Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 47

வகுப்பு-47  நாள்-1-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

நான்குவிதமான வழிபாடுகளைப்பற்றி ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். 9.25

-

தேவர்களை வழிபடுபவர்கள் தேவர்களை அடைகிறார்கள். தேவர்கள் என்பவர்கள் யார்?

-

மனிதர்கள் இறந்த பிறகு அவர்கள் செய்யும் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப சூட்சும உடல் அமைகிறது என்று பார்த்தோம்.அதிகம் புண்ணியம் செய்தவர்கள் மேல் உலகங்களை அடைகிறார்கள்.

அதிகம் பாவம் செய்தவர்கள் கீழ் உலகங்களை அடைகிறார்கள்.

புண்ணியம்.பாவம் இரண்டையும் கலந்து செய்திருப்பவர்கள் மறுபடியும் இந்த பூமியில் பிறக்கிறார்கள்.

 

நாட்டை ஆளும் அரசர்களுக்கு அதிகம் புண்ணியம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

இறந்தபிறகு தேவ உடலைப்பெற்று சொர்க்கத்தில் சென்று இன்னும் அதிகம் இன்பத்தை அனுபவிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

எனவே பல யாகங்களைச் செய்கிறார்கள்.

யாகங்கள் மூலம்  ஏற்கனவே இருக்கும் தேவர்களுக்கு தேவையானவற்றைக்கொடுக்கிறார்கள்.தேவலோகத்தில் தனக்கு ஒரு இடம் ஒதுக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள்.

யாகத்தின் முடிவில் தங்களிடம் உள்ள சொத்துக்களை பிராமணர்களுக்கும், நல்லவர்களுக்கும் தானமாக வழங்குகிறார்கள்.இதன்மூலம் தேவலோகம் செல்வதற்குரிய புண்ணியத்தைப் பெறுகிறார்கள்.

-

தேவலோகம் சென்ற பிறகு இயற்கையை கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுகிறார்கள்.

சூரியனை கட்டுப்படுத்த ஒரு தேவன். சந்திரனைக் கட்டுப்படுத்த ஒரு தேவன். பிற கிரகங்களைக் கட்டுப்படுத்த பல தேவர்கள். மலைகளை,நதிகளை,கடல்களை,காற்றை,கல்வியை,வீரத்தை,பல வித்யைகளை என்று பல சக்திகளையும் பல தேவர்கள்,தேவிகள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள்.

-

தினசரி காலை முதல் இரவு வரை தேவர்களை மகிழ்விப்பதற்காக மக்கள் பல வேலைகளை செய்ய வேண்டியிருந்தது.

செல்வம் வேண்டுமானால் குபேரனை வணங்கவேண்டும்.  சில யாகங்களைச் செய்ய வேண்டும்.

கல்வி வேண்டுமானால் சரஸ்வதியை வணங்க வேண்டும்.

மழை பெய்ய வேண்டுமானால் இந்திரனை வணங்க வேண்டும்.

இதமான காற்று வேண்டுமானால் வருணனை வணங்க வேண்டும்.

நோய்வாய்ப்பட்டால் அஸ்வினி தேவர்களை வணங்க வேண்டும்...

வீடுகட்ட வேண்டுமா? அதற்கு ஒரு தேவனை வணங்க வேண்டும்.

தொழில் தொடங்க வேண்டுமா? அதற்கும் வழிபாடு தேவை

இப்படி பல...வழிபாடுகளை சடங்குகளை மக்கள் தினசரி செய்ய வேண்டும்.

 

இவைகளை சாதாரண மக்களால் செய்ய முடியாது.

அவர்களுக்கு வேதம் படிக்கவும் உரிமையில்லை. எனவே இவைகளைச் செய்வதற்காக புரோகிதர்களை அணுகவேண்டும்.

தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் பாலமாக இருப்பவர்கள் புரோகிதர்கள்.

புரோக்கர் என்ற வார்த்தை இதிலிருந்து மருவியிருக்கலாம்

இதனால் புரோகிதத்தொழில் சிறப்பாக வளர்ச்சியடைந்தது.

