சுவாமி விவேகானந்தரும் அவரது குரு -"ஸ்ரீராமகிருஷ்ணரும்"-பாகம்-4

சுவாமி விவேகானந்தரும் அவரது குரு -"ஸ்ரீராமகிருஷ்ணரும்"-பாகம்-4
-
நரேந்திரர் வாழ்ந்த காலத்தில் இருந்த சமுதாயம் குறித்து சற்று ஆரோய்வோம்...
-
நாங்கள் பிறந்த கால சமுதாயம் இழிவானதாக வெறுப்பூட்டுவதாக இருந்தது என்று நரேந்திரர் கூறினார். அவர் வாழ்ந்த சிமூலியா பகுதி குடிகாரர்களின் ராஜ்யமாக இருந்தது. மாலைவேளைகளில் குடித்து விட்டு, ஒருவரை ஒருவர் தகாதவார்த்தைகளால் ஏசி, சண்டையிட்டு, அடிதடிகளில் ஈடுபடுவார்கள். விசேச நாட்களில் ஆடுகளையும், எடுமைகளையும் பலியிட்டு அந்த இடத்தை ரத்தகளறிமிக்க இடமாக மாற்றியிருப்பார்கள்.
-
எட்டு வயது வந்தவுடன் பெண்களுக்கு திருமணம் செய்துவைத்துவிடுவார்கள். பதினாறுவயதுக்கு மேல் ஒருவனுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அவனை ஜாதியைவிட்டு விலக்கிவைத்துவிடுவார்கள். அவனுடன் யாரும் பழக மாட்டார்கள்.
தங்கள் வீட்டில் விசேசம் நடக்கிறது என்றால், தங்கள் ஏழுதலையினரின் பெயரையும் குறிப்பிட்டு,அழைப்பு அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் சண்டை எழுந்துவிடும்.
-
ஒவ்வொரு ஜாதியிலும் பல உட்பிரிவுகள் இருந்தன. உதாரணமாக பட்டாச்சாரி பிராமணன் இருக்கம் இடத்தில் கோஸ்வாமி பிராமணன் இருக்க மாட்டான்.இவ்வாறு ஒவ்வொரு ஜாதியிலும் சண்டைகள் நிகழ்ந்து வந்தன. ஒரு ஜாதியில் உள்ளவர்கள் மற்ற ஜாதியினரிடம் பேசுவது பழகுவது போன்றவை பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது.
-
மதத்தை பொறுத்தவரை மக்கள் இந்து மதத்தின் கருத்துக்களை பற்றி அதிகம் தெரியாதவர்களாக இருந்தார்கள். அந்த காலத்தில் இந்துமத நூல்கள் அச்சிட்டு காகிதத்தில் வெளிவரவில்லை. பைபிள் போன்ற மதநூல்களை கிறிஸ்தவ மிஷநரிகள் அச்சிட்டு மக்களிடம் விநியோகித்து வந்தார்கள்.
இந்துமதத்தில் பழமைவாதிகள் மிகுந்து இருந்தார்கள். காலம் காலமாக கேட்டு வந்த கதைகளை சிறிதும் ஆராயாமல் நம்பிவந்தார்கள். இது பற்றி கேள்வி எழுப்புவற்கோ, ஆராய்வதற்கோ அவர்கள் விரும்பவில்லை.
-
இந்த காலகட்டத்தில் கல்கத்தாவில் பிரம்ம சமாஜம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பழைய கருத்துக்களிலிருந்து மாறுபட்டு சமுதாயம், மதம் போன்றவற்றில் ஒரு சீர்திருத்தத்தை புகுத்த அவர்கள் நினைத்தார்கள்.
1828 ல் ராஜாராம் மோகன்ராயால் பிரம்ம சமாஜம் தோற்றுவிக்கப்பட்டது. ஜாதி கட்டுப்பாடுகளை நீக்குதல், விதவைகள் மறுமணம், பெண்களின் திருமண வயதுவரம்பை உயர்த்துதல், பெண்களுக்கு சம உரிமை, உருவ வழிபாடுகளை எதிர்த்தல், பல தெய்வ வழிபாடுகளை எதிர்த்தல் போன்ற சீர்திருத்தங்களை கொண்டுவந்தார்கள்.
