விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -48

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு- பகுதி -48
-- 
சுவாமி விவேகானந்தரைக் கண்டுபிடித்தது தமிழ்நாடு என்று தாராளமாக உரிமை கொண்டாட முடியும். இதனால் தானோ என்னவோ சுவாமிஜியும் தமிழ் நாட்டின் மீது மிகுந்த நம்பிக்கை வைந்திருந்தார். அவரது தமிழ்நாட்டுச் சொற்பொழிவுகளில் இந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் மிகத் தெளிவாகக் காண முடியும். 'சென்னை இளைஞர்களே, உங்கள் மீதே என் நம்பிக்கை உள்ளது என்று சுவாமிஜியும் அதனால்தான் தமது கடிதங்களில் குறிப்பிடுகிறார். அது மட்டுமின்றி, அவரது அறைகூவலுக்கு முதன்முதலில் செவி சாய்த்து, ஒரு நிலையான ஆன்மீக மையம் தமிழ்நாட்டில் வேண்டும் என்று சென்னை மக்களே அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
தான் கண்டுபிடித்த ஒரு துறவி மேலைநாட்டில் இந்திய ஆன்மீகத்தின் வெற்றிக் கொடியை நாட்டிவிட்டு, தாயகம் திரும்பும்போது தமிழ்நாடு, குறிப்பாக சென்னை எவ்வளவு குதூகலித்திருக்கும்! அவருக்குக் கொடுத்த வரவேற்பு போல் அதுவரை எந்த அரசியல் தலைவருக்கோ, வேறு எந்தத் தலைவருக்கோ கொடுக்கப்படவில்லை என்று The Hindu முதலான தினசரிகள் எழுதின.
சுவாமிஜியை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் 1896 டிசம்பர் இறுதியில் துவக்கப்பட்டன. டிசம்பர் 21ம் நாள் அளசிங்கரும் பிறரும் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கேஸில் கெர்னன் என்ற கட்டிடத்தில் கூடி வரவேற்புக் குழு ஒன்றை அமைத்தனர். சுவாமிஜியின் சீடர்களான அளசிங்கர், பாலாஜி ராவ், பி.சிங்கார வேலு முதலியார் ஆகியோருடன் சென்னையின் முக்கியப் பிரமுகர்களான வி.பாஷ்யம் ஜயங்கார், வி.கிருஷ்ண சுவாமி ஐயர், வி.சி சேஷாச்சாரியார், பேராசிரியர் எம்.ரங்காச்சாரியார், பேராசிரியர் கே.சுந்தரராம ஜயர், டாக்டர் நஞ்சுண்டராவ், பி.ஆர்.சுந்தர ஐயர் ஆகியோரும் இதில் பங்கு வகித்தனர். நீதிபதி சுப்பிரமணிய ஐயர் தலைவராக நியமிக்கப்பட்டார். தியாசபிகல் சொசைட்டியின் கர்னல் ஆல்காட்டும், இந்தியாவின் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக வந்த டாக்டர் பரோசும் இந்த வரவேற்புக் குழுவில் அங்கம் வகித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
---
சென்னையில் சுவாமிஜிக்கு வரவேற்பு!
எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கேஸில் கெர்னன் வரை அலங்கார வளைவுகள், தோரணங்கள் முதலியவை அமைப்பதென்று ஏற்பாடாயிற்று. கேஸில் கெர்னனுக்கு முன்பாக ஒரு பந்தல் எழுப்பப்பட்டது. சுவாமிஜி தங்குவதற்காகவும், அவரது வரவேற்பு ஏற்பாடுகளுக்காகவும் கர்னல் ஆல்காட் ஒரு பங்களாவையும் ஒரு ஹாலையும் அளித்திருந்தார். ஆயினும் சுவாமிஜி கேஸில் கெர்னனில் தங்குவதென்று முடிவாயிற்று. சுவாமிஜி வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டு தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் சென்னை நகருக்கு வரத் தொடங்கினர். அவர்களுள் இளைஞர்களும் மாணவர்களும் அதிகமாக இருந்தனர். வெளியூரில் இருந்து தேர்வுகள் எழுதுவதற்காக வந்த மாணவர்கள் பலர் தேர்வுகள் முடிந்த பிறகும் சுவாமிஜியைத் தரிசிப்பதற்காக சென்னையிலேயே தங்கினர். விடுதி வாடகை அதிகரிப்பதையும், உடனடியாக வருமாறு பெற்றோர் வற்புறுத்துவதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் சுவாமிஜிக்காக காத்திருந்தனர. நாட்கட்ள நெருங்க நெருங்க ‘சுவாமிஜி எப்போது வருகிறார்?' என்ற கேள்வி அனைவர் மனத்திலும் எழுந்து நின்றது.
