பொன்மொழிகள் .பகுதி-44

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-44
-----
உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்த தைக் குறித்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது.உன்னுடைய ஒவ்வொரு சொல்லும் சிந்தனையும் செயலும், அதற்கு ஏற்ற பலனைத்தரும் வகையில் உன் மனதில் இடம் பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில் வைக்க வேண்டும். உனது தீய எண்ணங்களும் செயல்களும் புலிகளைப் போல் உன் மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதைப் போலவே உனது நல்ல எண்ணங்களும் செயல்களும் ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை எப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக இருக்கின்றன என்னும் ஊக்கம் தரும் நம்பிக்கையும் இருக்கிறது. இதை நீ எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.
-
.ஏன் எதற்கு? என்று ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது நமது வேலையன்று, மாறாக செயலில் ஈடுபட்டுச் செத்து மடிவது ஒன்று தான் நமது கடன் . மகத்தான காரியங்களைச் செய்வதற்காக ஆண்டவன் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்றும் அவற்றை நாம் செய்து முடிப்போம் என்றும் உறுதியாக நம்பு.
-
துரதிர்ஷ்டவசமாக இந்த வாழ்க்கையில் மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் எந்த விதமான ஓர் உயர்ந்த இலட்சியமும் இல்லாமல், இருளடைந்த இந்த வாழ்க்கையில் தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த இலட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால் இலட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான் என்று நான் உறுதி யாகச் சொல்வேன். எனவே உயர்ந்த ஓர் இலட்சியத்தைக் கொண்டிருப்பது மேலானது.
--
நமது வாழ்க்கை சிறந்ததாகவும் தூய்மையுடையதாகவும் இருந்தால் மட்டும்தான் உலகமும் சிறப்பும் தூய்மையும் பெற்றதாக இருக்க முடியும். அது காரியம்; நாம் அதை விளைவிக்கும் காரணம் எனவே நம்மை நாம் தூய்மைப்படுத்திக் கொள்வோமாக நம்மை நாம் பரிபூரணர்களாக்கிக் கொள்வோமாக.
---
சண்டையிடுவதிலும் குறை சொல்லிக்கொண்டிருப்பதிலும் என்ன பயன் இருக்கிறது? நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க அவை நமக்கு உதவப் போவதில்லை.
---
தான் செய்ய வேண்டிய கடமையாக அமையும் சிறிய அற்பமான வேலைகளுக்கு முணுமுணுப்பவன் எல்லாவற்றுக்கும் முணுமுணுக்கவே செய்வான். எப்போதும் முணுமுணுத்தபடியே அவன் துன்பம் பொருந்திய வாழ்க்கை வாழ்வான். அவன் தொடுவது எல்லாமே தோல்வியில் முடியும். ஆனால் தன் கடமைகளைத் தவறாமல் ஒழுங்காகச் செய்துகொண்டு தன்னால் ஆனவரை வாழ்க்கையில் முயன்று கொண்டிருப்பவன் கட்டாயம் ஒளியைக் காண்பான். மேலும் மேலும் உயர்ந்த கடமைகள் அவனது பங்காக அவனைத் தேடித் தாமாகவந்து சேரும்.
-
தூய்மை பொறுமை விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

--


சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?