ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 36

வகுப்பு-36  நாள்-16-2-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

சாதாரண பாமரனை பண்புள்ளவனாக்கவும், பண்புள்ளவனை தெய்வமாகவும் ஆக்குகிறது பகவத்கீதை

-

பகவத்கீதையின் சிறப்புகள் எண்ணில் அடங்காதவை

-

1.சந்நியாசம் மற்றும் யோகம் என்ற இரண்டு பாதைகளையும் சமரசப்படுத்தி இரண்டின் வழியாகவும் இறைவனை அடையலாம் என்று போதிக்கிறது.

2.துவைதம்,விசிஷ்டாத்வைதம்,அத்வைதம் என்ற மூன்று தத்துவங்களையும் போதிக்கிறது

3.ஆத்ம தத்துவத்தைப்பற்றி விரிவாக கூறுகிறது

4.தியானம் செய்ய செயல்முறை விளக்கங்களை கூறுகிறது.

5.இல்லறத்தார்கள் தினசரி கடமைகளை செய்துகொண்டே இறைவனை அடையும் வழியைப்போதிக்கிறது.

6.சந்நியாசிகள் எப்படி வாழவேண்டும் என்று போதிக்கிறது.

7.எது ஞானம் எது அஞ்ஞானம் என்பதை விளக்குகிறது.

8.பல்வேறு வழிபாட்டு முறைகளைப்பற்றி போதிக்கிறது.

9. மூன்று குணம்கொண்ட மனிதர்களையும் அவர்கள் இயல்புகளைப்பற்றியும் போதிக்கிறது

10.பல்வேறு மக்களின் உணவு பழக்கத்தை விவரிக்கிறது.

11. பிரபஞ்சத்தின் தோன்றத்தைப்பற்றிய தத்துவங்களைக்கூறுகிறது

12.தன்னை சரணடைவதன் மூலம் முக்திபெறலாம் என்று கூறி புதிய பாதைய காட்டுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

-

இன்னும் கணங்கிலடங்காத கருத்துக்கள் பகவத்கீதையில் அடங்கியிருப்பதால்தான் பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தபிறகும் இன்றும் புதுமையாக காட்சியளிக்கிறது.

-

பகவத்கீதை என்பது ஒரு மதநம்பிக்கை கொண்டோருக்கானது அல்ல.ஸ்ரீகிருஷ்ணரை இஷ்ட தெய்வமாக ஏற்று வழிபடுபவர்களும் இதை பின்பற்றலாம், சைவர்கள்,சாக்தர்கள்,வேதாந்தம் இன்னும் பிறமதங்களில் நம்பிக்கை வைத்திருப்பவர்களும் இதை பின்பற்றலாம்.

ஒரு மதத்தை போன்றுவதும்,பிற மதங்களை இகழ்வதுமான கருத்துக்களை பகவத்கீதையில் எங்கு தேடினாலும் காண முடியாது.

-

ஜாதி வேறுபாடுகளை பகவத்கீதை போதிப்பதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

-

இந்த உலகத்தை படைத்தது நான்தான் என்று ஸ்ரீகிருஷ்ணர்கூறுகிறார்.

இந்த உலகத்திலுள்ள, நல்லவகைள் தீயவைகள் அனைத்தையும் படைத்தது இறைவன்தான்

இந்த உலகம் இயங்குவதற்கு இரண்டும் தேவை.

நல்லவைகளை இறைவன் படைத்தார்.தீயவைகளை சாத்தான் படைத்தார் போன்ற கருத்துக்கள் நமது மதத்தில் எங்கும் இல்லை.

எல்லாவற்றையும் நானே படைத்தேன் என்று ஸ்ரீகிருஷ்ணர் ஒவ்வொன்றாக கூறிக்கொண்டே வரும்போது. ஜாதிகளையும் நான்தான் படைத்தேன் என்று கூறுகிறார்.

ஜாதிகள் நல்லதாக இருந்தாலும்சரி கெட்டதாக இருந்தாலும் சரி, அவைகள் அனைத்தையும் படைத்தது இறைவன்தான்.

இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள், ஸ்ரீகிருஷ்ணர் ஜாதிகளை மட்டும் படைத்தார் என்று கூறுவதை ஏற்க முடியாது.

ஸ்ரீகிருஷ்ணர் கூறும் கருத்துக்களை நம்பினால் எல்லாவற்றையும் நம்பவேண்டும். அல்லது எதையும் நம்பாமல் இருக்கவேண்டும். ஏதோ ஒன்றை நம்புவதும் பிறவற்றை நம்பாமல் இருப்பதும் அறிவற்றோர் செய்வது.

-

இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும் தனது கருத்துக்களை பின்பற்றினால் நான்கு ஜாதிகளைச் சேர்ந்தவர்களும்,பெண்களும் முக்திபெற முடியும் என்றுதான் கூறியிருக்கிறாரே தவிர, சூத்திரர்கள் முக்திபெற முடியாது,பெண்கள் முக்திபெற முடியாது என்று ஒரு இடத்தில்கூட கூறவில்லை.