சென்னைக்கு அருகில் ஒரு ரயில் நிலையத்தில் சுவாமிஜியைத் தரிசிப்பதற்காக மக்கள் தண்டவாளகத்தில் படுக்க நேர்ந்தது பற்றி ஏற்கனவே கண்டோம். அந்தக் கூட்டத்தில் இருந்தார் சூரஜ்ராவ் என்ற இளைஞர். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இவர் சுவாமிஜி தாயகம் திரும்பியதைக் கேள்விப்பட்டு அவரைக் காண வந்திருந்தார். ரயில் நிலையத்தில் அவரைக் கண்ட பிறகு சென்னைக்கு வர எண்ணினார் அவர். ஆனால், அவரிடம் பயணத்திற்கான பணம் இல்லை. எனவே அவர் கடற்கரை வழியாக நடக்கத் தொடங்கினார். வழியில் மீனவர் குடிசைகள் இருந்தன. எல்லா குடிசைகளிலும் வரிசை வரிசையாக விளக்குகள் ஏற்றப்பட்டு அந்தப் பகுதி ஒளிமயமாகக் காட்சி அளித்தது. காரணம் புரியாத சூரஜ்ராவ் அங்கே ஒருவரிடம் அதுபற்றி கேட்டார். `ஏன், உங்களுக்குத் தெரியாதா? சென்னைக்கு ஜகத்குரு வருகிறார்' என்று பதில் வந்தது. சுவாமிஜியின் வரவு பற்றி ஏழை மீனவர்களும் அறிந்திருப்பது அவருக்கு மிகுந்த ஆச்சரியத்தை தந்தது.
--

சுவாமிஜியின் வரவேற்பைக் காண்பதற்காக அவரது முதற் சீடரான சதானந்தர் அங்கே வந்திருந்தார். கூட்டத்தில் நிற்காமல் வழியில் ஓரிடத்தில் ஓதுங்கி நின்று தமது குருவைத் தமிழ்நாடு போற்றி வணங்குவதைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தார். அந்த வழியாகச் செல்லும்போது சுவாமியின் கண்கள் அவர்மீது பட்டன. அன்பு கரையுரண்டோட, 'மகனே, சுதானந்தா, இங்கே வா' என்று கூவினார் சுவாமிஜி. வண்டியை நிறுத்தி தம் அன்பு மகனை அருகில் அழைத்து தம் அருகில் அமர்த்திக் கொண்டார்.
வழியில் ஓரிடத்தில் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு மூதாட்டி ஒருத்தி வந்து சுவாமிஜியைப் பணிந்தாள். இலங்கையில் ஆரம்பித்த கருத்து இங்கேயும் பரவியிருந்தது. அந்த மூதாட்டி சுவாமிஜியைத் திருஞான சம்பந்தரின் அவதாரம் என்றே கருதினாள். அவ்வாறே கூறி சுவாமிஜியை வணங்கிய அவள், ஞான சம்பந்த மூர்த்தியின் அவதாரமான சுவாமிகளை வணங்கி தான் தன் பாவங்களிலிருந்து கடைத் தேறுவதாகத் தெரிவித்தாள்.
ஊர்வலம் 'ஆந்திர ப்ரகாசிகா' அலுவலகத்திற்கு எதிரில் வந்தபோது சற்று நிறுத்தப்பட்டது. அங்கே பந்தல் இடப்பட்டிருந்தது. சென்னை வாழ் தெலுங்கு மக்களின் சார்பில் அங்கே சுவாமிஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்று வசந்த பஞ்சமி நாள். மன்மதன் அல்லது மதனனைப் போற்றும் நாள் அது. அழகுக்குத் தலைவன் மன்மதன். அந்த வரவேற்பில் மன்மதனையும் சுவாமிஜியையும் ஒப்புமைப்படுத்தி பேசப்பட்டிருந்தது. 'மன்மதன் மலர் அம்பினால் வெல்கிறான். நீங்களே உங்கள் தெய்வீக ஆற்றலால்' உங்கள் குரலால், உங்கள் சொல்லாவ‘ற்றலால் வென்றீர்கள்' என்று அவர்கள் அந்த வரவேற்பில் கூறியிருந்தார்கள். மற்றோர் இடத்தில் சம்ஸ்கிருத வரவேற்புரை அளிக்கப்பட்டது.
--
தொடரும்....
-
--விவேகானந்தர் விஜயம்---அட்மின் சுவாமி வித்யானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?