-
பிரம்ம சமாஜம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. அது துவங்கப்பட்ட காலத்தில் இந்துமத கருத்துக்களை அதிகம் கொண்டிருந்தது. நாட்கள் ஆக ஆக அதில் கிறிஸ்தவமத கருத்துக்கள் உள்ளே வர ஆரம்பித்தன. சமஸ்கிருதம் பயிலாத கேசவ சந்திர சேன், பிரம்ம சமாஜத்தில் ஏசுவை உள்ளே கொண்டு வந்தார். இதனால் சமாஜம் இரண்டாக பிளவுற்றது. பிற்காலத்தில் கேசவரின் நடவடிக்கையால் மேலும் இரண்டாக பிளவுற்றது. நரேந்திரரின் காலத்தில் பிரம்மசமாஜம் மூன்று பிரிவுகளாக பிரிந்திருந்தது. அவர்களுக்குள்ளும் பிரச்சினைகள் ஏற்பட்டது.
-
நரேந்திரர் கடைசியாக உருவான சாதாரண பிரம்மசமாஜத்தில் உறுப்பினராக இருந்தார். பிரம்ம சமாஜம் சார்பாக நடைபெற்ற நாடகத்தில் துறவியாக நரேந்திரர் வேடமிட்டு நடித்தார்.
பிரம்ம சமாஜத்தில் கொள்கைகளில் ஒன்று சைவ உணவு. வங்காளத்தில் பொதுவான உணவு மீன். அங்குள்ள பெரும்பாலான பிராமணர்கள் அனைவரும் மீன் உணவை உண்பதை வழக்கமாக உடையவர்கள்.
பிரம்மசமாஜ கருத்துக்களில் கவரப்பட்டதால் நரேந்திரர் மீன் உணவு உண்பதை தவிர்த்தார்.
நரேந்திரரின் அணுகுமுறை அவரது வீட்டில் உள்ளவரை அதிர்ப்தியடைய வைத்தது. நரேந்திரரின் தாத்தா துர்க்காசரண் உலகத்தை துறந்து சந்நியாசியாக சென்றுவிட்டார். அதேபோல் நரேந்திரனும் சந்நியாசியாக சென்றுவிடுவானோ என்று பயந்தார்கள்.
வேடிக்கை, வினோதம், பாட்டு, உடற்பயிற்சி என்று புறத்தளவில் நரேந்திரரின் நாட்கள் கடந்தாலும், அவரது மனம் தியானம் செய்வதிலும், இறைவனை குறித்து சிந்திப்பதிலும் சென்றது.
இந்த பிரபஞ்சத்தை படைத்து,காத்து,செயல்படுத்தும் சக்தி ஒன்று இருப்பது உண்மையானால் அந்த உண்மையை, அந்த சக்தியை நானும் காண வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் தீவிரமாகியது.
காமத்தை கட்டுப்படுத்துவதால் தான் ஒருவன் இறைவனை காண முடியும் என்று அவர் படித்திருந்தார்.
காமத்தை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஒரு நாள் கட்டுக்கடங்காமல் காம எண்ணங்கள் மனத்தில் எழுந்தன.அவைகளை மனத்தால் அடக்க முயற்சித்தார், அவைகள் தொடர்ந்து வந்ததால், கடைசியில் குளிர்காய்வதற்காக வைத்திருந்த அடுப்பின்மீது சென்று அமர்ந்தார். சூட்டினால் உடல் வெந்தது. மனம் கட்டுக்குள் வந்தது. அதன்பிறகு அவரது மனத்தில் காம எண்ணங்கள் எழவே இல்லை.
--
--
தொடரும்....
-
விவேகானந்தர் விஜயம்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?