ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 37

வகுப்பு-37  நாள்-17-2-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்யந்தே அந்யதேவதா:।

தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா॥ 7.20 ॥

 

7.20 பல்வேறு ஆசைகளால் தூண்டப்பட்டவர்கள், அறிவற்றவர்கள், அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காக அதற்குரிய நியமத்தை கடைபிடித்து, தங்களது இயல்பினால் தூண்டப்பட்டு பிற தேவதைகளை(தன்னை அல்லாத) போற்றுகிறார்கள்

-

மக்கள் எல்லோருக்கும் ஆசைகள் இருக்கின்றன.அந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக தங்களைவிட மேலான சக்திகளிடம் பிரார்த்திக்கிறார்கள்.

பிறர் நன்றாக வாழ்வது சிலருக்கு பிடிக்காது. பிறர் குடும்பத்தை அழிப்பதற்காக பல்வேறு வழிபாட்டு முறைகளில் ஈடுபடுகிறார்கள்.

பேய் பிசாசுகளுக்கு மிருக பலியிட்டு,தங்கள் வசப்படுத்தி,தங்கள் தேவைகளுக்காக அவைகளை பயன்படுத்திக் கொள்கிறார்கிறார்கள்.

சிலர் காவல் தெய்வங்கள்,சிறுதெய்வங்கள், குலதெய்வங்களை தங்கள் வசப்படுத்தி தங்கள் சுயநல தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இவர்கள் மனிதர்களில் மிகவும் கடைப்பட்டவர்கள். யாரை வசப்படுத்தி வைத்திருக்கிறார்களோ ,அந்த சிறு தெய்வங்களாலேயே இவர்களும் அழிந்துபோவார்கள்

-

இன்னும் சிலர் தங்கள் முன்னோர்களை வழிபடுகிறார்கள்.

குடும்பத்தில் செய்ய வேண்டிய கடமைகளை முறையாகச் செய்து நல்லவர்களாக வாழ்ந்து மறைந்தவர்களை  வழிபடுகிறார்கள்.

மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை உணவுகளை படைத்து வழிபடுவதும் உண்டு.

பொதுவாக ஒரு குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர் பல வருடங்கள் கழித்து மீண்டும் அதே குடும்பத்தில் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.பித்ரு வழிபாடு என்று இதை கூறுகிறார்கள்.

-

இயற்கை சக்திகளை வழிபடும் மக்கள் இருக்கிறார்கள்.

தினமும் காலையில் எழுந்ததும் சூரியனைப் பார்த்து வழிபடுவது, இரவில் சந்திரனை வழிபடுவது, வானத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது, கடலை பார்த்து அதில் மனத்தை ஒன்றச்செய்வது, இயற்கை சக்திகளை ஆராதிப்பது என்று முழுவதும் இயற்கையையே மிகப்பெரிய சக்தியாக நினைத்து மனத்தை அதில் பதிய வைக்கிறார்கள்.

அவர்களைப்பொறுத்தவரை இயற்கைதான் தெய்வம்

நிலம்,நீர்,காற்று,அக்னி,ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் மதித்து,அவைகளை மாசுபடுத்தாமல் அவற்றுடன் ஒன்றுபட்ட வாழ்க்கையை வாழ்வதுகூட ஒருவகையில் சிறந்த வாழ்க்கைதான்.

 

முற்காலத்தில் இந்த இயற்கை சக்திகளை அடக்கிஆளும் வல்லமை பெற்ற சிலர் இருந்தார்கள்.

அவர்களை தேவர்கள்,தேவிகள் என்று மக்கள் வணங்கினார்கள்.

ஒவ்வொரு மலைக்கும் ஒரு தெய்வம். ஒவ்வொரு நதிக்கும் ஒரு தெய்வம்.

இயற்கையின் ஒவ்வொரு சக்திக்கும் ஒரு தெய்வம்

இப்படி கோடனகோடி தெய்வங்களை மக்கள் வழிபட்டார்கள்.

உலக நன்மைக்காக இந்த தெய்வங்களை வேண்டி, யாகங்களைச் செய்வார்கள், பல்வேறு உணவுகளைப் படைப்பார்கள்.

 

நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் அரசன் பல்வேறு யாகங்களைச்செய்து, இயற்கையை அடக்கி ஆளும் தேவ பதவியைப்பெற்று நீண்ட காலம் வாழ்ந்து வந்தான்.தேவர்களை வணங்கி மனிதர்கள் பல்வேறு பயன்களைப்பெற்றார்கள்.

 

புத்தர் காலத்திற்கு பிறகு இப்படிப்பட்ட வழிபாடுகள் நின்றுபோனது.

-

சிலர்  இறைவனுக்கு நற்குணங்கள் கொடுத்து,பல்வேறு சக்திகளைக்கொடுத்து வழிபடுகிறார்கள்.