மிகவும் தீயவர்கள்கூட, தீய பழக்கங்களைவிட்டுவிட்டு நல்லவழியில் செல்லத்தொடங்கினால் முக்திபெறலாம் என்பதுதான் அவரது கருத்து

எந்த ஒரு மனிதனுக்கு எதிராகவோ,ஜாதிக்கு எதிராகவோ,இனத்திற்கு எதிராகவோ,மொழிக்கு எதிராகவோ பகவத்கீதையை பயன்படுத்த முடியாது.அதில் அப்படிப்பட்ட கருத்துக்களை எவ்வளவு தேடினாலும் காண முடியாது.

-

வெளிநாட்டு மதங்கள்கூறும் கருத்துக்களைப்போன்ற வெறுப்பு கருத்துக்களை பகவத்கீதை கூறவில்லை.

எங்கள் தெய்வத்தை நம்பினால் காப்பாற்றப்படுவீர்கள்,இல்லாவிட்டால் நரகத்தில் தள்ளப்படுவீர்கள் என்ற கருத்தை பகவத்கீதை போதிக்கவில்லை.

பல்வேறு மனிதர்களின் மனநிலைக்கு ஏற்ப பல்வேறு மதங்கள் இருப்பதையும்,அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒரே இறைவனையே வழிபடுகிறார்கள் என்றே ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

அது மட்டுமல்ல அந்த மதங்களை உருவாக்கி,அவர்கள் மனத்தில் அப்படிப்பட்ட  நம்பிக்கையை விதைத்ததும் தான்தான் என்று கூறுகிறார்.

எனவே மதச்சண்டைகளுக்கு பகவத்கீதையை பயன்படுத்த முடியாது.அது மதங்களை வெறுக்கும் மனப்பான்மையைப்பற்றி பேசவில்லை.

யூத இனத்தை முற்றிலும் எங்கள் இறைவன் அழிப்பார் என்று சில மதவெறியர்கள் நூல்களில் போதிக்கப்பட்டுள்ளது

ஆனால்

ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்கள்,அதாவது ஆரியர்கள் மட்டுமே உயர்வடைய முடியும் பிற இனத்தினர் உயர்வடைய முடியாது போன்ற இனம் சார்ந்த கருத்துக்களை பகவத்கீதையில் காண முடியாது.

யாரெல்லாம் பண்பட்டவர்களோ அவர்கள் எல்லோரும் ஆரியர்கள். ஆரியம் என்பது இடத்தை சார்ந்தது அல்ல அது மனிதன் பெற்றிருக்கும் பக்குவத்தை சார்ந்தது.

ஒளி பொருந்தியன்,தெய்வத் தன்மை பெற்றிருப்பவன் எல்லோரும் ஆரியன்.

மகாபாரதத்தில் தென் இந்தியாவை சேர்ந்த பாண்டிய மன்னனைப்பற்றி கூறப்படுகிறது. அவர் ஸ்ரீகிருஷ்ணரது படையில் சேர்ந்து அதர்மத்திற்கு எதிராக போரிடுகிறார்.அவரும் ஆரியன்தான்.

எனவே தென் இந்தியர் ஆரியல் அல்லாதவர் என்றும் வட இந்தியர் ஆரியர் என்றும், வட இந்தியரை புகழ்ந்தும்,தென் இந்தியரை இகழ்ந்தும் பகவத்கீதை பேசுகிறது என்று யாரவாது கூறினால் அது தவறு,ஆதாரம் அற்றது.

அப்படி ஒரு இனத்தை உயர்வாகவும்.பிற இனத்தை இகழ்வாகவும் பேசும் கருத்துக்களை பகவத்கீதை முழுவதும் தேடினாலும் கிடைக்காது.

-

ஒரு சமுதாயத்தில் பல்வேறு  மனநிலை உள்ள மனிதர்கள் வாழ்வார்கள். அவர்களது மனநிலைக்கு ஏற்ப பல்வேறுவிதமான உணவுகளை உண்பார்கள். அதில் பல படிநிலைகள் உள்ளன. அமைதியானவன் காய்கறி உணவை உண்பான். செயல்வீரன் காரம்மிக்க உணவுகளை உண்பான். தமோ குணம் கொண்டவன் மாமிச உணவுகளை விரும்பி உண்பான்.

அவரவர் இயல்புக்கு ஏற்ற உணவுகளை உண்கிறார்கள் என்று கூறுகிறார்.இதில் எல்லோரும் ஒரே உணவை உண்ணவேண்டும் என்று ஒரு இடத்தில்கூட கூறவில்லை.

சமீப காலங்களில் அனைவரும் ஒரே மாதியான காய்கறி உணவுகளை உண்ணவேண்டும் என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணரது கருத்து அது அல்ல.

ஒவ்வொரும் தங்கள் இயல்புக்கு ஏற்ற உணவுகளை உண்கிறார்கள். மனிதர்களின் இயல்பு உயர்வடையும்போது உணவு முறைகளும் உயர்வடைகிறது. வலுக்கட்டாயமாக உணவுமுறைகளை மாற்றி அமைப்பதால் பயன் விளையாது.

