சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-29


சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-29
---
துறவிகள் இந்த நாட்டிற்கு தேவையா?
----
சீடர்..துறவிகள் எண்ணிக்கையில் அதிகரிப்பதால் நாட்டின் வளர்ச்சி தடைபடுவதாக பலரும் குறைகூறுகிறார்கள்.துறவிகளால் இந்த நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் உபயோகம் இல்லை என்று பலர் கருதுகிறார்கள்.
----
சுவாமி விவேகானந்தர்..உண்மையான துறயரே இல்லறத்தாரின் வழிகாட்டிகள்.துறவியரில் உபதேசத்தாலும் ஞான ஒளியாலும்தான் இல்லறத்தார் வாழ்க்கைப்போரில் பலமுறை வெற்றி முரசுகொட்டியிருக்கிறார்கள். சாதுக்களின் இந்த விலைமதிப்பற்ற உபதேசங்களுக்கு பதிலாக இல்லறத்தார்கள் அவர்களுக்கு உணவும் உடையும் தருகிறார்கள்.இந்த கொடுக்கல் வாங்கல் மட்டும் இல்லையென்றால் இதற்குள் அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் இல்லாமல் போனதுபோல் இந்தியர்களும் இங்கு ஏறக்குறைய மறைந்துபோயிருப்பார்கள்.
--
துறவிகள் சோம்பேரிகள் அல்ல. எல்லா வேலைகளுக்கும் அடி ஊற்றாக இருப்பது அவர்களே.துறவியின் வாழ்விலும் செயலிலும் உயர்ந்த லட்சியங்களின் வெளிப்பாட்டை கண்டும்,அவர்களிடமிருந்து உயர் கருத்தை பெற்றும் தான் இல்லறத்தார் இந்த கர்ம பூமியில்,வாழ்க்கை போரில் திறம்பட போராடினார்கள், போராடுகிறார்கள். புனித துறவியரைக் கண்டு தான் அவர்கள் தங்கள் வாழ்வில் புனிதமான லட்சியங்களை பின்பற்றுகிறார்கள்.துறவிகள் இறைவனுக்காகவும் உலக நன்மைக்காவும் அனைத்தையும் துறந்து,தியாகம் என்பதை தங்கள் வாழ்க்கையில் வாழ்ந்துகாட்டி,இல்லறத்தார்களையும் நன்முயற்சிகளை மேற்கொள்ள உத்வேகப்படுத்துகிறார்கள்.அதற்கு பதிலாக அவர்களுக்கு சிலபிடி உணவை இவர்கள் தருகிறார்கள்.இந்த நாட்டில் இல்லறத்தார்களின் வாழ்வெனும் கப்பல் கவிழாமல் இருப்பதற்கு காரணம் துறவியர் அந்த கப்பல் கவிழாமல் வழிநடத்திசெல்கிறார்கள்.
----
சீடர்..ஆனால் உலக நன்மைக்காக தங்களை அர்ப்பணம் செய்துகொள்ளும் உண்மையான துறவியர் எத்தனைபேரை காணமுடியும்?
---
சுவாமிஜி..ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணர் போன்ற ஒரு துறவி தோன்றுவதே போதுமானது.அத்தகைய ஒருவர் விட்டுச்சென்ற உயர்லட்சியத்தையும் மேலான கருத்துக்களையும் வைத்துக்கொண்டு ஆயிரம் ஆண்டுகாலம் மக்கள்வாழ முடியும்.
இதுபோன்ற சன்னியாச ஆசிரமங்கள் இந்த நாட்டில் இருந்ததால் அல்லவா அவரைப்போன்ற மாமனிதர்கள் இங்கே தோன்றினார்கள்.
உண்மையான துறவியர் தங்கள் சொந்த முக்தியைக்கூட துறந்துவிட்டு உலகிற்கு நன்மை செய்து வாழ்கின்றார்கள்.அவர்கள் உலகிற்கு நன்மை செய்வதற்காகவே பிறக்கிறார்கள்.அத்தகையை மேன்மைமிக்க சன்னியாச ஆசிரமங்களுக்கு நீங்கள் நன்றியோடு இல்லையென்றால், நீங்கள் கேவலமானவர்கள்
(சுவாமிஜி இதை பேசும்போது அவரது முகமண்டலம்கொழுந்துவிட்டு எரிவதுபோல் இருந்தது. துறவின் மொத்த உருவமே அவர் வடிவத்தில் காட்சியளிப்பதுபோல் சீடருக்கு தோன்றியது)
----
சுவாமி விவேகானந்தர்...பலரின் நன்மைக்காகவும் பலரது மகிழ்ச்சிக்காகவும் துறவி பிறக்கிறான். துறவை மேற்கொண்டு,இந்த லட்சியத்தை மறப்பவனின் வாழ்க்கை முற்றிலும் வீண்.பிறருக்காக தன்வாழ்வை தியாகம் செய்யவும்,மனிதர்களின் கொடிய துயரத்தை தடுக்கவும்,அமைதியின்றி தவிப்பவர்களின் மனத்திற்கு அமைதியை தரவும்,பாமரமக்களை வாழ்க்கை போராட்டத்திற்கு தயார்செய்யவும், சாஸ்திர அறிவை புகட்டுவதன் மூலம் அனைவருக்கும் நன்னை செய்யவும்,ஞான ஒளிமைய பாய்ச்சுவதன் மூலம் உறங்கிக்கொண்டிருக்கும் சிங்கமான பிரம்மத்தை எழுப்பவுமே சன்னியாசி இந்த உலகத்தில் பிறக்கிறான்.
-
-- விவேகானந்தர் விஜயம் --

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?