எல்லோரும் புரோகிதராக முடியாது. உயர்ஜாதியில் பிறப்பவர்கள் மட்டுமே புரோகிதராக முடியும்.

பிறப்பின் அடிப்டையிலான உயர்வு தாழ்வு அந்த காலத்தில் அதிகமாக இருந்திருக்கிறது.

-

தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:।

பரஸ்பரம் பாவயந்த: ஷ்ரேய: பரமவாப்ஸ்யத॥ 3.11

 

3.11 வேள்விகளால் தேவர்களை வாழச்செய்யுங்கள். அந்த தேவர்கள் உங்களை வாழச்செய்வார்கள்.

ஒருவரை ஒருவர் பேணி, மேலான நன்மையை அடையுங்கள்

 

என்று ஸ்ரீகிருஷ்ணர் 4றுகிறார்

-

யாகங்கள் தொடர்ந்து நடைபெற்றுவந்தால்தான் தேவர்கள் தேவலோகத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

-

எல்லா நேரங்களிலும் தேவர்கள் பொதுநலவாதிகளாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

எப்போதும் தேவர்கள் புரோகிதர்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள்.

ஏனென்றால் புரோகிதர்கள் நினைத்தால் தேவர்களை தேவலோகத்திலிருந்து கீழே இறக்கிவிட முடியும்.

ஏதாவது ஒரு அரசனை தேவலோகத்திற்கு ஏற்றிவிட முடியும்.

எனவே தேவர்கள் புரோகிதர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவார்கள்.

புரோகிதர்கள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள்.

 

ஸ்ரீகிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில் இந்திரனை மக்கள் வழிபட்டு வந்தார்கள்.இந்திர வழிபாடு என்பது சிறப்பாக நடந்துவந்தது.  இனிமேல் இந்திரனை வழிபட வேண்டாம். நமக்கு நன்மை தருகின்ற  கோவர்த்தன மலையை வழிபடுங்கள் இன்று கிருஷ்ணர் கூறினார்.

இதனால் கோபம்கொண்ட இந்திரன் மக்கள் துன்புறுத்துவதற்காக அதிக மழையைப்பொழிந்ததையும். கிருஷ்ணர் மலையை குடையாகப்பிடித்து,மக்களையும்,பிற மிருகங்களையும் காப்பாற்றியதையும் அறிவோம்.

-

தேவர்களின் சில நேரங்களில் மக்கள்மீது கோபம்கொண்டு அவர்களுக்கு பல இன்னல்களைச் செய்வார்கள்.

எனவே மக்கள் எப்போதும் தேவர்களுக்கு பயந்தே வாழ்ந்து வந்தார்கள்.

ஒரு பக்கம் புரோகிதர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். அவர்களை பகைத்துக்கொள்ளக்கூடாது.

இன்னொரு பக்கம் தேவர்களை மகிழ்விக்க வேண்டும். அதற்காக பல யாகங்களை தினமும் செய்ய வேண்டும்.

தாங்கள் சம்பாதிக்கும் வருமானத்தின் பெரும் பகுதி இந்த புரோகிதர்களுக்கும்,தேவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.

-

மன்னர்கள் எப்போதும் புரோகிதர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தார்கள்.

ஏனென்றால் இறந்தபிறகு சொர்க்கம் செல்ல வேண்டுமானால் புரோகிதர்களின் ஆதரவு தேவை.

மன்னர்கள் யாராவது புரோகிதர்களை பகைத்துக்கொண்டால் அவ்வளவுதான் அவர்கள் ஆட்சி விரைவில் முடிவுக்கு வந்துவிடும். தேவர்களை வைத்து, அரசர்களை பழிவாங்கிவிடுவார்கள்.

-

மொத்தத்தில் பாமர மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.

-

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இப்படிப்பட்ட வழிபாடுகளால் மக்கள் கடுமையான இன்னலுக்கு உள்ளானார்கள்.

-

புத்த பகவான் அவதரித்து.இந்த கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்டினார்.

