கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-15


கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-15
(சுவாமி விவேகானந்தர்)
-
கடமை என்பது என்ன?-4
-
உலகில் தாயின் இடம் மிகவும் உயர்ந்தது. அந்த ஓர் இடத்தில்தான் மிகவுயர்ந்த சுயலமின்மையைக் கற்கவும் செயல்முறைப்படுத்தவும் முடியும். தாயன்பை விட மேலான அன்பு ஒன்று இருக்க முடியுமானால் அது இறையன்பு மட்டுமே. மற்ற எல்லாமே தாழ்ந்தவைதான்.
முதலில் பிள்ளைகளைப்பற்றி நினைப்பதும் அதன்பிறகே தன்னைப்பற்றி நினைப்பதும் ஒரு தாயின் கடமையாகிறது. அப்படியில்லாமல் எந்தப் பெற்றோராவது தங்களையே முதலில் நினைப்பார்களானால் அந்தப் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் அமைகின்ற உறவு பறவைகளுக்கும் அதன் குஞ்சுகளுக்கும் இடையிலுள்ள, அதாவது சிறகு முளைத்ததும் பெற்றோரை மறந்து விடுகின்ற உறவாகவே அமையும்.
பெண்களையெல்லாம் இறைவனுடைய தாய்மையின் பிரதிநிதிகளாக நினைக்கும் ஆண்மகன் உண்மையில் பேறு பெற்றவன். ஆண்களையெல்லாம் இறைவனின் தந்தைக் குணத்தின் பிரதிநிதிகளாகக் காணும் பெண் உண்மையில் பேறுபெற்றவள், பெற்றோர்களை பூமியில் தெய்வ வடிவங்களாகக் காணும் பிள்ளைகள் பேறு பெற்றவர்கள்.
நாம் உயர்வதற்குரிய ஒரே வழி நம் முன் இருக்கும் கடமைகளைச் செய்வதாகும். அப்படிச் செய்வதன்மூலம் வலிமையைப் பெருக்கிக் கொண்டே சென்று, இறுதியில் உயர்நிலையை அடைந்து விடலாம்.
முடிவையும் வழியையும் ஒன்றாக்கு நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அந்த வேலைக்கு அப்பாலுள்ள எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள். அந்த வேலையை ஒரு வழிபாடாக, மிகவுயர்ந்த வழிபாடாக, அந்த நேரத்திற்கு உங்கள் வாழ்க்கை முழுவதையும் அதில் செலுத்திச் செய்யுங்கள்.
பலன் கருதி வேலை செய்பவன்தான் தனக்கென்று வாய்த்த கடமையைப்பற்றிக் குறைப்பட்டுக் கொள்வான். ஆனால் பலனில் பற்றில்லாதவர்களுக்கு எல்லா வேலைகளுமே ஒரேபோல் நல்லவைதாம். சுயநலத்தையும் புலனின்ப நாட்டத்தையும் அழித்து ஆன்ம சுதந்திரம் பெறுவதற்குத் தகுந்த கருவிகள்தாம்.
நாம் எல்லோருமே நம்மைப்பற்றி மிகப் பெரிதாக எண்ணிக் கொள்கிறோம். நமது விருப்பத்தைவிட, தகுதிக்கு ஏற்பவே நமக்குக் கடமைகள் வந்து சேர்கின்றன. போட்டி பொறாமையை எழுப்புகிறது. இரக்கத்தை அழித்து விடுகிறது.
முணுமுணுப்பவர்களுக்கு எல்லா கடமைகளுக்குத் திருப்தி தராது. அவர்களின் வாழ்க்கையே தோல்விதான். நமக்கென வாய்க்கின்ற கடமைகளை எப்போதும் தாயாரான முழுமனத்துடன் செய்து கொண்டே போவோம். அப்போது நிச்சயம் ஒளியைக் காண்போம்.
--
#விவேகானந்தர்விஜயம்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?