 தமோ குணம் கொண்ட ஒருவன் மிகப்பெரிய பாரத்தை தூக்கி செல்லும் வலிமை பெற்றவனாக இருப்பான்.எதிரிகளை போர்க்களத்தில் கொல்லும் திறமை உள்ளவனாக இருப்பான்.

 மதுவும்,மாமிசமும் அவனுக்கு தேவை.

அப்படிப்பட்ட ஒருவனுக்கு காய்கறி உணவைக்கொடுப்பதால் அவன் பலவீனமாகி, தன் இயல்புக்கு ஏற்ற வேலையை செய்ய முடியாதவனாகிவிடுவான்.

ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் காய்கறி உணவு கட்டாயமாக்கப்பட்டது. விளைவு என்ன? வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் புகுந்து கட்டாயமதமாற்றம் செய்தார்கள்,கோவில்களை இடித்தார்கள்,பெண்களை கற்பழித்தார்கள்

பகவத்கீதையை சரியாக படிக்காததால் வந்த விளைவு இது.

அவரவர் இயல்புக்கு ஏற்ற உணவுகளை உண்ண அனுமதியுங்கள். அவரவர் கடமைகளை செய்யவிடுங்கள் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

 

உயர்ந்த கருத்துக்களை எல்லோருக்கும் கட்டாயமாக்காதீர்கள்,அவரவருக்கு ஏற்ற கருத்துக்களையே போதியுங்கள் என்பது இன்னொரு முக்கிய போதனை.

நம் நாட்டில் கடந்த காலத்தில் இது மிகவும் தவறாக பின்பற்றப்பட்டது.

உயர்ந்த கருத்துக்களை ஒரு ஜாதியினர் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு கொடுக்காமல் மறைத்தார்கள்.

ஸ்ரீகிருஷ்ணர் இதையா கூறினார்?

இல்லை.

சாதாரண பாமர மனிதன் ஒருவித தர்மத்தை பின்பற்றிக்கொண்டிருப்பான். ஞானியின் தர்மம் வேறுவிதமாக இருக்கும்.

இந்த உலகமே மாயை,கனவு போன்றது அனைத்தையும் துறந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஞானி சுற்றிக்கொண்டிருப்பான்.

ஆனால் பாமர மனிதன் உலம் உண்மை.உலகத்தில் உற்ற உறவுகள் உண்மை, அனைத்து உணர்ச்சிகளும் உண்மை என்ற மனநிலையில் வாழ்ந்துகொண்டிருப்பான்.அந்த தர்மத்தின்படி அவனது அன்றாட கடமைகள் இருக்கும்.

 

ஞானியின் தர்மத்தை,பாமரனிடம் திணிக்காதீர்கள்,அது அவனை பாதிக்கும் என்பது ஸ்ரீகிருஷ்ணரின் கருத்து.

ஆனால் நடந்தது என்ன?

இந்த உலகம் மாயை,எல்லாவற்றையும் துறந்து துறவியாகிவிடுங்கள் அதுதான் முக்திக்கு ஒரே வழி என்று எல்லோருக்கும் போதித்தார்கள். விளைவு இந்தியா ஓருவிதமான மந்த நிலைக்கு தள்ளப்பட்டது. எதை போதிக்கக்கூடாது என்று சொன்னாரோ அது போதிக்கப்பட்டது.

-

ஒரு குறிப்பிட்ட ஜாதியிருக்கானதா பகவத்கீதை?

தனது கருத்துக்களை உயர்ஜாதியினர் மட்டுமே படிக்க வேண்டும், வேறு யாரும் படிக்கக்கூடாது என்று ஸ்ரீகிருஷ்ணர் எங்கேயாவது கூறியிருக்கிறாரா?

சிரத்தை உள்ளவன்,நம்பிக்கை உள்ளவனுக்கு இந்த கருத்தை போதி,யாராக இருந்தாலும் தனது கருத்துக்கள்மீது நம்பிக்கை வைத்து அதை சிரத்தையுடன் பின்பற்றினால் முக்தி கிடைக்கும் என்றுதான் ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்.

எந்த ஒரு பிரிவினரும்,ஜாதியிரும் பகவத்கீதை எங்களுக்கு மட்டும் போதிக்கப்பட்டது என்று கூறமுடியுமா? முடியாது.

இந்த கருத்துக்கள் அனைவரிடம் சென்று சேரவேண்டும் என்பது கிருஷ்ணரது விரும்பம். ஆனால் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் என்ன ஆனது?

நம்பிக்கை உள்ள எல்லோருக்கும் பகவத்கீதை போதிக்கப்பட்டதா?

இல்லை. பிற ஜாதியினர் படிக்க முடியாதபடி மறைக்கப்பட்டது.

-

ஸ்ரீகிருஷ்ணரின் மகத்தான போதனைகள் உலகம் முழுவதும் சென்றடையட்டும்.


Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?