்திரர் தமது கல்லூரி நாட்களில் ஆங்கில தத்துவங்களையும் ஆழ்ந்து கற்றார்.டெகார்டே,ஹ்யூம், கான்ட் போன்ற பல ஆங்கில நூல்களை கற்றார்.
மேலை தத்துவ அறிஞர்களில் ஹெர்பட் ஸ்பென்சரின் கருத்துக்கள் நரேந்திரருக்கு மிகவும் பிடித்திருந்தது.அவரது கருத்துக்களால் கவரப்பட்ட நரேந்திரர் அவரது ”கல்வி” என்ற நூலை மொழிபெயர்க்க விரும்பினார். அதற்கான அனுமதி கோரி ஸ்பென்சருக்கு கடிதம் எழுதினார். ஸ்பென்சரும் நரேந்திரரின் ஆர்வத்தை பாராட்டி கடிதம் எழுதினார். ”சிக்ஷா” என்ற பெயரில் வங்க மொழியில் அந்த நூல் நரேந்திரரால் வெளியிடப்பட்டது.
ஹேமில்டனின் தத்துவ நூல்களையும் அவர் விரும்பி படிப்பார். மனித அறிவு இறைவனின் இருப்பை சுட்டிக்காட்ட மட்டுமே பயன்படுகிறது. இறைவனின் இயல்பை அதனால் விளக்க முடியாது.எங்கே மனித அறிவால் செல்ல முடியவில்லையோ அங்கேதான் ஆன்மீகம் தொடங்குகிறது என்ற பகுதி அவருக்கு மிகவும் பிடித்தமானவை.
இலக்கியங்களிலும் தீவிரமான ஆர்வம் காட்டினார் நரேந்திரர். சமஸ்கிருதம்,வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலுள்ள காவியங்களைப் படித்தார். ராமாயணமும், மஹாபாரதமும் அவருக்கு அத்துப்படியாக இருந்தன.
இசையில் நரேந்திரர் ஆழ்ந்து மூழ்கினார். ஆழ்ந்த உணர்வு, இனிய குரல், அதற்கு மெருகேற்றும் சங்கீத ஞானம் எல்லாம் இயல்பாகவே அவரிடம் இருந்தன. முறைப்படி சங்கீத குருவை அடைந்து, சங்கீதம் கற்றார்.பாயா,தபேலா,பக்வாஜ் ஆகிய இசைக்கருவிகளை வாசிக்க கற்றார். இவைதவிர பஜனை, சங்கீதம், ராமபிரசாதரின் பாடல்கள் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினார்.
ராகமும் தாளமும் மட்டுமே இசையாகிவிடாது. ஒரு கருத்தை அது வெளிப்படுத்த வேண்டும்.பாடுபவனின் உணர்ச்சிகள் அந்த பாடலில் வெளிவரவேண்டும் என்று கூறினார்.
1887 ல் ஸ்ரீசண்டி சரண் பஸக் என்பவருடன் சேர்ந்து ”சங்கீத கல்பதரு” என்ற நூலை வெளியிட்டார். அதில் ஆரம்பத்தில் சங்கீதம்,இசை கருவிகள்,அதன் தத்துவங்கள் பற்றி விளக்கியிருந்தார்.
நரேந்திரருக்கு நாட்டியத்திலும் ஈடுபாடு இருந்தது. அழகிய உறுதியான உடலும், அகன்று விரிந்த கண்களும், அதற்கு ஏற்ற மனமும், அவரது கற்பனை வளமும் அவரது நாட்டியத்திற்கு மெருகூட்டின. பாடல்களை பாடிக்கொண்டே ஆடும் திறமை அவருக்கு இருந்தது.
நரேந்திரர் வேடிக்கை வினோதங்கள் நிறைந்தவர். அவர் பேசுவதை நண்பர்கள் ரசிப்பார்கள்.
கல்கத்தா அப்போது இந்தியாவின் தலைநகராக விளங்கியது. ஒரு பெரிய பணக்காரனின் வாழ்க்கை எப்படி இருக்குமோ, அதேபோல் தான் நரேந்திரரின் வாழ்க்கையும் இருந்தது. அவருடன் பல நண்பர்கள் பழகினார்கள். ஞாயிற்று கிழமைகளில் வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு கல்கத்தா தெருக்களில் உரத்த குரலில் பாடி ஆடி கும்மாளமிட்டு வலம் வருவார்கள்.
நரேந்திரரின் வீட்டில் உள்ளவர்கள், வெளியில் இவ்வாறு நண்பர்களுடன் சுற்றுவதை விரும்பவில்லை.
பல துறைகளில் சிறந்த விளங்கியதால் அவரது கல்லூரி படிப்பில் முழுகவனத்தையும் செலுத்த முடியவில்லை. அதனால் தேர்வில் சுமாரான மதிப்பெண் பெற்றே அவர் தேர்ச்சியடைந்தார்.
நரேந்திரர் வாழ்ந்த காலத்தில் இருந்த சமுதாயம் குறித்து சற்று ஆரோய்வோம்...
---
தொடரும்....
-
விவேகானந்தர் விஜயம்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?