மாயை.

மாயை.
-----
🌿 புகழ்மேகங்களின்மீது கோடு கிழித்தவாறுதான் நாம் தோன்றுகிறோம். என்று ஒரு கவிஞர் பாடினார். ஆனால் நாம் எல்லோரும் என்னவோ அப்படி புகழ்க்கோடுகள் மீதொன்றும் தோன்றிவிடவில்லை. பலர் கருமேகங்களின் மூடலுடன் தான் பிறக்கிறோம். இதில் சந்தேகம் இல்லை.
---
போர்க்களத்தில் போரிடுவதற்கே போன்றுதான் நாம் ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் வந்துள்ளோம். இந்த உலகத்தில் போராடுவதற்காக நாம் அழுத கொண்டே பிறக்கிறோம். நம்மால் முடிந்தவரை போராடி, இந்த எல்லையற்ற வாழ்க்கைக் கடலில் நமக்கென்று ஒரு பாதையை வகுத்துக்கொள்ள முயல்கிறோம். 
----
யுகயுகங்களாக நாம் முன்னே சென்று கொண்டிருக்கிறோம். கடக்க வேண்டிய தூரமோ எல்லையற்று விரிந்து பரந்து கிடக்கிறது. மரணம் நம்மை இந்தப் போர்க்களத்திலிருந்து நீக்கும்வரை இவ்வாறு சென்று கொண்டிருக்கிறோம். தோல்வியுடன் வெளியேறுவோமா, வெற்றியுடன் வெறியேறுவோமா என்பது நமக்குத் தெரியாது. இதுதான் மாயை.
----
🌿 குழந்தையின் உள்ளத்தில் நம்பிக்கை பிரகாசமாக ஒளி வீசுகிறது. அவன் கண்ணைத் திறக்கும்போது, அவனுக்கு இந்த உலகம் முழுவதும் தங்கமயமாக ஜொலிக்கிறது. தன்னால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்றே அவன் நினைக்கிறான். அவன் பெரியவனாகி முன்னேறிச் செல்லும்போது, ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும்போதும் இயற்கை ஒரு கடக்க முடியாத சுவர்போல் அவன் முன்னால் நின்று, அவனுடைய முன்னேற்றத்தைத் தடுக்கிறது. அந்தச் சுவரில் திரும்பத் திரும்ப எவ்வளவுதான் முட்டிக்கொண்டாலும், அதை உடைத்துக் கொண்டு முன்னே செல்ல அவனால் முடிவதில்லை. அவன் முன்னே செல்லச்செல்ல அவனது குறிக்கோளும் அவனை விட்டு விலகிச் சென்றுகொண்டே இருக்கிறது. கடைசியில் மரணம் வந்து ஒருவேளை அவனை விடுதலை செய்யலாம். இதுதான் மாயை.
----
🌿 விஞ்ஞானி தோன்றுகிறான். அவனுக்கு அறிவுப்பசி அதிகமாக இருக்கிறது. எந்தத் தியாகமும் அவனுக்குப் பெரிதல்ல. எந்தப் போராட்டமும் அவன் நம்பிக்கையைத் தகர்ப்பதில்லை. அவன், இயற்கையின் ரகசியங்களை ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்துக் கொண்டே முன்னேறுகிறான். இயற்கையின் அடியாழத்திலுள்ள ரகசியங்களை ஆராய்ந்து கண்டுபிடிக்கிறான். ஏன்? இதெல்லாம் எதற்காக? அவனை நாம் ஏன் பெருமைப்படுத்த வேண்டும்? அவன் ஏன் புகழ் பெற வேண்டும்? எந்த மனிதனையும் விடப் பலமடங்கு அதிகமான விஷயங்களை இயற்கை செய்யவில்லையா?
----
இயற்கை மந்தமானது; உணர்வற்றது என்பதும் ஒருபுறம் இருக்கிறது. அப்படி மந்தமான, உணர்வற்ற இயற்கையைப் போலவே செயல்படுவது, புகழுக்குரிய விஷயமா என்ன? எவ்வளவு சக்தி வாய்ந்த இடியையும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செலுத்த இயற்கையால் முடியும், இயற்கை செய்வதில் ஒரு துளி அளவு மனிதன் செய்தாலும், அவனை வானளாவப் புகழ்கிறோம். ஏன்? இயற்கையைக் காப்பியடிப்பதற்காக, மரணத்தைக் காப்பியடிப்பதற்காக, மந்தநிலையைக் காப்பியடிப்பதற்காக, உணர்வின்மையைக் காப்பியடிப்பதற்காக அவனை ஏன் புகழ வேண்டும்? 
----
ஈர்ப்புச் சக்தி, எவ்வளவு பெரிய பொருளையும் தூள்தூளாக்கிவிடும் வல்லமை படைத்தது. ஈர்ப்புச்சக்தி உணர்வற்றதே. உணர்வற்றதைப் பின்பற்றுவதில் என்ன பெருமை இருக்க முடியும்? என்றாலும், நாம் எல்லோரும் அதைக் குறித்தே போராடுகிறோம். இதுதான் மாயை.
-----
🌿 புலன்கள் நம்மை வெளியே இழுக்கின்றன. இன்பம் என்பதே கிடைக்காத இடத்தில், மகிழ்ச்சி என்பதே கிடைக்காத இடத்தில் மனிதன் இன்பத்தைத் தேடுகிறான். மகிழ்ச்சியைத் தேடுகிறான். இந்தத் தேடல் பயனற்றது, வீண், இன்பம் இங்கே இல்லை என்று பல காலமாக நமக்குப் போதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் பாடம் படிக்கவில்லை . நாமே அனுபவிக்காமல் நம்மால் அதைக் கற்றுக்கொள்ள முடியாது. நாம் முயற்சிக்கிறோம். அடி ஒன்று விழுகிறது. அப்போதாவது புத்தி வருகிறதா? இல்லை.
-----
விட்டில்பூச்சிகள் தாங்களாகவே சென்று விளக்கில் விழுந்து சாவதுபோல், புலனின்பத்தில் திருப்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும்மீண்டும் அதில் ஈடுபடுகிறோம். புதிய சக்தியுடன் திரும்பத்திரும்ப அதில் மூழ்குகிறோம். நம் சக்திகளெல்லாம் ஒடுங்கி, ஏமாற்றமடைந்து, இறக்கும்வரை, இதே காரியத்தில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறோம். இதுதான் மாயை.
-----
சுவாமி விவேகானந்தர்
----
🌿 (சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 9003767303 )

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?