மதஉணர்வு

மதஉணர்வு 
---
உலகத்தை அது இருக்கின்றவாறே பாருங்கள். உங்களால் முடிந்தவரை அமைதியாக, வசதியாக இருந்து கொள்ளுங்கள். எல்லா துன்பங்களையும் பொறுத்துக் கொள்ளுங்கள். அடி விழும்போது அது அடியல்ல. மலர் அர்ச்சனையே என்று சொல்லிக் கொள்ளுங்கள். அடிமைகளாக விரட்டப்படும்போது, நீங்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். இரவும் பகலும் பொய் சொல்லி உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அது ஒன்று தான் இன்பமாக வாழ்வதற்கு ஒரே வழி என்று இந்த வழியைப் போதிப்பவர்கள் சொல்கிறார்கள்.
---
இதுதான் நடைமுறைக்கு ஏற்ற அறிவாம்! இந்தக் கருத்து இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டைவிட அதிகமாக எப்போதும் உலகில் பரவியிருக்கவில்லை. ஏனென்றால் இப்போதைப்போல் அடிகள் இவ்வளவு பலமாக முன்பு எப்போதும் விழுந்ததில்லை. இவ்வளவு தீவிரமான போட்டியும் இருந்ததில்லை. மனிதனுக்கு மனிதன் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டதில்லை. ஆகவே இந்த ஆறுதலை மட்டும்தான் சொல்ல முடியும். இந்தக் காலத்தில் மிகவும் தீவிரமாக வற்புறுத்தப்படுகிறது. 
-----
இந்த வழி தோல்வியைத்தான் தரும். அப்படியேதான் நடந்துகொண்டும் இருக்கிறது. பிணத்தை மலர்களால் மறைக்க முடியாது; அது முடியாத காரியம். அது பலநாள் தாங்காது. மலர்கள் சீக்கிரம் வாடி உதிர்ந்துவிடும்; பிணம் முன்பைவிட அதிகமாக அழுகி நாற்றமெடுக்கும். நம் வாழ்க்கையும் இப்படித்தான். நாறுகின்ற நமது புண்களைத் தங்கக் கவசத்தை நீக்கும் நாள் வரும்போது, புண்கள் இன்னும் துர்நாற்றத்தோடு வெளிப்படுகின்றன.
-----
அப்படியானால் நம்பிக்கையே கிடையாதா? நாம் எல்லோரும் மாயையிலே பிறந்து அதிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நாம் அதன் அடிமைகள் என்பது உண்மைதான். அப்படியானால் இதிலிருந்து வெளியேற வழியே இல்லையா? விடிவே கிடையாதா?
நாம் துன்பத்தில் உழல்கிறோம். இந்த உலகம் உண்மையில் ஒரு சிறைச்சாலை. அழகு என்று நாம் சொல்வதெல்லாம் உண்மையில் ஒரு சிறைச்சாலையே. 
---
நம் அறிவு, மனம் எல்லாம் கூட உண்மையில் சிறைச் சாலைகளே. இவையெல்லாம் பல காலமாக அறிந்த விஷயங்கள் தான். எப்படிப் பேசினாலும், என்ன பேசினாலும் இந்த உண்மையை எப்போதாவது ஒருமுறை உணர்ந்திராத மனிதனே இருக்க முடியாது. வயதானவர்கள் இதை அதிகமாக உணர்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்களுக்கு ஒரு முழு வாழ்க்கையில் அனுபவம் இருப்பதும், இயற்கையால் அவர்களைச் சுலபமாக ஏமாற்ற முடியாது என்பதுமே ஆகும்.
----
இதிலிருந்து தப்ப வழியே இல்லையா? நிலைமை இப்படியெல்லாம் இருந்தாலும், கண் முன்னாலுள்ள உண்மை பயங்கரமானதாக இருந்தாலும், இந்தத் துன்ப துயரங்களின் நடுவில், வாழ்வும் சாவும் ஒரே அர்த்தமுடையவையாக இருக்கின்ற இந்த உலகில் காலங்காலமாக எல்லா நாடுகளிலும் எல்லா இதயங்களிலும் ஒரு சிறிய குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது;
----
எனது இந்த மாயை தெய்வீகமானது. குணங்களால் ஆக்கப்பட்டது. கடக்க மிகவும் கடினமானது. ஆனாலும் என்னிடம் வருபவர்கள் பிறவிக் கடலைக் கடந்து விடுகிறார்கள். பெரும் சுமையைத் தாங்கித் துன்பப்படுபவர்களே, என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு ஓய்வு அளிக்கிறேன். இந்தக் குரல்தான் நம்மை வழிகாட்டி முன்னே அழைத்துச் செல்கிறது.
மனிதன் இந்தக் குரலை முன்பே கேட்டிருக்கிறான்; காலங்காலமாகக் கேட்டுக் கொண்டும் இருக்கிறான்.
----
மனிதனுக்கு எல்லாமே இழந்தது போலாகி, எல்லா நம்பிக்கைகளும் அற்றுப்போய், தன் சக்தியில் வைத்திருக்கும் அனைத்து நம்பிக்கைகளும் அழிந்து, எல்லாமே கைவிரல்களுக்கிடையே கரைந்துபோவது போல் மறைந்துபோய், வாழ்க்கையே பாழான நிலையில் இந்தக் குரலைக் கேட்கிறான். இதைத்தான் மதஉணர்வு என்று சொல்கிறார்கள். 
---
#சுவாமிவிவேகானந்தர்
---
(சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 9003767303 )

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6