பொன்மொழிகள் .பகுதி-47

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-47
-
எல்லா விதமான சுயநலமும் மரணம் தான். இந்த உண்மை இம்மை மறுமை யாகிய இரண்டு உலகங்களுக்கும் பொருந்தும் நன்மை செய்துகொண்டிருப்பது தான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமலிருப்பதுதான் மரணம். இப்போது நாம் பார்க்கிற மக்களில் தொண்ணூறு சதவீதம் இறந்துபோனவர்கள். அவர்கள் பிசாசுகள் தாம். எனது அருமைக் குழந்தைகளே அன்பு செலுத்துபவர்களைத் தவிர வேறு யாரையும் வாழ்வதாகக் கருத முடியாது.
--
. மேலை நாடுகளிலுள்ள சமுதாய வாழ்க்கை முறை கணீரென்று சிரிப்பதைப் போன்றதாகும். ஆனால் அதன் அடியில் அழுகையும் புலம்பலும் மறைந்திருக்கின்றன. அதன் முடிவும் தேம்பியழுவதாகவே அமையப் போகிறது. மேற்புறத்தில் மட்டுமே வேடிக்கையும் விளையாட்டும் அங்குக் காணப்படுகின்றன. ஆனால் உண்மையில் அளவில்லாத துயரமே அதில் நிறைந்திருக்கிறது.
மாறாக இந்த நாட்டிலோ வெளிப்படையாக இருளும் துயரமும் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் அடியில் கவலையின்மையும் மகிழ்ச்சியும் மறைந்திருக்கின்றன.
-
.ஒரு காரியத்தின் பயனில் கருத்தைச் செலுத்துமளவிற்கு அந்தக் காரியத்தைச் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்த வேண்டும். இது என்னுடைய வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்களுள் ஒன்றாகும் இந்த ஒரு பாடத்திலிருந்து பல பெரிய பாடங்களை நான் எப்போதும் கற்றுக்கொண்டு வந்திருக்கிறேன் குறிக்கோளுக்குச் செலுத்தும் கவனத்தை, அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்த வேண்டும் என்பதில் வெற்றிக்கு உரிய எல்லா இரகசியமும் அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
-
. நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை பிறருக்கு உதவி புரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான்.
நாம் ஏன் உலகிற்கு நன்மை செய்ய வேண்டும்? மேலோட்டமாகப் பார்த்ததால் உலகிற்கு நன்மை செய்வதாகத் தோன்றும். ஆனால் உலகிற்கு நன்மை செய்வதனால், உண்மையில் நமக்கு நாமே தான் உதவி செய்துகொள்கிறோம்.
-
உயர்ந்த பீடத்தில் நின்று உனது கையில் ஐந்து காசுகளை எடுத்துக்கொண்டு, ஏ பிச்சைக்காரா! இதை வாங்கிக்கொள் என்று நீ சொல்லாதே மாறாக அவனுக்குக் கொடுப்பதனால் உனக்கு நீயே உதவி புரிந்துகொள்ள முடிந்ததை நினைத்து அந்த ஏழை அங்கு இருந்ததற்காக அவனிடம் நீ நன்றியுள்ளவனாக இரு கொடுப்பவன் தான் பாக்கியசாலியே தவிர, பெறுபவன் அல்ல. இந்த உலகில் உன்னுடைய தர்ம சிந்தனையையும் இரக்க மனப்பான்மையையும் பயன்படுத்த வாய்ப்புக் கிடைத்திருப்பதற்காக நீ நன்றியுள்ளவனாக இரு. இதன் மூலம் தூய்மையும் பரிபூரணத் தன்மையும் உன்னை வந்தடையும்.
--
. தீமையைச் செய்வதனால் நாம் நமக்கு மற்றவர்களுக்கும் தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்துகொள்கிறோம்.
-
கர்மயோகத்தின் விதியின்படி ஒருவன் செய்த ஒரு கர்மத்தை, அது தனக்கு உரிய பலனை விளைவித்து முடிக்கும் வரையிலும் அழிக்க முடியாது. கருமம் தனக்கு உரிய பலனை விளைப்பதை இயற்கையிலுள்ள எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. நான் ஒரு தீய செயலைச் செய்தால், அதற்கு உரிய துன்பத்தை நான் அனுபவித்தே ஆகவேண்டும். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் இதைத் தடுக்கவும் முடியாது; நிறுத்தி வைக்கவும் முடியாது. அதேபோல நான் ஒரு நல்ல காரியத்தைச் செய்தால் அது தனக்கு உரிய நல்ல பலனை விளைவிப்பதைப் பிர பஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது,
-
. நான் அல்லேன் , நீயே என்னும் இந்த மனப்பான்மைதான் எல்லா நன்மைகளுக்கும் எல்லாச் சிறந்த ஒழுக்கங்களுக்கும் அடிப்படையாக விளங்குகிறது.
-
இருப்பது சொர்க்கமா நரகமா என்று யார் இங்கே கவலைப்படுகிறார்கள்? ஆத்மா என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்று யார் கவலைப்படுகிறார்கள்? மாறாத ஒன்று இருக்கிறதா இல்லையா என்று யார் கவலைப்படுகிறார்கள்? இதோ, இங்குள்ள உலகில் துன்பம் நிறைந்திருக்கிறது. புத்தர் பெருமான் செய்ததைப்போல இந்தத் துன்பத்தைக் குறைப்பதற்கு முயற்சி செய். அல்லது அந்த முயற்சியிலேயே உயிரை விட்டுவிடு.
--

சுவாமி விவேகானந்தரின் வாட்ஸ்அப்குழுவில் இணைய- 97 89 37 41 09 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?