நீ அடிமையாக இருக்க நீயே காரணம்

நீ அடிமையாக இருக்க நீயே காரணம்
---
கணிசமான சம்பளம் கிடைக்கின்ற வேலையில் இருந்தார் ஹரிபாதர். அவரது மேலதிகாரிகள் ஆங்கிலேயர்கள். அவர்கள் தம்மைக் கடிந்து கொள்வது ஹரிபாதருக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. தமது அதிருப்தியை அவர் வெளிப்படையாகவே காட்டுவார். இதைப்பற்றி அறிந்த சுவாமிஜி கூறினார்.
'இதோ பார், பணத்திற்காக நீதான் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தாய். உனக்குரிய சம்பளத்தை அவர்கள் தவறாமல் கொடுத்துவிடுகிறார்கள். "ஓ! இவர்கள் என்னை அடிமைபோல் நடத்துகின்றனர்" என்று ஏன் புலம்புகிறாய்? சிறிய விஷயங்களையெல்லாம் ஏன் பெரிதுபடுத்துகிறாய்? யாரும் உன்னை அடிமைப்படுத்தவில்லை. நீ அடிமையாக இருப்பதற்கு நீயே காரணம். இப்போது நினைத்தாலும் நீ வேலையை ராஜினாமா செய்யலாமே! அதிகாரிகளை ஏன் குறைகூற வேண்டும்? இப்போதைய உனது சூழ்நிலை சாதகமாக இல்லையென்றால் அதற்கு வேறு யாரையும் குறைகூறாதே; உன்னையே குறை கூறு. நீ அவர்களின் கீழ் வேலை செய்வதும் செய்யாததும் அவர்களுக்கு ஒரு பொருட்டு என்றா நினைக்கிறாய்? நீ விலகினால் அந்த இடத்தில் வேலை செய்ய நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். உன்னைப்பற்றி கவலைப்படு உனது கடமைகளையும் பொறுப்புகளையும் நினைத்துப் பார். அத்துடன் நிறுத்திக்கொள். முதலில் உனக்கு நீ நல்லவனாக இரு. அப்போது உலகமே நல்லதாக உனக்குத் தெரியும். மற்றவர்களிடம் உள்ள நல்லதை மட்டுமே அப்போது நீ காண்பாய். நாம் காணும் புறவுலகம் நமது பிரதிபிம்பமே. பிறரிடம் குற்றம் காணும் பழக்கத்தை விட்டுவிடு. நீ வெறுப்பவர்கள் எல்லாம் படிப்படியாக உன்னை ஏற்றுக்கொள்வதை நீ காண்பாய். ஆச்சரியத்திற்குரிய விஷயம் இது, ஆனால் உண்மை. நமது மனநிலைக்கு ஏற்பவே பிறர் நம்மிடம் பழகுவார்கள். பிறர் நம்மிடம் நடந்து கொள்வதை வைத்து நமது மனநிலையை, நமது மனப்பக்குவத்தை அறிந்து கொள்ளாம்.'
சுவாமிஜியின் இந்த அறிவுரை ஹரிபாதரின் வாழ்க்கையில் ஒரு தெளிவை ஏற்படுத்தியது. சுவாமிஜியின் வழிகாட்டுதலில் பகவத் கீதையைப் படித்தார் ஹிரிபாதர். இதுவரை புரியாத பல உண்மைகள் அவருக்குப் புரிந்தன.
--
-- விவேகானந்தர் விஜயம் --- அட்மின் சுவாமி வித்யானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?