இறைவன் உலகத்தைப் பார்க்கிறார். உலக மக்களின் செயல்களை கவனிக்கிறார்.அவரது சக்தியால்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.அவர் நீதி நிறைந்தவர். நல்லவர்களை காக்கிறார். தீயவர்களை தண்டிக்கிறார்.

நமது பிரார்த்தனைகளைக் கேட்கிறார். அவ்வப்போது மனித உருவில் காட்சிகொடுக்கிறார்.

சொர்க்கத்தில் வாழ்கிறார். மனிதர்களைவிட உயர்ந்தவர், தேவர்களைவிட உயர்ந்தவர்.

மனிதர்களைக்காக்க அவ்வப்போது அவதரிக்கிறார் அல்லது  தீர்க்கதரிசிகளை அனுப்பி வைக்கிறார் என்று நம்புகிறார்கள்.

இந்த வழிபாட்டை ஈஸ்வர வழிபாடு என்று வேதாந்தம் கூறுகிறது.

ஒவ்வொரு மதநம்பிக்கை உள்ளவர்களும் தங்கள் இறைவன்தான் உலகத்தைப் படைத்தார் என்றும் பிற மதத்தினரின் தெய்வங்கள் அனைத்தும் தங்கள் தெய்வத்திற்கு அடிமை என்றும் கூறிக்கொள்கிறார்கள்.

மதச்சண்டைகள் இதனால் வளருகின்றன.

-

இன்னும் சில ஞானிகள் இறைவனை இன்னும் உயர்ந்த நிலையில் தியானிக்கிறார்கள்

 

இறைவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள குணங்களில் முக்கியமானது என்ன?

அவருக்கு உருவம் இல்லை.அவர் எங்கும் நிறைந்தவர்.

கண்,காது,போன்ற உடல் உறுப்புகள் எதுவும் இல்லை.

அவர் யாரையும் பார்ப்பதும் இல்லை, யாருடைய வார்த்தைகளைக் கேட்பதில்லை.

இந்த பிரபஞ்சத்தை அவர் பார்ப்பதில்லை. இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் செயல்களை தெரிந்துகொள்வதில்லை.

அவர் உலகத்துடன் தொடர்பில்லாதவர்.

அவருக்கு பெயர்,உருவம் எதுவும் இல்லை

பிரம்மம் என்பது வேதாந்தம் கொடுத்துள்ள பெயர்.

 

அந்த பிரம்மத்திலிருந்து, பிரபஞ்சம் வெளிப்பட்டுள்ளது.

சக்திகள் எதுவும் அவ்ளே இல்லை.முழுவதும் ஒடுங்கியிருக்கிறது

உடல் உணர்வு இருக்கும்வரை அந்த இறைவனைக் காண முடியாது.

யாரால் உடல் உணர்வைக்கடந்து,இந்த பிரபஞ்சத்தை கடந்து செல்லும் ஆற்றல்பெற்றவர்களோ அவர்களால் மட்டுமே அந்த இறைவனைக் காணமுடியும்.

மனத்தில் சிறு ஆசைகள்கூட இல்லாதவர்கள்,

உலகப்பற்று இல்லாதவர்களால் மட்டுமே அந்த இறைவனை தியானிக்க முடியும்

.

புற வழிபாடுகளில் ஈடுபடுபடுவதன் மூலம் பிரம்மத்தைக்காண முடியாது

தன் உயிருக்கு உயிராக வழிபட வேண்டும்.

இப்படி வழிபடும் மனநிலை கோடியில் ஒருவருக்குகூட இருப்பதில்லை.

பிரம்மத்தை அதன் இயல்பிலேயே வழிபடுவது என்பது கோடியில் ஒருவரால் மட்டுமே முடிகிறது.

வழிபடுவது என்று கூறுவதுகூட தவறு. நானும் பிரம்மமும் ஒன்றே என்று தியானிப்பதுதான் சரியானது.

-

 

1. தீராத ஆசைகளுடன் சுற்றி அலையும் பேய்,பிசாசுகளை வழிபடுபவர்கள்.

2. நல்லவர்களாக வாழ்ந்து,இறந்த பின் வேறு உலகில் வாழும் முன்னோர்கள்

3.இந்த இயற்கையின் சில பகுதிகளை ஆளும் தேவர்கள்,தேவிகள்

4.சர்வசக்திவாய்ந்த, தர்மத்தைக் காத்து அதர்மத்தை அழிக்கும் ஈஸ்வரனை வழிபடுபவர்கள்

5.இந்த உலகத்துடன் தொடர்பில்லாத. உருவமற்ற. எங்கும் நிறைந்துள்ள பிரம்மத்தை தியானிப்பவர்கள்


Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?