வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-20

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-20
-
பக்தி ஒன்றே போதுமே!
---
குருசரண் மூலமாக சுவாமிஜியைப்பற்றி கேள்விப்பட்ட மெளல்வி (இஸ்லாமிய அறிஞர்) ஒருவர் சுவாமிஜியிடம் மிகவும் கவரப்பட்டார். அவர் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் உருதும் பாரசீகமும் கற்பிக்கின்ற ஆசிரியர். அடிக்கடி இருவரும் சுவாமிஜியைச் சென்று கண்டு அவருடன் பேசினர். குரானில் சுவாமிஜிக்கு இருந்த ஆழ்ந்த புலமை அப்போது வெளிப்பட்டது.
சுவாமிஜியைப் பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டனர். ஜாதி மத வேற்றுமையின்றி இந்துக்களில் பல பிரிவினரும் முஸ்லிம்களில் பல பிரிவினரும் வந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே ஆல்வார் அரசின் ஓய்வுபெற்ற எஞ்ஜினியரான பண்டிட் சம்புநாத் என்பவரின் வீட்டில் சுவாமிஜி தங்குவதற்கு ஏற்பாடு ஆகியது.
ஒருநாளாவது சுவாமிஜியை அழைத்துச் சென்று தமது வீட்டில் விருந்தளிக்க வேண்டும் என்ற ஆசை மௌல்வியின் மனத்தில் எழுந்தது. சம்புநாத் ஆசாரமிக்க பிராமணர். அவரது வீட்டில் சுவாமிஜி தங்கியிருப்பதால் அவரது அனுமதி தேவை என்று எண்ணிய மௌல்வி சம்புநாத்தை அணுகி, 'நீங்கள் இதற்கு அனுமதிக்க வேண்டும். ஆசாரமிக்க பிராமணர்களைக் கொண்டு சமையல் செய்கிறேன். நாற்காலி போன்றவற்றை பிராமணர்களைக் கொண்டே சுத்தம் செய்கிறேன். பிராமணர்களின் வீடுகளிலிருந்து பாத்திரங்களைக் கொண்டுவரச் செய்து பரிமாறுகிறேன். எந்த ஆசாரத்திற்கும் இடையூறு நேராதபடி பார்த்துக் கொள்கிறேன்' என்றெல்லாம் உணர்ச்சியுடன் கூறினார். மௌல்வியின் பக்தியைக் கண்டு நெகிழ்ந்துபோன சம்புநாத், 'நீங்கள் அத்தகைய ஏற்பாடுகள் எதுவும் செய்ய வேண்டாம். உங்கள் பக்தி ஒன்றே போதும். உங்கள் வீட்டில் உணவருந்த நானே தயாராக இருக்கிறேன். சுவாமிஜி ஒரு முக்த புருஷர். அவரைப்பற்றி என்ன சொல்ல இருக்கிறது! அவர் எங்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம்' என்று கூறினார்.
--
--விவேகானந்தர் விஜயம்---அட்மின் சுவாமி வித்யானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?