கூட்டம் கூட்டமாக ஆடுகளை யாகத்தில் பலியிடுவதற்காக ஓட்டிச்செல்வதைக் கண்டார்.

மக்கள் மட்டுமல்ல மிருகங்களும் துன்புறுவதை நிறுத்தவேண்டிய பணி தனக்கு இருப்பதை உணர்ந்தார்.

-

அவரது முக்கிய பணிகள்

 

1.இந்த கொடுமைகளுக்கு முக்கிய காரணம் வேதங்கள்தான் என அவர் நினைத்தார். எனவே வேதங்களை எதிர்த்தார்.

2.புரோகிதர்களை எதிர்த்தார். புரோகிதர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என மக்களைத் தடுத்தார்.

3.மக்கள் தினசரி வழிபட்டு வந்த தேவ வழிபாடுகளை நிறுத்தும்படி கூறினார்.

4.சமஸ்கிருத மொழியையும்,சமஸ்கிருத மந்திரங்களையும் படிக்க வேண்டாம் என்று தடுத்தார்

5.மிருகங்களை கொல்வதை எதிர்த்தார்.

6. இறந்தபிறகு தேவலோகம் செல்ல வேண்டும் என்ற ஆசையை துறக்கும்படி கூறினார்.

7.அனைவரும் முக்தி அடையலாம் என்று போதித்தார்

 

ஸ்ரீகிருஷ்ணரது காலத்திற்கு முன்பே உலக வாழ்க்கையை துறந்து முக்தி பெறுவதற்காக காடுகளில் சிலர் தவவாழ்க்கை வாழ்ந்துவந்தார்கள்.

உலக வாழ்க்கையில் வாழ்பவர்கள்கூட தினசரி கடமைகளைச் செய்வதன் மூலம் முக்திபெற முடியும் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறினார். ஆனால் பகவத்கீதை மக்களிடம் சென்று சேரவில்லை.அவரது கருத்துக்கள் அனைவரையும் சென்றடையவில்லை.

எனவே தேவவழிபாடு  அந்த காலத்தில் மிகவும்  பிரபலமாக இருந்தது

-

புத்தர் அரசர்களை சந்தித்து.அவர்களை புத்தமதத்தை  ஏற்றுக்கொள்ளும்படி செய்தார்.

பாமர மக்களை சந்தித்து தேவ வழிபாடுகளை நிறுத்தும்படி கூறினார்.

தேவ வழிபாட்டைவிட உயர்ந்ததான முக்தியைப்பற்றி.விடுதலையைப்பற்றி அவர் பேசினார்.

ஆசையை துறப்பர்கள் அனைவரும் முக்திபெற முடியும் என்று அவர் போதித்தார்.

படிப்படியாக மக்கள் புரோகிதர்களை புறக்கணிக்க தொடங்கினார்கள்.

மன்னர்கள் யாகங்கள் செய்வதை நிறுத்தினார்கள்.

யாகங்கள் நடைபெறாததால் உணவின்றி.தேவர்கள் பலமிழந்தார்கள்.

புத்தர்மீது கடும்கோபம்கொண்டு அவரைக் கொல்ல பல்வேறு வழிகளில் முற்சித்தார்கள்.

அனைத்து முயற்சிகளும் தோல்விடைந்தன.

புத்தமதம் பரவிய இடங்களில் எல்லாம் தேவ வழிபாடுகள்,யாகங்கள்,உயிர் பலிகள் நிறுத்தப்பட்டன.

-

மேற்கு இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் புத்தமதம் அதிகம் ஆதிக்கம் செலுத்தவில்லை.

புத்தமதம் பரவாத இடங்களை நோக்கி புரோகிதர்கள் சென்றார்கள்.

ஆனால் தேவ வழிபாடுகளை மீண்டும் உயிர்பிக்க முடியவில்லை.

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறும் நான்காவது வழிபாடு

என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள்

--

இதில் என்னை என்பது யாரைக் குறிக்கிறது?

அடுத்து வரும் பகுதிகளில் மேலும் விரிவாகப்பார்க்கலாம்


No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...