ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

வகுப்பு-13  நாள்-2-1-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஷ:

அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே॥ 3.27

 

3.27 பிரகிருதியின்(இயற்கையின்) குணங்களால்  எப்போதும் கர்மங்கள் செய்யப்படுகின்றன.

அகங்காரத்தால் மதியிழந்தவர்கள்நான் கர்மங்கள் செய்கிறேன்என்று நினைக்கிறான்.

 

தத்த்வவித்து மஹாபாஹோ குணகர்மவிபாகயோ:

குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ஸஜ்ஜதே॥ 3.28

 

3.28 ஆனால், அர்ஜுனா, குணகர்மத்தை(குணத்தின் போக்கை) அறிந்த தத்துவவாதியானவன், குணங்கள்(சத்வம்,ரஜஸ்,தமஸ்) குணங்களில் செயல்படுகின்றன என்று அறிந்து,

அதில்(இயற்கையில்) பற்றுவைப்பதில்லை.

 

ப்ரக்ருதேர்குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸு।

தாநக்ருத்ஸ்நவிதோ மந்தாந்க்ருத்ஸ்நவிந்ந விசாலயேத்॥ 3.29

 

3.29 பிரகிருதியினுடைய  குணங்களால் மோகமடைந்தவர்கள், குணங்களின் செயல்களில் பற்றுவைக்கின்றனர்.

அந்த அறிவற்ற மந்த புத்தியினரை தெளிந்தஅறிவுடைய ஞானிகள் குழப்பக்கூடாது

-

தத்துவவாதி உண்மையை அறிந்தவன்

தத்துவம் என்ன சொல்கிறது?

சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்று குணங்களால் இந்த இயற்கை படைக்கப்பட்டுள்ளது.

இந்த இயற்கையின் ஒரு பகுதியாகிய உடலும் மனமும்கூட மூன்று குண்ஙகளால் படைக்கப்பட்டது.

இந்த குணங்களுக்கு அப்பால் இருப்பது ஆன்மா

ஆன்மா செயல்புரிவதில்லை

உடலும்,மனமும் செயல்புரிகிறது.

-

நமது உண்மை இயல்பு ஆன்மா

ஆன்மா ஒருபோதும் செயல்புரிவதில்லை.

ஆனால் நாம் நம்மை ஆன்மாவுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ளாமல் உடலுடனும் மனத்துடனும் ஐக்கியப்படுத்திக்கொள்கிறோம்.

எனவே நாம் செயல்புரிவதாக நினைக்கிறோம்.

-

ரயில் ஓடுகிறது.சில வேளைகளில் ரயில் நிற்பதாகவும் ரயிலின் அருகில் உள்ள மரங்கள் ஓடுவதுபோலவும் தோன்றுகிறது

சூரியன் எங்கும் செல்வதில்லை.ஆனால் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதாக தோன்றுகிறது.

உண்மையில் சூரியன் கிழக்கில் தோன்றுவதும் இல்லை.மேற்கில் மறைவதும் இல்லை.

பூமி சூரியனை சுற்றுவதால் இப்படி ஒரு காட்சி நமக்கு தெரிகிறது.

பல காலம் இது உண்மை என்றே நாமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்

-

உடல் இயங்குகிறது. மனம் வேலை செய்கிறது.

வேலை செய்யாத நாம் அதற்குள் இருந்துகொண்டு நாம் வேலை செய்வதாக கருதுகிறோம்.

நாம் உண்மையில் வேலை செய்வதில்லை. நமது முன்னிலையில் உடலும் மனமும் வேலை செய்கிறது.

தத்துவவாதி இந்த உண்மையை நன்கு அறிவான்

-

அப்படியானால் உண்மையை அறிந்த தத்துவாதி வேலை செய்யமல் சும்மா இருப்பானா?

இல்லை

நான் உடல் அல்ல ,மனம் அல்ல என்பதை அவன் உணர்ந்திருப்பதால்,

உடலின் வேலையை தனது வேலையாக அவன் கருதுவதில்லை

இயற்கை தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருக்கிறது. இயற்கையின் ஒரு பகுதியான எல்லா உடல்களும் அதனுடன் இணைந்து வேலை செய்துகொண்டே இருக்கிறது.

தனதும் உடலும் மனமும் இயற்கையின் போக்கில் வேலை செய்யட்டும் என்று விட்டுவிடுகிறான்.

ஆனால் நான் வேலை செய்வதில்லை. நான் உடல் அல்ல என்பதை அவன் உணர்ந்துள்ளதால்

உடலின் வேலையை தனது வேலையாக அவன் கருதுவதில்லை.

-

அகங்காரத்தால் மதியிழந்தவர்கள் நான் செய்கிறேன் என்று நினைக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களை தத்துவவாதி குழப்பக்கூடாது.

அப்படி குழப்பினால் அவர்கள் உண்மையை புரிந்துகொள்வதைவிட்டுவிட்டு

வேலை செய்வதை நிறுத்திவிடுவார்கள்.

ஒரு காலத்தில் இந்த உலகம் மாயை.உண்மையில்லாதது.மனத்தின் கற்பனை என்றெல்லாம் ஞானிகள் கூறுவதை மக்கள் நம்பினார்கள்.இதன் விளைவாக தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்யாமல் சோம்பேரியாக காலம் கழிக்கத்தொடங்கினார்கள்.

வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவை தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தார்கள்.பலரை கொலை செய்தார்கள்.அவர்களை எதிர்க்க இந்த மாயாவாதிகள் துணியவில்லை.

அவர்களை எதிர்த்து போர்புரியவேண்டிய கடமை உள்ளதை அறியவில்லை

 எல்லாம் மாயை. எல்லாம் மயக்கம் என்ற நிலையிலேயே வாழ்ந்து அழிந்துபோனார்கள்.தங்கள் இனம் அழிவதற்கும் காரணமானார்கள்

-

ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத।

குர்யாத்வித்வாம்ஸ்ததா அஸக்தஷ்சிகீர்ஷுர்லோகஸம்க்ரஹம்॥ 3.25

 

3.25 பார்த்தா,கர்மத்தில் பற்றுள்ளவர்களாய் அறிவற்றவர்கள் எப்படி கர்மம் செய்கிறார்களோ, அப்படி ஞானி பற்று இல்லாதவனாய், உலகத்தை நல்வழியில் நடத்த விருப்பம் உள்ளவனாய், கர்மம் செய்ய வேண்டும்.

 

எனவே உண்மையை உணர்ந்த தத்துவவாதி சாதாரண மக்கள் எப்படி பற்றோடு வேலை செய்கிறார்களோ அதேபோல பற்றில்லாமல் வேலை செய்ய வேண்டும்.

வேலை செய்வதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கக்கூடாது.

உலகை வழிநடத்தும் பொறுப்பு ஞானிகளிடம் உண்டு.எனவே அந்த கடமையை செய்ய வேண்டும்

ஏனென்றால் மேலோர் எதை செய்கிறார்களோ அதையே மற்றவர்களும் பின்பற்றுவார்கள்.

 

யத்யதாசரதி ஷ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந:

யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே॥ 3.21

 

3.21 மேலானவர்கள் எதை எதை செய்கிறார்களோ மற்ற மனிதர்கள் அதையே பின்பற்றுவார்கள்.

அந்த மேலானவன் எதை பிரமாணமாக்குகிறானோ அதையே உலகம் பின்பற்றுகிறது


Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?