கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-14


கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-14
(சுவாமி விவேகானந்தர்)
-
கடமை என்பது என்ன?
-
கடமைப்பற்றிய இந்தக் கருத்துக்கூட மாறுவதையும், எந்தவிதமான சுயநல நோக்கமும் இல்லாபோது தான் மகத்தான செல்களைச் செய்ய முடியும் என்பதையும் போகப் போகக் காணலாம் ஆனால் கடமையுணர்வுடன் செயல்புரிவதன் மூலவே எந்தக் கடமையுணர்வும் இன்றிச் செயல்புரிகின்ற நிலை உண்டாகும்.
நன்னெறி என்பதற்காக நாம் செய்தாலும் அன்புணர்வால் செய்தாலும், கடமை என்பதன் அடிப்படைத் தத்துவமும் மற்ற எல்லா யோகங்களைப் போன்றதே. நம்மில் ஜீவபாவனையைக் குறைத்து அதன்மூலம் உண்மையான மேலான ஆன்மாவைப் பிரகாசிக்கச் செய்வதே, வாழ்க்கையின் கீழ்நிலைகளில் மனிதனின் ஆற்றல் விரயமாவதைத் தடுத்து, அதன் மூலம் ஆன்மா தன்னைத் தானே உயர்நிலைகளில் வெளிப்படச் செய்வதே அதன் நோக்கம்.
தொடர்ந்து கீழான ஆசைகளை மறுப்பதாலேயே இதனை நாம் சாதிக்க முடியும். கடமைக்கு இது மிகவும் தேவையாகும். சுயநலத்தைக் குறைப்பதன் மூலம் மனிதனின் உண்மை இயல்பு எல்லையற்று விரிவதற்கு நாம் வழிவகுக்கிறோம்.
கடமை அவ்வளவு இனிமையான ஒன்றல்ல; அன்பு என்னும் எண்ணெய் இடாமல் அதன் சக்கரங்கள் எளிதாகச் சுழலாது, மாறாக தொடர்ந்து உராய்ந்த வண்ணமே இருக்கும். அன்பு இல்லாவிடில் பெற்றோர் குழந்தைகளுக்கும், குழந்தைகள் பெற்றோருக்கும், கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் தங்கள் கடமையை எவ்வாறு செய்ய இயலும்?
நமது வாழ்வில் தினமும் சிறுசிறு பூசல்களாகிய உராய்வுகளைச் சந்திக்க வில்லையா? அன்பின் வழியாக மட்டுமே கடமை இனிமையானதாக இருக்க முடியும், இனி, சுதந்திர நிலையில் மட்டுமே அன்பு பிரகாசிக்க முடியும்.
புலன்களுக்கும் மனித வாழ்வில் தினமும் சந்தித்தே தீர வேண்டியதான கோபங்களுக்கும் பொறாமைக்களுக்கும் இன்னும் எத்தனையோ அற்பத்தனங்களுக்கும் அடிமையாவதுதான் சுதந்திரமா? நாம் வாழ்வில் சந்திக்கின்ற இத்தகைய சிறு நெருடல்களுக்கு நடுவில் பொறுமையுடன் அவற்றைச் சகித்துக் கொள்வதே சுதந்திரத்தின் மிகவுயர்ந்த வெளிப்பாடாக இருக்க முடியும்.
எரிச்சல் மற்றும் பொறாமைக்கு எளிதில் வசப்படுகின்ற இயல்புடையவர்களாகிய பெண்கள் எளிதில் கணவனைக் குறைகூறி விடுகிறார்கள். அதுதான் தங்கள் சுதந்திரம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தாங்கள் அடிமைகளாக இருப்பதையே அதன்மூலம் நிரூபிப்பதை அவர்கள் அறியவில்லை. மனைவியிடம் குற்றம் காண்கின்ற கணவர்களின் விஷயமும் இதுதான்.
கற்பு என்பதே ஆண், பெண் இருபாலாரிடமும் இருக்க வேண்டிய முதல் நன்னெறியாகும். ஒரு மனிதன் எவ்வளவுதான் வழிதவறியவனாக இருந்தாலும் மென்மையும் அன்பும் நிறைந்த கற்புமிக்க மனைவியால் திருந்தாத மனிதன் அபூர்வமே. உலகம் அந்த அளவிற்கு இன்னும் கெட்டுவிடவில்லை.
மிருகத்தனமான கணவர்களைப் பற்றியும் ஆண்களின் ஒழுக்கமின்மையைப் பற்றியும் உலகமெங்கும் நாம் கேள்விப்படுகிறோம். ஆனால் ஆண்களுக்குச் சம அளவில் கொடுமையும் ஒழுக்கமின்மையும் நிறைந்த பெண்கள் இல்லையா? எல்லா பெண்களும், அவர்கள் எப்போதும் நிலைநாட்ட விரும்புவதுபோல், நல்லவர்களாகவும் தூயவர்களாகவும் இருப்பார்களேயானால், இந்த உலகத்தில் ஒழுக்கம் கெட்ட ஆண் ஒருவன்கூட இருக்கமாட்டான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தூய்மையாலும் கற்பாலும் வெற்றிகொள்ள முடியாத எந்த மிருகத்தனம் உள்ளது? கணவனைத் தவிர பிற ஆடவர்கள் எல்லோரையும் தன் குழந்தையாகக் கருதி, அவர்களுடன் தாயின் நிலையிலேயே பழகுகின்ற நற்பண்புமிக்க, கற்பு நிறைந்த ஒரு பெண்ணின் முன்னால் வருகின்ற எந்த மனிதனும் அவன் எவ்வளவுதான் கொடியவனாக இருந்தாலும் புனிதத்தின் சூழலை உணராமல் இருக்க முடியாது. அந்தப் பெண்ணின் தூய்மையின் ஆற்றல் அவ்வளவு உயர்ந்ததாக இருக்கும்! அதுபோலவே ஒவ்வோர் ஆணும் தன் மனைவியைத் தவிர மற்ற பெண்களைத் தாயாகவோ, மகளாகவோ, சகோதரியாகவோ நினைக்க வேண்டும், மதபோதகனாக விரும்புகின்ற ஒவ்வொருவரும் பெண்களைத் தாயாகக் கருதி, அவர்களிடம் அந்த நிலையிலேயே பழக வேண்டும்.
--
-
தொடரும்....
-
#விவேகானந்தர்விஜயம்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?