வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-21

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-21
-
சுவாமிஜி சந்தித்த விநோதமான மகான்கள்
--
இமய மலைப் பகுதிகளில் சுவாமிஜி தரிசித்த மகான்கள் பலர். உடம்பு என்ற ஒன்று தங்களுக்கு இருப்பதையே நினைக்காமல், உடம்பின் சுக துக்கங்களைப் பற்றி கவலைப்படாமல் வாழ்ந்த எத்தனையோ பேரை சுவாமிஜி அங்கே கண்டார். ஒருவர் பார்க்க பைத்தியம் போலவே இருந்தார். ஆடை எதுவுமின்றி சுற்றித் திரிகின்ற அவர் சிறுவர்களுக்கு ஒரு வேடிக்கைப் பொருள். அவரைக் கண்டாலே அவர்மீது கல்லெறிவது அவர்களுக்கு ஒரு விளையாட்டு. ஆச்சரியம் என்னவென்றால் அவருக்கும் இது விளையாட்டாகவே இருந்தது. அவர்கள் கல்லெறிந்து அவரது முகம், கழுத்து என்று உடம்பு முழுவதிலுமிருந்து ரத்தம் வடியும். ஆனால் அது அவருக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. கல்வெறிந்துவிட்டு சிறுவர்கள் எப்படி கைகொட்டிச் சிரித்துக் களித்தார்களோ அதுபோலவே அவரும் களித்தார். சுவாமிஜி ஒருநாள் அவரை அழைத்துச் சென்று அவரது புண்னை எல்லாம் கழுவி மருந்திட்டார். ரத்தம் வடிந்தபோது அவர் எப்படிச் சிரித்தாரோ அப்படியே சுவாமிஜி அவருக்குச் சேவைகள் செய்த போதும் மகிழ்ச்சியில் திறைத்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது, 'எல்லாம் என் அப்பனின் விளையாட்டு' என்று கூறிவிட்டு மீண்டும் சிரிப்பார்.
சில மகான்கள் தங்கள் அருகில் யாரையும் வர விடுவதில்லை. அதற்கு அவர்கள் பினபற்றும் வழிகள் வினோதமாக இருக்கும். சிலர் ஆட்களைக் கண்டதுமே கல்லால் அடிப்பார்கள். ஒருவர் தாம் வாழ்ந்த குகையைச் சுற்றி மனித எலும்புகளைப் பரப்பி வைத்துவிடுவார்! பார்ப்பவர்களுக்கு அவர் பிணங்களைத் தின்பவர்போல் தோன்றும், எனவே பயந்து யாரும் அருகில் செல்ல மாட்டார்கள். அவரும் எந்தத் தொந்தரவுமின்றி சாதனைகளில் ஆழ்ந்திருப்பார். இத்தகைய துறவியர் பலரை சுவாமிஜி சந்தித்தார்.
--
--விவேகானந்தர் விஜயம்---அட்மின் சுவாமி வித்யானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?